
உள்ளாட்சித் நகர்புற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக நடந்தது முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கோட்டைவிட்டதுபோல், நகர்புற உள்ளாட்சித் தேர்தலிலும் கோட்டை விட்டு விடக்கூடாது என்றும், ஆளும் கட்சிக்கு சமமான வெற்றி பெற்றாக வேண்டும் என்றும் கூட்டத்தில் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதேபோன்ற, கட்சியை வழிநடத்த அமைக்கப்பட்டுள்ள 11 பேர் கொண்ட குழுவை மேலும் வலுப்படுத்த வேண்டும். அதற்கான குழு 18 பேர் கொண்ட குழுவாக ஆக்க வேண்டும். அந்த குழுவுக்கு அதிகாரத்தை அதிகப்படுத்த வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பேசியுள்ளனர்.
இந்த கருத்துக்கு ஆதரவு தரும் வகையில், கட்சியின் மூத்த உறுப்பினராக இருக்கும் செங்கோட்டையன், ‘அ.தி.மு.க.வை வழி காட்டு குழுதான் வழிநடத்த வேண்டும். அதற்காக அந்த குழுவுக்கு முழு அதிகாரத்தையும் வழங்க வேண்டும்’ என்று பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அப்போது சிலர், வழிகாட்டு குழுவுக்கு செங்கோட்டையனை தலைவராக போடலாம். கட்சியின் அவைத் தலைவராக செங்கோட்டையனை நியமிக்கலாம் என்று கருத்து தெரிவித்தனர். இந்த கருத்தினை எடப்பாடியும், அவரது ஆதரவாளர்களும் விரும்பவில்லையாம். இதனால் சிறிது நேரம் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோன்று வழிகாட்டு குழுவை விரிவுப்படுத்தவும் எடப்பாடி தரப்பு சம்மதிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
எப்போதுமே எடப்பாடி தரப்பு பக்கமாக இருந்த செங்கோட்டையன், இப்ப ஏன் எடப்பாடி தரப்புக்கு எதிராக பேசுகிறார் என்ற குழப்பம் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.