ma subramanyan,corona virus,vaccination

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சென்னை மாவட்டத்தில் நோய்த்தொற்று பாதிப்பு குறைந்துவருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடி வளாகத்தில் இன்று 19-வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து, அங்கு ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா. சுப்பிரமணியன், பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், “தமிழகம் முழுவதும் இன்று 19-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.  3.32 கோடி தடுப்பூசிகள் மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் இதுவரை செலுத்தப்பட்டுள்ளன.

15 முதல் 18 வயதுடைய 25 லட்சம் பேருக்கு  இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியுடைய 5.56 லட்சம் பேரில் 1.84 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள 600 சிறப்பு முகாம்கள் வரும் வியாழக்கிழமை அமைக்கப்படும். இதுவரை தமிழகத்தில் 9.17 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

மேலும் அவர், “சென்னை, 94.9% பேருக்கு முதல் தவணை செலுத்தி இந்தியாவில் உள்ள  பெருநகர மாநகராட்சியில் அதிக தடுப்பூசி செலுத்தியதில் முன்னிலை வகிக்கிறது. 74.11 % பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதே கொரோனா தொற்றிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.  தடுப்பூசி செலுத்தியுள்ளதால் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. முழுமையான இறப்பு விகிதத்தை குறைக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

உங்களை காப்பாற்றுவதற்கு தான் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஒரு தடுப்பூசியின் விலை 1100 ரூபாய் இருக்கும் நிலையில், மக்களின் நல்வாழ்வை கருத்தில் கொண்டு அரசாங்கம் தடுப்பூசி முகாம் நடத்துகிறது. எனவே தடுப்பூசிக்கு போலி சான்றிதழ் கொடுக்க வேண்டாம் வாங்க வேண்டாம் என்பதை சிந்தித்து அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

உள் மாவட்டங்களில் தொற்றின் பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் தொற்றின் பாதிப்பு கடந்த 2 நாட்களுக்கு முன் 9 ஆயிரமாக இருந்த நிலையில், நேற்று 7 ஆயிரமாக சற்று குறைந்துள்ளது. 15 - 18 வயகுட்பட்டோர், தங்கள் வயதுக்கான சான்றிதழை காண்பித்து அனைத்து தடுப்பூசி முகாம்களிலும் கோவாக்‌சின் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

உருமாற்றம் அடைந்த கொரோனா உட்பட அனைத்து வகை கொரோனா தொற்றுக்கும், முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. சான்றிதழ் குளறுபடி காரணமாக தடுப்பூசி செலுத்தவதில் சிக்கல் ஏற்பட்டால் 104 என்ற எண்ணின் மூலம் புகார் அளித்து தடுப்பூசி செலுத்திகொள்ளலாம்” என்று அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்