
உச்சநீதிமன்றத்தின் 10% இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவான தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்காக 2019-ஆம் ஆண்டு ஒன்றிய பா.ஐ.க. அரசு கொண்டு வந்த இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான சட்டப் போராட்டத்தைத் திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுத்து நடத்தி வந்தது.
இந்த வழக்கில் இன்று வெளியாகியுள்ள தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு காலப் போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்றே கருத வேண்டியுள்ளது.
தீர்ப்பினை முழுமையாக ஆராய்ந்து சட்ட வல்லுநர்களோடு முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிரான நமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான அடுத்தகட்ட, நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும்.
சமூகநீதியைக் காக்க முதல் அரசியல் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வைத்த தமிழக மண்ணிலிருந்து, சமூகநீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திடச் செய்ய ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.