கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஒருநாள் கொரோனா பாதிப்பு 89 ஆயிரத்தை தாண்டியதோடு, 24 மணி நேரத்தில் 714 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். உலகத்திலேயே இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு, கடந்த மாதத்தில் இருந்து அதிகரித்து வருகிறது. இன்று தொடர்ந்து 24-வது நாளாக பாதிப்பு அதிகரித்தது. இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், புதிதாக 89 ஆயிரத்து 129 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். முந்தைய நாளில் 81 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று ஒரே நாளில் இந்த எண்ணிக்கை 8 ஆயிரம் அதிகரித்துள்ளது.
இதையடுத்து, நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 1 கோடியே 23 லட்சத்து 92 ஆயிரத்து 260 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 58 ஆயிரத்து 909 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவுக்கு 714 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 1 லட்சத்து 64 ஆயிரத்து 110 ஆக அதிகரித்துள்ளது.
இதன் மூலம் உலகளவில் ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா, பிரேசிலில் தினசரி பாதிப்பு 69 ஆயிரமாக இருந்த நிலையில் இந்தியாவில் 89 ஆயிரமாக பதிவாகியுள்ளது.