பிரதமரைக் கொல்ல சதியா? பிரதமர் மோதி பரப்புரை செய்த இடத்தில் பறந்த டிரோன் கேமராக்கள்!

பிரதமர் மோதி பரப்புரை மேற்கொண்ட இடத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் டிரோன் கேமிராக்கள் பறந்தது பரபரப்பைக் கிளப்பியது.

குஜராத் சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் நிலையில், அம்மாநிலத்தில் அனைத்துக் கட்சிகளும் பரப்புரைப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், குஜராத்தின் அகமதாபாத் பகுதியில் பிரதமர் மோதி பரப்புரை மேற்கொண்ட சமயம் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சில டிரோன் கேமிராக்கள் வானத்தில் பறந்தன.

உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் இதனைக் கண்டறிந்து அவற்றை இறக்கினர். மேலும் இதற்குக் காரணமான அப்பகுதியைச் சேர்ந்த மூவரைக் கண்டுபிடித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டிரோன்களில் மேற்கொண்ட சோதனையில் அவை ஆபத்து அற்றவை என்பது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பைக் கிளப்பியது.

இதைத் தொடர்ந்து பாஜக, தேர்தல் வந்துவிட்டால் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு அதைப் பேசுபொருளாக்கிவிடுவதாக எதிர்க்கட்சிகள் வலைதளங்களில் விமர்சித்துவருகின்றன. 

பதிவு: November 26, 2022
'பொருளாதார அடிப்படை இடஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு முரணானது ஒன்றுமல்ல; ஆனால் 5% பேருக்கு 10% இடஒதுக்கீடு அதிகம்' - கே.பாலகிருஷ்ணன்!

பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது அரசியல் சாசனத்திற்கு முரணானது அல்ல என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளதாகவும், சில அம்சங்களைக் கருத்தில்கொண்டு இச்சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தலாம் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

"பொருளாதாரத்தில் நலிவுற்ற இடஒதுக்கீட்டு வரம்பிற்குள் வராத பொதுப்பிரிவினருக்கு அதிகபட்சம் 10% இட ஒதுக்கீடு வழங்கிடும் அரசியல் சட்டத் திருத்தம் ஏற்புடையதே என்று உச்சநீதிமன்ற அமர்வில் இடம்பெற்றிருந்த மூன்று நீதிபதிகளும், ஏற்க இயலாது என இரண்டு நீதிபதிகளும் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பு என்கிற அடிப்படையில் மேற்கண்ட சட்டத்திருத்தம் செல்லத்தக்கது. பொருளாதார அடிப்படையில் நலிவுற்ற பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது அரசியல் சாசனத்திற்கு ஏற்புடையதா? இல்லையா? என்ற வழக்கில் மாறுபட்ட கருத்து தெரிவித்துள்ள இரண்டு நீதிபதிகள் கூட பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது அரசியல் சாசனத்திற்கு முரணானது அல்ல என்றே தெரிவித்துள்ளனர். அதேசமயம், வேறு விசயங்களில் மாறுபட்ட கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள இடஒதுக்கீட்டு வரம்பிற்குள் வராத பிரிவினருக்கு குறிப்பிட்ட சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கி சட்டத்திருத்தத்தினை நிறைவேற்ற வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கோரி வந்துள்ளது.

இந்த நிலைபாட்டின் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்ட போது அத்திருத்தத்தை கட்சி ஆதரித்தது. ஆனால், அதே நேரத்தில் இச்சலுகை பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள ரூ.8 லட்சம் ஆண்டு வருமான வரம்பு என்பதை குறைத்து தீர்மானிக்க வேண்டுமென அப்போதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அழுத்தமாக வலியுறுத்தியது. வருமான வரம்பு குறைக்கப்பட வேண்டும் என இப்போதும் வலியுறுத்துகிறோம்.

இச்சட்டத்திருத்தத்தை தமிழகத்தில் அமலாக்கும் போது கீழ்க்கண்ட அம்சங்களை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டுமென வற்புறுத்துகிறோம். அரசமைப்பு சட்டப்பிரிவுகள் 15 மற்றும் 16க்கு மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தத்தின்படி பொருளாதாரத்தில் நலிவுற்ற இட ஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினருக்கு அதிகபட்சம் 10 சதவிகிதம் வரை (Subject to a maximum of 10 percent) இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்த மக்கள் தொகையில் அதிகாரப்பூர்வமற்ற தகவலின்படி ஏறக்குறைய 95 சதவிகிதமான மக்கள் இடஒதுக்கீட்டு வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். சுமார் 5 சதவிகிதம் மக்களுக்கு மட்டுமே சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு இல்லை என விபரங்கள் தெரிவிக்கிறது.

இவர்களுக்கு 10 சதவிகிதமான இடஒதுக்கீடு வழங்குவது அதீத ஒதுக்கீடாக அமைந்து விடும். எனவே, தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினரின் மக்கள் தொகையினை கணக்கீடு செய்ய ஆணையம் அமைத்து அதன் பரிந்துரை பெற்று முடிவெடுக்க வேண்டுமென சிபிஐ(எம்) மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது" இவ்வாறு தெரிவித்துள்ளார். 

பதிவு: November 08, 2022
'10% இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழக காங்கிரஸ் மனதார வரவேற்கிறது' - கே.எஸ்.அழகிரி!

பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர்சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில், "பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. பொரும்பான்மையான நீதிபதிகள் ஆதரவாக தீர்ப்பளித்திருக்கிறார்கள். 103-வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் சரியா, தவறா என்ற விவாதத்தில் பெரும்பான்மையான நீதிபதிகள் சரி என்றே கூறியிருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை 50 சதவிகித இடஒதுக்கீட்டு வரம்பை மீற வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அனைத்து பிரிவினருக்குமான நீதியை அது வழங்கும் என்றால், அதனை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. இந்தியாவில் ஐந்தாயிரம் ஆண்டுகளாக சமூகநீதி என்பது இல்லை.

ஒரு சிலரை ஒதுக்கி வைக்க வேண்டுமென்ற நடைமுறையை அந்தக்காலத்தில் நீதி என்று சொல்லி அதனை அங்கீகரித்திருக்கிறார்கள். ஆனால், சுதந்திரம் பெற்ற பிறகு அந்த நடைமுறையை பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் உடைத்தெறிந்து நாடாளுமன்றத்தில் முதன் முறையாக அரசியல் சட்டத்தை திருத்தி இடஒதுக்கீட்டிற்கு வழிவகுத்தார்கள். தற்போது 75 ஆண்டுகள் ஆகிவிட்டன.

எனவே, இன்றைய நடைமுறையை பின்பற்றி இன்றைக்கு பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று காங்கிரஸ் கட்சி முடிவெடுத்தது. 2005-2006 இல் இதற்கான முயற்சி டாக்டர் மன்மோகன்சிங் அரசால் எடுக்கப்பட்டது. 2014 இல் நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதா தயாரிக்கப்பட்டது. ஆனால், பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய 5 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது.

நீதிபதி ரவீந்திரபட் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறார். தாழ்த்தப்பட்டோர் 38 சதவிகிதம் வறுமையில் உள்ளனர். பழங்குடியினர் 48 சதவிகிதம் பேர் உள்ளனர். பிற்படுத்தப்பட்டோரில் 33.1 சதவிகிதம் பேர் வறுமையில் வாடுகின்றனர். இவர்களுக்கு மேலும் சலுகைகள் வழங்க வேண்டுமென அவர் கூறுகிறார். 

தற்பொழுது பொதுப் பிரிவினருக்கு 27 சதவிகிதமும், எஸ்.சி பிரிவினருக்கு 15 சதவிகிதமும், பழங்குடியினருக்கு 7.5 சதவிகிதமும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இவை மேலும் மேம்படுத்த இயலுமா என்பதனை சட்ட வல்லுநர்களும், அரசியல் அறிஞர்களும், சமூக பங்கேற்பாளர்களும் விவாதிக்க வேண்டும்

பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீட்டை எதிர்ப்பது என்பதும் சமூக நீதியாகாது. ஏனெனில், ஐந்தாயிரம் ஆண்டுகாலமாக சிரமப்பட்ட பெரும்பகுதி சமுதாயத்துக்கு சமூகநீதி வழங்கப்படவில்லை. இப்பொழுது எங்களுக்கும் வழங்குங்கள் என்று கேட்பது சரியானதாக இருக்கும்.

ஆனால், எங்களைப் போலவே பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினரும் சங்கடப்பட வேண்டும் என்று கூறுவது சமூகநீதியாகாது. சமூகநீதி என்பது மனிதகுலத்திற்கே பொதுவானதேயொழிய எந்தவொரு தரப்பிற்கும் அது உரியதல்ல. எனவே, 10 சதவிகித இடஒதுக்கீடு சரியான நடவடிக்கை என கருதி, தமிழக காங்கிரஸ் அதனை இதயப்பூர்வமாக வரவேற்கிறது" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பதிவு: November 08, 2022
'சமூகநீதிக்கான குரலை ஒலிக்கச்செய்ய அனைவரும் ஒன்றிணையவேண்டும்' - EWS 10% இடஒதுக்கீடு தீர்ப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிக்கை!

உச்சநீதிமன்றத்தின் 10% இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவான தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து தமிழக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்காக 2019-ஆம் ஆண்டு ஒன்றிய பா.ஐ.க. அரசு கொண்டு வந்த இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான சட்டப் போராட்டத்தைத் திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுத்து நடத்தி வந்தது.

இந்த வழக்கில் இன்று வெளியாகியுள்ள தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு காலப் போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்றே கருத வேண்டியுள்ளது.

தீர்ப்பினை முழுமையாக ஆராய்ந்து சட்ட வல்லுநர்களோடு முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிரான நமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான அடுத்தகட்ட, நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும்.

சமூகநீதியைக் காக்க முதல் அரசியல் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வைத்த தமிழக மண்ணிலிருந்து, சமூகநீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திடச் செய்ய ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும்" இவ்வாறு தெரிவித்துள்ளார். 

பதிவு: November 07, 2022
கர்நாடகா: கர்ப்பிணிப்பெண், இரட்டைக் குழந்தை பலி எதிரொலி! காரணமானவர்களை கைதுசெய்ய அண்ணாமலை வலியுறுத்தல்!

கர்நாடகா மருத்துவமனையில் உயிரிழந்த தாய் மற்றும் இரட்டைக் குழந்தைகளின் இறப்புக்குக் காரணமானவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

கர்நாடக மாநில, தும்மாகூரு பகுதியிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சென்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த கஸ்தூரி என்ற கர்ப்பிணிப் பெண்ணிடம் ஆதார் அட்டை, மாநில அரசின் தாய் அட்டை இல்லை என்ற காரணத்தால் மருத்துவமனை ஊழியர்களால் சிகிச்சை அளிக்கமுடியாது என்று கூறி திருப்பி அனுப்பபட்டார். 

இதனால் வீடு திரும்பிய அவருக்கு திடீரென வீட்டில் பிரசவ வலி ஏற்படவே துர்வாய்ப்பாக அவரும், அவருக்குப் பிறந்த இரட்டை ஆண்குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து அதற்குக் காரணமான ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில், "தாய் அட்டை மற்றும் ஆதார் அட்டை இல்லாத காரணத்தினால் கர்நாடக மாநிலம் தும்மாகூரு அரசு மருத்துவமனையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணான சகோதரி கஸ்தூரி மற்றும் அவருக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும் மன வேதனையும் அளிக்கிறது

இந்த மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்ட அனைவரையும் கர்நாடக அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. மூன்று உயிர்கள் பலியாவதற்குக் காரணமானவர்களை பணியிடை நீக்கம் செய்தால் மட்டும் போதாது. தமிழகத்தைச் சேர்ந்த சகோதரி கஸ்தூரி மற்றும் பிறந்த இரட்டை குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான அனைவரையும் உடனடியாக கைது செய்து, தகுந்த தண்டனை வழங்கிட கர்நாடக அரசு வழிவகை செய்ய வேண்டும்" இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

பதிவு: November 04, 2022
'காசி கோவிலை சிறப்பாக மாற்றியமைத்த பிரதமர் மோதிக்கு சல்யூட்' - நடிகர் விஷால் புகழாரம்!

காசி கோவிலை பிரதமர் மோதி யாவரும் சென்று வழிபடும் அளவுக்கு அற்புதமாக மாற்றியுள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள காசி கோவிலில் வழிபடுவதற்காக சென்றிருந்த நடிகர் விஷால், கோவில், பிரதமர் மோதியால் சிறந்த முறையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அவரைப் புகழ்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில், "அன்புள்ள மோடிஜி. நான் காசிக்குச் சென்று, அற்புதமான தரிசனம் ஒன்றைச் செய்து, கங்கை நதியின் புனிதநீரைத் தொட்டேன். கோவிலை புதுப்பித்து, அதை இன்னும் அற்புதமாகவும், எளிதாகவும் எவரும் காசிக்குச் செல்லச் செய்வதன் மூலம் நீங்கள் செய்த மாற்றத்திற்காக கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். ஹட்ஸ் ஆஃப், சல்யூட் யூ" இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

பதிவு: November 01, 2022
'இந்தியாவின் மதச்சார்பின்மையை உச்சநீதிமன்றம் அங்கீகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது' - கே.எஸ்.அழகிரி!

இந்திய அரசியலமைப்பின் மதச்சார்பற்ற தன்மையை உச்சநீதிமன்றம் அங்கீகரித்தது மகிழ்ச்சியளிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் ட்விட்டரில், 

"புதுடெல்லி, உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் வெறுப்பு பேச்சுகளை பேசுபவர்கள் மீது புகாருக்காக காத்திருக்காமல், காவல் துறை தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்யுமாறு உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்திய அரசியலமைப்பு ஒரு மதச்சார்பற்ற தேசத்தையும், குடிமக்களிடையே சகோதரத்துவத்தையும், தனிமனிதனின் கண்ணியத்தையும் உறுதிப்படுத்துகிறது என்றும் நீதிபதிகள் கே.எம். ஜோசப், ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டுள்ளது

இந்த தீர்ப்பை தமிழக காங்கிரஸ் வரவேற்கிறது. இந்திய அரசியலமைப்பில் இருக்கும் மதச்சார்பற்ற தன்மையை நீதிமன்றம் அங்கீகரித்திருப்பதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி" இவ்வாறு பதிவிட்டுள்ளார். 

பதிவு: October 22, 2022
இந்தியக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுடப்பட்ட விவகாரம்! பிரதமர் மோதிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

இந்தியக் கடற்படையினரே தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியதைக் கண்டித்து பிரதமர் நரேந்திர மோதிக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், 10 மீனவர்கள் (தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர், காரைக்காலைச் சேர்ந்த 3 பேர்) தங்களது விசைப்படகில் நடுக்கடலில் நேற்று (21 -10- 2022) மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, ஐ.என்.எஸ் பங்காரம் என்ற கப்பலில் பாதுகாப்புப் பணியிலிருந்த இந்தியக் கடற்படையினர், இம்மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில், வீரவேல் என்ற மீனவரின் மீது குண்டு பாய்ந்து அவர் பலத்த காயங்களுடன் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருதாக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் இந்தியக் கடற்படையினரின் செயல் மிகுந்த வருத்தத்திற்குரியது என்றும் இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் அவ்வப்போது தாக்கப்படுவதால் ஏற்படும் துயரத்தை மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள் நன்கு அறிவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ள முதல்வர், இந்தியக் கடற்படையினரே இதுபோன்ற செயல்களில் ஈடுபடும்போது அது அடித்தட்டில் வாழும் மீனவர்களிடையே நம்பிக்கையின்மையும், பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்துவதாக அமைகிறது என்றும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்தியப் பிரதமர் இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு இந்திய கடற்பகுதியில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை இந்திய பாதுகாப்பு முகமையினர் மிகுந்த எச்சரிக்கையுனும் நிதானத்துடனும் கையாளுவதற்கு உரிய அறிவுரைகளை வழங்குமாறு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். 

பதிவு: October 22, 2022
கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் நொறுங்கி விபத்து! சென்னையைச் சேர்ந்த 3 பேர் உட்பட 7 பேர் பலி!

கேதார்நாத்தில் யாத்ரீகர்களை ஏற்றிச்சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் சென்னையைச் சேர்ந்த 3 பேர் உட்பட 7 பேர் உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரகாண்டிற்கு அருகிலுள்ள குப்தகாசி என்னும் இடத்திலிருந்து கேதார்நாத்திற்கு 7 யாத்ரீகர்களுடன் பயணித்த ஆர்யன் என்ற தனியார் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 7 பேரும்(விமானி உட்பட) பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் 3 பேர் சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த பிரேம்குமார், கலா, சுஜாதா ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர். 

ஹெலிகாப்டர் ஃபாடா என்னும் இடத்தில் விபத்தில் சிக்கியதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்திய - திபெத் எல்லைக்கு அருகிலுள்ள கருட் சட்டி என்னுமிடத்தில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்துள்ளது.    இதைத்தொடர்ந்து, விபத்துக்கு சரியான காரணம் என்ன என்று ஆராயப்படவில்லை. மோசமான வானிலை காரணமாக விபத்து நேர்ந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தொடர்ந்து விபத்து குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது. 

 

பதிவு: October 18, 2022
'இந்தி ஆதிக்கத்தை நிலைநிறுத்த முற்பட்டால் தமிழகத்தில் மீண்டுமோர் மொழிப்போர் வெடிக்கும்' - முதல்வர் ஸ்டாலினைத் தொடர்ந்து நாதக சீமான் எச்சரிக்கை!

பல தேசிய இனங்கள் வாழும் இந்திய ஒன்றியத்தில் இந்தி எனும் ஒற்றை மொழியின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முற்பட்டால், தமிழகத்தில் மீண்டுமொரு மொழிப்போர் வெடிக்கும் என்று சீமான் எச்சரிக்கைப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

"ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக்குழு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவிடம் அளித்துள்ள 11-வது அறிக்கையில் இந்தியைத் திணிக்கும் வகையிலான பரிந்துரைகள் இடம்பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இந்தியாவிலுள்ள மாநிலங்களையும், ஒன்றியப் பிரதேசங்களையும் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தி, தேசிய இனங்கள் மீது இந்தி மொழியின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் வகையில் பரிந்துரைகளை அளித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஒன்றிய அரசின் பல்கலைக்கழகங்கள், எய்ம்ஸ் மருத்துவக் கல்வி நிறுவனம் உள்ளிட்ட ஒன்றிய உயர்கல்வி நிலையங்களிலும், கேந்திரிய வித்யாலயா போன்ற ஒன்றிய அரசின் பள்ளிகளிலும் இந்தியை கட்டாயப் பயிற்று மொழியாக்க வேண்டுமெனவும், ஒன்றிய அரசுப் பணிகளுக்கான போட்டித்தேர்வுகளில் ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தியை கட்டாய மொழியாக்கி, தேர்வுகள் இந்தியில்தான் நடத்தப்பட வேண்டும் எனவும் கொடுக்கப்பட்டிருக்கும் அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகள் இந்நாட்டின் ஒருமைப்பாட்டுக்கே வேட்டுவைக்கும் பேராபத்தாகும்.

இது இந்திய நாடா? இந்தியின் நாடா? இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மட்டும்தான் இந்நாட்டுக்கு வரிசெலுத்துகிறார்களா? இல்லை! இந்திக்காரர்கள் மட்டும்தான் இந்நாட்டின் விடுதலைக்குப் பங்களிப்பு செலுத்தினார்களா? இல்லை! இந்திக்காரர்கள் மட்டும்தான் இந்நாட்டின் குடிமக்களா? எதற்கு இந்திக்கு மட்டும் இத்தகைய முக்கியத்துவம்? அரசியலமைப்பு அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளையும் தேசிய மொழிகளாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கச்சொல்லி உச்ச நீதிமன்றமே அறிவுறுத்தியுள்ள நிலையில், அதற்கு முற்றிலும் நேரெதிராக ஒற்றை மொழியை முன்னிறுத்தி, அதனைத் திணிக்க முற்படும் ஒன்றிய அரசின் செயல் மிகப்பெரும் சனநாயகப் படுகொலையாகும். பலதரப்பட்ட மொழிகள் பேசப்படும் இந்நாட்டின் பன்மைத்துவத்தைச் சிதைத்து, இந்தி எனும் ஒரே மொழியை இந்தியா முழுக்க நிறுவ முற்படுவது இந்நாடு ஏற்றிருக்கிற கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான கொடுஞ்செயல்.

ஆரிய மொழியான இந்தியைத் திணிப்பதன் மூலம், இந்தியாவை இந்து நாடாகக் கட்டமைக்கவும், உலகமயமாக்கலின் மூலம் வணிகச்சந்தையாக மாற்றி நிறுத்தப்பட்டிருக்கும் இந்திய ஒன்றியத்தில் அவ்வணிகம் செய்வதற்கு ஏதுவாக ஒரு பொதுமொழியை உருவாக்கவுமே இவ்வகை முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவையாவும் இந்துத்துவாவுக்கு கிளைபரப்பவும், இந்தியாவை இந்திக்காரர்களுக்கு மட்டுமேயான நாடாக மாற்றவும் உதவுமே ஒழிய, இந்நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் துளியளவும் நன்மை பயக்காது.

ஒரு மனிதனின் சிந்தனை மேம்பாட்டுக்கும், திறமை வெளிப்பாட்டுக்கும் தாய்மொழி வழிக்கல்வியே உகந்தது என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு, உலகெங்கும் அதனை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில் ஒன்றிய அரசின் இந்தித்திணிப்பு முயற்சியானது வெறும் நுகர்வு மந்தைகளாக இந்நாட்டு மக்களை ஆக்குவதற்கான வேலைத்திட்டமேயன்றி வேறொன்றுமில்லை.

ஒரு மொழியைத் திணித்து மற்ற தேசிய இனங்களின் தாய்மொழியை அழிப்பதை எப்படி ஏற்பது? இந்திய நாடு என்பது பன்முகத்தன்மை கொண்ட பல தேசிய இனங்கள் இணைந்து வாழக்கூடிய ஒன்றியம். நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் அதை ஒருபோதும் மறந்துவிடாமல் மிக கவனமாக செயல்பட வேண்டும். மக்கள் சகித்துக்கொண்டு, பொறுத்துக்கொண்டு போகிறார்கள் என்பதற்காக ஒரே மதம், ஒரே மொழி, ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை என்று ஒவ்வொன்றாகத் திணிக்கின்ற கொடுங்கோன்மை நீண்டநாள் நிலைக்கப்போவதில்லை.

400 ஆண்டுகளைக் கூடத் தொடாத இந்தி மொழிக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்திய ஒன்றிய அரசு, 50000 ஆண்டுகளுக்கு மூத்த தமிழ்மொழிக்கு எந்த ஒரு முக்கியத்துவமும் அளிப்பதில்லையே ஏன்? இந்திய மொழிகளின் தொன்மையைத் தமிழிலிருந்து அறியலாம் என்று இந்திய ஒன்றியத்தின் பிரதமரே கூறுகிறார். உலகின் மூத்த மொழியான தமிழ் இந்தியாவில் இருப்பது எங்களுக்குப் பெருமை என்கிறார். ஆனால் இதுவரை இந்திய அரசு எதுவொன்றில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை தந்து அங்கீகாரம் அளித்துள்ளது? எனவே, பல இனங்கள், பல மொழிகள் என்றால் இந்தியா ஒரே நாடாக இருக்கும். ஒரே மொழி என்றால் பல நாடுகள் பிறக்கும். இந்த நாட்டில் பிரிவினைவாதிகள் என்று யாரும் தனியாக இல்லை. உண்மையில் ஒரே மொழியைத் திணிப்பதன் மூலம் நாட்டைத் துண்டாட நினைக்கும் பாஜக ஆட்சியாளர்கள்தான் உண்மையான பிரிவினைவாதிகள்.

உலக வரலாற்றில் எங்கும் நடந்திராத அளவுக்கு மொழிக்காக அளப்பெரிய தியாகங்களையும், மகத்தான அர்ப்பணிப்புகளையும், உயிர் ஈகங்களையும் செய்த பெரும்பூமி தமிழகமாகும். அரை நூற்றாண்டுக்கு முன்பாகவே இந்தித் திணிப்பை எதிர்த்து போராடி, உயிரீகம் செய்திட்ட தமிழின முன்னோர்களின் செங்குருதி இந்நிலமெங்கும் சிந்தப்பட்டிருக்கிறது. அந்நிலத்தில் அந்நிய மொழியின் ஆதிக்கத்தை ஒருபோதும் அனுமதியோம் என்பதே தமிழர்கள் உலகுக்கு உரைக்கும் பேரறிவிப்பாகும். தமிழர்களின் தொன்மையும், பெருமையும், ஆதி நாகரீகத்தின் உச்சமும் கீழடிக்குக் கீழேயும், ஆதிச்சநல்லூருக்குக் கீழேயும் உறங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அதனை அகழாய்வு செய்து உலகுக்கு முரசறிவிக்க முனையாத இந்திய ஒன்றிய அரசு, தமிழர் நிலத்தில் இந்தியை இறக்குமதி செய்ய முற்படுமேயானால் அது மிகப்பெரிய எதிர்வினையைத் தமிழர்களிடமிருந்து ஏற்படுத்தும்.

எங்கள் மூதாதையர்களான நடராசனும், தாளமுத்துவும், கீழப்பழுவூர் சின்னச்சாமியும், சிவகங்கை இராஜேந்திரனும், கோடம்பாக்கம் சிவலிங்கமும், விருகம்பாக்கம் அரங்கநாதனும் போராடி உயிர்நீத்த தமிழ்மண்ணில் இந்தித் திணிப்பையும், அதன் ஆதிக்கத்தையும் அவரது வழிவந்த மானத்தமிழ் பிள்ளைகள் ஒருபோதும் அனுமதியோம்! ஆகையினால், அந்நியமொழிக்கு வேர்பரப்புகிற வேலையைக் கைவிட்டுவிட்டு, மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, அந்தந்த மாநிலங்களில் அந்தந்த மொழிகளுக்கே முதன்மைத்துவம் தரப்பட இந்திய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். பல தேசிய இனங்கள் வாழும் பெரும் நிலப்பரப்பான இந்திய ஒன்றியத்தை ஆளுகை செய்து வரும் பாஜக அரசு, தனது அதிகார வலிமையைக் கொண்டு நாடெங்கிலும் இந்தியைத் திணிக்க முற்பட்டால், இந்தியாவின் மற்ற மாநிலங்கள் அதனை ஏற்றுக் கொண்டாலும், அம்முடிவினை ஏற்றுக் கொண்டாடித்தீர்த்தாலும் தமிழ் மண் போர்க்கோலம் பூண்டு, வன்மையான எதிர்ப்பினை வெளிப்படுத்தும்; தமிழர் நிலத்தில் மீண்டுமொரு மொழிப்போர் வெடிக்கும் என எச்சரிக்கிறேன்.

ஆகவே, இந்தியா ஒரே நாடாக இருக்க வேண்டுமென்றால், இந்நாட்டிலுள்ள தேசிய இனங்களின் மொழிகள் யாவும் அங்கீகரிக்கப்பட்டு, அவற்றிற்குரிய முன்னுரிமையும், முதன்மைத்துவமும் அளிக்கப்பட வேண்டும். மாறாக, இந்தி எனும் ஒரே மொழிதான் அதிகாரத்திலிருந்து ஆதிக்கம் செலுத்துமென்றால், இங்கு பல நாடுகள் பிறக்க நேரிடுவதை ஒருபோதும் தவிர்க்க இயலாது என உறுதிபடத் தெரிவிக்கிறேன். இத்தோடு, பாகிஸ்தான் நாடு செய்திட்ட மொழித்திணிப்பினால்தான் வங்காளதேசம் எனும் நாடு இந்தியாவின் துணையோடு பிறந்ததெனும் வரலாற்றுச்செய்தியை இச்சமயத்தில் நாட்டையாளும் ஆட்சியாளர்களுக்கு நினைவூட்டுகிறேன்" இவ்வாறு தெரிவித்துள்ளார். 

பதிவு: October 11, 2022
முலாயம் சிங் யாதவ் மறைவு! பிரதமர் மோதி, தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரான முலாயம் சிங் யாதவ் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உத்தரப் பிரதேச அரசியலில் முக்கியப் புள்ளியாக விளங்கிவந்த முலாயம் சிங் யாதவ் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். 82 வயதான அவர் கடந்த ஒரு வாரமாக குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று அவர் காலமானார்.

உத்தரப்பிரதேசத்தின் முக்கிய அரசியல் கட்சியாக விளங்கும் சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் இவராவார். 3 முறை உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக இவர் பதவிவகித்துள்ளார். மத்திய அமைச்சரவையில் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் இவர் பதவிவகித்துள்ளார். இந்நிலையில், இவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முலாயம் சிங் யாதவின் மறைவிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

முலாயம் சிங்கின் மறைவிற்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோதி, "திரு.முலாயம் சிங் யாதவ் குறிப்பிடத்தக்க ஒரு ஆளுமை. மக்களின் பிரச்சனைகளை உணரும் ஒரு தாழ்மையான பணிவு மிகுந்த தலைவராக அவர் பரவலாகப் போற்றப்பட்டார். அவர் மக்களுக்கு விடாமுயற்சியுடன் சேவை செய்தார் மற்றும் லோக்நாயக் ஜேபி மற்றும் டாக்டர் லோஹியாவின் கொள்கைகளை பிரபலப்படுத்துவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்" இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

மேலும், இதுகுறித்து ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், உ.பி.யின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவருமான திரு. முலாயம் சிங். அவர்களின் மறைவு வருத்தம் அளிக்கிறது. ஓபிசிக்கான இடஒதுக்கீட்டிற்காக நின்ற இந்திய அரசியலில் மிக உயர்ந்த நபர்களில் ஒருவரான திரு முலாயம் சிங், மதச்சார்பற்ற கொள்கைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. எனது சகோதரர் அகிலேஷ் மற்றும் அவரது குடும்பத்தாருக்கும், சமாஜ்வாடி கட்சி தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

 

பதிவு: October 10, 2022
எருமைமாடு மீது மோதி வந்தே பாரத் இரயிலின் முன்பகுதி சேதம்! பிரதமர் தொடக்கிவைத்த சில நாட்களிலேயே நேர்ந்த அவலம்!

பிரதமர் நரேந்திர மோதியால் சில நாட்களுக்கு முன்பு கொடியசைத்து தொடங்கிவைக்கப்பட்ட வந்தே பாரத் அதிவேக இரயிலின் முன்பகுதி, எருமை மாடுகள் மீது மோதியதில் சேதமடைந்துள்ள நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மும்பையில் இருந்து காந்திநகர் நோக்கி வந்தேபாரத் ரயில் இன்று சென்றுகொண்டிருந்த சமயம், அகமதாபாத்திற்கு முன்னால் பட்வா மற்றும் மணிநகர் இடையே காலை 11 மணியளவில் அவ்வழியாக தண்டவாளங்களைக் கடந்த எருமை மாடுகள் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் ரயிலின் முன்பகுதி சிறிய அளவில் சேதமடைந்தது. இச்சம்பவத்தை அடுத்து இரயில்வே ஊழியர் ஒருவர் உடைந்த இரயிலின் முன்பக்க பாகங்களை அகற்றும் காணொலி இணையத்தில் வெளியாகியுள்ளது. 

பிரதமர் மோடி கடந்த மாதம் காந்திநகர்-மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் அதிவேக இரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்து, காந்திநகரில் இருந்து அகமதாபாத்தில் உள்ள கலுபூர் ரயில் நிலையம் வரை பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது. 

Source: NDTV News

பதிவு: October 06, 2022
AltNews இணை நிறுவனர் முகமது ஜுபைர் கைது! FIR கூட வழங்காமல் கைதுசெய்துவிட்டதாக மற்றொரு இணை நிறுவனர் தகவல்!

AltNews இணை நிறுவனர் முகமது ஜுபைர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2018-ல் அவரது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்ட ஒரு கருத்தின் காரணமாக அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ட்விட்டரில் பகிரப்படும் செய்திகளின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து அதுகுறித்த தகவல்களை ட்விட்டர்வாசிகளுக்குப் பகிர்பவர் பத்திரிகையாளர் முகமது ஜுபைர். இவர் AltNews செய்தி நிறுவனத்தின் இணை இயக்குநர் ஆவார். அண்மையில், தனியார் தொலைக்காட்சியில் நபிகள் நாயகம் குறித்து பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா பேசிய காணொலியை வலைதளங்களில் பகிர்ந்தவர் இவரே. அது உலக அளவில் கவனம் பெற்று பல்வேறு எதிர்ப்பலைகளைக் கிளப்பியது.

இந்நிலையில், 2018-ல் அவரது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்ட ஒரு கருத்தின் காரணமாக நேற்றைய தினம் டெல்லி காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதிற்கு முன்னதாக வழக்கு ஒன்றின் விசாரணைக்காக திங்கள்கிழமை வருமாறு அவரை டெல்லி காவல்துறையின் தனிப்பிரிவினர் அழைத்திருந்ததாகவும், ஆனால் வேறொரு வழக்கில் அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டிருந்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் கூறியதாகவும் AltNews நிறுவனத்தின் மற்றொரு இணை நிறுவனர் பிரதீக் சின்ஹா தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "2020-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கு ஒன்றின் விசாரணைக்காக வரும்படி டெல்லி காவல்துறையின் தனிப்பிரிவினர் அவரை அழைத்தனர். அந்த வழக்கில் தாம் கைது செய்யப்படாமல் இருக்க நீதிமன்றத்தில் இருந்து முன்னதாகவே உத்தரவைப் பெற்றிருந்தார் முகமது ஜுபைர். ஆனால், விசாரணைக்கு ஆஜரான அவரை மாலை 6.45 மணியளவில் வேறொரு வழக்கில் அதன் முதல் தகவல் அறிக்கை நகலைக் கூட வழங்காமல் போலீஸார் கொண்டு சென்றனர். பல முறை கேட்டும் போலீஸார் முதல் தகவல் அறிக்கையைக் காண்பிக்கவில்லை. அவரைக் கொண்டு சென்ற வேனில் இருந்தவர்கள் தங்களுடைய பெயர் பேட்ஜை சீருடையில் அணிந்திருக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

முகமது ஜுபைர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153A (மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்) மற்றும் 295A (எந்தவொரு வகுப்பினரின் மத உணர்வுகளையும் சீற்றம் செய்யும் நோக்கில் வேண்டுமென்றே மற்றும் தீங்கிழைக்கும் செயலில் ஈடுபடுதல் மற்றும் மதம் அல்லது மத நம்பிக்கைகளை அவமதித்தல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த வழக்கில் புகார்தாரர் யார், அதன் விவரம் என்ன என்பதை போலீஸார் தெரிவிக்கவில்லை.

முகமது ஜுபைரின் கைதிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். காங்கிரசார் பலரும், உண்மைக்கு புறம்பான செய்திகளைப் பரப்பும் பாஜக நிர்வாகிகளுக்கு மத்திய அரசு பாதுகாப்பும், உண்மையின் குரலாய் அவதூறுகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவருபவர்கள் மீது வழக்குகளும் பதிந்துவருவதாக சாடியுள்ளனர்.

இந்நிலையில், ஜுபைர் அகமதின் கைது நடவடிக்கை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, "பாஜகவின் வெறுப்பு, மதவெறி மற்றும் பொய்களை அம்பலப்படுத்தும் ஒவ்வொரு நபருக்கும் அவர்களால் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. உண்மையின் ஒரு குரலைக் கைது செய்வது இன்னும் ஆயிரம் பேரை தட்டி எழுப்பும். உண்மை எப்போதும் கொடுங்கோன்மையின் மீது வெற்றி பெறும்" என்று தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து மஜ்லிஸ் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி தனது ட்விட்டர் பக்கத்தில், "முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர் எந்த அறிவிப்பும் இல்லாமல் & சில அறியப்படாத FIR-இல் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி காவல்துறை முஸ்லீம்களுக்கு எதிரான இனப்படுகொலை முழக்கங்களைப் பற்றி எதுவும் செய்யவில்லை. ஆனால் வெறுப்பூட்டும் பேச்சு மற்றும் தவறான தகவல்களை எதிர்க்கும் "குற்றத்திற்கு" எதிராக விரைவாக செயல்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

பதிவு: June 28, 2022
'ஹிட்லரைப் போன்றே மோதிக்கும் மரணம் நிகழும் என்ற பிரதமருக்கு எதிரான சுபோத்காந்தின் கருத்தை நாங்கள் அங்கீகரிக்கவில்லை' - காங்கிரஸ் விளக்கம்!

அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் சுபோத்காந்த் சஹாய், பிரதமரை ஹிட்லருடன் ஒப்பிட்டு பேசிய கருத்தை தாங்கள் ஏற்கவில்லை என்று காங்கிரஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு அறிவித்துள்ள 'அக்னிபாத்' திட்டத்திற்கு நாடெங்கிலும் எதிர்ப்பு வலுத்துவருகிறது. தற்காலிகமாக இந்திய இராணுவத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் இத்திட்டம் மாணவர்களின் கல்விவாய்ப்பை அழித்து வேலைவாய்ப்பை பறிப்பதாக உள்ளதாக பரவலாக போராட்டங்கள் வெடித்துவருகின்றன.

இந்நிலையில், இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் 'அக்னிபாத்' திட்டத்தை எதிர்த்து டெல்லியில் காந்தி வழியில் சத்யாகிரக போராட்டம், காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் முன்னிலையில் இன்று மேற்கொள்ளப்பட்டது. இதில், காங்கிரஸ் மூத்த தலைவர் சுபோத்காந்த் சஹாய், பிரதமர் மோதியை ஹிட்லருடன் ஒப்பிட்டுப் பேசிய கருத்து சர்ச்சையைக் கிளப்பியது. 

போராட்டத்தில் பிரதமர் குறித்து விமர்சித்துப் பேசிய அவர், "இது கொள்ளையடிப்பவர்களின் அரசு. மோதி ரிங்மாஸ்டர் போல் செயல்படுகிறார். மேலும் அவர், சர்வாதிகாரி வேடத்திற்குப் பொருந்தியுள்ளார். ஹிட்லரையும் பிரதமர் மோதி மிஞ்சிவிட்டதாக உணர்கிறேன். ராணுவத்திற்குள் இருந்து ‘காக்கி’ என்ற அமைப்பை ஹிட்லர் உருவாக்கினார். அதே போல் 'அக்னிபாத்' என்ற திட்டத்தை மோதி உருவாக்கியுள்ளார். இதே போல் ஹிட்லரின் வழியை மோதி தொடர்ந்து பின்பற்றினால் ஹிட்லருக்கு மரணம் நிகழ்ந்தது போன்றே அவருக்கும் மரணம் நிகழ்ந்து செத்து மடிவார். இதை நினைவில் கொள்ளுங்கள்" என்று பேசினார்.

இக்கருத்து சர்ச்சையான நிலையில், பிரதமர் மோதிக்கு எதிராக போராடினாலும், பிரதமருக்கு எதிரான அநாகரீகமான கருத்துகளை காங்கிரஸ் அனுமதிக்காது என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அக்னிபாத்திற்கு எதிராக எழுந்துள்ள தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து மத்திய அரசு அத்திட்டத்தில் சலுகைகளை அறிவித்துவருகிறது. ஆயினும் இத்திட்டம் திரும்பப் பெறப்படவேண்டும் என்பதே இராணுவத்தில் சேர்ந்து சாதிக்கவிரும்பும் பல்வேறு இளைஞர்களின் எண்ணமாக உள்ளது.

பதிவு: June 20, 2022
'ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை ஏன் தேட வேண்டும்? இஸ்லாமியர்கள் மீது பழி போடாதீர்கள்' - சொல்கிறார் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்!

ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை தேடுவது அநாவசியமானது என்றும் இந்துக்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் இல்லை என்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் குறிப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி ஒன்றில் அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "நாட்டில் அண்மைக்காலத்தில் சில பிரசித்த பெற்ற இந்து கோயில்கள் தொடர்பாக சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. வரலாற்றை நாம் மாற்ற முடியாது. கியானவாபி மசூதி விவகாரத்தில் கடந்தகால வரலாறுகளுக்காக தற்சமயம் வாழும் இஸ்லாமியர்கள் யார்மீதும் பழிசுமத்தக்கூடாது. கியானவாபி சர்ச்சை இன்றைக்கு ஏற்பட்டது அல்ல. அதற்கு இப்போதைய இஸ்லாமியர்களோ, இப்போதைய இந்துக்களோ காரணமாக முடியாது. இது எப்போதோ நடந்த சம்பவம்.

இஸ்லாம் இந்தியாவுக்கு வெளியிலிருந்து வந்த மதம். அடக்கி ஆள நினைத்தவர்கள் கொண்டுவந்த மதம். அப்போது விடுதலை வேட்கையில் இருந்து நம் நாட்டு மக்களை உணர்வுப்பூர்வமாகத் தாக்கி தேவஸ்தானங்கள் அழிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான கோயில்கள் அழிக்கப்பட்டன.

சில இந்துக் கோயில்களுக்கு சிறப்பு அந்தஸ்து இருக்கிறது. அதாவது கியானவாபி போல் இந்துக் கோயிலில் மசூதி இருக்கிறது. இதைத் தான் தற்போது இந்து சமூகத்தினர் கேள்விக்கு உள்ளாக்குகின்றனரே தவிர இந்துக்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக இல்லை. ஏனெனில் இப்போதைய இஸ்லாமியர்களின் மூதாதையர்கள் எல்லோரும் இந்துக்களாக இருந்தவர்களே.

தினம் தினம் புதிய சர்ச்சைகளை ஏற்படுத்த அவசியம் என்னவிருக்கிறது? ஒவ்வொரு மசூதியிலும் ஏன் சிவலிங்கத்தை தேட வேண்டும்? கியான்வாபி சர்ச்சையில் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் முடிவு எட்டப்பட வேண்டும். ஒருமித்த முடிவை எட்ட முடியவில்லை என்றுதான் மக்கள் நீதிமன்றத்தை அணுகுகின்றனர். நீதிமன்றம் என்ன முடிவு செய்தாலும் அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நமது நீதித்துறையை நாம் புனிதமாகக் கருத வேண்டும். அதன் முடிவுகளை நாம் கேள்விக்கு உள்ளாக்கக் கூடாது" இவ்வாறு அவர் பேசினார்.

பதிவு: June 03, 2022
'கடந்த 8 ஆண்டுகளில் அம்பானி, அதானி சொத்து மதிப்பு அதிகரித்தது தான் மிச்சம்' - பாஜகவின் 8 ஆண்டு ஆட்சி குறித்து பட்டியலிட்ட கே.எஸ்.அழகிரி!

பாஜகவின் 8 ஆண்டுகால ஆட்சியில் அம்பானி, அதானி ஆகியோரின் சொத்து மதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

ட்விட்டரில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர்,

"2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வின் சார்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்று கூறி பொறுப்பேற்ற பிரதமர் மோடி, மே 30-ஆம் நாளன்று 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். கருப்புப் பணத்தை ஒழிக்க பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்ததால், 96 சதவிகித ரொக்க பணம் வங்கிகளுக்கே திரும்பவும் வந்துவிட்டது. இதனால் 140 பேர் உயிரிழந்தனர். 35 லட்சம் பேர் வேலையிழந்தனர்

விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக உயர்த்துவேன், டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி, அடக்க விலையோடு 50 சதவிகிதம் கூடுதலாகக் குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யப்படும் என்று பா.ஜ.க. வாக்குறுதி வழங்கியது. ஆனால், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீரழிக்கிற வகையில் மூன்று வேளாண் சட்டங்களை மத்திய பா.ஜ.க. அரசு நிறைவேற்றி, விவசாயிகளின் எதிர்ப்பினால் பின்னர் திரும்பப் பெற்றது.

நாட்டு மக்களிடையே வறுமையும் பஞ்சமும் தலைவிரித்தாடுகிற போது, கடந்த 8 ஆண்டுகளில் முகேஷ் அம்பானியின் சொத்து 400 சதவிகிதமும், கௌதம் அதானியின் சொத்து 1830 சதவிகிதமும் அதிகரித்திருக்கிறது. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான கௌதம் அதானியின் சொத்து கடந்த ஏப்ரல் 2022 நிலவரப்படி, 100 பில்லியன் டாலரை - அதாவது 10 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்து உலக கோடீசுவரர்கள் வரிசையில் 10-வது இடத்தை பிடித்திருக்கிறார்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை வரலாறு காணாத வகையில் பா.ஜ.க. ஆட்சியில் உயர்ந்துள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், கலால் வரி மூலம் கடந்த 8 ஆண்டுகளில் ரூபாய் 27 லட்சம் கோடியை மத்திய பா.ஜ.க. அரசு வசூல் செய்திருக்கிறது. இது பா.ஜ.க. அரசின் அப்பட்டமான மக்கள் விரோத நடவடிக்கையாகும்.

பா.ஜ.க.வின் ஆட்சி என்பது எண்ணிலடங்காத அவலங்களையும், துன்பங்களையும் கொண்டது. மதவாத வெறுப்பு பேச்சுகளின் மூலமாக மக்களைப் பிளவுபடுத்துகிற பணியில் பா.ஜ.க. தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மோடி ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார பேரழிவுகளை மூடிமறைக்க, எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து விளம்பரங்கள் செய்தாலும் அதில் வெற்றி பெற முடியாது. தேர்தல் வரும் போது மக்கள் உரிய பாடத்தைப் புகட்டுவதற்குத் தயாராக இருக்கிறார்கள்"

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

பதிவு: May 30, 2022
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத மத்திய அமைச்சர் நிதின் கட்கரி! தமிழக மக்களை அவமதித்ததாக அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றச்சாட்டு!

நேற்றைய நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கும்போது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எழுந்து நிற்காததற்கு கண்டனம் தெரிவித்து அமைச்சர் மனோ தங்கராஜ் ட்விட்டரில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

தமிழகத்திற்கான ரூ.31,500 கோடி மதிப்பிலான 11 மக்கள் நலத்திட்டங்களைத் தொடக்கிவைக்க பிரதமர் நரேந்திர மோதி நேற்று சென்னை வந்தார். நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோருடன் பங்கேற்று நலத்திட்டங்களைத் தொடக்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பிற மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களும், மத்திய அமைச்சர்கள் சிலரும் கலந்துகொண்டனர். இதில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியும் கலந்துகொண்டார்.

இந்நிலையில், நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஒலிக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தின் போது அமைச்சர் நிதின் கட்கரி எழுந்து நிற்காமல் அமர்ந்தவண்ணம் இருந்தார். இதையடுத்து மத்திய அமைச்சர் திட்டமிட்டே தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்துள்ளதாக தமிழக தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், 'தமிழ்த்தாய்  பாடல் ஒலிக்கும் போது எழுந்து நிற்காமல், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதித்துள்ளார். தன் ஆணவ, பொறுப்பற்ற செயலுக்கான காரணத்தை, அமைச்சர் மக்களுக்கு விளக்க வேண்டும். 2018-ல் ஐஐடியில் அவர் கலந்துக் கொண்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்ததும் நேற்று அவர் நடந்துக் கொண்ட விதமும் எதேர்சையாக நடந்ததாக தெரியவில்லை' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பதிவு: May 27, 2022
'குடும்பக் கட்சிகள் எவ்வளவு கொள்ளையடிக்கலாம் என்பதிலேயே மும்முரம் காட்டுகின்றன' - தெலங்கானா அரசை கடுமையாக சாடிய பிரதமர் மோதி!

குடும்பக் கட்சிகள் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய எதிரி என்றும், தெலங்கானாவில் விரைவில் அரசியல் மாற்றம் நிகழும் என்றும் ஹைதராபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோதி உரையாற்றினார்.

31,400 கோடி ரூபாய் செலவில் 11 மக்கள் நலத்திட்டங்களை துவக்கிவைக்க இன்று மாலை சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோதி. அதற்கு முன்னதாக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் உயர்கல்வி நிறுவனம் ஒன்றின் ஆண்டுவிழா நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார்.

இந்நிலையில், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மோதி, தெலங்கானா அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், "தெலுங்கானாவில் குடும்ப கட்சிகள், தங்கள் வளர்ச்சியை மட்டுமே நினைக்கின்றனர். ஏழை மக்களைப் பற்றி கவலைப்படாத இந்தக் கட்சிகள், ஒரே குடும்பம் எப்படி ஆட்சியில் இருக்க முடியுமோ, எவ்வளவு கொள்ளையடிக்கலாம் என்பதில்தான் அவர்களின் அரசியல் உள்ளது. மக்களின் வளர்ச்சியில் அவர்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை.

குடும்ப அடிப்படையிலான அரசியல் என்பது அரசியல் ரீதியான பிரச்சினை மட்டுமல்ல. ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரி. ஒரு குடும்பத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகமாக ஊழல் எப்படி மாறுகிறது என்பதை நம் நாடு பார்த்திருக்கிறது. தெலங்கானாவிலும் பாஜகவினர் அரசியல் ரீதியாக குறிவைக்கப்படுகிறார்கள்.

இந்த குடும்ப அடிப்படையிலான கட்சிகள் திருப்திப்படுத்தும் அரசியலிலும், தங்கள் சொந்த வங்கிக் கணக்குகளை நிரப்புவதிலும் மும்முரமாக உள்ளன. அதே நேரத்தில் பாஜக தெலங்கானாவை தொழில்நுட்ப மையமாக மாற்ற விரும்புகிறது.

எனக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நம்பிக்கை உள்ளது. மூடநம்பிக்கையில் நம்பிக்கை இல்லாத துறவியான யோகி ஆதித்யநாத்தையும் வாழ்த்துகிறேன். இதுபோன்ற மூடநம்பிக்கையாளரிடம் இருந்து தெலுங்கானாவை காப்பாற்ற வேண்டும். தெலங்கானா மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். இங்கு விரைவில் அரசியல் ரீதியான மாற்றம் நிகழும்" என்று பேசினார்.

பதிவு: May 26, 2022
இஸ்லாமிய உணவகங்களில் கருத்தடை மாத்திரை கலந்து உணவு விற்கப்படுவதாக சர்ச்சைப் பேச்சு! காங்கிரஸ் தலைவர் பி.சி.ஜார்ஜ் கைது!

இஸ்லாமியர்கள் நடத்தும் உணவகங்களில் விற்கும் உணவுகளில் கருத்தடை மாத்திரை கலந்து விற்கப்படுவதாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சி.ஜார்ஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரளா: திருவனந்தபுரத்தில் நடைபெற்ற அனந்தபுரி இந்து மகா சம்மேளன மாநாட்டில் கலந்துகொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சி.ஜார்ச் சர்ச்சைக்குறிய வகையில், "முஸ்லிம்கள் நடத்தும் ஓட்டல்களில் குளிர்பானம், தேநீரில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுகிறது. இதனால் ஆண்கள், பெண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படுகிறது. இந்துக்களின் மக்கள் தொகையை கட்டுப்படுத்தி முஸ்லிம்களின் மக்கள் தொகையை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது" என்று பேசியது கடும் அதிர்வலைகளைக் கிளப்பியது. 

இந்நிலையில், வெறுப்புணர்வைத் தூண்டும் விதமாக பேசியதாக அவர் மீது புகார்கள் அளிக்கப்பட்டன. இதையடுத்து கோட்டயம் காவல்துறையினரால் அவர் கைதுசெய்யப்பட்டார். பின் இவ்வாறு இனி பேசமாட்டேன் என கேட்டுக்கொண்டதன் பேரில் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார். 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவராக இருந்த பி.சி.ஜார்ஜ், பின் பல கட்சிகளுக்கு மாறியதாகக் கூறப்படுகிறது. 2019-ஆம் ஆண்டில் இவர் தொடங்கிய கேரள ஜனபக்சம் என்ற கட்சி, பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பதிவு: May 26, 2022
"இந்தியாவே ஆம் ஆத்மியைப் பற்றி பெருமையாகப் பேசுகிறது. கண்கலங்க வைத்துவிட்டீர் பகவந்த்" - பஞ்சாப் அமைச்சரின் பதவிநீக்கம் குறித்து கெஜ்ரிவால் பெருமிதம்!

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய பஞ்சாப் அமைச்சரை அம்மாநில முதல்வர் பகவந்த் மான் பதவிநீக்கம் செய்ததை வெகுவாகப் பாராட்டியுள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாப் மாநிலத்தில், ஊழலுக்கு ஆதரவாக செயல்பட்ட அமைச்சர் மீது அக்கட்சி எடுத்துள்ள நடவடிக்கை இந்தியக் கட்சிகளை வாயடைக்கவைத்துள்ளது.

பஞ்சாப்பில் சுகாதாரத்துறை அமைச்சராகப் பதவிவகிக்கும் விஜய் சிங்லா மீது, அரசு ஒப்பந்தங்களுக்கு 1% கமிஷன் கேட்டதாக புகார் எழுப்பப்பட்டது. இந்நிலையில், அவர் மீது சுமத்தப்பட்ட ஊழல் புகார் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்ட 1 மணிநேரத்தில், சற்றும் சமரசமின்றி அவரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான். மேலும் ஊழல் தடுப்பு காவல்துறையால் விஜய் சிங்லா கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஒரு மாநிலத்தை ஆளும் அரசின் அமைச்சர் இவ்வாறான புகாரில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிகழ்வு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானையும், அவரது செயலையும் பாராட்டி வலைதளங்களில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆம் ஆத்மியின் தலைவரும், அக்கட்சி ஆளும் டெல்லியின் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பகவந்த் மானுக்கு தன்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன் பகவந்த். உங்கள் செயல் என் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. இன்றைய தினம், இந்த முழு தேசமும் ஆம் ஆத்மி கட்சியை நினைத்து பெருமிதம் கொள்கிறது" என்று அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

இதையடுத்து, ஊழல் புகாரில் சிக்கிய பிறமாநில அமைச்சர்களை மேற்கோள்காட்டி வலைதளவாசிகள் பலரும் வலைதளங்களில், "இவர்கள் மீதும் அம்மாநில முதல்வர்கள் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று பதிவுகளை இட்டுவருகின்றனர்.  

 

பதிவு: May 24, 2022
'உன் பெயர் முகம்மதா? சொல்..?' - இஸ்லாமியர் என நினைத்து மாற்றுத்திறனாளி முதியவரை அடித்துக்கொன்ற பாஜக பிரமுகர்! உ.பி.யில் பயங்கரம்!

உத்தரப்பிரதேசத்தில், மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவரை இஸ்லாமியர் என நினைத்து பாஜக பிரமுகர் ஒருவர் அடித்துக் கொன்றுள்ள நிகழ்வு அரங்கேறியுள்ளது. 

உத்தரப்பிரதேசத்தின் நீமுச் பகுதியில், சுமார் 65 வயது மதிக்கத்தக்க பன்வர்லால் ஜெயின் என்ற மாற்றுத்திறனாளி முதியவரை மர்ம நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கும் காணொலி இணையத்தில் வேகமாகப் பரவிவருகிறது. 'உன் பெயர் முகம்மதா? உன் அடையாள அட்டையைக் காட்டு' என்று அந்த முதியவரை இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த நபரா எனக் கேட்டு அந்த மர்ம நபர் தாக்குவது போல் அந்தக் காணொலி அமைந்துள்ளது. 

இத்தாக்குதலில் அந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். பின் காவல்துறை விசாரணையில், முதியவரைத் தாக்கிய நபரின் பெயர் தினேஷ் குஷ்வாஹா என்பதும், அவர் பாஜகவைச் சேர்ந்த பிரமுகர் என்பதும், இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பின் காரணமாக ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த அம்முதியவரை இஸ்லாமியர் என நினைத்து கொடூரமாகத் தாக்கிக் கொன்றதும் தெரியவந்தது.

      Image

இதையடுத்து அந்நபர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அவர் மீது சட்டப்பிரிவுகள் 304 மற்றும் 302-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நாடெங்கிலும் இஸ்லாமியர்கள் மீது இந்து அமைப்புகள் சிலவற்றால் வன்முறைகள் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வரும் நிலையில், பாஜக ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ள இச்சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

அக்காணொலி உங்கள் பார்வைக்கு

பதிவு: May 21, 2022
இஸ்லாமியர்களுடன் தொழுகையில் ஈடுபட்ட இராணுவ கமாண்டர் பாண்டே! மதவெறுப்பு சக்திகளுக்கு எதிரான ஓர் நெகிழ்ச்சி சம்பவம்!

ஸ்ரீநகரில், ரமலான் நோன்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமிய இராணுவ அதிகாரிகளுடன் இராணுவ கமாண்டர் தொழுகையில் ஈடுபட்ட காட்சி காண்போரை நெகிழச் செய்துள்ளது.

நாடெங்கும் சிறுபான்மையின மக்களான இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு எதிரான போக்கு மதவாத சக்திகளால் நிலவிவருகிறது. அச்சமூக மக்களுடன் விரோதத்தை வளர்த்து தாக்குதல்களைக் கையிலெடுப்பது, அவர்களின் உரிமைகள் மீது கைவைத்து நெருக்கடி ஏற்படுத்துவது, அவர்களின் வாழ்விடங்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்ப்பது உள்ளிட்ட பல்வேறு அசம்பாவிதங்கள் மதவெறி அமைப்புகளின் தூண்டுதலின் பேரில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தான் இந்தியா எப்பொழுதும் ஒற்றுமையை நேசிக்கக் கூடிய நாடு என்பதை நிரூபிக்கும் விதமான நிகழ்வு காஷ்மீர் ஸ்ரீநகரில் நடைபெற்றுள்ளது.

பொதுவாக ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை உண்ணாது பருகாது நோன்பு கடைபிடிப்பர். பின் சூரிய அஸ்தனத்திற்குப்பின் உணவு உட்கொள்வர்.

அவ்வாறு, நோன்பில் ஈடுபட்டிருந்த ஜம்மு காஷ்மீர் லைட் காலாட்படை ரெஜிமென்ட் மையத்தின் வீரர்களுடன், லெப்டினன்ட் ஜெனரல் டிபி பாண்டே, கார்ப்ஸ் கமாண்டர் 15 கார்ப்ஸ் காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில் நடைபெற்ற இப்தார் விருந்தில் கலந்துகொண்டு அவர்களுடன் தொழுகையில் ஈடுபட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

“உலகிற்கு, குறிப்பாக மதத்தின் பெயரால் பிளவை உருவாக்க முயற்சிக்கும் கூறுகளுக்கு மத நல்லிணக்கத்தின் செய்தி. இது நமது இந்தியா & நாங்கள் இதில் பெருமை கொள்கிறோம்” என்பது போன்ற மேற்கோள்களுடன் பலரும் இப்புகைப்படங்களை மகிழ்வுடன் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

பதிவு: April 28, 2022
ஜார்கண்டில் கேபிள் ரோப் கார்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து! 3 பேர் பலி - அந்தரத்திலுள்ள 48 பேரை மீட்கும் பணி தீவிரம்!

ஜார்கண்ட் மாநிலத்தில் கேபிள் ரோப் கார்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து சிக்கியுள்ளோரை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். 

ஜார்க்கண்டின் தியோகர் மாவட்டத்தில் உள்ள பாபா பைத்யநாத் கோயிலுக்கு அருகிலுள்ள திரிகுட் மலைகளில் ரோப்வேயில் நேற்றைய தினம்(10.04.2022) சில கேபிள் கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் மூன்று பேர் வரை இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது மற்றும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேபிள் கார்களுக்குள் சிக்கிக்கொண்டவர்களில் இதுவரை 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர், மேலும் 48 பேர் இன்னும் 12 ரோப்வே கேபிள் கார்களின் வரிசையில் அந்தரத்தில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசு அதிகாரியின் கூற்றுப்படி, ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் ஏற்பட்ட மோதலில் 10 சுற்றுலாப் பயணிகள் பலத்த காயம் அடைந்ததாகவும், அவர்களில் இருவர் சிகிச்சையின் போது உயிரிழந்த்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இரண்டு எம்ஐ-17 ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) தெரிவித்துள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படை (என்.டி.ஆர்.எஃப்) மற்றும் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறை (ஐ.டி.பி.பி) ஆகியவற்றின் குழுக்கள் மீட்புப் பணிகளில் உதவி வருகின்றன என்று தியோகர் துணை ஆணையர் மஞ்சுநாத் பஜந்த்ரி கூறியுள்ளார்.

மீட்பு நடவடிக்கையில் உள்ளூர் கிராம மக்களும் NDRF-க்கு உதவுகிறார்கள் என்று பஜந்த்ரி கூறினார். முதல் பார்வையில், கேபிள் கார்கள் மோதியதில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிகிறது, இருப்பினும், சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அதிகாரிகள் கூறினார்.

டிசி மற்றும் போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திர ஜாட் இருவரும் சம்பவ இடத்தில் இருந்து மீட்பு பணியை கண்காணித்து வருகின்றனர். 44 டிகிரி லென்ஸ் கோணம் கொண்ட இந்தியாவின் மிக உயரமான செங்குத்து ரோப்வே திரிகுட் ரோப்வே என்று ஜார்கண்ட் சுற்றுலாத்துறை கூறுகிறது.

பாபா பைத்யநாத் கோயிலில் இருந்து சுமார் 20 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த ரோப்வே 766 மீட்டர் நீளமும், 392 மீட்டர் உயரமும் கொண்டது. ரோப்வேயில் 25 அறைகள் உள்ளன, ஒவ்வொரு அறையிலும் நான்கு பேர் உட்காரலாம்.

Source: ZEENEWS

பதிவு: April 11, 2022
‘ஆங்கிலத்துக்கு மாற்றுதான் இந்தி; பிற மாநில மொழிகளுக்கு அல்ல’ –அமித்ஷா பேச்சு!

இந்தியை தேசிய ஒருமைப்பாட்டு மொழியாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டதாகவும், இந்தியை ஆங்கிலத்திற்கு மாற்றுமொழியாக அனைவரும் ஏற்றுகொள்ளவேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லியில், நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழுவின் 37-வது கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகித்தார். அப்பொழுது பேசிய அவர்,

“அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும்.

வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும். பிற உள்ளூர் மொழிகளின் வார்த்தைகளை இந்தியில் சேர்த்தால் அதற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்படாது. இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாகத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்; மாநில மொழிகளுக்கு மாற்றாக அல்ல.

அமைச்சரவையின் 70 சதவீத செயல் திட்டங்கள் இந்தி மொழியில்தான் தயாரிக்கப்படுகிறது. 9-ஆம் வகுப்பு வரையில் இந்தி தொடர்பான அடிப்படை அறிவை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும். இதேபோன்று இந்தி மொழிப் பயிற்சி, தேர்வுகளுக்கும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.

வடகிழக்கு மாநிலங்களில் இந்தி மொழியை பயிற்றுவிக்க 22 ஆயிரம் இந்தி ஆசிரியர்கள் பணிக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். இது தவிர்த்து 8 வடகிழக்கு மாநிலங்களில், 10-ஆம் வகுப்பு வரையிலும் இந்தி மொழியை கட்டாயமாக்க மாநில அரசுகள் ஒப்புக் கொண்டுள்ளது.”

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பதிவு: April 08, 2022
‘கூட்டாட்சி என்ற சொல்லைப் பார்த்து ஆளுநர் பயப்பட வேண்டாம்!’ – ஆளுநரின் ‘ஒன்றியம்’ குறித்த கூற்றுக்கு முரசொலி பத்திரிகை பதில்!

மாநிலத்தில் சுயாட்சி என்பது பிரிவினை வாதச் சொல் அல்ல என்றும், கூட்டாட்சி என்ற சொல்லைப் பார்த்து ஆளுநர் பயப்படத் தேவையில்லை என்றும் முரசொலி தலையங்கத்தில் செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.  

அண்மையில் தென்மண்டல பல்கலைக்கழக் துணைவேந்தர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமெரிக்காவைப்போல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியா உருவாகவில்லை என்றும், ‘இந்தியா என்பது உடலின் உறுப்புகள் போன்றது; அவற்றைப் பிரித்துப்பார்க்க முடியாது’ என்றும் ஒன்றியம் குறித்த விளக்கத்தை அளித்திருந்தார்.

இந்நிலையில், ஆளுநரின் இந்த கூற்றை மேற்கோள் காட்டி, திமுகவின் முரசொலி பத்திரிக்கையின் தலையங்கம் பகுதியில் செய்தி ஒன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முரசொலி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  

“இந்திய யூனியன் பற்றிப் பேசுபவர்கள் இந்தியா 1947-இல் பிறக்கவில்லை என்பதையும் அமெரிக்காவைப் போல ஒப்பந்தக் கூட்டமைப்பு அல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். பல மன்னர்கள், ராஜ்யங்களைப் பொருட்படுத்தாமல் பாரதத்தின் ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை வாழ்ந்த மக்களின் பலதரப்பட்ட கலாச்சார, ஆன்மிகங்களால் சில ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்திய ஒன்றியம் இயல்பாக உருவாக்கப்பட்டு நீடிக்கிறது. பாரதம் காலம் காலமாக ஒரேயொரு உயிரினமாக இருந்து வருகிறது” என்று சொல்லி இருக்கிறார் தமிழக ஆளுநர்.

கலாச்சாரம், ஆன்மிகம், பாரதம் என்ற பெரிய வார்த்தைகளைக் கொண்டால் சொல்வது எல்லாம் உண்மையாக ஆகிவிடாது. பிரிட்டிஷார் ஆட்சிக்கு முன், இந்தியாவின் முழு நிலப்பரப்பும் ஒரே ஒருவர் ஆளுகையில் இருந்ததா? இல்லை! அப்படி இருந்ததற்கான ஆதாரம் உண்டா? இல்லை! பிரிட்டிஷார் ஆட்சியில் கூட, அவர்களது தலைமையை ஏற்றுக் கொள்ளாத மன்னர்களும், சமஸ்தானங்களும் இருக்கத்தான் செய்தன. அதனையும் ஒன்று சேர்த்தவர் சர்தார் படேல்.

படேலுக்கு இவர்கள் சூட்டும் மகுடம் என்ன? இந்தியாவுக்குள் இணையச் சம்மதிக்காத சமஸ்தானங்களை ஒன்றாக இணைத்துச் சேர்த்துக் கொடுத்தவர் அவர்தான் என்பதால்தான் அவருக்கு 3,000 கோடியில் சிலை வைத்தார்கள். அவர் பெருமையை, அவர் சாதனையைச் சிதைக்கும் வகையில் தமிழக ஆளுநர் ரவி கருத்துச் சொல்லலாமா? எல்லாருமே ஒன்றாகத்தான் இருந்தோம் என்றால் சர்தார் படேல் சாதித்தது என்ன?

அசோகர் காலத்தில் கூட, தமிழகம் நீங்கலாக இந்தியாவின் மற்ற நாட்டுப் பகுதிகள் அரசியல் ஒருங்கிணைப்பைப் பெற்றன. மௌரிய, கனிஷ்க, குப்த ஆட்சிகளில் கூட வட இந்தியாவில் தனித்த ஆட்சிப்பகுதிகள் அதிகம் இருந்தன. அனைத்தையும் பிடித்தாக வேண்டும் என்ற நோக்கத்துடன் மன்னர்கள் போர்கள் நடத்திய காலத்தில் கூட, தனித்த ஆட்சிப் பகுதிகள் அதிகம் இருந்தன. 1500 ஆண்டு காலத் தென்னக வரலாற்றில், வடபுலத்து பேரரசர்கள் எவரும் இங்கு வந்து தன்னகப்படுத்தவில்லை.

சுல்தான்களின் ஆட்சியில் மாகாணங்களுக்கு முன்னால் இருந்த பிரிவினை என்பதை ‘சுபா’க்கள் என்பார்கள். இத்தகைய ‘சுபா’க்கள் தென்னகத்தில் அமைக்கப்படவில்லை. வடபுலத்தை 15 சுபாக்களாக வைத்திருந்தார்களே தவிர, அதில் ஒன்று கூட இங்கு கிடையாது. முகலாயர்களைத் தொடர்ந்து வந்த பிரிட்டிஷார், வடக்கைப் போன்ற ஒரு ஒருங்கிணைப்பை தக்காணத்திலும், தென்னகத்திலும் அமைத்தார்கள். போர் மூலமாக மட்டுமல்ல; பொருளாதாரத்தின் மூலமாகவும் இந்த வெற்றி சாத்தியம் ஆனது.

ஒளரங்கசீப் மறைவுக்குப் பின்னால் இணைக்கப்பட்ட நாடுகள் அனைத்தும் பிரிட்டிஷார் நடத்திய போரால் கிடைத்தவையே. இராபர்ட் கிளைவ் வாழ்க்கையைப் படித்துப் பார்த்தால் அதனை உணரலாம். 12 ஆண்டுகள் நடந்த கர்நாடகப் போர் காரணமாகத்தான் பிரிட்டிஷார் ஆளுகைக்குள் தென்னகம் வந்தது.

பிளாசிப் போர், மராட்டியர்களையும் சீக்கியர்களையும் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது. ஆப்கானிஸ்தானமும், காந்தாரமும், நேபாளமும், பூட்டானும், பர்மாவும், இலங்கையும் அப்படித்தான் இணைக்கப்பட்டன.

‘அசோகராலும், அக்பராலும் அடைய முடியாததும் - மராத்தியர்களால் ஏற்றுக் கொள்ளப்படாததுமான இந்தியாவின் ஒற்றுமையை ஆங்கிலேயர்கள் உருவாக்கினார்கள். 18-ஆம் நூற்றாண்டில் இந்தியர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அகில இந்திய தேசியக் கோட்பாடானது ஆங்கிலேயரின் துப்பாக்கி முனையில் உருவானதே’ என்று வரலாற்றாசிரியர் கே.எம்.பணிக்கர் எழுதுகிறார்.

இன்றைக்கு இருக்கும் ‘மத்திய அரசு’ என்பது 1773-ஆம் ஆண்டு ஒழுங்கு முறைச் சட்டத்தால் உருவானது ஆகும். அதனுள்ளும் சேராத குறுநில மன்னர்கள் இருந்தார்கள். 1947-ஆம் ஆண்டு இந்திய சுதந்திரத்துக்குப் பிறகும் தாங்கள் தனிநாடு என்று சொன்ன மன்னர்களும் உண்டு. மாட்சிமை தாங்கிய சர்.சி.பி. ராமசாமி அய்யர், திருவிதாங்கூர் -கொச்சியைத் தனிநாடு என்றுதான் அறிவித்தார். படேல் - கிருஷ்ணமேனன் ஆகியோரின் வாக்குறுதி காரணமாகவும், ஹைதராபாத் மீது படையெடுப்பு நடத்தியும், காஷ்மீரத்துக்கு தனிச் சலுகை தந்தும் இன்றைய நிலப்பரப்பு முழுமை பெற்றது.

அதனால்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டமானது, “india that is bharath, shall be a union of states” என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது.

பல்வேறு தேசிய இனங்களின் சேர்க்கை தான் இந்தியா. இந்த நாட்டில் 1652 மொழிகளைப் பேசும் மக்கள் வாழ்கிறார்கள். 826 பெருமொழிகளாக இவை வகைப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு இனங்கள் இருக்கிறது. பல்வேறு மாநிலங்களாக இருக்கிறோம். இவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து இந்தியாவைக் காக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமையாக இருப்போம். அந்த ஒற்றுமையை எதனால் உருவாக்க முடியும்?

‘மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ என்ற தத்துவத்தின் மூலமாகத் தான் உருவாக்க முடியும். ‘மாநிலத்தில் சுயாட்சி’ என்பது பிரிவினை வாதச் சொல் அல்ல. ‘மத்தியில் கூட்டாட்சியை ஒப்புக் கொண்டு தான்’ மாநிலத்தில் சுயாட்சி என்பதே கேட்கப்படுகிறது. எனவே, கூட்டாட்சி என்ற சொல்லைப் பார்த்து ஆளுநர் பயப்படத் தேவையில்லை.”

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதிவு: March 15, 2022
‘பாஜகவின் வெற்றி அவர்களின் நல்லாட்சிக்கான அங்கீகாரம்’! – தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை!

உத்தரப்பிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிவரும் நிலையில், 4 மாநிலங்களில் பாஜக முன்னிலை பெற்று ஆட்சியமைக்கவிருப்பதற்கு பாராட்டு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன்.

உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் அண்மையில் நடந்துமுடிந்ததையடுத்து, அம்மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அதில் பஞ்சாப் மாநிலத்தில் தனக்கு எதிராக போட்டியிட்ட காங்கிரஸ் மற்றும் பாஜகவை பின்னுக்குத் தள்ளி ஆம்ஆத்மி கட்சி பெரும்பான்மை இடங்களை வென்று ஆட்சியமைக்க உள்ளது.

அதேபோல் மற்ற 4 மாநிலங்களிலும் தனக்கு எதிராக போட்டியிட்ட அனைத்து கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி பாஜக முன்னிலை வகித்து வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் தனிப்பெரும்பான்மை பெற்றும், கோவாவில் சுயேட்சை ஆதரவுடனும் பாஜக ஆட்சி அமைப்பது பெரும்பாலும் முடிவாகிவிட்ட நிலையில், உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூரில் வெற்றி வாய்ப்பில் முன்னிலை வகித்து வருகின்றது.

இந்நிலையில், 5-ல் 4 மாநிலங்களில் பாஜக வெற்றிபெறுவது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கும் நிலையில், அக்கட்சிக்கு பாராட்டு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் தமிழ்மாநில காங்கிரஸ்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் 4 மாநிலங்களில் பாஜக-வின் வெற்றி பெரிதும் பாராட்டுக்குரியது. 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மத்திய பாஜக அரசின் மீது 4 மாநிலங்களின் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறது.

எனவே பிரதமர் நரேந்திர மோடி-க்கும், பாஜக-வின் தேசியத் தலைவர்களுக்கும் தமாகா சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மத்திய, மாநில அரசுகளின் ஒத்த கருத்து, அதன் அடிப்படையில் மக்களுக்கு கொடுத்த வளர்ச்சித் திட்டங்கள், கொரோனாவைக் கட்டுப்படுத்தி மக்களை இயல்பு நிலைக்கு கொண்டு வந்த நல்ல செயல்பாடு, நாட்டின் பொருளாதாரத்தை படிப்படியாக உயர்த்த உறுதியான நிலையில் செயல்படுவது ஆகியவற்றின் மூலம் வெற்றிவாகை சூடியிருக்கிறது பாஜக.

மேலும் பாஜக-வின் மீது மக்களுக்கு அகில இந்திய அளவில் நம்பிக்கை உயர்ந்திருக்கிறது. 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் 4 ல் பாஜக-வின் வெற்றியானது மத்திய, மாநில அரசுகளின் நல்லாட்சிக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

மீண்டும் மகத்தான வெற்றிக்காகப் பாடுபட்ட பிரதமர், பாஜக-வின் அகில இந்திய தலைவர்கள், வெற்றிபெற்ற மாநிலங்களின் முதல்வர்கள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் ஆகியோருக்கு தமாகா சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பதிவு: March 10, 2022
பிரபல பாலிவுட் திரைப்பட இசையமைப்பாளர் பப்பி லஹரி காலமானார்! தலைவர்கள் இரங்கல்!

பிரபல பாலிவுட் திரைப்பட இசையமைப்பாளரும் பாடகருமான பப்பி லஹரி உடல்நலக் குறைவால் மும்பை மருத்துவமனையில் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 69.

இந்தி திரையுலகில் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவராகத் திகழ்பவர் பிரபல இசையமைப்பாளர் பப்பி லஹரி. 1973-ஆம் ஆண்டு வெளியான ‘நன்ஹா சிகாரி’ என்ற இந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான பப்பி லஹரி, தமிழில் 1985-ஆம் ஆண்டு வெளியான ‘பாடும் வானம்பாடி’ திரைப்படத்தின் மூலம் அறியப்பட்டார்.

இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்திருக்கும் பப்பி லஹரி இசையில், டிஸ்கோ டான்சர், ஷராபி, ஹிம்மத்வாலா, அட்வென்ச்சர்ஸ் ஆஃப் டார்ஜான், டான்ஸ் டான்ஸ், சத்யமேவ ஜெயதே, கமாண்டோ, ஆஜ் கே ஷஹேன்ஷா, தானேதார், நம்பி ஆத்மி, ஷோலா அவுர் ஷப்னம் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பிரபலமானவை.

ரசிகர்களால் பாப்பி டா என்று செல்லமாக அழைக்கப்படும் பப்பி லஹரி, தங்க நகைகள் மீது கொண்ட மோகத்தால் எப்போதும் அதிக நகைகளை அணிந்தவாறே வலம் வருவார். கூடவே கருப்புக் கண்ணாடியும் அவரது அடையாளங்களுள் ஒன்று.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பப்பி லஹரி, சிகிச்சைக்குப்பின் அதிலிருந்து மீண்டார்.

இந்நிலையில், வேறுபல உடல்நலக்குறைபாடுகள் காரணமாக மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த அவர், மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை பலனின்றி மும்பை ஜூஹூவில் உள்ள க்ரிட்டிகேர் மருத்துவமனையில் இன்று அதிகாலை காலமானார். இந்நிலையில், அவரது மரணத்துக்கு இந்தியப் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

பதிவு: February 16, 2022
‘காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் அகங்காரம் குறையவே இல்லை’ – ராகுல் காந்தியின் பேச்சு குறித்து மக்களவையில் பிரதமர் மோடி சாடல்!

பாஜக தமிழகத்தை ஒருபோதும் ஆளவே முடியாது என்ற ராகுல் காந்தியின் கூற்றுக்கு பதிலுரைக்கும் விதமாக, நேற்றைய தினம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக சாடியுள்ளார்.

நேற்றைய தினம் மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைமீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது, ராகுல் காந்தி பாஜக-வை சாடியிருந்ததை மேற்கோள் காட்டி அதற்கு பதிலுரைக்கும் பொருட்டு காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்து பேசியிருந்தார்.

இதுகுறித்து மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, “கொரோனாவுக்கு பிறகு உலகில் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன. கொரோனாவுக்கு பிந்தைய சூழலில் உலகின் தலைமை நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறவேண்டும். அரசுத் திட்டங்களின் மூலம் ஏழைகள் வீடு கட்டி லட்சாதிபதிகளாக மாறி வருகின்றனர். ஏழைத்தாய்கள் சமையல் எரிவாயு திட்டம் மூலம் பயனடையும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஏழைகளின் வங்கிக்கணக்கில் பணம் நேரடியாகச் சென்று சேர்கிறது.

தமிழ்நாட்டில் 1962-ஆம் ஆண்டுக்குப் பிறகு காங்கிரஸால் ஆட்சியமைக்கவே முடியவில்லை. பல மாநிலங்களில் காங்கிரஸை ஆட்சியில் அனுமதிக்க மக்கள் விரும்பவே இல்லை. காங்கிரஸ் கட்சியின் ஆட்சி பல இடங்களில் கைவிட்டுப் போன பிறகும் அகங்காரம் இன்னும் குறையவில்லை. அரசியல் கட்சிகள் குறித்து மக்களவையில் பேசியதால் அதற்குப் பதிலளிக்க வேண்டியுள்ளது" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் மக்களவைப் பேச்சு குறித்து காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், “அவரது பேச்சு முழுவதும் காங்கிரஸ் கட்சியைத் தாக்கும் விதமாக இருந்தது. அவர் பேசியது காங்கிரஸைத் தாக்கும் பெரும்பகுதியைக் கொண்ட ஒரு அரசியல் பேச்சு. அவர் எங்களை இப்படிப் பார்க்கிறார் என்பதை எண்ணி நாங்கள் பெருமைப்பட வேண்டும் என்று நினைக்கிறேன்”என்று தனது கருத்தைக் கூறியுள்ளார்.

பதிவு: February 08, 2022
‘லதா மங்கேஷ்கர் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும்’ – மத்தியப்பிரதேச முதல்வர் எஸ்.எஸ்.சவுகான் அறிவிப்பு!

பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவை ஒட்டி, அவரது பெயரில் ஆண்டுதோறும் இனி ‘லதா மங்கேஷ்கர் விருது’ வழங்கப்படும் என, அவர் பிறந்த மாநிலமான மத்தியப்பிரதேசத்தின் முதல்வர் எஸ்.எஸ்.சவுகான் அறிவித்துள்ளார்.

பிரபல பின்னணிப்பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளானதைத் தொடர்ந்து, கடந்த மாதம் 8-ஆம் தேதி மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சுமார் 29 நாட்களாக சிகிச்சையில் இருந்த அவர், நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 92.

அவர் காலமான செய்தி பலரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது மறைவுக்கு இந்தியப்பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நேற்று மாலை 7 மணியளவில் முப்படைகள் மற்றும் மாநில அரசு மரியாதையுடன் அவரது உடல் தாதர் சிவாஜி பார்க் மைதானத்தில் தகனம் செய்யப்பட்டது.

தன்னுடைய 4 வயதில் பாடல்களைப் பாடத்துவங்கிய லதா மங்கேஷ்கர், இந்தி, உருது, தெலுங்கு, கன்னடம், சிங்களம் உள்பட பல்வேறு மொழிகளிலும் 30,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

தமிழில், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் இணைந்து இவர் பாடி இசைஞானி இசையில் ‘சத்யா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வளையோசை கலகலவென’ பாடல், இன்றும் பலரது விருப்பப்பாடல்களில் ஒன்று.

இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா, தாதாசாஹேப் பால்கே, பத்ம பூஷன், பத்மவிபூஷன் உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றுள்ள இவர், இந்தியாவின் இசைக்குயில் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார்.

இந்நிலையில் தான் அவருக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக ஆண்டுதோறும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் அவரது பெயரில் ‘லதா மங்கேஷ்கர் விருது’ வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் எஸ்.எஸ்.சவுகான் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், "லதா ஜி இந்தூரில் பிறந்தார். எனவே இந்தூரில் ஒரு மியூசிக் அகாடமி, மியூசிக் யுனிவர்சிட்டி, மியூசியம் மற்றும் அவரது திருவுருவ சிலை நிறுவப்படும். லதா மங்கேஷ்கர் விருது அவரது பிறந்தநாளில் ஆண்டுதோறும் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்” என்று அறிவித்துள்ளார்.

பதிவு: February 07, 2022
அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பில் இணைய சோனியா காந்தி உள்ளிட்ட 37 அரசியல் தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பில் இணையுமாறு சோனியா காந்தி, ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் 37 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதம் மற்றும் குறிப்பிடப்பட்டுள்ள தலைவர்கள் பெயர் குறித்த விபரம்:

                                                    முதலமைச்சரின் கடிதம்

வணக்கம்,

 நலம் திகழ இந்தக் கடிதத்தைப் பெற்றிருப்பீர்கள் என நம்புகிறேன்.

கடந்த 26.01.2022 அன்று நமது நாட்டின் 73-ஆவது குடியரசு நாளை நாம் கொண்டாடிய வேளையில், கூட்டாட்சி மற்றும் சமூகநீதிக் கோட்பாடுகளை வென்றெடுக்க அரசியல் கட்சித் தலைவர்கள், குடிமைச் சமூகத்தின் உறுப்பினர்கள், ஒத்த சிந்தனையுள்ள தனிநபர்கள் ஆகிய அனைவரையும் ஒரு பொதுவான குடையின் கீழ் ஒன்றிணைத்து, அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு ஒன்றைத் தொடங்கவுள்ளதாக அறிவித்தேன்.

 எல்லாருக்கும் எல்லாம் என்பதை அடிப்படையாய்க் கொண்டதுதான் சமூகநீதியாகும். சமூகநீதி என்பது அனைவருக்கும் சமமான பொருளாதார, அரசியல், சமூக உரிமைகளும் வாய்ப்புகளும் அமையவேண்டும் என்ற எண்ணம்தான். அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் என்பதை உறுதிசெய்வதன் வழியாகத்தான் நமது அரசியல் சட்டத்தை இயற்றியவர்கள் காண விரும்பிய சமத்துவச் சமுதாயத்தை கட்டியமைக்க முடியும்.

தமிழ்நாட்டில், வாழ்க்கையின் அனைத்துக் கூறுகளிலும் சமூகநீதிக்கான விதைகளை மக்களின் மனங்களிலும் எண்ணங்களிலும் விதைத்து, தந்தை பெரியார் எனும் பகுத்தறிவுச் சுடர் ஏற்படுத்திய சமூகநீதிப் புரட்சியை இம்மண்ணின் ஒவ்வொரு துகளும் விவரிக்கும். அசைக்க முடியாத இந்தத் தத்துவம்தான் கடந்த எண்பது ஆண்டுகளாகத் தமிழ்ச் சமூகத்தின் அடித்தளமாக விளங்கி அதன் அரசியலை பண்படுத்தி வந்துள்ளது. சமத்துவமின்மையை ஒழித்து அனைத்துத் துறைகளிலும் இம்மாநிலத்தை முன்னேற்ற முடிந்ததென்றால் அதற்குக் காரணம் சமூகநீதித் தத்துவத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பிடம்தான்.

 இக்கடிதத்தை நான் எழுதும் இவ்வேளையில், தனித்தன்மை மிக்கதும் பன்முகத்தன்மை வாய்ந்த பல பண்பாடுகளால் ஆனதுமான நமது ஒன்றியம் பிரிவினை மற்றும் சமய மேலாதிக்கத்தினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. சமத்துவம், சுயமரியாதை மற்றும் சமூகநீதி ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்தால்தான் இவற்றை எதிர்த்துப் போரிட முடியும். இது அரசியல் ஆதாயம் பற்றியதல்ல; மாறாக நமது குடியரசு அமையப் பாடுபட்டோர் காண விழைந்த அடையாளத்தை மீண்டும் நிலைநிறுத்துவது பற்றியது ஆகும்.

 சமூகநீதித் தத்துவத்தின் மீதான தனது உறுதிப்பாட்டைத் திராவிட முன்னேற்றக் கழகம் ஒவ்வொரு முறையும் வலிமையாகப் போராடி வந்துள்ளது என்பது, அண்மையில், நாடு முழுவதும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாநிலங்கள் அளிக்கும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்கள் வழியாக 27% இடஒதுக்கீட்டைப் பெற்றுத்தந்ததில் மீண்டும் ஒருமுறை நிலைநாட்டப்பட்டுள்ளது. எனினும் சமூகநீதியை உறுதிசெய்ய இடஒதுக்கீடு மட்டுமே போதுமானதல்ல. சமூகத்தின் பொதுநீரோட்டத்தில் இருந்து விலக்கப்பட்டு நூற்றாண்டுகளாய் எதிர்கொண்ட அடக்குமுறையை உடைத்தெறிய வேண்டுமானால் அத்தகையோருக்கு ஒவ்வொரு படியிலும் சில சிறப்புரிமைகள் தரப்பட வேண்டும். சாதிப் பாகுபாட்டுடன் பாலினப் பாகுபாட்டை ஒழிக்கவும்; மாற்றுத்திறனாளிகள் பொதுநீரோட்டத்தில் இணைந்து போட்டியிடக் கூடிய வகையிலும் நாம் முயற்சிகளை மேற்கொண்டாக வேண்டும்.

 மேற்குறிப்பிட்ட குறிக்கோள்களை அடைய, உண்மையாகவே மாநிலங்களாலான ஒன்றியமாக நாம் இணைந்து நிற்க வேண்டிய நேரம் இது என நான் முழுமனதாக நம்புகிறேன். மண்டல் ஆணையத்தை அமைக்க ஒற்றுமையுடன் நாம் காட்டிய அதே உறுதிப்பாட்டையும் நோக்கத்தையும் இப்போதும் வெளிப்படுத்தியாக வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும், வாய்ப்புக்கான கதவுகள் திறக்கப்படுவதற்காக ஒடுக்கப்பட்ட சமூகங்கள் ஆவலுடன் உள்ளன. இந்தியாவில் சமூகநீதிக் கருத்தியலை முன்னெடுத்துச் செல்வதற்கான திட்டத்தை வார்த்தெடுப்பதற்கும்; இன்னும் சிறப்பாகச் செயல்படக் கூடிய பகுதிகளைக் கண்டறிவதற்கும்; அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொள்ளத்தக்க குறைந்தபட்சச் செயல்திட்டத்தை உருவாக்குவதற்குமான தளமாக இக்கூட்டமைப்பு விளங்கும்.

 ஆகவே, தங்கள் அமைப்பில் இருந்து இந்த அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்புக்கான பிரதிநிதிகளாகத் தக்க நபர்/நபர்களை நியமிக்குமாறு அக்கறையுடன் கோருகிறேன். ஒடுக்கப்பட்டோருக்கு உண்மையான பொருள்பொதிந்த சமூகநீதி சென்றடைய நாம் ஒன்றுபட்டு இருந்தால்தான் முடியும். சமூகநீதியில் பல பத்தாண்டுகளாக நாம் அடைந்த முன்னேற்றத்துக்குப் பிற்போக்குச் சக்திகள் சவால் விடும் இந்த இடர்மிகு காலத்தில், ஒடுக்கப்பட்டோர் நலனை உறுதிசெய்ய முற்போக்கு ஆற்றல்கள் கைகோக்க வேண்டியது மிக இன்றியமையாதது ஆகும். இம்முன்னெடுப்பில், எங்களுடன் நீங்களும் இணைய உங்களை வரவேற்க நான் எதிர்நோக்குகிறேன்.

நன்றி.

 37 தலைவர்கள்

  1. திருமதி. சோனியா காந்தி (இந்திய தேசிய காங்கிரஸ்)
    2. திரு. லாலு பிரசாத் யாதவ் (ராஷ்டிரிய ஜனதா தளம்)
    3. திரு. ஃபரூக் அப்துல்லா (ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு)
    4. திரு. சரத் பவார் (தேசியவாத காங்கிரஸ்)
    5. திரு. டி. ராஜா (இந்திய கம்யூனிஸ் கட்சி)
    6. திரு. சீதாராம் யெச்சூரி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - மார்க்சிஸ்ட்)
    7. திரு. எச்.டி. தேவேகவுடா (மதச்சார்பற்ற ஜனதா தளம்)
    8. திரு. என். சந்திரபாபு நாயுடு (தெலுங்கு தேசம்)
    9. திரு. நவீன் பட்நாயக் (பிஜூ ஜனதா தளம்)
    10. செல்வி. மமதா பானர்ஜி (திரிணாமூல் காங்கிரஸ்)
    11. திருமதி. மெஹ்பூபா முப்தி (ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி)
    12. திரு. உத்தவ் தாக்கரே (சிவ சேனா)
    13. திரு. அரவிந்த் கேஜ்ரிவால் (ஆம் ஆத்மி)
    14. திரு. கே. சந்திரசேகர ராவ் (தெலங்கானா ராஷ்டிர சமிதி)
    15. திரு. ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி (ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்)
    16. திரு. ஹேமந்த் சோரன் (ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா)
    17. திரு. என். ரங்கசாமி (என். ஆர். காங்கிரஸ்)
    18. திரு. லலன் சிங் (ஐக்கிய ஜனதா தளம்)
    19. திரு. அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாதி)
    20. செல்வி. மாயாவதி (பகுஜன் சமாஜ்)
    21. திரு. பவன் கல்யாண் (ஜன சேனா)
    22. திரு. வேலப்பன் நாயர் (அகில இந்திய பார்வார்டு பிளாக்)
    23. திரு. அசாதுதீன் ஓவைசி (ஏ.ஐ.எம்.ஐ.எம்)
    24. திரு. கே.எம். காதர் மொய்தீன் (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்)
    25. திருமதி. ரேனு ஜோகி (ஜனதா காங்கிரஸ்)
    26. திரு. அமரீந்தர் சிங் (பஞ்சாப் லோக் காங்கிரஸ்)
    27. திரு. சுக்பீர் சிங் பாதல் (சிரோமணி அகாலி தளம்)
    28. திரு. சிராக் பாஸ்வான் (லோக் ஜனசக்தி - ராம் விலாஸ்)
    29. திரு. ராஜ் தாக்கரே (மகாராஷ்டிர நவநிர்மான் சேனா)
    30. திரு. ஓம் பிரகாஷ் சவுதாலா (இந்திய தேசிய லோக் தளம்)
    31. திரு. கே.எம். மணி (கேரளா காங்கிரஸ் -எம்)
    32. திரு. ஓ. பன்னீர்செல்வம் (அ.இ.அ.தி.மு.க)
    33. திரு. வைகோ (ம.தி.மு.க)
    34. மருத்துவர். ராமதாஸ் (பா.ம.க)
    35. திரு. தொல். திருமாவளவன் (வி.சி.க)
    36. பேராசிரியர் ஜவாஹிருல்லா (ம.ம.க)
    37. திரு. ஈ.ஆர். ஈஸ்வரன் (கொ.ம.தே.க)

 

பதிவு: February 02, 2022

முக்கிய செய்திகள்

'தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு கெடவில்லை; மாறாக சிலர் அதை கெடுக்க நினைத்து செயல்படுகின்றனர்' - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைக் கெடுக்க சிலர் நினைத்து செயல்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

அரியலூர் மாவட்டத்தில் 27,070 பயனாளிகளுக்கு ரூ.52 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,

"ஒரு முதலமைச்சர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் கடந்த 10 ஆண்டாக இருந்த அதிமுக ஆட்சி. கையில் அதிகாரம் இருந்தும் எதுவும் செய்யாமல் கைகட்டி வேடிக்கை பார்த்ததுதான் கடந்த கால அதிமுக ஆட்சி. கடந்த 10 ஆண்டுகள் கால ஆட்சியின் சீரழிவை மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து புகார்கள் கொடுக்கின்றனர். விமர்சனங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல; அவற்றை வரவேற்கிறோம், ஆனால் விஷமத்தனம் கூடாது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போகவில்லை. மாறாக சட்டம் ஒழுங்கைக் கெடுக்கலாமா என்று சிலர் நினைக்கின்றனர். சிலரின் வயது எரிகிறது. ஒரு ஆட்சி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக இந்த ஆட்சி நடைபெறுகிறது" இவ்வாறு பேசினார். 

பதிவு: December 06, 2022
'கோழிக்கு அரிசி போட்டு பிடிப்பதுபோல் நம்மை தமிழை வைத்து பிடிக்கப்பார்க்கின்றனர்' - காசி தமிழ் சங்கமம் நிகழ்வை சாடிய சீமான்!

கோழிகளுக்கு அரிசியைப் போட்டு பிடிப்பது போல் தமிழர்களை மொழியை வைத்து பாஜக பிடிக்கத் திட்டமிடுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் பேசியதாவது: 

"காசி தமிழ்ச்சங்கமம் எனக்காகத்தான் நடத்தப்பட்டது. நான் வேல் தூக்கினால் அவர்களும் வேலைத் தூக்குவார்கள்; நான் முருகா என்றால் அவர்களும் முருகா என்பார்கள்; நான் ஈழம் பற்றிப் பேசினால் அவர்களும் ஈழம் என்பார்கள். ஆனால், நான் கச்சத்தீவு மீட்பு பற்றி பேசினால் மட்டும் எதுவும் பேசமாட்டார்கள். காவிரி நதிநீர் குறித்துப் பேசினால் எதுவும் பேசாமாட்டார்கள்.

நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் உள்ளதா? நாடாளுமன்றத்தில் தமிழில் பேசமுடியுமா? கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய முடியுமா? இதை விடுத்து காசி தமிழ்ச் சங்கமம் நடத்துவதன் மூலம் எப்படி நீங்கள் தமிழை வளர்ப்பீர்கள்?

கோழியை 'பக் பக் பக்' என்று அரிசி போட்டு பிடிப்பதைப் போல் தமிழை வைத்து தமிழ்நாட்டு மக்களை பிடிக்கப் பார்க்கிறார்கள். கோழி 'நம் பாஷை பேசுகிறாரே' என்று நினைத்து அவரிடம் மாட்டிக்கொண்டு வறுபடுவதைப் போல நாம் மாட்டிவிடக் கூடாது. எச்சரிக்கையாக இருக்கவேண்டும். 

 

பதிவு: November 28, 2022
ஆன்லைன் ரம்மியால் 15 மாதங்களில் நிகழ்ந்துள்ள 33-வது தற்கொலை! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

ஆன்லைன் ரம்மியால் ஒரிசாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், ஆன்லைன் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என் ரவி விரைந்து ஒப்புத அளிக்கவேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

ட்விட்டரில் இதுபற்றி பதிவிட்டுள்ள அவர், 

"தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வந்து தென்காசி மாவட்டம் கரிவலம்வந்த நல்லூரில் கூலி வேலை செய்து வந்த ஒதிஷா பெண் பந்தனா மஜ்கி, ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.70 ஆயிரத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்வு மிகுந்த வேதனை அளிக்கிறது.

ஆன்லைன் சூதாட்டத் தடை செல்லாது என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பிறகு ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் நிகழும் 33-ஆவது தற்கொலை இதுவாகும். கடந்த இரு மாதங்களில் இது நான்காவது தற்கொலை ஆகும்.
 
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான ஒவ்வொரு நகர்வும் பெரும் போராட்டத்திற்கும் பிறகும், சில உயிரிழப்புகளுக்கு பிறகும் தான் சாத்தியமாகிறது. 15 மாதங்களில் விலைமதிப்பற்ற 33 உயிர்களை பறி கொடுத்தும் கூட, ஆன்லைன் சூதாட்டம் இன்னும் தடை செய்யப்படவில்லை
 
ஒரு புறம் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் காலாவதியாகி விட்டது; மறுபுறம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்திற்கு ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் தமிழ்நாடு இனி ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறப்போகிறது
 
ஆன்லைன் சூதாட்டங்களால் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் ஏற்படவிருக்கும் பேராபத்தை தமிழக ஆளுனர் உணரவேண்டும். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 
பதிவு: November 28, 2022
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா ஒப்புதல் ஆளுநரால் காலம் தாழ்த்தப்பட்ட நிலையில் அது காலாவதியாகியுள்ளது! அடுத்த நடவடிக்கை என்ன?

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கான ஒப்புதல் தாமதமாக்கப்பட்ட நிலையில், அது காலாவதியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் காரணமாக தற்கொலைகள் பெருகிவந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதியை மயக்கி உயிரைக் கொல்லும் இந்த விளையாட்டைத் தமிழ்நாடு அரசு தடை செய்யவேண்டும் என்று எதிர்ப்புகள் எழவே, அரசு ஆன்லை ரம்மியைத் தடைசெய்வதற்கான சட்ட மசோதாவை அவசரச்சட்டமாக சட்டபேரவையில் நிறைவேற்றியது. 

இந்நிலையில், ஒப்புதலுக்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா அனுப்பப்பட்ட நிலையில், அதுகுறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டது. தமிழக அரசும் அதற்கு பதில் கடிதத்தை அடுத்த நாளே அனுப்பியது. இதனிடையே, அக்.01 ல் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதா நேற்றுடன் காலாவதியானது.

இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. ஆங்காங்கே ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலைகள் அதிகரித்துவரும் நிலையில், ஆன்லைன் ரம்மி மீது இன்னும் தடைவிதிக்கப்படாதது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 
பதிவு: November 28, 2022
'எங்களுக்கு நீதி கிடைக்கவில்லையெனில் அரசின் அத்தனை உதவிகளையும் திருப்பித்தருவோம்' - உயிரிழந்த வீராங்கனை பிரியாவின் வீட்டார் வேதனை!

தங்களுக்கு நீதி கிடைக்கவில்லையெனில் அரசு தங்களுக்கு வழங்கிய நிவாரண உதவிகளைத் திருப்பித்தந்துவிடுவதாக உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் வீட்டார் வேதனை பொங்கத் தெரிவித்துள்ளனர்.

சென்னை வியாசார்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா கால் எலும்பு சவ்வு பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாக அவர் உயிரிழந்தார். இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து பிரியாவிற்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் இருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை சட்டரீதியாக எடுக்கப்படும் என்று மருத்துவத்துரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதனையடுத்து, உயிரிழந்த பிரியாவின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி, வீடு மற்றும் பிரியாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை ஆகியவை வழங்கப்பட்டன.

இந்நிலையில், பிரியா மரணத்திற்குக் காரணமான மருத்துவர்கள் மீது இன்னும் நடவடிக்கை அரசு தரப்பிலிருந்து எடுக்கப்படவில்லை என்று பிரியாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள், அரசு தரப்பிலிருந்து மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும், அதுபற்றி உறுதியளித்ததால் தான் அரசின் உதவிகளைப் பெற்றுக்கொண்டோம் என்றும், அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அரசின் உதவிகளைத் திருப்பிச்செலுத்துவிடுவோம் என்றும், தங்களுக்கு நீதியே தேவை என்றும் அவர்கள் வேதனை பொங்கத் தெரிவித்துள்ளனர். 

பதிவு: November 26, 2022
பாஜக பெண் நிர்வாகிகளை ஆபாசமாகப் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்! மன்னிப்பு கேட்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

பாஜக பெண் நிர்வாகிகளை தரக்குறைவாகப் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்கை மன்னிப்புக் கேட்கக்கூறி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் அக்கட்சி உறுப்பினர் சைதை சாதிக், பாஜக நிர்வாகிகளான குஷ்பூ, காயத்ரி, நமீதா, கௌதமி ஆகியோரை தரக்குறைவாக சாடி, ஆபாசமான முறையில் பேசினார். இது அக்கட்சி உறுப்பினர்களிடையே கோபத்தை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு கண்டனங்கள் வலுத்தன. மேலும் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், வழக்குக்கு எதிராக சைதை சாதிக் முன்ஜாமீன் கோரியிருந்தார். இதைத்தொடர்ந்து நீதிபதிகள் முன்பாக இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அவர், சம்பந்தப்பட்ட பெண்களிடம் மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என்று வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஸ் சந்திரா உத்தரவிட்டுள்ளார். 

பதிவு: November 26, 2022

மேலும் செய்திகள்

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்