
வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவானதாக தென்மண்டல வானிலை ஆய்வுமைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த அக்டோபர் இறுதியில் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துவருகிறது. டெல்டா மாவட்டங்கள் தொடங்கி தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலான மழை தொடர்ந்து குளிர்வித்து வருகிறது. இந்நிலையில், வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வுமைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது, வரும் நவம்பர் 12-ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் தமிழகம், புதுவை கடற்கரை நோக்கி நகரக்கூடும் என்றும், இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நவம்பர் 9-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை பெரும்பாலான இடங்களிலும் மழை பெய்யக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இதன் காரணமாக நவம்பர் 12-ஆம் தேதி வரை குமரிக்கடல், மன்னார்வளைகுடா, தமிழக கடற்கரை பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும், மீனவர்கள் 12-ஆம் தேதி வரை இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்த வரையில் நவம்பர் 10-ஆம் தேதி ஒரு சில இடங்களில் கனமழையும், 11, 12 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், 13-ஆம் தேதி ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இது புயலாக வலுப்பெற வாய்ப்பு இல்லை என்றும், ஆனாலும் கனமழை தொடர்ந்து இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.