“தேர்தல் என்பது போர்க்களம் அல்ல. அது ஒரு அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியும் அல்ல. வெற்றி அல்லது தோல்வி ஆகிய இரு முனைகளை மட்டுமே தேர்தலின் முடிவு என கருதிக் கொள்ள கூடாது” என்று சக வேட்பாளர்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “கோவை தெற்குத் தொகுதியின் சக வேட்பாளர்களே… மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கமல்ஹாசனின் அன்பு வணக்கம்.
தேர்தல் என்பது போர்க்களம் அல்ல. அது ஒரு அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியும் அல்ல. வெற்றி அல்லது தோல்வி ஆகிய இரு முனைகளை மட்டுமே தேர்தலின் முடிவு என கருதிக் கொள்ள கூடாது என நான் என் சகாக்கிடம் அடிக்கடி குறிப்பிடுவேன்.
கோயம்புத்தூர் தெற்குத் தொகுதியில் நடைபெற இருக்கும் தேர்தல் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் அமைதியாகவும் நிகழ வேண்டுமென விரும்புகிறேன். யார் வென்றால் தனக்கு நல்லது என மக்கள் நினைக்கிறார்களோ அவர்கள் வெல்லட்டும். நம்மில் யார் வென்றாலும், கோவை தெற்குத் தொகுதி மக்கள் வென்றாகவே பொருள். எல்லோரும் மக்கள் பணி செய்யவே வந்திருக்கிறோம். வென்றவரோடு போட்டியிட்ட அனைவரும் தோள் கொடுத்தால் அது மிகப்பெரிய ஜனநாயக பண்பாடாக அமையும் என்பதில் ஐயமில்லை. இந்த தேர்தல் ஜனநாயக முறைப்படி நேர்மையாக நிகழ்ந்தேற நாம் அனைவருமே ஒத்துழைக்க வேண்டும்.
ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை நோக்கிய முன்னகர்வில் கோவை தெற்கு இந்தியாவுக்கே நாம் வழிகாட்ட வேண்டுமென விரும்புகிறேன்.
உங்களுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.