'தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு கெடவில்லை; மாறாக சிலர் அதை கெடுக்க நினைத்து செயல்படுகின்றனர்' - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைக் கெடுக்க சிலர் நினைத்து செயல்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

அரியலூர் மாவட்டத்தில் 27,070 பயனாளிகளுக்கு ரூ.52 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,

"ஒரு முதலமைச்சர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் கடந்த 10 ஆண்டாக இருந்த அதிமுக ஆட்சி. கையில் அதிகாரம் இருந்தும் எதுவும் செய்யாமல் கைகட்டி வேடிக்கை பார்த்ததுதான் கடந்த கால அதிமுக ஆட்சி. கடந்த 10 ஆண்டுகள் கால ஆட்சியின் சீரழிவை மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து புகார்கள் கொடுக்கின்றனர். விமர்சனங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல; அவற்றை வரவேற்கிறோம், ஆனால் விஷமத்தனம் கூடாது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போகவில்லை. மாறாக சட்டம் ஒழுங்கைக் கெடுக்கலாமா என்று சிலர் நினைக்கின்றனர். சிலரின் வயது எரிகிறது. ஒரு ஆட்சி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக இந்த ஆட்சி நடைபெறுகிறது" இவ்வாறு பேசினார். 

பதிவு: December 06, 2022
'கோழிக்கு அரிசி போட்டு பிடிப்பதுபோல் நம்மை தமிழை வைத்து பிடிக்கப்பார்க்கின்றனர்' - காசி தமிழ் சங்கமம் நிகழ்வை சாடிய சீமான்!

கோழிகளுக்கு அரிசியைப் போட்டு பிடிப்பது போல் தமிழர்களை மொழியை வைத்து பாஜக பிடிக்கத் திட்டமிடுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் பேசியதாவது: 

"காசி தமிழ்ச்சங்கமம் எனக்காகத்தான் நடத்தப்பட்டது. நான் வேல் தூக்கினால் அவர்களும் வேலைத் தூக்குவார்கள்; நான் முருகா என்றால் அவர்களும் முருகா என்பார்கள்; நான் ஈழம் பற்றிப் பேசினால் அவர்களும் ஈழம் என்பார்கள். ஆனால், நான் கச்சத்தீவு மீட்பு பற்றி பேசினால் மட்டும் எதுவும் பேசமாட்டார்கள். காவிரி நதிநீர் குறித்துப் பேசினால் எதுவும் பேசாமாட்டார்கள்.

நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் உள்ளதா? நாடாளுமன்றத்தில் தமிழில் பேசமுடியுமா? கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய முடியுமா? இதை விடுத்து காசி தமிழ்ச் சங்கமம் நடத்துவதன் மூலம் எப்படி நீங்கள் தமிழை வளர்ப்பீர்கள்?

கோழியை 'பக் பக் பக்' என்று அரிசி போட்டு பிடிப்பதைப் போல் தமிழை வைத்து தமிழ்நாட்டு மக்களை பிடிக்கப் பார்க்கிறார்கள். கோழி 'நம் பாஷை பேசுகிறாரே' என்று நினைத்து அவரிடம் மாட்டிக்கொண்டு வறுபடுவதைப் போல நாம் மாட்டிவிடக் கூடாது. எச்சரிக்கையாக இருக்கவேண்டும். 

 

பதிவு: November 28, 2022
ஆன்லைன் ரம்மியால் 15 மாதங்களில் நிகழ்ந்துள்ள 33-வது தற்கொலை! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

ஆன்லைன் ரம்மியால் ஒரிசாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், ஆன்லைன் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என் ரவி விரைந்து ஒப்புத அளிக்கவேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

ட்விட்டரில் இதுபற்றி பதிவிட்டுள்ள அவர், 

"தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வந்து தென்காசி மாவட்டம் கரிவலம்வந்த நல்லூரில் கூலி வேலை செய்து வந்த ஒதிஷா பெண் பந்தனா மஜ்கி, ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.70 ஆயிரத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்வு மிகுந்த வேதனை அளிக்கிறது.

ஆன்லைன் சூதாட்டத் தடை செல்லாது என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பிறகு ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் நிகழும் 33-ஆவது தற்கொலை இதுவாகும். கடந்த இரு மாதங்களில் இது நான்காவது தற்கொலை ஆகும்.
 
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான ஒவ்வொரு நகர்வும் பெரும் போராட்டத்திற்கும் பிறகும், சில உயிரிழப்புகளுக்கு பிறகும் தான் சாத்தியமாகிறது. 15 மாதங்களில் விலைமதிப்பற்ற 33 உயிர்களை பறி கொடுத்தும் கூட, ஆன்லைன் சூதாட்டம் இன்னும் தடை செய்யப்படவில்லை
 
ஒரு புறம் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் காலாவதியாகி விட்டது; மறுபுறம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்திற்கு ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் தமிழ்நாடு இனி ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறப்போகிறது
 
ஆன்லைன் சூதாட்டங்களால் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் ஏற்படவிருக்கும் பேராபத்தை தமிழக ஆளுனர் உணரவேண்டும். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 
பதிவு: November 28, 2022
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா ஒப்புதல் ஆளுநரால் காலம் தாழ்த்தப்பட்ட நிலையில் அது காலாவதியாகியுள்ளது! அடுத்த நடவடிக்கை என்ன?

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கான ஒப்புதல் தாமதமாக்கப்பட்ட நிலையில், அது காலாவதியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் காரணமாக தற்கொலைகள் பெருகிவந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதியை மயக்கி உயிரைக் கொல்லும் இந்த விளையாட்டைத் தமிழ்நாடு அரசு தடை செய்யவேண்டும் என்று எதிர்ப்புகள் எழவே, அரசு ஆன்லை ரம்மியைத் தடைசெய்வதற்கான சட்ட மசோதாவை அவசரச்சட்டமாக சட்டபேரவையில் நிறைவேற்றியது. 

இந்நிலையில், ஒப்புதலுக்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா அனுப்பப்பட்ட நிலையில், அதுகுறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டது. தமிழக அரசும் அதற்கு பதில் கடிதத்தை அடுத்த நாளே அனுப்பியது. இதனிடையே, அக்.01 ல் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதா நேற்றுடன் காலாவதியானது.

இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. ஆங்காங்கே ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலைகள் அதிகரித்துவரும் நிலையில், ஆன்லைன் ரம்மி மீது இன்னும் தடைவிதிக்கப்படாதது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 
பதிவு: November 28, 2022
'எங்களுக்கு நீதி கிடைக்கவில்லையெனில் அரசின் அத்தனை உதவிகளையும் திருப்பித்தருவோம்' - உயிரிழந்த வீராங்கனை பிரியாவின் வீட்டார் வேதனை!

தங்களுக்கு நீதி கிடைக்கவில்லையெனில் அரசு தங்களுக்கு வழங்கிய நிவாரண உதவிகளைத் திருப்பித்தந்துவிடுவதாக உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் வீட்டார் வேதனை பொங்கத் தெரிவித்துள்ளனர்.

சென்னை வியாசார்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா கால் எலும்பு சவ்வு பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாக அவர் உயிரிழந்தார். இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து பிரியாவிற்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் இருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை சட்டரீதியாக எடுக்கப்படும் என்று மருத்துவத்துரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதனையடுத்து, உயிரிழந்த பிரியாவின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி, வீடு மற்றும் பிரியாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை ஆகியவை வழங்கப்பட்டன.

இந்நிலையில், பிரியா மரணத்திற்குக் காரணமான மருத்துவர்கள் மீது இன்னும் நடவடிக்கை அரசு தரப்பிலிருந்து எடுக்கப்படவில்லை என்று பிரியாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள், அரசு தரப்பிலிருந்து மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும், அதுபற்றி உறுதியளித்ததால் தான் அரசின் உதவிகளைப் பெற்றுக்கொண்டோம் என்றும், அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அரசின் உதவிகளைத் திருப்பிச்செலுத்துவிடுவோம் என்றும், தங்களுக்கு நீதியே தேவை என்றும் அவர்கள் வேதனை பொங்கத் தெரிவித்துள்ளனர். 

பதிவு: November 26, 2022
'கோட்சேவைக் கொண்டாடுபவர்களுக்கும் ராஜீவ் கொலையாளிகளைக் கொண்டாடுபவர்களுக்கும் என்ன வேறுபாடு?' - கொதிக்கும் ஜோதிமணி எம்.பி.!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையானவர்களைக் கொண்டாடுவது அநாகரிகமான செயல் என்று கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், 

"ராஜீவ் காந்தி கொலையாளிகள் உச்சநீதிமன்றத்தால் நீண்டகாலம் தண்டனை அனுபவித்ததன் அடிப்படையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் செய்த கொடிய குற்றத்தில் இருந்து விடுவிக்கப்படவில்லை. அந்த மனிதவெடிகுண்டு ராஜீவ் காந்தியை மட்டுமல்ல பல தமிழர்களையும் பலிகொண்டு விட்டது.

குண்டுவெடிப்பில் தங்கள் உயிருக்குயிரானவர்களை பலிகொடுத்த குடும்பங்கள் இன்னும் ஆறாத காயத்தோடு இதே தமிழ்மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். ஊடகங்களும், சில தனிநபர்களும் கொலையாளிகளைக் கொண்டாடுவது மாபெரும் தவறு. மன்னிக்க முடியாத குற்றம்.
 
காந்தியைக் கொன்ற கோட்சேவைக் கொண்டாடுகிற ஆர்.எஸ்.எஸ் பாஜகவிற்கும், இன்று ராஜீவ் காந்தி கொலையாளிகளைக் கொண்டாடுபவர்களுக்கும் என்ன வேறுபாடு? கருணை அடிப்படையில் குற்றவாளிகள் மன்னிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் குற்றவாளிகளைக் கொண்டாடுவது அநாகரிகமானது மட்டுமல்ல ஆபத்தானதும் கூட" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 
 
பதிவு: November 15, 2022
'ராஜீவ் கொலையாளிகள் போல் இஸ்லாமியர்களையும் விடுதலை செய்யலாமே; திமுகவுடன் மதச்சார்பின்மை கூட்டணி மட்டும்தான்' - கே.எஸ்.அழகிரி படபட!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையானவர்களை வெளியே நடமாட விடக்கூடாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி காட்டமாகக் கூறியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய முருகன், நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேர் கடந்த நவ.11-ம் தேதி உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். முன்னதாக சிறையிலிருந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மற்ற 6 பேரும் அதே காரணத்தின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். 

இந்நிலையில், கொலை வழக்கில் விடுதலையானவர்களை வெளியில் நடமாட விடக்கூடாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், "25 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்றால், கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட, எத்தனையோ இஸ்லாமிய இளைஞர்கள், வழக்கு கூட பதியப்படாமல் சிறையில் இருக்கிறார்களே... அவர்களையும் விடுதலை செய்ய வேண்டுமல்லாவா? அவர்களுக்கும் வாழ்க்கை கொடுங்களேன்... அவர்களையும் சமூக நீரோட்டத்தில் கலக்க விடுங்கள். அது என்ன ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளுக்கு ஒரு நீதி, இஸ்லாமியர்களுக்கு ஒரு நீதியா?" என்று கோபமாகப் பேசினார். 

மேலும், ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலையானதை திமுக வரவேற்பது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, "திமுகவுடன் கூட்டணியில் இருப்பதால் அனைத்து விவகாரங்களுக்கும் அழுத்தம் தரமுடியாது. காங்கிரசுக்கும் திமுகவுக்கும் பல முரண்பாடுகள் உள்ளன. மதச்சார்பற்ற கூட்டணி என்ற அடிப்படையில் இரண்டு கட்சிகளும் இணைந்துள்ளோம்" என்று பதிலளித்தார். 

பதிவு: November 14, 2022
'பொருளாதார அடிப்படை இடஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு முரணானது ஒன்றுமல்ல; ஆனால் 5% பேருக்கு 10% இடஒதுக்கீடு அதிகம்' - கே.பாலகிருஷ்ணன்!

பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது அரசியல் சாசனத்திற்கு முரணானது அல்ல என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளதாகவும், சில அம்சங்களைக் கருத்தில்கொண்டு இச்சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தலாம் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

"பொருளாதாரத்தில் நலிவுற்ற இடஒதுக்கீட்டு வரம்பிற்குள் வராத பொதுப்பிரிவினருக்கு அதிகபட்சம் 10% இட ஒதுக்கீடு வழங்கிடும் அரசியல் சட்டத் திருத்தம் ஏற்புடையதே என்று உச்சநீதிமன்ற அமர்வில் இடம்பெற்றிருந்த மூன்று நீதிபதிகளும், ஏற்க இயலாது என இரண்டு நீதிபதிகளும் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பு என்கிற அடிப்படையில் மேற்கண்ட சட்டத்திருத்தம் செல்லத்தக்கது. பொருளாதார அடிப்படையில் நலிவுற்ற பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது அரசியல் சாசனத்திற்கு ஏற்புடையதா? இல்லையா? என்ற வழக்கில் மாறுபட்ட கருத்து தெரிவித்துள்ள இரண்டு நீதிபதிகள் கூட பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது அரசியல் சாசனத்திற்கு முரணானது அல்ல என்றே தெரிவித்துள்ளனர். அதேசமயம், வேறு விசயங்களில் மாறுபட்ட கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள இடஒதுக்கீட்டு வரம்பிற்குள் வராத பிரிவினருக்கு குறிப்பிட்ட சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கி சட்டத்திருத்தத்தினை நிறைவேற்ற வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கோரி வந்துள்ளது.

இந்த நிலைபாட்டின் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்ட போது அத்திருத்தத்தை கட்சி ஆதரித்தது. ஆனால், அதே நேரத்தில் இச்சலுகை பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள ரூ.8 லட்சம் ஆண்டு வருமான வரம்பு என்பதை குறைத்து தீர்மானிக்க வேண்டுமென அப்போதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அழுத்தமாக வலியுறுத்தியது. வருமான வரம்பு குறைக்கப்பட வேண்டும் என இப்போதும் வலியுறுத்துகிறோம்.

இச்சட்டத்திருத்தத்தை தமிழகத்தில் அமலாக்கும் போது கீழ்க்கண்ட அம்சங்களை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டுமென வற்புறுத்துகிறோம். அரசமைப்பு சட்டப்பிரிவுகள் 15 மற்றும் 16க்கு மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தத்தின்படி பொருளாதாரத்தில் நலிவுற்ற இட ஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினருக்கு அதிகபட்சம் 10 சதவிகிதம் வரை (Subject to a maximum of 10 percent) இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்த மக்கள் தொகையில் அதிகாரப்பூர்வமற்ற தகவலின்படி ஏறக்குறைய 95 சதவிகிதமான மக்கள் இடஒதுக்கீட்டு வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். சுமார் 5 சதவிகிதம் மக்களுக்கு மட்டுமே சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு இல்லை என விபரங்கள் தெரிவிக்கிறது.

இவர்களுக்கு 10 சதவிகிதமான இடஒதுக்கீடு வழங்குவது அதீத ஒதுக்கீடாக அமைந்து விடும். எனவே, தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினரின் மக்கள் தொகையினை கணக்கீடு செய்ய ஆணையம் அமைத்து அதன் பரிந்துரை பெற்று முடிவெடுக்க வேண்டுமென சிபிஐ(எம்) மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது" இவ்வாறு தெரிவித்துள்ளார். 

பதிவு: November 08, 2022
'10% இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழக காங்கிரஸ் மனதார வரவேற்கிறது' - கே.எஸ்.அழகிரி!

பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர்சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில், "பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. பொரும்பான்மையான நீதிபதிகள் ஆதரவாக தீர்ப்பளித்திருக்கிறார்கள். 103-வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் சரியா, தவறா என்ற விவாதத்தில் பெரும்பான்மையான நீதிபதிகள் சரி என்றே கூறியிருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை 50 சதவிகித இடஒதுக்கீட்டு வரம்பை மீற வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அனைத்து பிரிவினருக்குமான நீதியை அது வழங்கும் என்றால், அதனை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. இந்தியாவில் ஐந்தாயிரம் ஆண்டுகளாக சமூகநீதி என்பது இல்லை.

ஒரு சிலரை ஒதுக்கி வைக்க வேண்டுமென்ற நடைமுறையை அந்தக்காலத்தில் நீதி என்று சொல்லி அதனை அங்கீகரித்திருக்கிறார்கள். ஆனால், சுதந்திரம் பெற்ற பிறகு அந்த நடைமுறையை பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் உடைத்தெறிந்து நாடாளுமன்றத்தில் முதன் முறையாக அரசியல் சட்டத்தை திருத்தி இடஒதுக்கீட்டிற்கு வழிவகுத்தார்கள். தற்போது 75 ஆண்டுகள் ஆகிவிட்டன.

எனவே, இன்றைய நடைமுறையை பின்பற்றி இன்றைக்கு பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று காங்கிரஸ் கட்சி முடிவெடுத்தது. 2005-2006 இல் இதற்கான முயற்சி டாக்டர் மன்மோகன்சிங் அரசால் எடுக்கப்பட்டது. 2014 இல் நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதா தயாரிக்கப்பட்டது. ஆனால், பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய 5 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது.

நீதிபதி ரவீந்திரபட் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறார். தாழ்த்தப்பட்டோர் 38 சதவிகிதம் வறுமையில் உள்ளனர். பழங்குடியினர் 48 சதவிகிதம் பேர் உள்ளனர். பிற்படுத்தப்பட்டோரில் 33.1 சதவிகிதம் பேர் வறுமையில் வாடுகின்றனர். இவர்களுக்கு மேலும் சலுகைகள் வழங்க வேண்டுமென அவர் கூறுகிறார். 

தற்பொழுது பொதுப் பிரிவினருக்கு 27 சதவிகிதமும், எஸ்.சி பிரிவினருக்கு 15 சதவிகிதமும், பழங்குடியினருக்கு 7.5 சதவிகிதமும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இவை மேலும் மேம்படுத்த இயலுமா என்பதனை சட்ட வல்லுநர்களும், அரசியல் அறிஞர்களும், சமூக பங்கேற்பாளர்களும் விவாதிக்க வேண்டும்

பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீட்டை எதிர்ப்பது என்பதும் சமூக நீதியாகாது. ஏனெனில், ஐந்தாயிரம் ஆண்டுகாலமாக சிரமப்பட்ட பெரும்பகுதி சமுதாயத்துக்கு சமூகநீதி வழங்கப்படவில்லை. இப்பொழுது எங்களுக்கும் வழங்குங்கள் என்று கேட்பது சரியானதாக இருக்கும்.

ஆனால், எங்களைப் போலவே பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினரும் சங்கடப்பட வேண்டும் என்று கூறுவது சமூகநீதியாகாது. சமூகநீதி என்பது மனிதகுலத்திற்கே பொதுவானதேயொழிய எந்தவொரு தரப்பிற்கும் அது உரியதல்ல. எனவே, 10 சதவிகித இடஒதுக்கீடு சரியான நடவடிக்கை என கருதி, தமிழக காங்கிரஸ் அதனை இதயப்பூர்வமாக வரவேற்கிறது" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பதிவு: November 08, 2022
'ஆண்டுக்கு 8 லட்சம் சம்பாதிப்போர் ஏழைகளா? இது மோசடியின் உச்சம்' - உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சீமான் சீற்றம்!

முற்பட்ட வகுப்பினருக்கான 10% பொருளாதார இடஒதுக்கீட்டை உறுதிசெய்திருக்கும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வகுப்புவாரிப்பிரதிநிதித்துவத்தின் மீதானப் பேரிடி என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

"முற்பட்ட வகுப்பினருக்கான 10 விழுக்காடு பொருளாதார இடஒதுக்கீட்டை உறுதிசெய்யும் வகையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கியிருக்கும் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. நூற்றாண்டு கால வகுப்புரிமைப் போராட்டத்தின் விளைவினால் கிடைக்கப்பெற்ற இடஒதுக்கீட்டினை முற்றாகக் குலைத்திடும் வகையில் வழங்கப்பட்டிருக்கும் இத்தீர்ப்பென்பது ஒருபோதும் ஏற்புடையதல்ல!

ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில், இரு நீதிபதிகள் முரண்பட்டாலும், மூன்று நீதிபதிகள் ஒருமித்த நிலைப்பாட்டை எடுத்ததன் விளைவாக, பெரும்பான்மை நீதிபதிகளின் முடிவெனும் அடிப்படையில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டதென்றாலும், இடஒதுக்கீட்டுக்கு பொருளாதாரத்தை அளவுகோலாக வைக்கும் முறைக்கெதிராக ஒரு நீதிபதிகூட முன்நிற்காதது பெருத்த ஏமாற்றத்தைத் தருகிறது.

இடஒதுக்கீடு என்பது சலுகை அல்ல! அது மண்ணின் மக்களுக்கான தார்மீக உரிமை. சாதியம் புரையோடிப்போயுள்ள இந்தியச்சமூகத்தில் எல்லாத்தரப்பு மக்களுக்கும் எல்லாவிதமான வாய்ப்புகளும் கிடைக்கப்பெறுவதில்லை.அத்தகையக் குறைபாடு கொண்ட சமூகத்தை நேர்நிறுத்தவும், சமத்துவத்தை நிலைநிறுத்தவுமான செயல்பாட்டு முறையே இடஒதுக்கீடாகும். அதுவே சாதியப்பாகுபாட்டினாலும், வருணாசிரம வேறுபாட்டினாலும் காயம்பட்ட மண்ணின் மக்களின் புண்ணை ஆற்றுகிற மாமருந்தாக அமையும்.

சாதிய ஏற்றத்தாழ்வுகளாலும், தீண்டாமைக்கொடுமைகளாலும் பெருந்துயருக்கு ஆட்படுத்தப்பட்ட உழைக்கும் மக்கள் கல்வியினாலும், வேலைவாய்ப்பினாலும், பொருளாதாரத்தினாலும் உயர்ந்தால்தான் தங்கள் மீதான சாதிய அழுத்தங்களிடமிருந்து விடுபட்டு, சமூகச்சமத்துவத்தை அடைய முடியும் என்கிற உயர்ந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே இடஒதுக்கீடெனும் வகுப்புவாரிப்பிரதிநிதித்துவ முறை உருவாக்கப்பட்டது.

பன்னெடுங்காலமாகச் சமூகத்தின் ஆழ்தளத்தில் அழுத்தி வைக்கப்பட்டு, பிறப்பின் அடிப்படையில் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகவே இடஒதுக்கீடு முறை கொண்டுவரப்பட்டதே ஒழிய, பொருளியல் பெருக்கத்துக்காக அல்ல! பொருளாதாரத்தை அளவுகோலாய் வைத்து, இடஒதுக்கீட்டு முறையைச் செயல்படுத்த முனைவதென்பது, அது உருப்பெற்றதன் நோக்கத்தையே முழுமையாகச் சிதைத்தழிக்கும் பேராபத்தாகும். இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசால் கொண்டு வரப்பட்டுள்ள முற்பட்ட வகுப்பினருக்கான 10 விழுக்காடு பொருளாதார இடஒதுக்கீட்டு முறையானது வகுப்புவாரிப்பிரதிநிதித்துவத்தின் மீது விழுந்தப் பேரிடியாகும்.

இடஒதுக்கீட்டின் நோக்கம் பொருளாதார முன்னேற்றமல்ல; கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரக்கட்டமைப்பு உள்ளிட்டவற்றில் அனைவருக்குமான இருப்பையும், பங்களிப்பையும் உறுதிசெய்வதேயாகும். அதனைச் சிதைத்து முற்பட்ட வகுப்பினருக்கு சலுகை அளித்திட முயல்வது என்பது சகிக்கவே முடியாத பெருங்கொடுமையாகும். பொருளாதாரம் என்பது மாறுதலுக்குப்பட்டது; எப்போதும் நிலையானதாக இருக்கக்கூடியதல்ல. ஆகவே, அதனை அடிப்படையாகக் கொண்டு இட ஒதுக்கீட்டை அளவீடு செய்வது என்பது நடைமுறை சாத்தியமற்றதும்கூட.

ஆண்டொன்றுக்கு 2.5 இலட்சம் வருமானம் ஈட்டுபவர் வருமானவரி கட்ட வேண்டுமென்று ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துவிட்டு, ஆண்டுக்கு 8 இலட்சம் சம்பாதிக்கும் முற்பட்ட வகுப்பினரை பொருளாதாரத்தில் பின்தங்கியவராக அறிவித்து, அவர்களுக்கு இடஒதுக்கீட்டில் 10 விழுக்காட்டை வாரிவழங்குவது மிகப்பெரும் மோசடித்தனமாகும். அதனை சட்டப்படுத்தி, உறுதிப்படுத்தியிருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பானது வரலாற்றுப்பெருந்துயரம். அதனை வன்மையாக எதிர்க்கிறேன்.

ஆகவே, முற்பட்ட வகுப்பினருக்கான 10 விழுக்காடு பொருளாதார இடஒதுக்கீட்டை உறுதிசெய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கெதிராக தமிழக அரசானது உடனடியாக சீராய்வு மனுவைத் தாக்கல் செய்து, வலுவான சட்டப்போராட்டம் நடத்தி சமூக நீதியை நிலைநாட்ட முன்வர வேண்டுமெனக் கோருகிறேன். இத்தோடு, 10 விழுக்காடு பொருளாதார இடஒதுக்கீட்டுக்கு எதிரான சட்டப்போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியும் இணைந்துபோராடுமென அறிவிப்பு செய்கிறேன்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

பதிவு: November 08, 2022
'ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெறக் கோருவது ஏற்புடையதல்ல; கருத்தை கருத்தால் எதிர்கொள்ளுங்கள்' - தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெறக்கோரும் மனு தேவையற்றது என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சு தமிழக அரசியலில் பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பிவருகிறது. இந்துத்துவாவிற்கு ஆதரவாக அவ்வப்போது அவர் மேடைகளில் பேசும் கருத்துகள் ஆளும் அரசால் கடுமையாக ஆட்சேபிக்கப்படும். பாஜகவுக்கு ஆதரவாக அவர் தமிழகத்தில் அரசியல் நகர்வுகளை மேற்கொள்வதாக விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அவரது பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் வாடிக்கை. 

இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெறக்கோரி குடியரசுத் தலைவரை சந்தித்து மனு அளிக்கவிருப்பதாக திமுக தரப்பு தெரிவித்திருந்தது. இதை விமர்சித்து தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் பேசியுள்ளார்.

புதுச்சேரி காலாப்பட்டு பல்நோக்கு சமூகசேவை மையத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்ட தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், "தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக்கோரி அரசியல் கட்சிகள் சில கோரிக்கை வைப்பது தேவையற்றது. ஆளுநருக்கு அவரது கருத்தைக் கூற உரிமையுள்ளது. ஒருவரது கருத்து பிடிக்கவில்லையென்றால் அதை கருத்தால் எதிர்கொள்ளலாமே ஒழிய இப்படி ஆஅளுநரை திரும்பப்பெறக்கோரிக் கேட்பது ஏற்புடையதல்ல. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது கருத்தை சுதந்திரமாகக் கூற உரிமையுள்ளது" இவ்வாறு குறிப்பிட்டார். 

பதிவு: November 04, 2022
'குஜராத் பலாத்கார குற்றவாளிகளுக்கு ஆரத்தி எடுத்த பாஜகவினர் பெண்களுக்காகப் போராட தகுதியற்றவர்கள்' - அமைச்சர் மனோ.தங்கராஜ் பாய்ச்சல்!

திமுக பிரமுகர் சைதை சாதிக் பேசியதற்கு கனிமொழி மன்னிப்பு கேட்ட பின்னரும் குஷ்பூ விளம்பரத்துக்காக அதைப் பெரிதுபடுத்துவதாக அமைச்சர் மனோ.தங்கராஜ் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில், திமுக பிரமுகர் சைதை சாதிக் என்பவர் பாஜக பெண் உறுப்பினர்கள் குஷ்பூ, காயத்ரி, கௌதமி, நமீதா ஆகியோரை கொச்சையான முறையில் இழிவுபடுத்திப் பேசினார். இதற்கு தமிழக பாஜக தரப்பிலிருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், திமுக பிரமுகர் பேச்சு குறித்து குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்த நிலையில், அதற்கு திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி மன்னிப்பு தெரிவித்திருந்தார். ஆனாலும் அவர் மன்னிப்பு தெரிவித்தது மட்டும் போதாது என்றும், முதல்வர் ஸ்டாலின் தனக்கு ஆதரவாக குரல் கொடுக்கவேண்டும் என்றும் கூறினார். மேலும் அப்பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் மனோ.தங்கராஜ் சைதை சாதிக் பேசியதைக் கண்டிக்காமல் அமைதி காத்ததாகவும், அவர் தலைமறைவாக இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

இதைத்தொடர்ந்து குஷ்பூ தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளவே அப்பிரச்சினையை பெரிதுபடுத்திவருவதாக அமைச்சர் மனோ.தங்கராஜ் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர், "சென்னை ஆர்.கே நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேச்சாளர் ஒருவர் பேசிய கருத்திற்கு கூட்டம் முடிந்தவுடன் அவரை அழைத்து கண்டித்தேன். பெண்களை இழிவாக பேசுவது என்பது எனக்கோ கழகத்திற்கோ உடன்பாடு இல்லை, ஏற்றுக் கொள்ளதக்கதல்ல. திமுக துணை பொதுச்செயலாளர் திருமிகு. கனிமொழி அவர்கள் வருத்தம் தெரிவித்த பின்னரும், தன்னை விளம்பரப்படுத்துவதற்காக திருமதி.குஷ்பூ ஏதேதோ பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

குஜராத்தில் வீட்டிற்குள் புகுந்து ஆண்களை கொலை செய்துவிட்டு, கர்ப்பிணி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு தண்டனை முடிவதற்குள் பாஜக அரசால் விடுதலை ஆகி வந்தபோது குற்றவாளிகளுக்கு வரவேற்பு அளித்த பாஜக கட்சியினருக்கு பெண்களுக்காக போராட்டம் நடத்துவதற்கு தகுதியே இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார். 

பதிவு: November 03, 2022
தமிழகத்தில் நவ.06-ல் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த பெரும்பாலான இடங்களில் மீண்டும் தடை! தமிழக காவல்துறை அதிரடி! உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு என்ன?

தமிழகத்தில் சுமார் 47 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுத்துள்ளது தமிழக காவல்துறை.

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு பெரும்பாலான இடங்களில் தமிழக காவல்துறை தடை விதித்துள்ளது. ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அக்டோபர் 2-ல் திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கு தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரச்சினையைக் கருத்தில் கொண்டு அனுமதி தர மறுத்தது. மேலும் அன்றைய தினம் விசிக சார்பில் நடைபெறவிருந்த சமூக நல்லிணக்க பேரணி உள்ளிட்ட அனைத்து பேரணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், விவகாரம் நீதிமன்றத்தை நாடவே ஆர்.எஸ்.எஸ். நவம்பர் 6-ல் பேரணி நடத்திக்கொள்ளலாம் என்றும், அன்றைய தினமும் காவல்துறை அனுமதி தர மறுத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்திக்க நேரிடும் என்றும்  சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை தெரிவித்திருந்தது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் நவம்பர் 6-ல் நடைபெறவிருந்த ஆர்.எஸ்.எஸ்.பேரணியை 24 இடங்களில் நடத்த முற்றிலும் தடை விதித்தும், 23 இடங்களில் உள்விளையாட்டு அரங்குகளில் பேரணி நடத்த ஒப்புக்கொண்டால் அனுமதி வழங்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 3 இடங்களில் மட்டுமே ஆர்.எஸ்.எஸ். பேரணியை மேற்கொள்ள தமிழக காவல்துறை அனுமதி தந்துள்ளது. 

உளவுத்துறையின் அறிக்கை அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து ஆராய்ந்து நவம்பர் 4-ல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

பதிவு: November 02, 2022
'கோவை கார்வெடிப்பு சம்பவத்தில் பொறுப்பற்று அரசியல் செய்யும் பாஜக ஆதரவு ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவியிலிருந்து நீக்கவேண்டும்' - கே.பாலகிருஷ்ணன் சீற்றம்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பாஜகவின் ஒற்றை நிலைப்பாட்டில் நின்றுகொண்டு பொறுப்பற்ற முறையில் அரசியல் செய்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கோவை, கார் வெடிப்பு சம்பவத்தை சுயநல அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்ளும் பாஜகவின் முயற்சிகளுக்கு ஆளுநர் துணைபோவது வன்மையான கண்டனத்திற்குரியது. கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தை அடுத்து, துரிதமாக விசாரணை மேற்கொண்ட தமிழ்நாடு காவல்துறை குற்றத்தில் தொடர்புடைய 6 பேரை கைது செய்ததுடன், 75 கிலோ வெடி மருந்துகளையும் கைப்பற்றியது. இவ்வழக்கில் சர்வதேச தொடர்புகள் இருக்கலாம் என நோக்கில் என்ஐஏ விசாரணைக்கு ஒப்படைக்கப்படுள்ளது.

ஆனால், இந்த சம்பவத்தை பயன்படுத்தி, தமிழ்நாட்டில் குழப்பத்தை விளைவிக்கும் விதமாக வெளிப்படையான முயற்சிகளை பாஜக தொடர்ந்து செய்து வருகிறது. காவல்துறை விசாரணைக்கு பாதகம் ஏற்படுத்தும் விதத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடக்கத்திலிருந்தே ஊடகங்களில் பேசி வந்தார்.

காவல்துறையின் உளவு பிரிவில் உள்ளோரை மத அடிப்படையில் பிரித்து, குதர்க்கமாக குறுகிய அரசியல் நோக்கத்துடனான அவரின் பேச்சுக்கள் எல்லை மீறின. இதனைத் தொடர்ந்து கோவை மாநகரில், பந்த் போராட்டம் நடத்துவோம் என்றும் பாஜக அறிவித்தது.

தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பந்த் நடத்துவதற்கு ஆதரவாக ஊடகங்களில் பேசினார். ஆனால், பாஜகவின் பந்த் அறிவிப்பிற்கு பொதுமக்களிடையே கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. உடனே, தாங்கள் பந்த் அறிவிக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்தர் பல்ட்டி அடித்தது பாஜக.

இப்போது, அடுத்தகட்ட சதிராட்டமாக, ஆளுநர் ரவியை களமிறக்கிவிட்டுள்ளார்கள். கோவையில், பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், காவல்துறையின் துரிதமான செயல்பாட்டை பாராட்டிவிட்டு, என்.ஐ.ஏ விசாரணை தாமதப்படுத்தப்பட்டதென்றும் அதனால் ஆதாரங்கள் அழிய வாய்ப்புள்ளதெனவும் கற்பனை சரடுகளை விட்டுள்ளார்.

மாநில அரசாங்கத்திற்கு உள்நோக்கம் கற்பிக்க முயற்சி செய்திருக்கிறார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஏற்கனவே தேசிய புலனாய்வு முகமையின் விசாரணை வரம்பில் உள்ளவர்களே. எனவே, முன்கூட்டியே இப்படியொரு அசம்பாவிதத்தை கணித்து தடுக்க தவறியது என்.ஐ.ஏ தான்.

ஒருவேளை காவல்துறையோடு இணைந்து தானும் விசாரணையை நடத்த வேண்டும் என என்.ஐ.ஏ விரும்பினால் அதற்கான அதிகாரமும் அவர்களுக்கு உள்ளது. உண்மை இப்படியிருக்க ஆளுநர் விமர்சிப்பதாக இருந்தால் என்.ஐ.ஏ மீதுதான் தன் விமர்சனத்தை திருப்பியிருக்க வேண்டும்.

ஆளுநர் கதைவிட்டது போல வழக்கின் ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருந்தால் அதில் ஒன்றிய அரசாங்கம் தான் குற்றவாளியாக இருக்க முடியும். இந்திய அரசாங்கம் என்பதே மாநிலங்களை உள்ளடக்கிய கூட்டாட்சிதான். எல்லை பாதுகாப்பு தவிர அனைத்து பணிகளிலும் ஒன்றிய – மாநில அரசுகள் இணைந்து செயல்படும் விதமாகவே அரசமைப்பு உள்ளது. அரசமைப்பினை உயர்த்திப் பிடிக்க வேண்டிய ஆளுநர், பாஜகவின் ஒற்றை ஆட்சி நிலைப்பாட்டில் நின்றுகொண்டு, பொறுப்பற்ற முறையில் அரசியல் செய்ய முயற்சிக்கிறார்.

நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்பான விசயங்களில் பாஜகவின் இதுபோன்ற நடவடிக்கைகள் கடுமையான கண்டனத்திற்குரியவை. அதற்கு உடந்தையாக ஆளுநர் பதவி பயன்படுத்தப்படுவது கண்டிக்கத்தக்கது. எனவே, ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு சார்பில் வற்புறுத்துகிறோம். கோவை மக்களின் பாதுகாப்பையும், சமூக அமைதியையும் நிலைநாட்டுவதே தற்போதைய தலையாய கடமையாகும்.

தீவிரவாத, பிளவுவாத சக்திகளை முறியடித்திட வேண்டும். கார் வெடிப்பு வழக்கின் விசாரணையை துரிதப்படுத்தி, குற்றம் இழைத்தோரை தண்டிக்க வேண்டும் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது" இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

பதிவு: October 29, 2022
'அண்ணாமலை மோடி போல் பத்திரிக்கையாளர்களைச் சந்திக்காமல் தவிர்ப்பதே அவரது எதிர்காலத்திற்கு நல்லது' - கே.எஸ்.அழகிரி கண்டனம்!

அண்ணாமலை பிரதமர் மோதி போல பத்திரிகையாளர்களைச் சந்திப்பதை தவிர்ப்பது தான் அவரது எதிர்காலத்திற்கு நல்லது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் பற்றி, "விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது போலீஸுக்கு முன்பே பாஜக தலைவர் அண்ணாமலை சில தகவல்களை வெளியிட்டது ஏன்? NIA முதலில் விசாரிக்க வேண்டிய நபர் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தான்" அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியிருந்தார்.

இதுபற்றி செய்தியாளர்கள் அண்ணாமலையிடம் கேட்டபோது, மிகவும் காட்டமாக, "ஏன் மரத்தின்மேல் குரங்கு தாவுவது போல் சுற்றிசுற்றி வருகிறீர்கள். ஊரில் உள்ள நாய், பேய், சாராயம் விற்பவர் பேசுவதற்கெல்லாம் என்னால் பதில்சொல்ல முடியாது" என்று சீறினார். இது பத்திரிகையாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அவர் பிரதமர் மோதி போல் செய்தியாளர்களைச் சந்திக்காமல் இருப்பதே மேல் என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர், "மனம் போன போக்கில் வாயில் வருவதை எல்லாம் வார்த்தைகளாக அண்ணாமலை பேசுவது அநாகரிகமானது. ஒரு அரசியல் கட்சியின் தலைவர் பத்திரிக்கையாளர்களிடம் கண்ணியத்துடனும், சுயகட்டுப்பாடுடனும் நடந்து கொள்ள வேண்டும். அப்படி நடந்து கொள்ள முடியவில்லை என்றால் அவரது தலைவர் மோடியை போலவே பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை தவிர்த்துக்கொள்வது அண்ணாமலையின் எதிர்கால அரசியலுக்கு நல்லது" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

பதிவு: October 28, 2022
இந்தியக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுடப்பட்ட விவகாரம்! பிரதமர் மோதிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

இந்தியக் கடற்படையினரே தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியதைக் கண்டித்து பிரதமர் நரேந்திர மோதிக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், 10 மீனவர்கள் (தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர், காரைக்காலைச் சேர்ந்த 3 பேர்) தங்களது விசைப்படகில் நடுக்கடலில் நேற்று (21 -10- 2022) மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, ஐ.என்.எஸ் பங்காரம் என்ற கப்பலில் பாதுகாப்புப் பணியிலிருந்த இந்தியக் கடற்படையினர், இம்மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில், வீரவேல் என்ற மீனவரின் மீது குண்டு பாய்ந்து அவர் பலத்த காயங்களுடன் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருதாக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் இந்தியக் கடற்படையினரின் செயல் மிகுந்த வருத்தத்திற்குரியது என்றும் இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் அவ்வப்போது தாக்கப்படுவதால் ஏற்படும் துயரத்தை மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள் நன்கு அறிவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ள முதல்வர், இந்தியக் கடற்படையினரே இதுபோன்ற செயல்களில் ஈடுபடும்போது அது அடித்தட்டில் வாழும் மீனவர்களிடையே நம்பிக்கையின்மையும், பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்துவதாக அமைகிறது என்றும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்தியப் பிரதமர் இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு இந்திய கடற்பகுதியில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை இந்திய பாதுகாப்பு முகமையினர் மிகுந்த எச்சரிக்கையுனும் நிதானத்துடனும் கையாளுவதற்கு உரிய அறிவுரைகளை வழங்குமாறு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். 

பதிவு: October 22, 2022
தவறுதலாகச் சுடப்பட்ட தமிழக மீனவர்! மீனவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு பாமக ராமதாஸ் கோரிக்கை!

இந்தியக் கடற்படையினரால் சுடப்பட்ட தமிழக மீனவருக்கு அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

"கோடியக்கரை அருகே வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் தவறுதலாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் வீரவேல் என்ற மீனவர் படுகாயம் அடைந்திருக்கிறார். இந்தியக் கடற்படையினரின் துப்பாக்கிச் சூடு கண்டிக்கத்தக்கது.

மீனவர்களின் படகை நிறுத்தும்படி கடற்படையினர் விளக்குகள் மூலம் சைகை காட்டியதாகவும், அதன்பிறகும் சம்பந்தப்பட்ட படகு நிற்காததால் தான் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கடற்படை தரப்பில் கூறப்படுகிறது. கடற்படையினரின் இந்த விளக்கம் ஏற்க முடியாதது

வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றனர். அதனால் ஏதேனும் ரோந்துப் படகு வந்தாலே அவர்கள் அச்சத்தில் படகை விரைவாக செலுத்தும் நிலை தான் உள்ளது. இதை புரிந்து கடற்படையினர் செயல்பட்டிருக்க வேண்டும்.

பதற்றம் நிறைந்த இந்திய - இலங்கை கடல் பகுதியில் மீனவர்களின் படகுகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து கடற்படைக்கு பயிற்சியளிக்க வேண்டும். இந்திய கடற்படை அழைத்தால் என்ன செய்ய வேண்டும் என மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

காயமடைந்த மீனவர் வீரவேலுக்கு தரமான மருத்துவம் அளித்து அவரது உயிரைக் காப்பாற்ற வேண்டும். காயமடைந்த மீனவர் வீரவேலின் வாழ்வாதார பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு அவருக்கு மத்திய - மாநில அரசுகள் ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

பதிவு: October 21, 2022
'உழைப்பையெல்லாம் உறிஞ்சிவிட்டு பணிநீக்கம் செய்ய முயல்வதா?' - அண்ணாமலை பல்கலை. தொகுப்பூதிய பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய சீமான் வலியுறுத்தல்!

அண்ணாமலை பல்கலைக்கழகத் தொகுப்பூதிய பணியாளர்களை அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டி நாதக சீமான் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்த அவரது அறிக்கையில், 

"சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 12 ஆண்டுகளாகத் தொகுப்பூதியத்தில் பணியாற்றிவரும் ஊழியர்களைத் திடீரெனப் பணி நீக்கம் செய்ய முயலும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் முடிவு வன்மையான கண்டனத்திற்குரியது. மிகக்குறைந்த ஊதியம் வழங்கி அவர்களின் உழைப்பினை உறிஞ்சிவிட்டுத் தற்போது பணியிலிருந்து நீக்க முயல்வது அவர்களது வாழ்வாதாரத்தை நசித்து அழிக்கும் கொடுஞ்செயலாகும்.

2010-ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 205 தற்காலிக ஊழியர்கள் இரண்டு ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற உறுதிமொழியுடன், ரூ.1500 என்ற மிகக்குறைந்த ஊதியத்தில் பணி நியமனம் செய்யப்பட்டனர். ஆனால், 2013-ஆம் ஆண்டு நிதிச்சிக்கல் மற்றும் நிர்வாக முறைகேடுகளைக் காரணம் காட்டி அண்ணாமலைப் பல்கலைகழகத்தை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்தத் தொடங்கியதால் பணி நிரந்தர உறுதிமொழியானது காற்றில் பறக்கவிடப்பட்டது. இதனால் கடந்த 12 ஆண்டுகாலமாகத் தொகுப்பூதிய பணியாளர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் இன்றுவரை அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது.

கடந்த மே மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அண்ணாமலை பல்கலைக்கழகத் தொகுப்பூதிய பணியாளர்கள், காலி இடங்களைப பொறுத்து, படிப்படியாகப் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று மாண்புமிகு உயர் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் உறுதியளித்தார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி நடைபெற்ற பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு கூட்டத்தில் தொகுப்பூதிய பணியாளர்கள் அக்டோபர் மாதத்துடன் நிரந்தரமாகப் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று பல்கலைக்கழகத் துணைவேந்தர் கூறியிருப்பது தொகுப்பூதிய பணியாளர்களிடம் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகமானது தமிழ்நாடு அரசுக்கு எதிராகச் செயல்படுகிறதோ என்ற ஐயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது அண்ணாமலை பல்கலைக்கழகத் தொகுப்பூதியப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று வாக்குறுதி அளித்த திமுக, இன்று வரை அதனை நிறைவேற்றவில்லை என்பது, வழக்கம்போல் இதுவும் வெற்று ஏமாற்று வாக்குறுதிதானோ? என்று எண்ணவும் தோன்றுகிறது.

ஆகவே, தமிழ்நாடு அரசு இனியும் தாமதிக்காது அண்ணாமலை பல்கலைக்கழகத் தொகுப்பூதிய பணியாளர்கள் 205 பேரையும் உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். மேலும், ஓய்வுபெற்ற ஆசிரியர், ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடை, ஈட்டிய விடுப்புத்தொகை, ஓய்வூதிய ஒப்படைப்புத்தொகை மற்றும் கடந்த 10 ஆண்டுகாலமாக அனைத்துவகை ஊழியர்களுக்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணிவுயர்வு ஆகியவற்றையும் உடனடியாக வழங்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசினை கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

பதிவு: October 21, 2022
காங்கிரசையும், கார்கேவையும் நைய்யாண்டி செய்து பிரபல பத்திரிகை வெளியிட்ட கார்ட்டூன்! கொதித்தெழுந்த கே.எஸ்.அழகிரி!

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அதனை நைய்யாண்டி செய்து பிரபல பத்திரிகை வெளியிட்டுள்ள கார்ட்டூன் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மேலும் இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 17-ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் காங்கிரசின் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோர் போட்டியிட்டிருந்தனர். இந்நிலையில் இதன் தேர்தல் வாக்குகள் லடந்த 19-ம் தேதி எண்ணப்பட்டு அதன் முடிவுகள் வெளியானது.

தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே வெற்றிபெற்றார். இதன் மூலம் அவர் விரைவில் காங்கிரஸ் தலைவராக அதிகாரப்பூர்வமாக பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், இதை நைய்யாண்டி செய்வதுபோல் பிரபல பத்திரிகையான 'தி ஹிந்து' ஆங்கில நாளிதழில் வெளியான கார்ட்டூன் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அந்தக் கார்ட்டூனில், காங்கிரசின் சின்னமான 'கை' இருக்கும்படியும், அதற்கு அருகில் கார்கேவின் புகைப்படம் கைகள் இல்லாமல் இருப்பது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காங்கிரஸ் தலைவராக கார்கே பொறுப்பில் இருந்தாலும் அவரால் சுயமாக கட்சி சார்ந்த முடிவுகளை எடுக்கமுடியாது என்பதை சூசகமாகச் சொல்லும் விதமாக அக்கார்ட்டூன் சித்தரிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ட்விட்டரில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். இதுகுறித்து அவர், "இது ஏற்கத்தக்கது அல்ல. அவர் கட்சித் தொண்டர்களின் பரவலான வரவேற்புடன் ஜனநாயக நடைமுறையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த கார்ட்டூனை திரும்பப் பெறுமாறு இந்துவிடம் கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்து பத்திரிக்கையின் கார்ட்டூனுக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தற்சமயம் வலைதளப் பக்கங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. 

Image

பதிவு: October 21, 2022
'அன்றைய தினம் இவையெல்லாம் இருந்திருந்தால் நான் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர்' - அடித்துச்சொல்லும் சரத்குமார்!

தங்கள் கட்சியினர் மக்களுக்கு தொண்டு செய்த காலங்களில் மட்டும் செல்போன், சமூக வலைதளங்கள் ஆகியவை இருந்திருந்தால் தான் முதல்வர் ஆகியிருப்பேன் என்று நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் சினிமா மற்றும் அரசியல் ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்திவரும் சிலரில் சரத்குமாரும் ஒருவர். 15 ஆண்டுகளுக்கு முன் சொந்தமாக ஒரு கட்சியைத் துவங்கிய இவர் சினிமாவிலும் தொடர்ந்து  நடித்துவருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் 'பொன்னியின் செல்வன் திரைப்படம்' வெளியானது. அதில் இவர் நடித்திருந்த பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரம் பார்வையாளர்களிடையே பெரிதும் கவனம் ஈர்த்தது.

இந்நிலையில், சென்னை திருவொற்றியூர் பகுதியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள், தீபாவளிப் பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சரத்குமார் பேசியதாவது: 

"எந்த ஒரு பணபலமும் இல்லாமல் பொருளுதவியும் இல்லாமல் 15 ஆண்டுகள் இந்த இயக்கம் இயங்கி வருவதே பெரிய சாதனை தான். அரசியல் பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் அல்ல; சேவை செய்வதற்கும்தான்.

சமத்துவ மக்கள் கட்சியினர் தொண்டு, சேவை செய்து கொண்டிருந்த காலங்களில் செல்போன், வீடியோ கேமரா, சமூக வலைதளங்கள் போன்றவை இருந்திருந்தால் அன்றைக்கு நாங்கள் தான் முதலமைச்சர். எல்லோர் கையையும் கீறினால் சிகப்பு நிறத்தில் தான் ரத்தம் வரும். அது தான் சமத்துவம்.

ஜாதி குறிப்பிட வேண்டிய இடத்தில் எனது தந்தை மனித ஜாதி என குறிப்பிட்டதாலேயே எனக்கு பல கல்லூரிகளில் இடம் மறுக்கப்பட்டது. அடுத்த தேர்தலை பற்றி சிந்திப்பதைவிட அடுத்த தலைமுறையை பற்றி சந்திப்பவன் தான் தலைவன். அனைவருக்கும் கருத்து சுதந்திரம் கிடைக்கும் என அறிவித்தவன் நான். இன்னும் 15 நாட்களில் ஒரு முக்கிய அறிவிப்பு வரும். விரைந்து அதுபற்றி அறிவிப்பேன்"

பதிவு: October 20, 2022
காங்கிரஸ் தலைவரானார் மல்லிகார்ஜுன கார்கே! தலைவர்கள் வாழ்த்து!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியான நிலையில், தேர்தலில் வெற்றிபெற்று மல்லிகார்ஜுன கார்கே காங்கிரசின் அடுத்த தலைவராகிறார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 17-ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் காங்கிரசின் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோர் போட்டியிட்டிருந்தனர். இந்நிலையில் இதன் தேர்தல் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு அதன் முடிவுகள் வெளியானது.

தேர்தலில் 7,897 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார்; 1072 வாக்குகளைப் பெற்று சசிதரூர் தேர்தலில் தோல்வியைத் தழுவினார். மேலும் அளிக்கப்பட்ட வாக்குகளில் 416 வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், தேர்தலில் வெற்றிபெற்ற கார்கேவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, "காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கே அவர்களுக்கு வாழ்த்துகள். காங்கிரஸ் தலைவர் இந்தியாவின் ஜனநாயக பார்வையை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இந்த வரலாற்றுப் பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்வதால், அவரது பரந்த அனுபவமும், கருத்தியல் அர்ப்பணிப்பும் கட்சிக்கு சிறப்பாகச் சேவை செய்யும்" என்று ட்விட்டரில் தனது வாழ்த்தைப் பதிவிட்டுள்ளார். 

மேலும் இதுகுறித்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, "இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரான தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கே அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்களின் அரசியல் வாழ்க்கை அனுபவம் இந்திய தேசிய காங்கிரஸின் சித்தாந்தத்தை வலுப்படுத்தும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உங்கள் தலைமையில், அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக காங்கிரஸ் தொடர்ந்து போராடும்" இவ்வாறு கூறியுள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "காங்கிரசின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. மல்லிகார்ஜுன கார்கே அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தியாவின் மதச்சார்பற்ற மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நெறிமுறைகளைப் பாதுகாக்க நாம் அனைவரும் போராடும் ஒரு முக்கியமான கட்டத்தில் அவர் பழமையான கட்சியின் பொறுப்பை ஏற்றுள்ளார். அவருடைய புதிய பதவியில் அவர் வெற்றிபெற வாழ்த்துகிறேன்" என்று வாழ்த்தியுள்ளார்.

இதைத்தொடர்ந்து சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் மல்லிகார்ஜுன கார்கேவை அவரது வீட்டில் சந்தித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

பதிவு: October 19, 2022
'தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமானவர்கள் மீது கொலைவழக்குப் பதிவு செய்யவேண்டும்' - நாதக சீமான் வலியுறுத்தல்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்குக் காரணமான அரசு அதிகாரிகள், காவல்துறையினர் ஆட்சியாளர்கள் மீது கொலைவழக்குப் பதிவுசெய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

"தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கெதிராக மண்ணின் மக்கள் நடத்திய மக்கள்திரள் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியும், தடியடி நடத்தியும் 14 உயிர்களைப் பறித்த முந்தைய அதிமுக அரசின் அரசப்பயங்கரவாத நடவடிக்கையை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் இறுதி அறிக்கை பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.

சமூக விரோதிகள் என முத்திரைக் குத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட மண்ணின் மக்களுக்கான நீதியை நிலைநாட்டும்விதமாக, போராட்டக்களத்தில் நடந்த உண்மைகளை வெளிக்கொணர்ந்திருக்கிற அம்மையார் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தூத்துக்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடும் அநீதியை மக்கள் மன்றத்திலும், ஆணையத்தின் முன் நேர்நின்றும் தொடர்ச்சியாக எடுத்துரைத்து வந்தேன். அவற்றைப் பிரதிபலிப்பது போல, சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருக்கிறது ஆணையத்தின் அறிக்கை. தூத்துக்குடி மக்களின் மீது சுமத்தப்பட்ட அவப்பெயரையும், பழிச்சொல்லையும் முழுமையாகப் போக்கி, ஆளும் வர்க்கத்தின் கோரப்படுகொலைகளைத் தோலுரித்த அம்மையார் அருணாஜெகதீசன் அவர்களுக்கு எனது உளப்பூர்வமானப் பாராட்டுகளையும், பெரும் நன்றியையும்
தெரிவித்துக்கொள்கிறேன்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற அறப்போராட்டத்தின் நூறாவது நாளில், பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிப் பேரணியாய் வந்தபோது, அவர்களை நோக்கித் தடியடியும், துப்பாக்கிச்சூடும் நடத்தி, அடக்குமுறையையும், ஒடுக்குமுறையையும் கட்டவிழ்த்து விடப்பட்டது. பேரணி நடைபெற்ற இடத்திற்குத் தொடர்பே இல்லாது தொலைதூரத்திலுள்ள பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் அம்மையார் ஜான்சி படுகொலை செய்யப்பட்டார் என்பதும், போராட்டத்திற்கு அடுத்த நாள் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டிலும் ஒருவர் பலியானார் என்கிற இரு சம்பவங்களே, இத்துப்பாக்கிச் சூடு திட்டமிட்டு நிகழ்த்தியப் பச்சைப்படுகொலை என்பதற்கான சாட்சியங்களாகும்.

காவல்துறையினர் போராட்டக்காரர்களின் முட்டிக்குக் கீழே சுடுகிற வகையில் வெள்ளை ஏகாதிபத்திய ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட விதிமுறையையே நாம் ஏற்காதபோது, போராட்டக்காரர்களின் தொண்டை, மார்புப்பகுதிகளைக் குறிவைத்து சுட்டு, தூத்துக்குடி மக்களைச் சுட்டுக் கொன்றொழித்தக் கொடுங்கோன்மையை எப்படி சகித்துக்கொள்ள முடியும்? மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் தீ வைக்கப்படுவதற்கு முன்பே, அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது; மக்கள் தப்பியோடும்போதும் அவர்களைக் குறிவைத்து சுட்டுக் கொன்றிருக்கிறார்கள் என்பதும், அவர்கள் எவ்வித ஆயுதமும் இல்லாத நிராயுதபாணியாக நின்றார்கள் என்பதும் அறிக்கையில் தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு தற்காப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்படவில்லை; மாறாக, மக்களைக் கொன்றுகுவிக்கும் நோக்கத்தோடே நிகழ்த்தப்பட்டது என்பதை அம்மையார் அருணா ஜெகதீசன் ஆதாரத்தோடு உறுதிசெய்திருக்கிறார். துப்பாக்கிச்சூடு குறித்தான முன் எச்சரிக்கை மக்களுக்குக் கொடுக்கப்படாததும், சுடப்பட்டவர்களில் ஒருவர்கூட முட்டிக்குக் கீழே சுடப்படவில்லை என்பதும் இது திட்டமிட்டப் படுகொலை என்பதை ஆணித்தரமாகக் கூற போதுமான காரணமாகும்.

போராட்டக்காரர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையேயான வேறுபாட்டை அறியப் பாதுகாப்புக்கு வரும் காவல்துறையினர் கட்டாயம் சீருடையில்தான் வர வேண்டும் எனும் விதியிருக்கும்போது, சீருடை அணியாத காவலர்கள் அதிநவீனத்துப்பாக்கியோடு எப்படிக் களத்திற்கு வந்தார்கள்? துப்பாக்கிச்சூடு நடக்கப்போகிறது என்பது முன்கூட்டியே எப்படி அவர்களுக்குத் தெரிந்தது? கூட்டத்தைக் கலைக்க வழிவாய்ப்புகள் இருந்தும் அதனைச் செய்யாது, துப்பாக்கிச்சூட்டைக் கையிலெடுத்தது எதற்காக? எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமலும், கூட்டத்திலிருந்து தப்பியோடியவர்களைக்கூட விடாமலும், காவலர்கள் வாகனத்தின் மீது ஏறி நின்று, போராட்டக்காரர்களைக் குறிவைத்துச் சுட்டுக்கொன்றது எதனால்? போராட்டத்தில் சுடப்பட்டவர்கள், காயம்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்ட அரசு மருத்துவமனையின் வளாகத்தில்கூட துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய தேவையென்ன வந்தது? இவ்வளவு பெரிய போராட்டம் நகரத்தில் நடந்து கொண்டிருக்கும் நாளன்று, தூத்துக்குடியில் இல்லாது மாவட்ட ஆட்சியர் கோவில்பட்டிக்கு ஏன் சென்றார்? துப்பாக்கிச்சூட்டுக்கு அனுமதி அளித்தது வட்டாட்சியர்கள்தான் எனக்கூறுவது உண்மைக்குப் புறம்பானது இல்லையா? நாடே உற்றுநோக்கிக்கவனிக்கிற ஒரு போராட்டத்தில், மத்திய/மாநில அரசின் அனுமதியில்லாமல் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதியளிக்கிற அளவுக்கு வட்டாட்சியர்களுக்கு இந்த அமைப்பில் அதிகாரமும், வலிமையும் இருக்கிறதா? என நீளும் கேள்விகள் யாவும் வேதாந்தா குழுமத்துக்கு ஆதரவாக மண்ணின் மக்களைக் கொன்றொழிக்க அன்றைய அரசுகள் நிகழ்த்திய சதிச்செயலை அம்பலப்படுத்துகிறது.

நீதியரசர் அருணாஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையத்தின் அறிக்கையில், காக்கை, குருவிகளைப் போல, மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்; காவல் துறையினர் ஒளிந்துகொண்டு தப்பித்து ஓடியவர்களையும் சுட்டுப்படுகொலை செய்துள்ளனர் எனக்கூறி, 17 காவல்துறையினர் பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்குப் பரிந்துரை அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காவல்துறை அதிகாரி சுடலைக்கண்ணு மட்டும் 17 சுற்றுகள் சுட்டுள்ளார் எனவும், 4 இடங்களில் அவரைச் சுட வைத்ததன் மூலம், அடியாள் போல காவல்துறை பயன்படுத்தியுள்ளது எனவும், காவல்துறை தலைமையின் அப்பட்டமான தோல்விதான் தூத்துக்குடி படுகொலை எனவும் கூறியுள்ளது ஆணையத்தின் அறிக்கை. 14 உயிர்களைப் பலிகொண்ட படுகொலைகளுக்கு முழுமுதற் பொறுப்பேற்க வேண்டிய அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ‘தொலைக்காட்சியைப் பார்த்துதான் துப்பாக்கிச்சூட்டைத் தெரிந்துகொண்டேன்’ எனக்கூறிய பொருந்தா வாதம் முழுமையானப் பொய்யென்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது ஆணையத்தின் அறிக்கை.

துப்பாக்கிச்சூடு குறித்தான ஒவ்வொரு செய்தியும் முதல்வருக்குத் தெரிவிக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதன் மூலம் அதிமுக அரசால் நிகழ்த்தப்பட்டப் படுகொலையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு என்பது தெளிவாகிறது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எதற்காகத் துப்பாக்கிச்சூட்டுக்கு அனுமதியளித்தார்? எதற்காகப் பச்சைப்படுகொலைகளை அரங்கேற்றினார்? யாருக்காக இதுவெல்லாம் நடந்தது? அனில் அகர்வாலை மனம் நிறைவடையச் செய்யவா? பிரதமர் மோடியை மனம்நிறைவடையச் செய்யவா? இது மன்னிக்கவே முடியாத கொடுந்துரோகம்! வாக்குச்செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மண்ணின் மக்களையே அரச வலிமையைக் கொண்டு, படுகொலை செய்திட்ட இக்கொடுஞ்செயலை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.

ஆகவே, நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று, துப்பாக்கிச்சூட்டுக்குப் பலியானோர் குடும்பத்தினருக்கு 50 இலட்ச ரூபாயும், காயமுற்றவர்களுக்கு 10 இலட்ச ரூபாயும் துயர்துடைப்புத்தொகை உடனடியாக வழங்க வேண்டுமெனவும், துப்பாக்கிச்சூட்டை நிகழ்த்திய 17 காவல்துறையினர் மீது மட்டுமல்லாது, சுட ஆணையிட்ட அரசு அதிகாரிகள், முந்தைய அரசின் ஆட்சியாளர்கள் மீதும் கொலைவழக்குப் பதிவுசெய்து, அவர்கள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

பதிவு: October 19, 2022
'அக்காவை தாய்போல் இருந்து பராமரித்து வந்துள்ளேன்; நான் அவரது ஆஞ்சியோ சிகிச்சையைத் தடுப்பேனா?' - சசிகலா அளித்துள்ள விளக்கம்!

 

தன்னை அரசியலில் இருந்து ஓரங்கட்ட நினைத்து ஆறுமுகசாமி ஆணையம் தன் மீது பழிபோடுவதாகவும், ஆஞ்சியோ சிகிச்சையை வேண்டாம் என்று தடுக்க தான் ஒன்றும் மருத்துவர் இல்லை என்றும் சசிகலா வேதனை பொங்கத் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:

"என் மீது பழி போடுவதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இது போன்று என் மீது பழிபோடுவது ஒன்றும் புதிது இல்லை. என்றைக்கு நான் அம்மா அவர்களின் கரத்தை பிடித்தேனோ அன்று ஆரம்பமானது என் மீது இந்த பழி போடும் படலம். அது இந்த நொடிவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதைப்பற்றி கவலைப்பட்டு இருந்தால் எங்களால் அரசியலில் இந்த அளவுக்கு சாதித்து இருக்கமுடியாது. ஆனால் அதே சமயம் என் அக்கா, நம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்துவதுதான் எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது.

புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்துவதற்கு பதிலாக அவருடைய மரணத்தையே அரசியலாக்கியவர்கள் கழகத்திற்கு எதிரானவர்கள், கழகத்தை அழிக்க நினைந்தவர்கள், குறிப்பாக திமுகவினர் நம் அம்மா அவர்களின் பெயருக்கும் புழுக்கும் களங்கம் ஏற்படுத்த நினைத்தது, நிறைவேறியது. அதற்கு நம் கட்சியினரே பலிகடா ஆனார்கள் என்பது தான் வேதனையான ஒன்று.

என்னை அரசியலில் இருந்து ஓரம்கட்ட வேண்டும் என்றால் அதற்கு எத்தனையோ வேறு வழிகளை தேர்ந்தெடுத்து இருக்கலாம் அதற்கு அம்மா அவர்களின் மரணத்தை சர்ச்சை ஆக்கியது தான் மிகவும் கொடுமையானது, தானும், புரட்சித்தலைவி அம்மா அவர்களும் ஒரு தாய் வயிற்றில் பிறக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் நாங்கள் என்றைக்கும் நல்ல சகோதரிகளாக, நட்பிற்கு இலக்கணமாகவே வாழ்ந்தோம். இதை இறைவன் இப்பிறவியில் எனக்களித்த பெரும் வரமாக எண்ணுகிறேன்.

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மரணத்தை சர்ச்சையாக்கி, அதற்காக ஒரு விசாரணை ஆணையம் நீதியரசர் ஆறுமுகசாமி அவர்கள் தலைமையில் அமைத்து, அதன் அறிக்கையும் அரசியலாக்கி விட்டார்கள்.

தற்போது, இவர்கள் பங்குக்கு என்னை விசாரிப்பதாக சொல்கிறார்கள். எத்தனை முறை எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் அம்மா அவர்கள் மரணத்தைப் பற்றி விசாரித்து கொண்டே இருக்கலாம். ஆனால், உண்மை என்றைக்கும் மாறாது. நம் அம்மாவின் மரணத்தில் எந்த வித சந்தேகமும் கிடையாது. அம்மா அவர்கள் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளித்து நன்றாக குணமடைந்து வீட்டிற்கு திரும்ப இருந்த நிலையில், தூரதிஷ்டவசமாக நம்மையெல்லாம் நிர்கதியாக விட்டுச் சென்றார் என்பதுதான் எதார்த்தமான உண்மை. இந்த எதார்த்தத்தை கழகத் தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் புரிந்துகொண்டுள்ளனர்.

விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதன் நோக்கமாக சொல்லப்பட்டது என்னவென்றால் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துமனைக்கு கொண்டுசென்ற காரணமும், அங்கு சிகிச்சை அளித்த விதத்தையும் விசாரிக்கத்தான் என்று செய்திகள் வந்தது. உச்ச நீதிமன்றம் கூட இந்த விவகாரத்தில் 19.11. 2021 அன்று ஒரு தெளிவான உத்தரவை வழங்கியிருக்கிறது.

அதாவது ஆணையத்தின் முன்பாக இருக்கின்ற சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு கொடுத்து இருந்தது. ஆனால் இந்த விசாரணை ஆணையம் தன்னுடய அதிகாரவரம்பை மீறி தேவையற்ற அனுமானங்களை சொல்லி என் மீது பழி போட்டு இருப்பது எந்த விதத்தில் நியாயம்? எங்களுடைய உறவு குறித்து இந்த ஆணையம் யாரையோ திருப்திபடுத்தும் எண்ணத்தில், யாருடைய அரசியல் ஆதாயத்திற்கு உதவுகின்ற நோக்கத்தில் இப்படிப்பட்ட தேவையற்ற சர்ச்சைக்குரிய கருத்தை இந்த ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன?

நானும் அம்மாவும் கிட்டத்தட்ட சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனைவரும் பெறாமைப்படும் அளவுக்கு ஒருவருக்கொருவர் துணையாக ஒரே வீட்டில் வாழ்ந்து இருக்கிறோம். புரட்சித்தலைவி அம்மா அவர்களே தெரிவித்தது போல் உற்ற சகோதரியாக உயிர்த் தோழியா, இன்னும் சொல்லப்போனால் அவருக்கு தாயாக இருந்து பாதுகாத்து வந்துள்ளேன்.

என்னையும் அம்மா அவர்களையும் எப்படியாவது பிரிந்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அம்மாவும் நானும் சிறிது காலம் பிரிந்து இருந்து என்ன நடக்கிறது என்று பார்த்தோம். இந்த சதியின் பின்னணி குறித்து நாங்கள் தெரித்து கொண்டவுடன் மீண்டும் அம்மாவோடு இருந்து வந்தேன். 2012 முதல் அம்மாவுக்கும் எனக்கும் இடையிலான உறவு சரியில்லை என்று ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எப்படி தெரியும்? யார் இதைப்பற்றி ஆணையத்திடம் சொன்னது? இறந்துபோன புரட்சித்தலைவி அம்மா அவர்களும் இவர்களிடத்தில் சொல்லி இருக்க வாய்ப்பில்லை. 

அப்படி இருக்கும் போது இப்படி ஒரு பொய்யான அபத்தமான கருத்தை ஆணையம் தெரிவிக்க காரணம் என்ன அதன் உள்நோக்கம் என்ன, இது யாருடைய அரசியல் லாபத்திற்காக வெளியிடப்பட்டு இருக்கும் என்பதை மக்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன்.

இந்த ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல் புரட்சித்தலைவி அம்மாவின் மருத்துவ சிகிச்சையில் ஒருபோதும் நாள் தலையிட்டதில்லை. அவ்வாறு கருத்துக்களை சொல்லக்கூடிய அளவுக்கு மருத்துவ படிப்பு நான் படித்தது கிடையாது. எந்த விதமான பதிசோதனைகள் செய்ய வேண்டும், எந்த எந்த மருந்துகள் தர வேண்டும் என்கிற முடிவை மருத்துவ குழுவினரே தான் முடிவெடுத்து உரிய சிகிச்சைகளை வழங்கினார்கள்.

என்னுடைய நோக்கமெல்லாம் அக்காவுக்கு முதல் தர சிகிச்சை தர வேண்டும் என்பது தான், என்னுடைய ஆலோசனைகளை பெற்று மருத்துவ சிகிச்சை அளிக்கக்கூடிய அளவில் அப்பல்லோ மருத்துவமனை ஒரு சாதாரண மருத்துவமனை கிடையாது. ஆசியாவிலேயே மிகப்பெரிய மருந்துவமனை, உலக அளவில் சிறப்புகளை பெற்ற மிகச்சிறந்த மருத்துவ நிபுணர்கள் அங்கே பணியாற்றுகிறார்கள். மேலும் அக்கா உடல்நிலை சம்பந்தப்பட்ட பரிசோதனைகளை ஏற்கனவே அதே மருத்துவமனையில் செய்து இருந்தோம்.

இதன் காரணமாகத்தான் அந்த மருத்துவமனையை தேர்ந்தெடுத்து அம்மா அவர்களை சிகிச்சை அளிக்க அங்கு கொண்டு சென்றோம். வெளிநாடு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க நான் என்றைக்குமே தடையாக இருந்தது இல்லை. அதேபோன்று புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு அன்றைய குழலில் ஆஞ்சியோ சிகிச்சை செய்வது தொடர்பாக எந்த தேவையும் ஏற்படவில்லை என்று AIIMS டாக்டர்கள் உட்பட அனைத்து டாக்டர்களும் முடிவு எடுத்தார்கள். ஆனால் ஆணையம் யூகத்தின் அடிப்படையில் சொல்வதையெல்லாம் மக்கள் ஏற்கமாட்டார்கள் எனவே, என் மீது சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டுகளை நான் முற்றிலும் மறுக்கிறேன். இது தொடர்பாக என்னிடம் எந்த வித விசாரணை நடத்தினாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறேன்

நம் அம்மா அவர்களை அரசியல் ரீதியாக எதிர்க்கக்கூட துணிவில்லாதவர்கள் அவர்களின் மரணத்தை அரசியலாக்கி வேடிக்கை பார்க்கும் அற்பத்தனமான நிலையை யாரும் இனிமேல் ஆதரிக்கமாட்டார்கள். பொதுமக்களும் அம்மா அவர்கள் மரணத்தில் எந்தவித சர்ச்சைகளும் இல்லை என்பதை நன்றாக புரிந்து கொண்டுள்ளார்கள்.

நம் தலைவர்களின் பெயரையும் புகழையும் யாராலும் அவ்வளவு எளிதில் அழித்து விடமுடியாது நான் இருக்கின்றவகை, இந்த மனித இனம் இருக்கின்றவரை நம் இருபெரும் தலைவர்களான புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆகியோர் பெயர் இப்பூவுலகில் நிலைத்து நிற்கும் என்பதை இந்நேரத்தில் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்"

பதிவு: October 19, 2022
சட்டமன்ற ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்து நாளை உண்ணாவிரதம் மேற்கொள்ளவிருப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

சட்டமன்றத்தில் நடைபெற்ற ஜனநாயக படுகொலையைக் கண்டித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர். 

எதிர்க்கட்சித் துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அறிவிக்கக்கோரி இன்றைய சட்டமன்றக் கூட்டத்தொடரில் இபிஎஸ் ஆதரவாளர்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில், அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும் அவர்கள் மீது சட்டப்பேரவை நிகழ்வுகளில் கலந்துகொள்ள ஒரு நாள் தடையும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், தங்களுக்கு எதிரான சட்டமன்ற நிகழ்வுகளைக் கண்டித்து நாளை ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

"தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற ஜனநாயக படுகொலையைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இடைக்காலப் பொதுச் செயலாளரும், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு.எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும், ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம், நாளை (19.10.2022 புதன் கிழமை), சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற உள்ளது. இப்போராட்டத்தில், அனைத்து கழக சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இந்த ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கழக அமைப்பு ரீதியான சென்னை மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இந்த ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு உரிய அனுமதி கேட்டு, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு N. தளவாய்சுந்தரம். MA. கழக அமைப்புச் செயலாளரும். தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளரும். முன்னான் வாரியத் தலைவருமான திரு ஆதிராஜாராம் ஆகியோர் நேரில் வழங்கி உள்ளனர். கழக இடைக்காலப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது" இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

பதிவு: October 18, 2022
'ஜெயலலிதா டிசம்பர் 5-ல் இறக்கவில்லை; நினைத்திருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்கலாம்' - அதிரவைத்துள்ள ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த தேதி டிசம்பர் 5 இல்லை என்றும், உரிய சிகிச்சை அளித்திருந்தால் அவர் உயிர் பிழைத்திருப்பார் என்றும் ஆறுமுகசாமி ஆணையம் சமர்ப்பித்திருந்த அறிக்கையில் அதிரவைக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவையில் குளிர்காலக்கூட்டத்தொடரின் 2-வது நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுக சாமி ஆணையம் அளித்த அறிக்கை, இந்தி திணிப்புக்கு எதிரான அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த அறிக்கை ஆகியவை தாக்கல் செய்யப்பட்டன. 

இதில் ஜெயலலிதா மர்மமரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் அளித்த அறிக்கையில் அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, 2016 டிசம்பர் 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்தார் என கூறப்பட்ட நிலையில், அவர் இறந்த நேரம் 2016 டிசம்பர் 4-ம் தேதி மதியம் 3 மணிமுதல் 3.30 மணிக்குள் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமயம் அவருக்கு நீரிழிவு பிரச்சினை, உடற்பருமன் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகிய பிரச்சினைகள் இருந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் இதயத்தில் வெஜிடேசன், பெர்ஃபொரேசன் மற்றும் டயஸ்டோலிக் டிஸ்பரேஷன் ஆகியவற்றுக்காக பிரிட்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே, அமெரிக்க மருத்துவர் ஸ்டூவர்ட் ரஸ்ஸல், மருத்துவர் சமின் ஷர்மா ஆகியோர் ஆஞ்சியோ அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்தனர். ஆனால் அவருக்கு கடைசி வரை ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் நினைத்திருந்தால் அவரது உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜெயலலிதாவும், சசிகலாவும் பிரிந்திருந்த நிலையில், 2012-ஆம் அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்தனர். ஆனால், அவர்கள் மீண்டும் இணைந்ததிலிருந்தே அவர்கள் இருவருக்கிடையிலான உறவு சுமுக நிலையில் இல்லை என்றும், அதன் காரணமாகவே சசிகலா ஜெயலலிதாவின் சிகிச்சையைத் தடுத்திருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் ஜெயலலிதா சிகிச்சையில் தொடர்புடைய சசிகலா, மருத்துவர் சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் விசாரணை நடத்தவும் அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, மர்மமான நிலையில் நீடித்துவந்த ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகங்கள் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை மூலம் தீர்க்கப்பட்டுள்ள நிலையில், இது பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளது. 

பதிவு: October 18, 2022
'ஆறுமுக சாமி ஆணைய அறிக்கைக்கு நாங்கள் பயப்படுகிறோமா? அதை அமைத்ததே நாங்கள் தானே' - சட்டப்பேரவை அமளியும் இபிஎஸ்-ன் விளக்கமும்!

எதிர்க்கட்சித் துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அறிவிக்கவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலைவியது.

சட்டப்பேரவையில் இன்று 2-ஆம் நாள் கூட்டத்தொடர் தொடங்கியது. எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கையில் ஒ.பன்னீர் செல்வம் அமர்ந்திருந்தார். இதனிடையே, இபிஎஸ் தரப்பினர், எ.க.து.தலைவர் இருக்கையை மாற்றவேண்டும் என்றும், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் குறித்த முடிவை சபாநாயகர் அறிவிக்க வேண்டும் என்று முழக்கமிட்டனர். இதையடுத்து, கேள்வி பதில் நேரத்தில் இது குறித்து பேச முடியாது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தும் இபிஎஸ் தரப்பினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, "பேரவையில் கலகத்தை ஏற்படுத்த இபிஎஸ் தரப்பினர் திட்டத்துடன் வந்துள்ளனர். அவர்கள் எவ்வளவு கூச்சலிட்டாலும் அவைக்குறிப்பில் அவர்கள் பேச்சு பதியப்படாது. ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையையும், இந்தி திணிப்புக்கு எதிரான அறிக்கையையும் புறக்கணிக்கவேண்டும் என்று திட்டமிட்டே, பயந்து அவர்கள் இந்த அமளியைச் செய்துவருகின்றனர்" என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து இபிஎஸ் தரப்பினர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். 

சபாநாயகரைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், 'உடம்பில் தமிழ் உணர்ச்சி இருக்குமேயானால், தன்மான ரத்தம் ஓடுமேயானால் அவர்கள் அவையில் இருந்திருக்க வேண்டும்' என்று பேசினார்.

மேலும் பேசிய சபாநாயகர், "சட்டமன்றத்தில் ஒருவருடைய இருக்கையை மாற்றுங்கள் என சபாநாயகரை யாரும் வற்புறுத்த கூடாது, வற்புறுத்தவும் முடியாது. தனிப்பட்ட யாருக்காவும் நான் சபாநாயகர் பதவியில் உட்கார்ந்திருக்கவில்லை. எதிர்க்கட்சித் துணைத்தலைவர் பதவிக்கு அங்கீகாரம் இல்லை. அப்பதவி மரபின் படியே வழங்கப்பட்டுவருகிறது" என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், சட்டப்பேரவை நிகழ்வுகளில் எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்கள் பங்கேற்க சபாநாயகர் அப்பாவு இன்று ஒரு நாள் தடை விதித்தார்.

இந்நிலையில், தர்ணாவில் ஈடுபட்ட இபிஎஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நியாயமாக நடுநிலையோடு செயல்படும் சபாநாயகர், அரசியல் ரீதியாக செயல்படுவதை பார்க்கிறோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைபடியே சட்டப்பேரவை தலைவர் செயல்படுகிறார். ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கைக்கு நாங்கள் பயப்படுகிறோமா? புரட்சித்தலைவி அம்மாவின் மர்மமான மரணத்திற்குப்பின் ஆறுமுகசாமி ஆணையம் என்ற ஒன்றை அமைத்தது யார்? தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நிகழ்வுக்கு விசாரணை ஆணையம் அமைத்தது யார்? இந்தி திணிப்பை எதிர்த்து அறிக்கை கொண்டுவந்துள்ளதாகக் கூறுகின்றனர். திமுகவிற்கு இதை விட்டால் அரசியல் செய்ய வேறு ஒன்றுமே கிடையாது" என்று பேசினார். 

பதிவு: October 18, 2022
'தமிழகத்தில் பட்டியலின மக்கள் மீது இன்னமும் தீண்டாமைக் கொடுமை நிகழ்த்தப்பட்டுவருவது கவலையளிக்கிறது' - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

தமிழகத்தில் இன்னும் பல்வேறு இடங்களில் பட்டியலின மக்கள் தீண்டத்தகாதவர்களாக பார்க்கப்படுவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கவலை தெரிவித்துள்ளார். 

சென்னை சேத்துப்பட்டில், 75-ஆம் ஆண்டிற்கான சுதந்திர விழா மற்றும் ஹரிஜன சேவக்கின் 90-வது ஆண்டுவிழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு பேசினார். விழாவில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, "பிரிட்டிஷ்காரர்கள் நம் நாட்டை மொழி, மதம், நிறம் அடிப்படையில் பிரித்தார்கள். ஆனால், காந்தியடிகள் தான் இந்தியர்கள் அனைவரையும் ஒரே குடும்பமாக்கினார். அடித்தட்டு மக்களுக்கான வளர்ச்சியை கொண்டுவருவதில் அவர் குறியாக இருந்தார். ஆனால் காந்தியின் மறைவுக்குப்பின் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே எல்லாம் என்ற நிலை உருவாகியுள்ளது.

இந்தியாவில் 6-18 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 28% பேரே கல்விகற்கச் செல்கின்றனர். தமிழகத்தில் 51% குழந்தைகள் பள்ளிக்குச் செல்கின்றனர். இது பெருமைப்படவேண்டிய விஷயம் தான். ஆனாலும் ஹரிஜன குழந்தைகளில் 12%-14% பேரே பள்ளிக்குச் செல்கின்றனர். தமிழக மக்கள் தொகையில் 24% பேர் ஹரிஜன மக்கள். அப்படிப் பார்த்தால் சில சமூக மக்களின் குழந்தைகளே 75% கல்வியறிவைப் பெறுகின்றனர். 

இந்த சதவீதத்திற்கான இடைவெளியை சற்றே நாம் உற்றுப்பார்க்க வேண்டும். இன்னும் பல இடங்களில், பல கோவில்களில், பல பள்ளிகளில், ஹரிஜன மக்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படும் கொடுமை உள்ளது. ஏன் இந்தக் கொடுமை? தீண்டாமை கடைப்பிடிப்பதற்கு எதிராக கடுமையான சட்டங்கள் இருந்தும் அது தொடர்கிறது. ஹரிஜன பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சகித்துக்கொள்ள முடியாதது.

ஹரிஜன மக்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் அதிகம். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் 86% பேர் தண்டனையிலிருந்து தப்பி விடுகிறார்கள். ஹரிஜன மக்கள் நம் மக்கள், அவர்களின் நிலை உயர நாம் உறுதியேற்க வேண்டும்" இவ்வாறு குறிப்பிட்டார்.

பதிவு: October 17, 2022
'இந்தி திணிப்பு தமிழ்நாடு மட்டுமல்லாமல் தாய்மொழியைப் போற்றும் எந்த மாநிலத்திற்கும் ஒவ்வாதது; பிரித்தாளக்கூடியது' - பிரதமர் மோதிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

இந்தியைத் திணிக்கும் முயற்சிகளை கைவிட்டு, இந்திய ஒற்றுமைச் சுடரைத் தொடர்ந்து ஒளிரச் செய்ய வேண்டுமென பிரதமர் நரேந்திர மோதிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

இதுகுறித்து திமுக செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:  

"மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு. அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு அளித்துள்ள அறிக்கை தொடர்பாக ஊடகங்களில் வந்துள்ள செய்தி குறித்து 15-10-2022 அன்று கடிதம் எழுதியுள்ளார்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா அவர்களது தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களிடம் சமர்ப்பித்துள்ள தனது அறிக்கையில், ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி. ஐ.ஐ.எம். எய்ம்ஸ் மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங்களில் கட்டாயமாக இந்தி மொழியே பயிற்று பொழியாக இருக்க வேண்டும் என்றும் ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை இடம்பெறச் செய்ய வேண்டுமென்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளதைச் கட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோன்று இந்தியைப் பொது மொழியாக்கிடும் கையில் தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்கள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளிட்ட ஒன்றிய அரசின் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் இந்தி மொழியே பயிற்று மொழியாக ஆக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளதையும் அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

இளைஞர்கள் இந்தி படிந்திருந்தால் மட்டுமே சில வேலைகளுக்கும் தகுதி பெறுவார்கள் என்றும் ஆட்சேர்ப்பிற்கான தேர்வின்போது கட்டாயத் தாள்களில் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு, இந்தியை முதன்மைப்படுத்தும் வகையில் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இவையனைத்தும் நமது அரசியலமைப்பின் கூட்டாட்சிக் கொள்கைகளுக்கு எதிரானவை என்றும், நமது தேசத்தின் பன்மொழிக் கட்டமைப்பிற்கு தீங்கு விளைவிப்பதாக அமைந்திடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையில், தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன என்றும், இவை அனைத்தும் சம உரிமையைக் கொண்ட மொழிகள் என்றும், இந்த அட்டவணையில் இன்னும் சில மொழிகளும் சேர்க்கப்பட வேண்டும் என்று பல கோரிக்கைகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ஒன்றியத்தில் இந்தி பேசுகிற மக்களின் எண்ணிக்கையைவிட, இந்தி அல்லாத மற்ற மொழிகளைப் பேசுகிற மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், ஒவ்வொரு மொழிக்கும் அதற்குரிய சிறப்பு இருக்கிறது, தனித்துவம் இருக்கிறது, மொழிவழிப் பண்பாடு இருக்கிறது என்றும், இந்தி ஆதிக்கத்திலிருந்து நமது வளமான மற்றும் தனித்துவமான மொழிகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் தான், ஆங்கிலம் இணைப்பு மொழியாக ஆக்கப்பட்டு, ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக நீடிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மட்டுமின்றி, அனைத்து மாநில மொழிகளின் உரிமைகளுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் தமிழ்நாடு தொடர்ந்து வலுவாகக் குரல் கொடுத்து வருகிறது என்றும், 1965-ஆம் ஆண்டில் இந்தித் திணிப்புக்கு எதிராகவும் தாய்மொழியான தமிழைப் பாதுகாக்கவும் தமிழ்நாட்டில் கிளர்ந்தெழுந்த மொழிப்போரில் பல தீரமிகு இளைஞர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர் என்றும் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், அவர்களுடைய உணர்வுகளை பதித்து, இந்திய ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொண்ட முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் 'இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை, ஆங்கிலமும் தொடர்ந்து அலுவல் மொழிகளில் ஒன்றாக இருக்கும்" என்று உறுதியளித்ததை குறிப்பிட்டுச் காட்டியுள்ளார்.

அதைத் தொடர்ந்து 1968 மற்றும் 1976-ஆம் ஆண்டுகளில், அலுவல் மொழி தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதனடிப்படையில் வரையறுக்கப்பட்ட விதிகளின்படி, ஒன்றிய அரசுப் பணிகளில், ஆங்கிலம் மற்றும் இந்தி என இரு மொழிகளையும் பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் குறிப்பிட்டு, இந்த நிலைப்பாடு தொடர்ந்து அனைத்து நிலைகளிலும் நீடிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியைத் திணிப்பதற்கான சமீபத்திய முயற்சிகள் நடைமுறைக்கு ஒவ்வாதவை என்றும் அவை நாட்டினை பிளவுபடுத்தும் தன்மை கொண்டவை என்றும் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இது இந்தி பேசாத மக்களை பல விஷயங்களில் இரண்டாந்தர குடிமக்கள் போல பிரித்தாளுகின்ற தன்மை கொண்டவை என்றும், இது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல தாய்மொழியைப் போற்றும் எந்த மாநிலத்திற்கும் ஏற்புடையதாக இருக்காது என்றும் தெரிவித்துள்ளார். வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மை கொண்ட இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளும் சரிசமமாக நடத்தப்பட வேண்டும் என்றும், அனைத்து மொழிகளும் ஒன்றிய அரசின் அலுவல் மொழி என்ற நிலையை எட்டிட வேண்டுமென்றும் அவர் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மற்றும் பல்வேறுபட்ட கலாச்சாரப் பன்முகத்தன்மையை, அந்தந்த தனித்துவமான மொழியியல் சுவைகளுடன் ஊக்குவிப்பது என்பது, இந்தியத் துணைக்கண்டத்தின் பெருமையும் வலிமையும் ஆகும் என்றும், இது உலக அரங்கில் பலவித பண்பாடுகள் மற்றும் மொழிகள் கொண்ட ஜனநாயக நாடுகளுக்கு ஒரு வலுவான எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது என்றும் தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், 'ஒரே நாடு' என்ற பெயரில் இந்தி மொழியை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான முயற்சிகள் பல்வேறு மொழிகள் மற்றும் பண்பாடுகளைக் கொண்ட இந்திய மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருவதை சிதைப்பதோடு இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஊறுவிளைப்பதாக அமைந்திடும் என தாம் அஞ்சுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

அறிவியல் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வசதிகளைக் கருத்தில் கொண்டு தமிழ் உட்பட அனைத்து மொழிகளையும் அலுவல் மொழியாக எட்டாவது அட்டவணையில் சேர்ப்பதும் அனைத்து மொழிகளையும் ஊக்குவிப்பதும். அனைத்து மொழிகளைப் பேசுவோருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமவாய்ப்பினை வழங்கி முன்னேற்றத்திற்கான வழிகளை அனைவருக்கும் திறப்பதும்தான் ஒன்றிய அரசின் அணுகுமுறையாக இருக்க வேண்டும் என்று தான் பரிந்துரைப்பதாகக் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பல்வேறு வழிகளில் இந்தியைத் திணிக்கும் வகையில் அமைந்துள்ள அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை மேலும் முன்னெடுத்துச் செல்லாமல் பெருமைவாய்ந்த இந்திய ஒற்றுமைச் சுடரைத் தொடர்ந்து ஒளிரச் செய்ய வேண்டுமென்று தான் கேட்டுக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்"

பதிவு: October 17, 2022
மனுதர்மம் குறித்த சர்ச்சைப் பேச்சு! ஆர்.ராசா மீது தொடரப்பட்ட வழக்கை ரத்துசெய்தது உயர்நீதிமன்றம்!

சனாதனம் குறித்த சர்ச்சைப் பேச்சு காரணமாக திமுக எம்.பி. ஆ.ராசா மீது பதியப்பட்டிருந்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அண்மையில், திமுக நிகழ்ச்சி ஒன்றில், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா சனாதனம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. கூட்டத்தில் அவர், "இந்துவாக நீ இருக்கும் வரை சூத்திரன். இந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள். இந்தக் கேள்வியை நீங்கள் உரக்கச் சொன்னால் தான் சனாதனத்தை முறியடிக்கமுடியும்" என்று பேசினார். 

இதற்கு பாஜகவினர் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். ஆ.ராசா இந்துக்களை இழிவுபடுத்தும்படி பேசிவிட்டதாக அவருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில், ஆ.ராசா மீது உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.  

இதைத்தொடர்ந்து ஆ.ராசாவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுகுறித்த தீர்ப்பில், ஆ.ராசா மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முகாந்திரம் இல்லை எனக்கூறி மனு தள்ளுபடி செய்யப்படுவதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

பதிவு: October 17, 2022
'இந்தி பட வெளியீட்டு உரிமைகளைப் பெறுவதன் மூலம் இந்தியைத் திணிப்பது உதயநிதியா? பாஜகவா?' - அண்ணாமலை கேள்வி!

இந்தி படங்களை தமிழ்நாட்டில் வெளியிட உரிமை பெறுவதன் மூலம் இந்தியைத் திணிப்பது உதயநிதி ஸ்டாலின் தான் என்று பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான திமுக இளைஞரணி சார்பில் தமிழகமெங்கும் இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசு மேலும் இந்தியைத் தொடர்ந்து திணித்தால் டெல்லியிலும் போராட்டம் நடைபெறும் என்று உதயநிதி ஸ்டாலின் ஆர்ப்பாட்டத்தில் எச்சரித்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் இந்தி திணிப்பு என்பது பொய் என்றும், அப்படி இருந்தால் அதைச் செய்வது உதயநிதி ஸ்டாலின் தான் என்றும் பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை சீறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், 

"பாஜக, மாநிலங்களில் மூன்றாவது மொழியாக உங்களுக்குப் பிடித்த மொழியைப் படியுங்கள் என்று சொன்ன பிறகு தான் திமுகவின் திட்டமே மாறியுள்ளது. இப்பொழுது அவர்களின் திட்டம் என்னவென்றால் இந்தியைத் திணிக்கிறார்கள் என்று கூறுவது தான். அதையும் வெறும் வாய்வார்த்தையாகக் கூறுகிறார். காரணம் என்னவென்றால் இந்தி படங்களை தமிழகத்தில் விற்கவேண்டுமல்லவா? இந்தி நடிகைகளை இங்கு கொண்டுவரவேண்டுமல்லவா?

அண்மையில் அமீர்கான் நடித்த 'லால் சிங் சத்தா' படத்தின் விழாவில் அப்படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமை குறித்து, "நீங்கள் இந்தி திணிப்பை எதிர்ப்பவர்; ஆனால், இந்தி படத்தின் உரிமையைத் தமிழகத்தில் வெளியிட வாங்கியுள்ளீர்களே?" என்று கேட்டால், 'அது வேறு! இது வேறு! நாங்கள் இந்தி திணிப்பையே எதிர்க்கிறோம்' என்று கூறுகிறார். எத்தனையோ தமிழ்ப்படங்களை தமிழகத்தில் வெளியிட முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில், இந்தி படங்களை தமிழகத்தில் வெளியிட என்ன அவசியம் உள்ளது? அது மட்டும் இந்தி திணிப்பில்லையா? 

கொஞ்சம் விட்டால் எல்லா இந்தி படங்களுக்கும் இவர்கள் தான் உரிமையைப் பெறுவார்கள். இதிலிருந்து இந்தியைத் திணிப்பது உதயநிதி ஸ்டாலினா? பாஜகவா? இந்தி திணிப்பு எங்கேயும் நடக்கவில்லை. பிரதமர் தமிழகம் வந்தாலோ, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகம் வந்தாலோ கூட ஆங்கிலத்தில் தான் பேசுகிறார்கள். ஆட்சி மீதான மக்களின் கோபத்தை திசை திருப்பும் திமுகவின் முயற்சியே இந்தி எதிர்ப்பு. இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் திமுக படுதோல்வியடைந்துள்ளது" இவ்வாறு பேசியுள்ளார்.

பதிவு: October 15, 2022

முக்கிய செய்திகள்

'தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு கெடவில்லை; மாறாக சிலர் அதை கெடுக்க நினைத்து செயல்படுகின்றனர்' - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைக் கெடுக்க சிலர் நினைத்து செயல்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

அரியலூர் மாவட்டத்தில் 27,070 பயனாளிகளுக்கு ரூ.52 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,

"ஒரு முதலமைச்சர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் கடந்த 10 ஆண்டாக இருந்த அதிமுக ஆட்சி. கையில் அதிகாரம் இருந்தும் எதுவும் செய்யாமல் கைகட்டி வேடிக்கை பார்த்ததுதான் கடந்த கால அதிமுக ஆட்சி. கடந்த 10 ஆண்டுகள் கால ஆட்சியின் சீரழிவை மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து புகார்கள் கொடுக்கின்றனர். விமர்சனங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல; அவற்றை வரவேற்கிறோம், ஆனால் விஷமத்தனம் கூடாது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போகவில்லை. மாறாக சட்டம் ஒழுங்கைக் கெடுக்கலாமா என்று சிலர் நினைக்கின்றனர். சிலரின் வயது எரிகிறது. ஒரு ஆட்சி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக இந்த ஆட்சி நடைபெறுகிறது" இவ்வாறு பேசினார். 

பதிவு: December 06, 2022
'கோழிக்கு அரிசி போட்டு பிடிப்பதுபோல் நம்மை தமிழை வைத்து பிடிக்கப்பார்க்கின்றனர்' - காசி தமிழ் சங்கமம் நிகழ்வை சாடிய சீமான்!

கோழிகளுக்கு அரிசியைப் போட்டு பிடிப்பது போல் தமிழர்களை மொழியை வைத்து பாஜக பிடிக்கத் திட்டமிடுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் பேசியதாவது: 

"காசி தமிழ்ச்சங்கமம் எனக்காகத்தான் நடத்தப்பட்டது. நான் வேல் தூக்கினால் அவர்களும் வேலைத் தூக்குவார்கள்; நான் முருகா என்றால் அவர்களும் முருகா என்பார்கள்; நான் ஈழம் பற்றிப் பேசினால் அவர்களும் ஈழம் என்பார்கள். ஆனால், நான் கச்சத்தீவு மீட்பு பற்றி பேசினால் மட்டும் எதுவும் பேசமாட்டார்கள். காவிரி நதிநீர் குறித்துப் பேசினால் எதுவும் பேசாமாட்டார்கள்.

நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் உள்ளதா? நாடாளுமன்றத்தில் தமிழில் பேசமுடியுமா? கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய முடியுமா? இதை விடுத்து காசி தமிழ்ச் சங்கமம் நடத்துவதன் மூலம் எப்படி நீங்கள் தமிழை வளர்ப்பீர்கள்?

கோழியை 'பக் பக் பக்' என்று அரிசி போட்டு பிடிப்பதைப் போல் தமிழை வைத்து தமிழ்நாட்டு மக்களை பிடிக்கப் பார்க்கிறார்கள். கோழி 'நம் பாஷை பேசுகிறாரே' என்று நினைத்து அவரிடம் மாட்டிக்கொண்டு வறுபடுவதைப் போல நாம் மாட்டிவிடக் கூடாது. எச்சரிக்கையாக இருக்கவேண்டும். 

 

பதிவு: November 28, 2022
ஆன்லைன் ரம்மியால் 15 மாதங்களில் நிகழ்ந்துள்ள 33-வது தற்கொலை! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

ஆன்லைன் ரம்மியால் ஒரிசாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், ஆன்லைன் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என் ரவி விரைந்து ஒப்புத அளிக்கவேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

ட்விட்டரில் இதுபற்றி பதிவிட்டுள்ள அவர், 

"தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வந்து தென்காசி மாவட்டம் கரிவலம்வந்த நல்லூரில் கூலி வேலை செய்து வந்த ஒதிஷா பெண் பந்தனா மஜ்கி, ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.70 ஆயிரத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்வு மிகுந்த வேதனை அளிக்கிறது.

ஆன்லைன் சூதாட்டத் தடை செல்லாது என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பிறகு ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் நிகழும் 33-ஆவது தற்கொலை இதுவாகும். கடந்த இரு மாதங்களில் இது நான்காவது தற்கொலை ஆகும்.
 
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான ஒவ்வொரு நகர்வும் பெரும் போராட்டத்திற்கும் பிறகும், சில உயிரிழப்புகளுக்கு பிறகும் தான் சாத்தியமாகிறது. 15 மாதங்களில் விலைமதிப்பற்ற 33 உயிர்களை பறி கொடுத்தும் கூட, ஆன்லைன் சூதாட்டம் இன்னும் தடை செய்யப்படவில்லை
 
ஒரு புறம் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் காலாவதியாகி விட்டது; மறுபுறம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்திற்கு ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் தமிழ்நாடு இனி ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறப்போகிறது
 
ஆன்லைன் சூதாட்டங்களால் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் ஏற்படவிருக்கும் பேராபத்தை தமிழக ஆளுனர் உணரவேண்டும். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 
பதிவு: November 28, 2022
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா ஒப்புதல் ஆளுநரால் காலம் தாழ்த்தப்பட்ட நிலையில் அது காலாவதியாகியுள்ளது! அடுத்த நடவடிக்கை என்ன?

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கான ஒப்புதல் தாமதமாக்கப்பட்ட நிலையில், அது காலாவதியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் காரணமாக தற்கொலைகள் பெருகிவந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதியை மயக்கி உயிரைக் கொல்லும் இந்த விளையாட்டைத் தமிழ்நாடு அரசு தடை செய்யவேண்டும் என்று எதிர்ப்புகள் எழவே, அரசு ஆன்லை ரம்மியைத் தடைசெய்வதற்கான சட்ட மசோதாவை அவசரச்சட்டமாக சட்டபேரவையில் நிறைவேற்றியது. 

இந்நிலையில், ஒப்புதலுக்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா அனுப்பப்பட்ட நிலையில், அதுகுறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டது. தமிழக அரசும் அதற்கு பதில் கடிதத்தை அடுத்த நாளே அனுப்பியது. இதனிடையே, அக்.01 ல் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதா நேற்றுடன் காலாவதியானது.

இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. ஆங்காங்கே ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலைகள் அதிகரித்துவரும் நிலையில், ஆன்லைன் ரம்மி மீது இன்னும் தடைவிதிக்கப்படாதது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 
பதிவு: November 28, 2022
'எங்களுக்கு நீதி கிடைக்கவில்லையெனில் அரசின் அத்தனை உதவிகளையும் திருப்பித்தருவோம்' - உயிரிழந்த வீராங்கனை பிரியாவின் வீட்டார் வேதனை!

தங்களுக்கு நீதி கிடைக்கவில்லையெனில் அரசு தங்களுக்கு வழங்கிய நிவாரண உதவிகளைத் திருப்பித்தந்துவிடுவதாக உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் வீட்டார் வேதனை பொங்கத் தெரிவித்துள்ளனர்.

சென்னை வியாசார்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா கால் எலும்பு சவ்வு பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாக அவர் உயிரிழந்தார். இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து பிரியாவிற்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் இருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை சட்டரீதியாக எடுக்கப்படும் என்று மருத்துவத்துரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதனையடுத்து, உயிரிழந்த பிரியாவின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி, வீடு மற்றும் பிரியாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை ஆகியவை வழங்கப்பட்டன.

இந்நிலையில், பிரியா மரணத்திற்குக் காரணமான மருத்துவர்கள் மீது இன்னும் நடவடிக்கை அரசு தரப்பிலிருந்து எடுக்கப்படவில்லை என்று பிரியாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள், அரசு தரப்பிலிருந்து மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும், அதுபற்றி உறுதியளித்ததால் தான் அரசின் உதவிகளைப் பெற்றுக்கொண்டோம் என்றும், அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அரசின் உதவிகளைத் திருப்பிச்செலுத்துவிடுவோம் என்றும், தங்களுக்கு நீதியே தேவை என்றும் அவர்கள் வேதனை பொங்கத் தெரிவித்துள்ளனர். 

பதிவு: November 26, 2022
பாஜக பெண் நிர்வாகிகளை ஆபாசமாகப் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்! மன்னிப்பு கேட்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

பாஜக பெண் நிர்வாகிகளை தரக்குறைவாகப் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்கை மன்னிப்புக் கேட்கக்கூறி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் அக்கட்சி உறுப்பினர் சைதை சாதிக், பாஜக நிர்வாகிகளான குஷ்பூ, காயத்ரி, நமீதா, கௌதமி ஆகியோரை தரக்குறைவாக சாடி, ஆபாசமான முறையில் பேசினார். இது அக்கட்சி உறுப்பினர்களிடையே கோபத்தை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு கண்டனங்கள் வலுத்தன. மேலும் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், வழக்குக்கு எதிராக சைதை சாதிக் முன்ஜாமீன் கோரியிருந்தார். இதைத்தொடர்ந்து நீதிபதிகள் முன்பாக இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அவர், சம்பந்தப்பட்ட பெண்களிடம் மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என்று வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஸ் சந்திரா உத்தரவிட்டுள்ளார். 

பதிவு: November 26, 2022

மேலும் செய்திகள்

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்