ஜெயலலிதா பிறந்தநாளில் அவர் இல்லாத அதிமுக எப்படி உள்ளது? ஜெ.ஜெ. ஆன்மாவின் மனநிலை என்னவாக இருக்கும்?

அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் தமிழக முதல்வருமான செல்வி ஜெ.ஜெயலலிதாவின் 74-வது பிறந்ததினம் இன்று. அவர் இல்லாத, ஒபிஎஸ் – இபிஎஸ் தலைமையிலான அதிமுக இன்று எவ்வாறு உள்ளது?

அதிமுக கட்சியின் வலிமையான ஒரு தலைமையாக ஜெயலலிதா இருந்தார் என்பதை யாரும் கிஞ்சிற்றும் மறுப்பதற்கில்லை. 2011-க்கு முன்புவரை ‘ஆட்சியில் மீண்டும் அதிமுக வர வாய்ப்புள்ளதா?’ என்று பலராலும் எள்ளிநகையாடப்பட்ட கட்சி, 2011 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று விஸ்வரூபமடைந்தது.

அதன்பிறகான அதிமுகவின் வளர்ச்சியும் எழுச்சியும் மற்ற கட்சிகளை வாயடைக்க வைத்தது வரலாறு. இடையில் சொத்துக்குவிப்பு உள்ளிட்ட சில வழக்குகளில் சிக்கினாலும், அவற்றைத் தவிடுபொடியாக்கி மீண்டும் 2016 சட்டமன்றத் தேர்தலில் அரியணை ஏறினார். இவ்வாறாகச் சென்ற கட்சியின் நடப்பு தான், 2016 டிசம்பர் 5-ல் அவர் மறைந்த பிறகு பலவாறாக ஆட்டம் காணத் துவங்கியது.

முதல் சறுக்கலே கட்சியின் அடுத்த முதல்வர் பொறுப்பாளர் யார் என்பது தான். இதில் அக்கட்சியின் மூத்த தலைமைகளான இபிஎஸ் – ஒபிஎஸ் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி, பூசல்கள் ஏற்பட்டு ஒருவழியாக எடப்பாடி.கே.பழனிசாமி தமிழக முதல்வராக சசிகலாவால் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றார்.

இதன்பிறகும் கூட சற்றேனும் மக்கள் விரும்பும் சில நற்திட்டங்களோடு சென்றுகொண்டிருந்த அதிமுகவின் நடப்பு, பாஜகவுடன் கூட்டுசேரும் நடவடிக்கையால் தான் மக்களிடையே வெறுப்பைச் சம்பாதிக்கத் துவங்கியது.

இதன் விளைவினால் தானோ என்னவோ 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிர்ச்சித் தோல்வியைச் சந்தித்தது அதிமுக. பத்தாண்டுகளாக ஆட்சிக் கட்டிலில் அமரத்துடித்த மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரியணையில் அமர்ந்தது. அதிமுக, ஆளும் கட்சியிலிருந்து எதிர்க்கட்சியானது

இத்தோல்விக்கு நிச்சயம் அதிமுக தலைமைகளாக மக்களிடையே அறியப்பட்ட இபிஎஸ் – ஒபிஎஸ் தான் பொறுப்பேற்றாக வேண்டும். ஜெயலலிதா இருந்திருந்தால் நிச்சயம் இந்நிலை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. நிச்சயம் வாய்ப்பில்லை.

அதிமுக-விற்கு மக்கள் மத்தியில் அபிமானம் குறைய சரியான திட்டமிடல் இல்லை, கட்சி நிர்வாகிகளுக்குள் இருந்த பூசல்கள், தெளிவில்லாமல் உளரும் அமைச்சர்கள் என்று பலதரப்பட்ட காரணங்கள் கூறப்பட்டாலும் பாஜகவுடனான கூட்டணி ஓர் முக்கிய அங்கம் வகிக்கும்

ஜெயலலிதா இருந்த வரை பாஜகவுடன் கூட்டணி இனி இல்லை என்று கூறிவந்தநிலையில், அவர் காலம் சென்ற பின் அதையெல்லாம் மறந்து அதிமுக அமைச்சர்கள் பிரதமர் மோடியை பூஜித்ததும், பாஜகவின் கட்டுப்பாட்டில் இருந்ததும் தான் பிரச்சினைக்கு முழு காரணம்.

இது அண்மையில் நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் எதிரொலித்ததுதான் சோகத்தில் சோகம். நாடாளுமன்றத்தில் இந்தியாவின் பெரிய மூன்றாவது கட்சியாக உருவெடுத்திருந்த அதிமுக, தமிழகத்தில் பல இடங்களிலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சிறிய கட்சிகளுக்குப் பின்னான இடங்களைப் பிடித்தது.

இந்நிலையில்தான் வாக்கு சதவீதத்தில் அதலபாதாளத்திற்கு அதிமுக சென்றதை எண்ணி துவண்டுபோன அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளரான ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ், ‘அம்மா வழியில் கட்சியை அரியணை ஏற்றியே தீருவோம்’ என சூளுரைத்து நேற்றைய தினம் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர். இப்பொழுதுதான் அரியணை குறித்த எண்ணமே இவர்களுக்கு வருகிறதா என எண்ணத் தோன்றுகிறது.

தமிழக மக்களின் எண்ணம் ஒன்றுதான். மக்களுக்கும், அவர்களின் வாழ்விற்கும் நன்மை பயக்கும் திட்டங்களை எந்த அரசு கொண்டுவந்தாலும் அவர்களை வாரியணைத்து உச்சிமுகர தமிழ் மக்கள் தயாராகத்தான் உள்ளனர். மாறாக, மதவாத சக்திகளுடன் இணைந்துகொண்டு நன்மை பயக்கிறேன் பேர்வழி பிரிவினை சூழ்ச்சிகளையும், சாமான்யர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் திட்டங்களையும் திணித்தால் யாவரையும் துடைத்தெறிய அவர்கள் தயங்கமாட்டார்கள் என்பது தான் உண்மை.

அதிமுகவின் தற்போதைய நிலையை ஒருவேளை ஜெ.வின் ஆன்மா பார்த்தால், ‘நான் இரத்தம் சிந்தி உருவாக்கி வைத்திருந்த கழகமா இது? என்று இரத்தக்கண்ணீர் தான் வடிக்கும்.

பதிவு: February 24, 2022
`சலூனில் நூலகம்; புத்தகம் வாசித்தால் ரூ.30 தள்ளுபடி!'- வாடிக்கையாளர்களை ஆச்சர்யப்படுத்தும் முடிதிருத்தும் கலைஞர் மாரியப்பன்

முடி திருத்தகத்துக்கு வருகிறவர் ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து பத்து பக்கங்களுக்கு மேல் வாசித்தால் அவருக்கு ரூபாய் 30 தள்ளுபடி தந்து என அசத்துகிறார் முடிதிருத்தும் கலைஞர் பொன் மாரியப்பன்!

வழக்கமான முடி திருத்தகங்களில் காணப்படும் அரைகுறை ஆடைகளுடன் கூடிய நட்சத்திரப் படங்கள் என்ன, எந்த நட்சத்திரப் படங்களும் இந்தக் கடையில் இல்லை. மாறாக, மர அலமாரியில், புத்தகங்கள் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருக்க முடிதிருத்த வந்தோர் அமைதியாக அந்தப் புத்தகங்களை எடுத்து வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தன் கடைக்கு வருபவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக, கடைக்குள் சிறிய நூலகத்தை அமைத்துள்ளார் தூத்துக்குடி மில்லர்புரத்தில் 'சுசில்குமார் பியூட்டி கேர்' என்ற பெயரில் முடி திருத்தகம் நடத்திவரும் பொன்.மாரியப்பன். அதை முடிதிருத்தும் கடை என்பதைவிட மூளையை புதுப்பிக்கும் கடை என்று தாராளமாகச் சொல்லலாம்.

வழக்கமாக முடி திருத்தும் கடைக்குச் செல்கிறவர்கள் செய்தித்தாள்களை வாசிப்பதைத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால் பொன் மாரியப்பன் கடைக்குச் செல்கிறவர்கள் ஏதாவது ஒரு புத்தகத்தைப் படிப்பதை கண்டிப்பாகக் காண முடிகிறது.

பொன் மாரியப்பன்‌ கடைக்கு நாளிதழ்கள், வார இதழ்களும் வருகின்றன. அத்தோடு கதை, சிறுகதை, கவிதை, வரலாறு, இலக்கியம், ஆன்மிகம், நாவல்... என சுமார் 400-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மர அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. முடிவெட்டுவதற்காகக் காத்திருக்கும் நேரத்தில், புத்தகங்களை ஆர்வத்துடன் எடுத்துப் படிக்கிறார்கள் வாடிக்கையாளர்கள். பேச்சு, திரைப்படப் பாடல்கள் என எந்த சப்தமுமின்றி, முடிவெட்டும் கத்தரிக்கோல் சப்தம் மட்டுமே இங்கே கேட்கிறது.

சின்ன வயதிலிருந்தே புத்தகங்கள் வாசிக்கும் ஆர்வம் மாரியப்பனுக்கு உண்டு. 8-ஆம் வகுப்பு வரைக்கும்தான் படித்திருக்கிறார். சில ஆண்டுகள் ஒரு வக்கீலிடம் சிப்பந்தியாக வேலைகளைச் செய்து கொண்டிருந்தார். அதன் பிறகு, அப்பா செய்துவந்த இந்த முடி திருத்தும் தொழிலைத் தொடர கடை ஆரம்பித்தார். முடிவெட்ட ஆள் வராத நேரத்தில் புத்தகம் வாசிக்கத் தொடங்கி இருக்கிறார். இப்படி, முழுமையாகப் படித்து முடித்த புத்தகங்களை அலமாரியில அடுக்கி வைக்கத் துவங்கியிருக்கிறார். அது இன்று 400க்கும் மேற்பட்ட ஒரு நூலகமாக உருவெடுத்திருக்கிறது. இந்தக் கடையைத் துவங்கி ஆறு வருஷம் ஆகிறது.

"புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப் படுத்தணும், குறைந்தபட்சம் முடிவெட்ட வந்திருக்கும் நேரத்துலயாவது புத்தகங்களைப் படிக்க வைக்கணும்னு நினைச்சேன். தனியா புத்தக அலமாரி ஒண்ணு வாங்கி, அதுல என் கைவசம் இருந்த புத்தகங்கள் அனைத்தையும் வரிசையா அடுக்கிவெச்சேன். முடிவெட்ட காத்திருப்பவர்களிடம், பிடிச்ச புத்தகத்தை எடுத்துப் படிக்கச் சொன்னேன். முதலில் தயக்கம்காட்டியவர்கள், பிறகு எடுத்து மேலோட்டமாகப் புரட்ட ஆரம்பிச்சாங்க. தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சாங்க. செல்பேசியில் மூழ்கிக் கிடக்கக்கூடாது, அடிக்கடி செல்பேசி பார்ப்பதால் ஏற்படும் தீமைகள். குறித்து நாளிதழ்களில் வெளியான தகவல்கள், கட்டுரைகளையும் அனைவரின் பார்வையில் படுறமாதிரி ஒட்டி வச்சிருக்கேன்" என்கிறார் பொன் மாரியப்பன்.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பரிந்துரையில் இவருக்கு ’புத்தகர் விருது’ கொடுக்கப்பட்டிருக்கிறது. இவரது சேவையைப் பாராட்டி தூத்துக்குடியில் உள்ள பலரும் புத்தகங்களை வாங்கிக் கொடுத்து இருக்கிறார்கள். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இவரது கடைக்கு வந்து நூலகத்தைப் பார்த்துப் பாராட்டியதுடன் 50 புத்தகங்களை அன்பளிப்பாகவும் வழங்கியிருக்கிறார்.

 

இப்போது கடைக்கு முடிவெட்ட வருகிறவர்கள் யாரும் செல்பேசிப் பார்ப்பதில்லை. முடிவெட்டிய பிறகும் சில நிமிடங்கள் உட்கார்ந்து புத்தகத்தைப் படித்துவிட்டு, பொறுமையாக வீட்டுக்குப் போகிறவர்களும் நிறைய உண்டு.

முடிதிருத்தும் கட்டணம் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்துகொண்டு செல்லும்போதும், இந்த ஆறு ஆண்டுகளில் ஒரு ரூபாய்கூட கட்டணத்தை உயர்த்தியதில்லை மாரியப்பன். இந்த ஆண்டு உயர்த்தச் சொல்லி மற்ற கடைக்காரர்கள் வற்புறுத்தியபோதிலும், 50 ரூபாயாக இருந்த கட்டணத்தை, 80 ரூபாயாக உயர்த்தி அறிவித்திருக்கிறார், நீண்ட யோசனைக்குப் பிறகு.

இந்த நிலையில் புதிய அறிவிப்பு ஒன்றை பொன் மாரியப்பன் வெளியிட்டுள்ளார். அதாவது வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் முடி வெட்டும் கட்டணம் ரூபாய் 80 ஆக உயர்த்தப்படுகிறது முடிவெட்ட வருகிறவர்கள் இங்குள்ள ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து பத்து பக்கங்களுக்கு மேல் வாசித்தால் அவருக்கு 30 ரூபாய் கட்டண சலுகை வழங்கப்படும். இதுதான் அந்த அறிவிப்பு.

“கட்டணத்தைக் கூட்டிச் சொல்லி, புத்தகம் வாசிச்சா 30 ரூபாய் குறைப்புன்னு சொல்றது... எப்படிப் பார்த்தாலும் அதே 50 ரூபாய் கட்டணம்தானே உனக்கு கிடைக்குது” என்று மாரியப்பனிடம் மற்ற கடைக்காரர்கள் இப்போது கேட்கிறார்கள்.

"மத்த கடைக்காரர்களுக்காக கட்டணத்தைக் கூட்டினேன். இதில் எனக்கு உடன்பாடில்லை. அதனால், புத்தகத்தை வாசிக்கச் சொல்லி குறைச்சிட்டேன். இதுல எனக்கு ஒரு மன நிறைவு” மகிழ்ச்சி பொங்கச் சொல்கிறார் பொன். மாரியப்பன்.

புத்தக வாசிப்பே அருகி வரும் இந்தக் காலத்தில் பொன் மாரியப்பனின் இந்த முயற்சி பாராட்டப்பட வேண்டியதே! முடி குறையட்டும்; அறிவு வளரட்டும்!

பதிவு: December 13, 2021
ஆட்டம் காணும் அதிமுக… அஸ்திவாரம் போடும் பாஜக… அண்ணாமலை சாரின் திட்டம் பலிக்குமா?

தமிழகத்தில் காமராஜருக்கு பிறகு கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக திராவிட கட்சிகள்தான் ஆண்டுகொண்டிருக்கிறது. அதற்கு வேட்டு வைக்கும் வேலையை கையில எடுத்துட்டாரு நம்ம அண்ணமலை சாரு…

எம்.ஜி.ஆருக்கு பிறகு அதிமுகவை யாரும் அசைத்து பார்க்க முடியாது என்ற அளவுக்கு அந்த கட்சியை ஒரு எகு கோட்டை மாற்றி வைத்து இருந்தாரு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவருக்கு பிறகோ நிலைமை தலைகீழா மாறி போச்சு…

அதிமுகவை பொறுத்தவரை ஒற்றை தலைமை இல்லாத நிலையில தள்ளாடுகிறது. கட்சியில உள்ள முக்கிய நிர்வாகிகள் பலர் சசிகலாவை தலைவராக ஏத்துக்கிட்டாதான் கட்சியை காப்பாற்ற முடியும்ன்னு சொல்றாங்க… அதுக்கு இரண்டு தலைமையில உள்ள எடப்பாடி மட்டும் பிடியே கொடுக்க மாட்டுகிறாராம். தனது ஆதரவாளர்களை வைச்சு எதிர்ப்பு தெரிவித்துகிட்டு வராரு. இப்படியே போனா கட்சி என்ன ஆகும்ன்னு எடப்பாடிக்கு ஆதரவாக இருந்த சிலர் இப்ப பேச ஆரம்பிச்சிட்டாங்களாம். அதுதான் புது விஷயமாக இருக்கு…

தலைமையை பிடிக்கதான் இப்ப போட்டி போட்டுறாங்களே தவிர, நேற்று சென்னையில மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்துகிட்டு இருக்கிறப்பவே… திருப்பூர்ல நடந்த கூட்டத்துல்ல அதிமுக-வில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏக்கள 2 பேர பாஜகவுல சேர்த்து அதிர வைத்து இருக்காரு நம்ம அண்ணாமலை சாரு. கூட்டணி வைச்சிருக்கும்போது கூட்டணியில உள்ள மற்றொரு கட்சி நிர்வாகிகளை தங்கள் கட்சியில பாஜக சேர்த்திருப்பது தமிழக அரசியல் வரலாற்றிலேயே புதிய முறையாகவே இருக்கு.

அதோட 2016-ல் நடக்க போகும் சட்டமன்ற தேர்தல்ல பாஜகதான் ஆட்சியை பிடிக்கும்ன்னு சொல்லிட்டாருன்னா பாத்துங்க… கூட்டணியில இருக்கும்போதே, தன் கட்சி நிர்வாகிகளை இழுப்பது சரியா என்பதை பத்தி எல்லாம் கொஞ்சம் கூட கவலைபடாம இருப்பதோடு, எதுகெடுத்தாலும் மைக் முன்னாடி நிற்கும் ஜெயகுமாரு இதை பத்தி பாஜகவுக்கு ஒரு மறைமுக எச்சரிக்கை கூட சொல்லன்னு தொண்டர்கள் எல்லாரும் அவர கடுமையாக விமர்சித்து வருகிறார்களாம்.

இப்படியே போனா, சீக்கிரமா நம்ம அண்ணாமலை சாரு அதிமுக கூடாரத்த காலி பண்ணிடுவாருன்னு அரசியல் விமர்சகர் மத்தியில் ஒரே பேச்சா இருக்குன்ன பாத்துங்க… இந்த பரபரப்புக்கு இடையில, நம்ம அண்ணாமலை சாருக்கு டெல்லியில் இருந்து அழைப்பு வந்து இருக்காம். சில அசைமெணட் கொடுக்க போறாங்களாம். அது என்னன்னா… எப்படி கூட்டணியில் இருந்துக்கொண்டே அதிமுக நிர்வாகிகளை தூக்கியது போல… திமுகவுல அதிருப்தியில இருக்கும் முக்கிய நிர்வாகிகளை தூக்க வேண்டும் என்பதுதான் அந்த அசைமெண்டாம்…. ஆளும் கட்சியில மட்டும்ல… காங்கிரஸ், பாமக, சீமான் கட்சியின்னு இந்த லிஸ்ட் விரிய போகுதாம். இதை எல்லாம் வைத்து பார்த்தா.. தமிழத்துல அதிமுகவுல ஆட்டம் காண தொங்கி இருக்குன்னு சொல்லலாம் போல… அதேபோல பாஜக காலூன்ற ஆரம்பிச்சிட்டாங்கன்ணும் சொல்லலாம்…

பதிவு: November 25, 2021
ஈபிஎஸ்ஸுக்கு எதிராக திரும்பிய செங்கோட்டையன்!- அ.தி.மு.க. மாசெ கூட்டத்தில் நடந்தது என்ன?- பரபரப்பு தகவல்கள்

உள்ளாட்சித் நகர்புற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக நடந்தது முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கோட்டைவிட்டதுபோல், நகர்புற உள்ளாட்சித் தேர்தலிலும் கோட்டை விட்டு விடக்கூடாது என்றும், ஆளும் கட்சிக்கு சமமான வெற்றி பெற்றாக வேண்டும் என்றும் கூட்டத்தில் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதேபோன்ற, கட்சியை வழிநடத்த அமைக்கப்பட்டுள்ள 11 பேர் கொண்ட குழுவை மேலும் வலுப்படுத்த வேண்டும். அதற்கான குழு 18 பேர் கொண்ட குழுவாக ஆக்க வேண்டும். அந்த குழுவுக்கு அதிகாரத்தை அதிகப்படுத்த வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பேசியுள்ளனர்.

இந்த கருத்துக்கு ஆதரவு தரும் வகையில், கட்சியின் மூத்த உறுப்பினராக இருக்கும் செங்கோட்டையன், ‘அ.தி.மு.க.வை வழி காட்டு குழுதான் வழிநடத்த வேண்டும். அதற்காக அந்த குழுவுக்கு முழு அதிகாரத்தையும் வழங்க வேண்டும்’ என்று பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அப்போது சிலர், வழிகாட்டு குழுவுக்கு செங்கோட்டையனை தலைவராக போடலாம். கட்சியின் அவைத் தலைவராக செங்கோட்டையனை நியமிக்கலாம் என்று கருத்து தெரிவித்தனர். இந்த கருத்தினை எடப்பாடியும், அவரது ஆதரவாளர்களும் விரும்பவில்லையாம். இதனால் சிறிது நேரம் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோன்று வழிகாட்டு குழுவை விரிவுப்படுத்தவும் எடப்பாடி தரப்பு சம்மதிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

எப்போதுமே எடப்பாடி தரப்பு பக்கமாக இருந்த செங்கோட்டையன், இப்ப ஏன் எடப்பாடி தரப்புக்கு எதிராக பேசுகிறார் என்ற குழப்பம் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பதிவு: November 24, 2021
வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து… முதல்வர் அவசர ஆலோசனை... பாமகவின் அடுத்த மூவ் என்ன?

கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் வன்னியர்களுக்கு போதுமான இட ஒதுக்கீடு இல்லையெனக் கூறி பாட்டாளி மக்கள் கட்சி நீண்ட காலமாக போராட்டங்களை நடத்திவந்த நிலையில், 1989-ல் இருந்த தி.மு.க. அரசு, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிற்குள் "மிகப் பிற்படுத்தப்பட்டோர்" என்ற பிரிவை உருவாக்கியது. அதில் வன்னியர் உட்பட வேறு பல சாதியினரும் இடம்பெற்றனர்.

இருந்தபோதும், வன்னியர்களுக்கு எனத் தனியாக 20 சதவீத உள் ஒதுக்கீடு தர வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தது. அதுமட்டுல்லாது, அ.தி.மு.கவுடன் கூட்டணி நீடிக்க வேண்டும் என்றால் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும் என்று பிடிவாதத்தில் பாட்டாளி மக்கள் கட்சி இருந்தது.

வேறு வழியின்றி அ.தி.மு.க. அரசு, 2021-ல் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பதற்கு முன்பாக தமிழக அரசு இது தொடர்பாக ஒரு அவசரச் சட்டத்தை நிறைவேற்றி வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அளிப்பதாக அறிவித்தது.

இந்த அவசரச் சட்டத்தை முன்மொழிந்து தமிழக சட்டப்பேரவையில் பேசிய அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, "மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் ஆகியோர் பிற சாதியினருடன் போட்டியிட்டு உரிய பலன்களை, சட்டப்படியான பங்கினைப் பெற இயலவில்லை என்பதாலும் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கையில், அரசின் நியமனங்களில் வன்னிய குல சத்ரியர்களுக்கு தனிப்பட்ட ஒதுக்கீடு வழங்கக்கோரி அவர்களிடமிருந்து முறைப்பாடு வந்துள்ளது.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினருக்குள் பல்வேறு பிரிவினர்களுக்காக உள் ஒதுக்கீடு வழங்குவதற்காக பல்வேறு சமூகத்தினரால் வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஆய்வுசெய்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினரின் சமமான வளர்ச்சியை உறுதிப்படுத்த, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவனர் (வன்னியர்) 10.5 சதவீதம், சீர் மரபினருக்கு 7 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5 சதவீதம் என மூன்று பிரிவுகளாக உள் ஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்துள்ளனர். ஆணையத்தின் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள அதற்கேற்ப இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நிறைவேற்ற அரசு முடிவுசெய்துள்ளது." என்று கூறினார்.

மேலும் இது தற்காலிகமான ஏற்பாடுதான் என்பதையும், சாதிவாரிக் கணக்கீடு முடிந்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், தென் மாவட்டத்தில் இந்த சட்டத்துக்கு எழுந்த எதிர்ப்பால் தேர்தல் பிரச்சாரங்களின்போது இது தற்காலிக ஏற்பாடு என்பதை சில அமைச்சர்கள் மீண்டும் வலியுறுத்திக் கூறவேண்டிய நிலை ஏற்பட்டது.

அதேநேரத்தில், தேர்தல் பிரச்சாரத்தின் போது, அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு என்பது அ.தி.மு.க. அரசு செய்துள்ள ஒரு நாடகம், இது செல்லாது, இது முறையாக அறிவிக்கப்படவில்லை என்று விமர்சனம் செய்தார். அதேநேரத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் இந்த இடஒதுக்கீடு சட்டப்படி செய்து தரப்படும் என்று வாக்குறுதியாகவே அளித்தார்.

அதேபோன்று, தேர்தல் முடிந்து மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. அரசு பதவியேற்ற பிறகு, இந்த உள் ஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்கான கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்து வந்தன. இந்த நிலையில்தான், இது தொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு ஜூலை 26-ம் தேதி வெளியிட்டது. இந்த இட ஒதுக்கீட்டை எப்படி அளிக்க வேண்டும் என்பதற்கான வழிமுறைகளையும் அறிவித்தது.

இந்த அறிவிப்பை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்றிருக்கிறது. பா.ம.க நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக இடஒதுக்கீடு நடைமுறைக்கு வர தொடங்கியது.

இந்தநிலையில், வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு அரசாணைக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், ‘வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை ரத்து’ செய்யப்படுதாக தீர்ப்பு அளித்துள்ளனர்.

இந்த தீர்ப்பு வன்னியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சி அடுத்த கட்டமாக இது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். அதேநேரத்தில், தமிழக அரசு இந்த தீர்ப்பு எதிராக மேல்முறையீடு செய்யும் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்பட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பதிவு: November 01, 2021
பசும்பொன் செல்ல ஓ.பி.எஸ், சசிகலாவுக்கு அனுமதி... எடப்பாடிக்கு திடீர் தடை… உச்சகட்ட பரபரப்பில் அ.தி.மு.க

சசிகலா விவகாரம் தொடர்பாக, முத்துராமலிங்கம் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதை, அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியும் தவிர்க்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ராமநாதபுரம் பசும்பொன்னில் நாளை முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்க, இன்று மதுரை செல்கிறார் சசிகலா. கோரிப்பாளையத்தில் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். பின், மருதுபாண்டியர் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார். அதை தொடர்ந்து பசும்பொன் சென்று, தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.

ஆண்டுதோறும், பசும்பொன் தேவர் நினைவிடத்திலும் அ.தி.மு.க., சார்பில் மரியாதை செலுத்துவது வழக்கம். 'சூரியனை பார்த்து குரைக்கிறது' என, சசிகலாவை பழனிசாமி விமர்சித்த விவகாரம், தென் மாவட்ட முக்குலத்தோர் சமுதாயத்தினரிடம் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. அதுமட்டுமல்லாது முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, சசிகலா குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். இவைகள் முக்குலத்தோர் சமூகத்தினரிடையே கடும் அதிருப்பதியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சூழலில், பசும்பொன் நினைவு இடத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வந்தால், அவர் மீது தங்கள் கோபத்தை வெளிப்படுத்தக்கூடும் என்றும் இதனால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் வாய்ப்பு உள்ளது எனவும் உளவுத் துறை எச்சரிக்கை செய்துள்ளது. இதனால் பழனிசாமி வருகைக்கு, போலீஸ் தரப்பில் அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது.
அதேநேரத்தில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. சார்பில் முத்துராமலிங்கர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். அவருடன் அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு மத்தியில் நடக்கும் நிகழ்ச்சியாக இருப்பதால் இதில் அ.தி.மு.க.வில் உள்ள சீனியார்கள் யார்? யார்? இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. இதில் கட்சி நிர்வாகிகள் பங்கேற்பதை வைத்துதான் அ.தி.மு.க.வில் செல்வாக்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிகமா? அல்லது எடப்பாடி பழனிசாமிக்கு அதிகமா? என்பது தெரிய வரும் என்று அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

சசிகலாவும் நாளை பசும்பொன் செல்கிறார். அங்கு முத்துராமலிங்க தேர்வல் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். அவருடன் ஆதரவாளர்கள் அதிகமானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் ஒரே நாளில் பசும்பொன் செல்வதால் இருவரும் சந்திப்பார்களா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலினும் பசும்பொன் செல்கிறார். அவருடன் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கிறார்கள். இதேபோன்று பல்வேறு கட்சித் தலைவர்களும் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்கள். இதனால் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பதிவு: October 29, 2021
சசிகலாவை சந்திக்கும் முன்னாள் அமைச்சர்கள்... கடும் அதிருப்தியில் ஈபிஎஸ்... பற்றவைத்த ஓபிஎஸ் மவுனம்

தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சசிகலாவை அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சிறையில் இருந்து வெளியில் வந்த சசிகலா சிறிது காலமாக அமைத்தி காத்து வந்தார். இந்தநிலையில், அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு துவக்கத்தில் இருந்து மீண்டு தனது அரசியல் பணியை தொடங்கினார் சசிகலா. அதன் தொடர்ச்சியாக வரும் 30ம் தேதி வரை தென் மாவட்டங்களில் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதற்கான ஏற்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் செய்து வருகின்றனர்.

இதனிடையே, சசிகலாவின் நடவடிக்கைகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் விதமாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகள் அமைந்து இருக்கிறது. மதுரையில் அவர் கொடுத்த பேட்டி, சசிகலாவின் தலைமையை ஏற்க அவரும், அவரது ஆதரவாளர்களும் தயாராகிவிட்டார்கள் என்பதை காட்டுவதாகவே அமைந்திருக்கிறது.

இந்தநிலையில் தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சசிகலா கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து தஞ்சாவூர் சென்றுள்ளார். தஞ்சையில் தங்கி இருக்கும் அவரை முன்னாள் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், காமராஜ் ஆகியோர் சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அதேபோன்று நெல்லை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அங்குள்ள அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சசிகலாவை சந்தித்து பேசுவார்கள் என்ற தகவல்களும் வெளியாகி இருக்கின்றன. இந்த தகவல்களுக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சசிகலாவுக்கு ஆதரவான கருத்தை தெரிவித்து இருக்கிறார். அதேபோன்று, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.சி.டி. பிரபாகரன், ஓ.பன்னீர்செல்வம் கருத்துக்கு ஆதரவாக பேசி இருக்கிறார்.

இதேபோன்று பல நிர்வாகிகள் சசிகலாவுக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் ஆதரவான கருத்துகளை தெரிவிக்க தொடங்கி உள்ளனர். பல பேர் வெளிப்படையாக கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிகழ்வுகளை எல்லாம் கண்டு எடப்பாடி பழனிசாமி கடும் அதிருப்தியில் இருக்கிறாராம். அவரது ஆதரவாளர்களுடன் ரகசிய ஆலோசனைகளையும் மேற்கொண்டு வருகிறாராம். இனி அ.தி.மு.க.வில் என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

பதிவு: October 27, 2021
களமிறங்கும் சசிகலா… அ.தி.மு.க.வில் வீசப் போகிறது புயல்... எடப்பாடி பழனிசாமியின் சீக்ரெட் பிளான்!

சசிகலா மேற்கொள்ள உள்ள அரசியல் ரீதியான சுற்றுப்பயணம் அ.தி.மு.க.வினர் மத்தியில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. ஏற்கெனவே அ.தி.மு.க. பொன்விழா கொண்டாட்டத்தின் போது, சசிகலா மேற்கொண்ட நிகழ்ச்சிகளே அ.தி.மு.க.வினர் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும். அதன் வெளிப்பாடாகதான் சசிகலா மீது எடப்பாடி பழனிசாமியும், ஜெயக்குமாரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்தநிலையில், வரும் 27ம் தேதி முதல் 3 நாட்கள் தமிழகத்தில் சில மாவட்டங்களில் அரசியல் ரீதியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். சசிகலாவின் இந்த சுற்றுப்பயணம் அ.தி.மு.க.வினர் மத்தியில் பெரிய அதிர்வலை ஏற்படுத்தும் என்றே அரசியல் விமர்சகர்களின் பார்வையாக உள்ளது.

எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர், அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி பிரிந்தபோது, எம்ஜிஆரின் மனைவியான ஜானகி அரசியலிலிருந்து ஒதுங்கி ஜெயலலிதாவுக்கு வழி விட்டது போல் சசிகலாவும் தற்போதைய அதிமுக தலைமைக்கு வழிவிட்டு பெருந்தன்மையுடன் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்பதே எடப்பாடி தரப்பின் விருப்பமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டே அ.தி.மு.க.வில் உள்ள சில சீனியர்களின் கருத்துகளும் அமைந்துள்ளன. அதையொட்டியே செய்திகளும் வெளி வருகின்றன. ஆனால் சசிகலாவோ முடிந்தவரை அ.தி.மு.கவை தன்பக்கம் இருக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார் என்று அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

இதனிடையே, அதிமுகவை கைப்பற்றும் முயற்சியைவிட்டுவிட்டு அமமுகவை பலப்படுத்தும் முயற்சியில் இறங்கலாம் என டி.டி.வி.தினகரன் சசிகலாவிடம் கூறி வருவதாகவும், அதற்கு சசிகலா உறுதியாக எந்தவித உத்தரவாதமும் தரவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்தநிலையில், சென்னையில் நடந்த சசிகலாவின் இரு நாள் நிகழ்ச்சிகள் அதிமுக தலைமையை அசைத்துப் பார்த்தாலும் மீடியாக்களில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றே செல்லலாம். ஆகையால் தென் மாவட்ட சுற்றுப் பயணத்தில் செல்லும் இடங்களில் எல்லாம் தங்கள் செல்வாக்கை காட்ட வேண்டும் என முடிவு எடுத்துள்ளனர். அது மீடியாக்கள் மூலமாக தமிழக அரசியலை திரும்பி பார்க்க வைக்க வேண்டும் என்றும் சசிகலா திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

சசிகலாவின் சுற்றுப் பயணம் தொடங்க இன்னும் இரு நாள்களே உள்ளன. தஞ்சை பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரி வளாகத்தில் தினகரன் மகள் திருமண வரவேற்பு விழா நடைபெற உள்ளது. திருவண்ணாமலையில் நடைபெற்ற திருமணத்துக்கு தொண்டர்கள் திரளாக கலந்துகொள்ள முடியாத நிலையில் தஞ்சையில் பிரமாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொண்டர்களிடம் குடும்பமாக வரவேண்டும் என அழைத்துள்ள தினகரன் அறுசுவை விருந்தையும் ஏற்பாடு செய்துள்ளார்.

சசிகலா ஆதரவாளர்கள், அமமுக தொண்டர்கள் என புதன் கிழமை தஞ்சையில் பெரிய கூட்டத்தை கூட்டி தங்களது செல்வாக்கை நிரூபிக்க திட்டமிட்டுள்ளனர். 27-ம் தேதி தஞ்சாவூர், 28-ம் தேதி மதுரை, திருநெல்வேலி, 29-ம் தேதி பசும்பொன் விழா என அனைத்து இடங்களிலும் சசிகலா தொண்டர் படை சூழ வலம் வரவுள்ளார்.

சசிகலாவின் இந்த சுற்றுப்பயணம் குறித்து எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்தி வருகிறாராம். குறிப்பாக சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள மாவட்ட செயலாளர்களுக்கு சில உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது சசிகலா வரும் போது அ.தி.மு.க. நிர்வாகிகளோ, தொண்டர்களோ சசிகலாவை சந்திக்கவும் கூடாது, நிகழ்ச்சியில் பங்கேற்கவும் கூடாது என்று உத்தரவை பிறப்பித்து இருக்காராம். அதே நேரத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓபிஎஸ், சசிகலா விவகாரத்தில் தொடர்ந்து மவுனம் காத்து வருவது நிர்வாகிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதை வைத்த பார்க்கும் போது சசிகலாவின் சுற்றுப்பயணம் எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய அளவில் பீதியை ஏற்படுத்தி இருக்கிறதாம். அதேபோன்று அவரது ஆதரவாளர்களும் பீதியில்தான் இருக்கிறார்களாம்.

பதிவு: October 25, 2021
வீதி வீதியா போங்க… இனி தனித்துதான் போட்டி..!- உள்ளாட்சித் தேர்தல் தோல்வியால் நிர்வாகிகளிடம் சீறிய ராமதாஸ்

உள்ளாட்சித் தேர்தலில் வடமாவட்டங்களில் கனிசமான இடங்களில் வெற்றி பெறும் கனவில் தனித்து களம் இறங்கியது பாட்டாளி மக்கள் கட்சி. ஆனால் 25 சதவீத வெற்றிக்கூட கிடைக்கவில்லை என்று கட்சியின் தலைமை கடும் அதிருப்திக்கு ஆளாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் கடந்த 6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 12ம் தேதி எண்ணப்பட்டது. இதில் ஆளும் தி.மு.க. அமோக வெற்றிபெற்றது. அ.தி.மு.க. படுதோல்வியை தழுவியது. அந்த கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட்ட பா.ம.க. 47 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் பதவியை கைப்பற்றியது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வடமாவட்டங்களில்தான் அதிகம் நடைபெற்றது.  இந்த தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிடுவதால் அதிக இடங்களை கைப்பற்றும் என்று அரசியல் நோக்கர்கள் எதிர்பார்த்தனர். பா.ம.க. தலைமையும் பெரிய எதிர்பார்ப்பில் இருந்தது. ஆனால், எதிர்பார்த்த வெற்றி பா.ம.க.வுக்கு கிடைக்கவில்லை. இதனால் கட்சியின் தலைமை கடும் அதிருப்திக்கு ஆளானது.

இந்தநிலையில், பா.ம.க.வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் காணொலி காட்சி மூலம் நடந்தது. கூட்டத்துக்கு கட்சித் தலைவர் ஜி.கே. மணி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்பட லர் கலந்துக்கொண்டனர். கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், இனி பா.ம.க. செயல்பாடுகள், எதிர்கால செயல் திட்டம், கூட்டணி நிலைப்பாடுகள் போன்ற பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் பல்வேறு கருத்துகளை முன்வைத்து பேசியதாக கூறப்படுகிறது. பின்னர் பேசிய கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கடும் கோபத்துக்கு ஆளாகிவிட்டாராம்.

"கட்சிக்கு யாரும் விசுவாசமாக வேலை செய்யவில்லை. அதனால்தான் வட மாவட்டங்களில் கூட நாம் எதிர்பார்த்த வெற்றியை நம்மால் பெற முடியவில்லை. இந்த தோல்வினால் நமக்கு இருந்த செல்வாக்கு குறைந்துவிட்டதாக தெரிகிறது. நமக்கு செல்வாக்கு உள்ள இடத்தையை நாம் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை என்றால் என்ன அர்த்தம்" என்று நிர்வாகிகளை கடுமையாக சாடியிருக்கிறார் ராமதாஸ்.

"இனிமேல் கூட்டணி கிடையாது. யாராவது வேறு கட்சிக்கு மாற வேண்டும் என்று நினைத்தால் இப்போதே போய்விடுங்கள். இருப்பவர்கள் எல்லாரும் ஒற்றுமையாக இருந்து வேலை செய்ய வேண்டும்.  அடுத்து வரக்கூடிய மாநகராட்சித் தேர்தல்களில் கடுமையாக உழைத்து வெற்றிபெற வேண்டும். இதை மனதில் வைத்து பணியாற்றுங்கள்" என்று மீண்டும் கோபத்தில் பேசினாராம் ராமதாஸ்.

விரைவில் எல்லா நிர்வாகிகளும் கிராம் கிராமமாக சென்று மக்கள் பணியாற்றி கட்சியை உறுதியாக நிலை நிறுத்துங்கள். அதற்கு விசுவாசமாகவும், கடுமையாகவும் உழைக்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு உத்தரவையும் ராமதாஸ் பிறப்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பதிவு: October 18, 2021
உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. படுதோல்வி… காரணம் இரட்டை தலைமையா?... குழப்பத்தில் நிர்வாகிகள்!

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் மிகப் பெரிய தோல்வியை அ.தி.மு.க. எதிர்கொண்டிருக்கிறது. இந்த தோல்வியானது கட்சிக்கு இரட்டை தலைமை இருப்பதுதான் காரணமா? என்ற கோணத்தில் நிர்வாகிகள் மத்தியில் கடும் குழப்பம் நிலவுகிறதாம்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தொடுக்கப்பட்டார். அவர் சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றதும், அவரை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு கட்சிக்கு ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பொறுப்பேற்றனர். அ.தி.மு.க வரலாற்றில் முதல் முறையாக இரட்டை தலைமை உருவாக்கப்பட்டது.

இரு தலைமை உருவாக்கப்பட்ட நாள் முதல் இரு தலைவர்களுக்கான ஆதரவாளர்கள் என சூழலும் அதிகரிக்க தொடங்கியது. மேலும் இந்த இரட்டை தலைமையின் காரணமாக அ.தி.மு.க. ஒவ்வொரு பிரச்சனையிலும் உட்கட்சி மோதல்களால் திணறித்தான் வருகின்றன.

அ.தி.மு.க. இரட்டை தலைமையுடன் செயல்பட்டாலும் எடப்பாடி பழனிசாமி முதல்வர் என்ற அதிகாரத்துடன் இருந்ததால் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அவர் பக்கமே இருந்தனர். இதை பயன்படுத்தி கடந்த சட்டமன்ற தேர்தலில் தான் முதல்வர் வேட்பாளராக களம் இறங்கினார்.

வேட்பாளர்கள் தேர்விலும் ஒருங்கிணைப்பாளர் என்கிற வகையில் தமது கை ஓங்கி இருக்க வேண்டும் என நினைத்தார். ஆனால் அப்போது ஆட்சி அதிகாரம் கையில் இருந்ததால் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தாம் நினைத்ததையே சாதித்தார். இதனால் ஓ.பன்னீர்செல்வம் ஆதவாளர்கள் கடும் அதிருப்திக்கு ஆளானார்கள்.

சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போதும் இருவரும் இணைந்து செயல்படாமல் மோதல் போக்கை கடைபிடித்தனர். இதனால் தொடர் வெற்றியைப் பெற்ற அதிமுக தோல்வியைத்தான் சந்திக்க முடிந்தது. ஆட்சி அதிகாரத்தை திமுகவிடம் பறிகொடுத்தது. ஆனாலும் ஒரு கவுரமான இடங்களை எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது அ.தி.மு.க.

சட்டசபை தேர்தல் முடிந்த பின்னரும் இரட்டை தலைமையின் அதிகார சண்டை ஓயவில்லை. யார் எதிர்க்கட்சித் தலைவர் என இருவருக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இறுதியாக அதிலும் எடப்பாடி பழனிசாமிதான் வென்றார். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை ஏற்கெனவே முடியாது என்கிற மனநிலையில்தான் ஓ.பன்னீர்செல்வம் இருந்தார்.

சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பின்னர் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து பேச்சு எழுந்தது. அப்போதும்கூட எடப்பாடி பழனிசாமி கை ஓங்கியது. ஒருகட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் பேச வேண்டிய நிலையையும் உருவாக்கினார் எடப்பாடி பழனிசாமி.

இத்தனை குமுறல்களையும் மனதில் வைத்திருந்த ஓ.பன்னீர்செல்வம், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலின் போது பகிரங்கமாகவே சட்டசபை தேர்தல் தோல்வி குறித்து பேசினார். தேர்தலின் போது தலைவர்கள் மேற்கொண்ட வியூகங்களால்தான் அதிமுக தோற்றது என ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

அத்துடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான அடுத்தடுத்த ஊழல்கள், கோடநாடு கொலை-கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் தொடர்பு குறித்த விவாதங்கள் என உள்ளாட்சித் தேர்தல் களம் அத்தனையும் அதிமுகவுக்கு எதிராகவே இருந்தன. இதனைத்தான் தற்போதைய தேர்தல் முடிவுகளும் வெளிப்படுத்தி இருக்கின்றன.

அதிமுக ஆளும் கட்சியாக இருந்த போது 2019-ல் நடத்திய உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு இணையான இடங்களைப் பெற்றது. ஆனால் இப்போது அதிமுக தலைவர்களே கனவிலும் நினைக்காத பெருந்தோல்வியை சந்தித்துள்ளனர். 140 மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் வெறும் 2 இடங்கள்தான் அதிமுகவுக்கு என்பதெல்லாம் சரித்திரம் காணாத தோல்விதான்.

அதேபோல் ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 990 இடங்களில் திமுக வெற்றி பெற்ற நிலையில், 200 இடங்களுக்கே அதிமுக போராடுவதும் அக்கட்சியின் தொண்டர்களுக்கு மிகப் பெரும் துயர செய்திதான். அதிகாரத்தில் இருந்த போது பெருமிதத்துடன் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சொன்ன இரட்டை தலைமை என்பது அதிமுகவுக்கு எப்படியான தேர்தல் முடிவுகளை தந்திருக்கிறது என்பது சுய பரிசோதனைக்குரியதாகவே அவர்கள் பார்த்தாக வேண்டும் என்று கட்சியினர் சீனியர்களின் குமுறலாக இருக்கிறதாம்.

பதிவு: October 13, 2021
ஓ.பி.எஸ்-வுடன் இணைந்து சசிகலா புதிய திட்டம்… அ.தி.மு.க-வில் வீச போகும் சூறாவளி!

ஓ.பி.எஸ்-சுடன் இணைந்து சசிகலா புதிய திட்டம் ஒன்றை அரங்கேற்ற இருக்கிறார். இதனால் அ.தி.மு.க.வில் கடுமையான சூறாவளி வீச போவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சிறையில் இருந்து வெளியே வந்ததும் தமிழ்நாடு அரசியலில் பெரிய புயலை கிளம்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் சசிகலா. ஆனால் ஏனோ சில காரணகளுக்காக தேர்தல் நடக்கும் நேரம் பார்த்து அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்தார். அ.தி.மு.க.வின் வாக்குகளை சிதறடிக்க கூடாது என்பது எண்ணத்தில் இவர் இந்த முடிவை எடுத்ததாக அப்போது கூறப்பட்டது.

தேர்தலுக்கு பின்னர் மீண்டும் அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்த சசிகலா, அ.தி.மு.க.வை மீட்க வேண்டும் என்று போன் கால் மூலம் நிர்வாகிகள் பலரிடம் பேசி வந்தார். அ.தி.மு.க, அமமுக நிர்வாகிகள் பலரிடமும் இவர் பேசிய ஆடியோக்களும் மீடியாக்களில் வெளிவந்தது.

அ.தி.மு.க.வை மீட்க வேண்டும், கட்சியை காக்க வேண்டும் என்று சசிகலா ஒவ்வொரு போன் காலிலும் சொன்னார். தொடக்கத்தில் வெளியான சில ஆடியோக்களை தவிர வேறு எதுவும் பெரிதாக அ.தி.மு.க. தரப்பில் சலசலப்பை ஏற்படுத்தவில்லை. அவரின் போன் கால் ஆடியோ எதுவும் பெரிதாக அதன்பின் கவனிக்கப்படவில்லை.

இந்தநிலையில் சசிகலாவின் ஆடியோ பேச்சுக்கள் குறித்து அ.தி.மு.க.வில் சீனியர்கள் யாரும் பெரிதுபடுத்தவில்லை. எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம் போன்றவர்கள் எதிர்ப்பு காரணமாக அ.தி.மு.க.விலும் சசிகலாவுக்கு இணைய வாய்ப்பு கிடைக்கவில்லை. ஓ.பி.எஸ் மட்டும் கொஞ்சம் சசிகலா ஆதரவு போல இருக்கிறார் என்று தகவல்கள் வந்தாலும் அவர் வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை.

ஆடியோ வெளியீட்டுக்கு பின்னர் அமைதியாக இருந்த சசிகலா தற்போது மீண்டும் இரண்டாவது திட்டத்தை தொடங்கி உள்ளார் என்று கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மரணத்தின் போது ஓ.பி.எஸ்ஸை மருத்துவமனைக்கே நேரில் சென்று சசிகலா சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்த சந்திப்பு ஓ பன்னீர்செல்வம்- சசிகலா இடையே கொஞ்சம் கசப்பை மறந்து, பிணைப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அ.தி.மு.க.வின் சில முக்கிய நிர்வாகிகள் சிலரும். சசிகலாவை மீண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முணுமுணுத்ததாக கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடம் மட்டுமின்றி கட்சி மீது அதிருப்தியாக இருக்கும் வேறு சில நிர்வாகிகள் மத்தியிலும் சசிகலாவின் மதிப்பு உயர்ந்து உள்ளதாக பேச்சு அடிபடுகிறது.

ஆளும் தி.மு.க. அரசோ பலரது மீது வழக்குகள் போட்டு வருகிறது. ஆனால் ஈபிஎஸ், ஓபிஎஸ் எதுவுமே செய்யவில்லை. இதுவே சசிகலா இருந்தாலாவது பெரிய அளவில் போராட்டமோ அல்லது ஆர்ப்பாட்டமோ செய்து இருப்பார் என்ற மனநிலைக்கு சில அ.தி.மு.க. தலைகள் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமியை பொருத்தவரை கோடநாடு வழக்கு விவகாரத்தில் மன உளச்சலில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர் எங்கே நம்மை காப்பாற்ற போகிறார் என்று அ.தி.மு.க. மாஜி அமைச்சர்கள் சிலர் புலம்பி வருகிறார்களாம். இந்த சந்தர்ப்பத்தை எப்படியாவது பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதில் சசிகலா உறுதியாக இருக்கிறாராம். அதற்காக ஒரு புதிய திட்டத்தை தீட்டி உள்ளாராம்.

அதேநேரத்தில் நமது எதிரி தி.மு.க.தான். நமக்குள்ளேயே சண்டை போட கூடாது என்று சசிகலா அ.தி.மு.க. தலைவர்களுக்கு தகவல் அனுப்பி வருவதாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில் அ.தி.மு.க.வின் பொன்விழா ஆண்டையொட்டி, இம்மாதம் 16-ம் தேதி ஜெயலலிதா நினைவிடம் செல்லும் சசிகலா 17-ம் தேதி காலை தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்திற்கும், ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்திற்கும் சசிகலா செல்கிறார்.

அதன் தொடர்ச்சியா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் முடிவு செய்து இருக்கிறாராம். இதன் மூலம் அ.தி.மு.க. நிர்வாகிகள் கவனத்தை தன் பக்கம் திருப்பலாம் என்ற நினைப்பில் சசிகலா இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், ஓ.பன்னீர்செல்வம் மூலம் அ.தி.மு.க.விற்கு நுழைய மறைமுக திட்டங்கள் சிலவற்றையும் சசிகலா தீட்டி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றன.

ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை சசிகலா கட்சிக்கு வருவதில் சிக்கல் இல்லை. ஆனால் அவர் மீண்டும் கட்சிக்குள் மொத்தமாக ஆதிக்கம் செலுத்த கூடாது. அவரும் ஒரு தலைவராக இருக்கலாம். அதிகார பகிர்வு இருக்கும். ஆனால் அவர் மட்டுமே அதிகாரம் பொருந்திய நபராக இருக்க முடியாது. இதற்கெல்லாம் ஒப்புக்கொண்டால் சசிகலா திட்டத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் ஒத்து கொள்வார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

சசிகலாவை தொடக்கத்தில் கடுமையாக எதிர்த்த எடப்பாடி பழனிசாமியும் இப்போது கொஞ்சம் அமைதியாகிவிட்டார். சசிகலா விஷயம் என்று இல்லை பொதுவாகவே கடந்த சில நாட்களாக எடப்பாடி ஏனோ அமைதியாக இருக்கிறார். அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு போது இவர் முக்கிய விஷயங்களை பேசுவாரா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

பதிவு: October 09, 2021
ஒற்றைத் தலைமையை கேட்கும் தொண்டர்கள்... இரட்டைத் தலைமையை விரும்பும் சீனியர்கள்..!- அதிமுகவில் நடப்பது என்ன?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பல்வேறு அதிரடி நிகழ்வுகள் நடந்தன. சசிகலா தலைமை என்ற நிலை மாறி, அவர் சிறைக்கு சென்றதும், பன்னீர்செல்வமா..? எடப்பாடியா…? என்ற மோதல் வெடித்தது. ஒரு கட்டத்தில் இருவரும் சமாதானம் செய்து கொண்டு கட்சியை சேர்ந்தே வழி நடத்தலாம் என்ற உடன்படிக்கைப்படி தற்போது செயல்பட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில்தான் சசிகாலா சிறையில் இருந்து வெளியில் வந்த பிறகு அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றங்கள் நிகழும் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தன. ஆனால் எதிர்பார்த்தப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனால் சசிகலா அதிமுகவின் தலைமையை பிடிக்க பல முயற்சிகளை மேற்கொண்டுதான் வருகிறார். அவரது முயற்சியை கட்சியில் உள்ள ஒரு சில சீனியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களே தவிர மற்ற நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் எல்லோரும் ஆதரவு தெரிவிப்பதாகவே கூறப்படுகிறது. அதேநேரத்தில் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மோதல் என்பது இருந்து வருகிறது. அது தேர்தல் நேரத்தில் வெளிப்படையாகவே தெரிந்தது. கட்சி அலுவலகத்துக்கு இருவரும் வரும் போது அவர்களுடைய ஆதரவாளர்கள் தனித் தனியாக கோஷம் போட்டு அதை வெளிப்படுத்தினார்கள். அதற்கு இருவரும் எந்தவித பதிலும் கூறவில்லை.

அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை என்பது எங்களுக்கு பழகிப்போன ஒன்றுதான் என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியிருப்பது கட்சியிக்குள் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நிருபர்களை சந்தித்த அவர், "ஊரக உள்ளாட்சி தேர்தல் என்றால் உள்ளூர் பிரச்னையை மையமாக வைத்துதான் நடக்கிறது. கட்சிகள் என்னதான் அரசியல் ரீதியாக கூட்டணி அமைத்தாலும், தலைவர்கள் மட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டாலும், அதையும் தாண்டி கீழ் மட்டத்தில் உள்ளூர் சூழ்நிலைகளுக்கு ஏற்ப சில வேட்பாளர்கள் போட்டியிடுவது இயற்கை. எதிர்க்கட்சி தலைவரின் ஆலோசனையின்படி போட்டி வேட்பாளர்களாக போட்டியிடுபவர்களை அழைத்து பேசி கிட்டத்தட்ட 100 சதவீதம் சரி செய்யப்பட்டுவிட்டது.

தி.மு.க ஆளும் கட்சியாக வந்த 4 மாதங்களில் தேர்தலின்போது வழங்கிய 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுவிட்டது என பெருமையாக கூறுகிறது. ஆனால் அவர்கள் முக்கியமாக தேர்தல் அறிக்கையில் தெரிவித்த நீட் தேர்வு இன்று கானல் நீராகிவிட்டது. மாணவர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகிவிட்டது. 3 பேர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். அதே போல், குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000, கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடியில் சில சட்டதிட்டங்களை புகுத்தி 40 சதவீதம் பேர்தான் பயனடையும் நிலை உள்ளது. தி.மு.க ஆட்சி ஏமாற்றம் விதமாக தாலிக்கு தங்கம் திட்டத்தில் நிபந்தனை விதித்துள்ளது. மகளிருக்கு இலவச பேருந்து திட்டத்தை அறிமுகப்படுத்தி, அம்மா இருசக்கர வாகன திட்டம் தேவைப்படாது என கூறுகின்றனர். ஜெயலலிதா கொண்டு வந்த காரணத்தால் இந்த திட்டத்தை கைவிட்டனர். இப்படி 4 மாதங்களிலேயே மக்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர். தி.மு.க.வுக்கு வாக்களித்தவர்கள் கூட வருத்தப்படும் நிலை இன்றைக்கு இருக்கிறது. தி.மு.க ஆட்சி ஏமாற்றத்தை தந்துள்ளது. இது நிச்சயம் ஊரக உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கும்.

உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெறும். குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் அ.தி.மு.க 90 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்துதான் அறிக்கைகள் விடுகின்றனர். சட்டமன்றத்திலும் இணைந்துதான் பணியாற்றினர். ஒருங்கிணைப்பாளர் வீட்டில் நடந்த துக்க நிகழ்ச்சியால், அவர் சட்டமன்றத்தில் கலந்து கொள்ள முடியாத நிலை இருந்தது. இதனால் தொய்வு ஏற்படக்கூடாது என்பதற்காக இணை ஒருங்கிணைப்பாளர் முதற்கட்டமாக 9 மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஆனால், ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., அங்கிருந்தே எங்களுக்கு ஆலோசனைகள் கூறுகிறார். இரண்டு பேரும் ஒருமித்த கருத்துடன் தான் உள்ளனர். இரட்டை தலைமை என்பது எங்களுக்கு பழகிப்போன ஒன்று. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் இரட்டை தலைமையில்தான் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றை சந்தித்துவிட்டோம். இதில் ஒருமித்த கருத்துடன் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். எந்தவித கருத்து வேறுபாடு ஏற்படவில்லை. எனவே அதில் எந்த பிரச்னையும் எழ வாய்ப்பில்லை’ என்று தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர்கள் அனைவரின் கருத்துத்தும் இதுவாகவே இருக்க வாய்ப்பில்லை. ஒரு சிலர் எடப்பாடியின் ஆதரவாளராகவும், ஒரு சிலர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராகவும் இருக்கின்றனர். தொண்டர்களோ கட்சிக்கு ஒற்றை தலைமைதான் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் என்பதுதான் அ.தி.மு.க.வில் நிகழும் நிதர்சனமான உண்மை.

பதிவு: October 05, 2021
களத்தில் இறங்கினார் முதல்வர் … தமிழகத்தில் பூரண மதுவிலக்கா..? ராமதாஸ் யோசனை செயல்வடிவம் பெறுகிறதா..!

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும் என்று மக்கள் மட்டுமல்லாது, அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை வைத்து வருகின்றன. அந்த கோரிக்கையை நிறைவேற்றக்கூடிய இடத்தில் இருக்கும் ஆளும்கட்சிகள் தொடர்ந்து முடிவு எடுப்பதில் காலம் தாழ்த்தி வருகின்றன.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், பூரண மதுவிலக்கு வேண்டும் என்று அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. கோரிக்கை வைத்து போராட்டமும் நடத்தியது. ஏன் பூரண மதுவிலக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் பா.ம.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேரும் முன் முதல் அஜந்தாவே பூரண மதுவிலக்குதான். ஆனால் அப்போதைய அ.தி.மு.க. அரசு அதை நிறைவேற்றவில்லை.

தற்போது தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. அதே மதுவிலக்கு கோரிக்கை வலுத்து வருகின்றன. அதற்கு தி.மு.க. அரசு அதிகாரபூர்வமாக எந்த நடவடிக்கையும் இன்னும் எடுக்கவில்லை. ஆனால் மதுவிலக்கு குறித்து ஏதோ முடிவை தமிழக முதல்வர் எடுப்பார் என்று இயல்பாகவே எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மதுவிலக்கு தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழக அரசுக்கு மதுவிலக்கு தொடர்பாக சில யோசனைகளை தெரிவித்து இருக்கிறார். அதன் விவரம் வருமாறு:

மதுரை மாவட்டம், பாப்பாப்பட்டியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு அந்த கிராம மக்களின் குறைகளைக் கேட்டு, அவற்றை நிறைவேற்றுவதாக உறுதியளித்திருக்கிறார். கிராம சபைக் கூட்டத்தில் முதல்வரே நேரில் பங்கேற்றிருப்பது வரவேற்கத்தக்கது.

தமிழ்நாட்டின் வரலாற்றில் கிராம சபைக் கூட்டத்தில் முதல்வர் ஒருவர் கலந்துகொண்டது இதுவே முதல் முறை என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன. காந்தியடிகளின் பிறந்த நாளில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், கிராம சுயராஜ்ஜியம் குறித்தும், கிராமங்களின் தேவைகளை நிறைவேற்றுவது குறித்தும் பேசியிருக்கிறார்.

இதை கிராமங்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான நல்ல தொடக்கமாகக் கருதலாம். அதே நேரத்தில் கிராமங்களுக்கு, தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான அதிகாரமும், தேவையற்ற தீமைகளை கிராமங்களுக்குள் அனுமதிக்கவிடாமல் தடுக்கும் உரிமையும் வழங்கப்பட வேண்டும். அதுவே உண்மையான கிராம சுயராஜ்ஜியமாகும். ஒட்டுமொத்தத் தமிழகமும், குறிப்பாக கிராமப்புறங்கள், இன்றைய நிலையில் எதிர்கொண்டு வரும் மிகப்பெரிய பிரச்சினை மதுதான்.

நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை

மதுவின் தீமைகள் குறித்தும், அதனால் இன்றைய தலைமுறை சீரழிந்து வருவது குறித்தும் ஆயிரமாயிரம் முறை கூறிவிட்டேன். ஆனாலும், மதுவின் தீமையிலிருந்து தமிழ்நாடு இன்னும் மீளவில்லை. அதற்கான முயற்சிகளை எடுக்க ஆட்சியாளர்கள் மனதளவில் நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை. மதுவால் சீரழிந்த குடும்பங்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காதவை. கிராமங்களுக்குச் சென்றால் 10 வீடுகள் கொண்ட தெருவில் குறைந்தது 2 அல்லது 3 குடும்பங்களாவது மதுவால் பாதிக்கப்பட்டு சீரழிந்தவையாக இருக்கும். கொரோனா காலத்தில் குடும்பங்களின் வருவாய் குறைந்தாலும், குடிப்பதற்கான செலவுகள் குறையவில்லை. அதனால், பல லட்சக்கணக்கான குடும்பங்கள், குறிப்பாகக் குழந்தைகளும், பெண்களும் பசியால் வாடிக் கொண்டிருக்கின்றனர்.

மதுவின் தீமைகளை தினமும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் கிராமப்புறங்களில் வாழும் பெண்கள்தான். கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து விடக்கூடாது என்பதற்காகத்தான் அரசே மது விற்பனை செய்வதாகக் கூறும் அரசு நிர்வாகங்கள், இது தொடர்பான நிலைப்பாட்டை இறுதி செய்வதற்கு முன்பாக கிராமப்புற பெண்களின் மனநிலையையும், கருத்துகளையும் அறிய வேண்டும். அதுதான் உண்மையான மக்களாட்சித் தத்துவம் ஆகும். அதற்கான மிகச்சிறந்த வாய்ப்பை தமிழக அரசுக்கு கிராம சபைகள் வழங்குகின்றன.

மராட்டிய மாநிலத்தில் ‘1949-ம் ஆண்டின் பம்பாய் மதுவிலக்குச் சட்டத்தின்'படி மது விற்பனை கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி, ஏதேனும் ஒரு நகர வார்டிலோ அல்லது கிராமத்திலோ மதுக்கடைகள் தேவையில்லை என அங்குள்ள பெண்களில் 25 சதவீதம் பேர் மனு அளித்தால் அதனடிப்படையில் அங்கு வாக்கெடுப்பு நடத்தப்படும். நகரப்பகுதிகளாக இருந்தால் வட்ட அளவிலும், ஊரகப் பகுதிகளாக இருந்தால் கிராம அளவிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படும். அதில் பங்கேற்கும் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மதுக்கடைகளுக்கு எதிராக வாக்களித்தால், உடனடியாக அங்குள்ள மதுக்கடைகள் மூடப்படும்.

அதுமட்டுமின்றி, அந்தப் பகுதியில் மதுக்கடைகளை மீண்டும் திறக்க முடியாது. இதேபோன்ற நடைமுறையைத் தமிழகத்திலும் கொண்டு வரவேண்டும் என 12 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். இந்த யோசனையை சென்னை உயர் நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. மதுக்கடைகளை மூட ஆணையிட வலியுறுத்தித் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் 2019-ம் ஆண்டு தீர்ப்பளித்த நீதிபதிகள், ‘‘மதுவால் ஒரு தலைமுறையே சீரழிந்துவிட்டது. இனிவரும் தலைமுறைகளையாவது காப்பாற்ற வேண்டும். மதுக்கடைகளுக்கு எதிராக கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதை மதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றும் அறிவுறுத்தினர். மக்களின் கருத்துகள் மீதும், உயர் நீதிமன்றத்தின் மீதும் மரியாதை வைத்துள்ள தமிழக அரசு இந்த யோசனையையும் மதித்துச் செயல்படுத்த முன்வர வேண்டும்.

மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படும் போதெல்லாம், அதை முனை மழுங்கச் செய்வதற்காக அரசுத் தரப்பில் செய்யப்படும் பிரசாரம், ‘‘மதுக்கடைகளை மூடிவிட்டால் நலத்திட்டங்களுக்கான நிதி எங்கிருந்து வரும்?'' என்பதுதான். அது மிகவும் தவறு. மதுவைக் கொடுத்து குடும்பங்களைச் சீரழித்துவிட்டு, நலத்திட்ட உதவிகளை வழங்குவதால் யாருக்கும் எந்தப் பயனும் ஏற்படாது. அதுமட்டுமின்றி, மதுக்கடைகளை மூடினால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்வதற்கான மாற்றுத் திட்டங்களை பாமக தெரிவித்திருக்கிறது.

இந்த விஷயத்தில் தொடர்ந்து ஆக்கப்பூர்வ ஆலோசனை வழங்கவும் பாமக தயாராக உள்ளது. இவற்றையெல்லாம் கடந்து மக்களாட்சியில் மக்களின் விருப்பமே முக்கியமாகும். எனவே, கிராமப்பகுதிகளில் மதுக்கடைகள் வேண்டாம் என்று குறிப்பிட்ட அளவு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், உடனடியாக கிராம சபைகளைக் கூட்டி வாக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். அதற்கான சட்டத்தை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கைக்கு செவிசாயிக்கும் விதமாக முதல்வர் மதுவிலக்கு குறித்து முதல்கட்ட ஆலோசனை ஒன்றை தொடங்கி இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அது தொடர்பாக சில அதிகாரிகளை அழைத்து பேசியதோடு, அதில் உள்ள சாதக பாதகங்கள் குறித்து ஆராயவும் முதல்வர் சொல்லி இருக்கிறார் என்ற தகவல்களும் வெளியாகி இருக்கிறது. முதல்வரின் இந்த நடவடிக்கை என்பது, ராமதாஸ் சொல்வது போல, அதிக பெண்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் கிராமத்தில் உள்ள மதுக்கடைகளை மூடலாம் என்ற முடிவுக்கு முதல்வர் வந்து இருக்கிறார் என்றே தெரிகிறது.

பதிவு: October 04, 2021
தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் விரிசலா..! கே.எஸ்.அழகிரியின் குமுறல்; பின்னணி என்ன?

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்ததில் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிருப்தியில் உள்ளன.

குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தி.மு.க. வழங்கிய இடங்கள் போதுமானதாக இல்லை, இருந்தாலும் அதனை ஏற்று தேர்தலில் போட்டியிடுகிறோம் என்று வெளிப்படையாகவே தெரிவித்தார். மேலும் கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒதுக்கப்பட்ட இடங்களில் திருப்பி அடையவில்லையாம்.

அதேபோன்று, தி.மு.க. கூட்டணியில் உள்ள முக்கிய பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சியும் தங்களுடைய அதிருப்பதியை வெளிப்படையாகவே தெரிவித்து இருக்கிறது. தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி பிரபல பண்பலை வானொலியின் நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் நீட் தேர்வு விவகாரம், தமிழக ஆளுநர் நியமனம், தி.மு.க. ஆட்சி குறித்து மதிப்பீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் பேசினார்.

குறிப்பாக, உள்ளாட்சித் தேர்தல் குறித்து அவர் கூறியுள்ள கருத்து தமிழக அரசியல் அரங்கில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 'ஊரக உள்ளாட்சி அமைப்புகள் தான் ஜனநாயகத்தின் உண்மையான ஆணிவேர். கட்சிகளின் இமேஜை தாண்டி மக்கள் செல்வாக்கு பெற்றவர்களே இத்தேர்தலில் இங்கு ஜெயிக்க முடியும். உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்லாமல் எந்த தேர்தலிலும் காங்கிரஸ் எதிர்பார்க்கும் தொகுதிகள் கிடைப்பதில்லை. உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து கட்சிகளுமே தனித்தே போட்டியிட வேண்டும். கூட்டணி தேவையில்லை என்ற தோனியில் கருத்து தெரிவித்து இருக்கிறார்.

மேலும் அவர் கூறுகையில், ‘நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு சரியான திசையில்தான் சென்று கொண்டிருக்கிறது. சட்டப்படி நீட் தேர்வு ரத்தாகும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அதேசமயம் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் என்ற தி.மு.க.வின் கோரிக்கையில் காங்கிரஸுக்கு உடன்பாடு இல்லை. கல்வி தொடர்ந்து பொது பட்டியலில் இருந்தால்தான் மத்திய அரசின் நிதி உதவிகள் மாநில அரசுகளுக்கு கிட்டும்’ என்று அழகிரி தனது நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

தொடந்து பேசிய அவர், ‘கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் 23 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட்டது. கூட்டணி இட ஒதுக்கீடு, தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளின்போது தி.மு.க. தங்களை சரிவர நடத்தவில்லை என்று பகிரங்கமாக தெரிவித்திருந்த அழகிரி, அறிவாலயத்தின் இந்த அணுகுமுறை காங்கிரஸுக்கு மிகுந்த மனவேதனையை அளிப்பதாக அழகிரி அப்போது கூறினார்.

இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தேவையில்லை என்று அவர் கூறியுள்ள கருத்து தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக-காங்கிரஸ் கூட்டணி முடிவுக்கு வருகிறதா என்று கேள்வியையும் எழுந்துள்ளது.

பதிவு: September 27, 2021
வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்துக்கு படையெடுப்பது ஏன்... கேள்விக்குறியாகும் தமிழக இளைஞர்களின் எதிர்காலம்?- அதிர்ச்சி தகவல்கள்!

கொரோனா நோய் பற்றிய அன்றாடச் செய்திகள் அனைத்தும் பழைய செய்திகளாகிவிட்டது. மக்களுக்கும் பழகிவிட்டது. இந்தியாவில் டிசம்பருக்குள் பெரியளவில் உயிரிழப்புகள் ஏற்படலாம் என்று செய்திகள். முதலில் நம்மை பற்றிய சுயபரிசோதனையில் இருந்து தொடங்குவோம்.

கடந்த 5-10 ஆண்டுகளாக தமிழகத்தில் மிக சிக்கலான சூழ்நிலை நிலவுகிறது. இதை நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்தில் அனுபவித்திருப்போம். ஒரு பக்கம் வேலை இல்லை என்று திண்டாட்டம். இன்னொரு பக்கம் வேலைக்கு சரியான ஆள் கிடைக்கவில்லை என்று திண்டாட்டம். எந்த படிப்பு படித்தவனுக்கும் நல்ல வேலை கிடைக்கவில்லை என்ற புலம்பல். எந்த தொழில் நடத்தவும் சரியான ஊழியர்கள் கிடைக்கவில்லை என்ற விசும்பல். பல தொழில் நிறுவனங்கள் சிறிய மற்றும் பெரிய முதலீடுகளில் தொடங்கப்பட்ட வேகத்தில் மூடப்படுகின்றன. எங்கு பார்த்தாலும் "எந்த பிசினசும் சரியில்லைங்க" என்ற பேச்சுகள். இதற்கு நடுவில் கொரோனாவால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, வேலையிழந்தோர் பல லட்சம். இதற்கு பின்னணியில் என்னென்ன காரணங்கள் இருக்க முடியும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

மதுப்பழக்கம்

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்புவரை இலைமறை காயாக இருந்த மதுப்பழக்கம் இப்போது காபி, டீ போல சாதாரண ஒன்றாகிவிட்டது. தினமும் மாலை ஆகிவிட்டால் பாட்டிலை தொடாமல் இருக்க முடியாது என்ற நிலையில் மிக அதிக எண்ணிக்கையில் ஆண்களும் அவர்களுக்கு போட்டியிட்டு பெண்களும் மது பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதை நம்மால் காணமுடிகிறது.

உலகிலேயே திறன் வாய்ந்த பணியாளர்கள் இருந்த தமிழகத்தில் இன்று குடிகாரர்கள் நிறைந்து, உற்பத்தி திறன் மிகவும் குறைந்துவிட்டது. குடி நோயாளிகளால் எந்த வேலையையும் நேர்த்தியாகவோ, குறிப்பிட்ட பணி நேரத்தில் செய்ய முடிவதில்லை. குறிப்பாக அமைப்புசாரா தொழிலாளர்கள் கட்டுமானம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடுவோரால் சராசரி 8 மணிநேர பணியை கூட செய்ய முடிவதில்லை. அதிகம் போனால் 4 மணிநேரம் வேலை செய்கிறார்கள். அதற்கு ரூ.1000 கூலி கேட்கின்றனர். வீட்டுக்கு ரூ.500, தனக்கு இருவேளையும் மது, சிகரெட் உள்ளிட்டவற்றுக்கு ரூ.500 என்று பிரித்து கொள்கிறார்கள்.

நூறு நாள் வேலை திட்டம், விவசாயம் உள்ளிட்ட எவ்வித வாழ்வாதாரமுமே இல்லாத மாவட்டங்களுக்கு அவசியம் தேவை. ஆனால் தமிழகத்தில் பெரும்பகுதி மாவட்டங்கள் ஓரளவு வளர்ந்தவை. இங்கு இத்திட்டத்தை முறையான திட்டமிடல் இல்லாமல் செயல்படுத்தியதால் காலை 10 மணிக்கு போய்விட்டு 2 மணிக்கு வந்துவிடலாம், வீட்டுக்கு தேவையான விறகுகளை வெட்டிக்கொள்ளலாம். வேறு எந்த வேலையும் இல்லை. ரூ.150 அக்கவுண்டுக்கு வந்துவிடும் என்ற நிலையால் சிறிய டீக்கடைகள் முதல் பெரிய நிறுவனங்களில் அடிநிலை உதவியாளர் பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தகைய காரணங்களால் தமிழகம் மிகமிக ஆபத்தான நிலையை நோக்கி பயணிக்கிறது. சமீபத்தில் தொழில் தொடங்கி நஷ்டமடைந்து தொழிலை விட்டவர்களிடம் விசாரித்தால் 10-ல் 8 பேர் சம்பள பிரச்னைகளாலேயே தொழில் நஷ்டமடைந்ததாக சொல்லுவார்கள். தொழில் நடத்தியே ஆகவேண்டிய கட்டாயமுள்ளோர், வேறு வழியின்றி தங்களுக்கு தேவையான வேலையை ஓரளவு குறைவான சம்பளத்தில் (தமிழ்நாட்டவரை ஒப்பிடுகையில்) கிடைக்கும் வட மாநிலத்தவரை அழைத்து வந்து இங்கே வேலைக்கு வைத்துக்கொள்கின்றனர்.

ஓட்டல் முதல் கட்டுமானதுறை வரை இதுதான் நடக்கிறது. தமிழ் சமையல்காரர், கொத்தனார், ஓட்டுநர்கள் ஒருநாளைக்கு பெறும் ரூ.850-1000 சம்பளத்திற்கு செய்யும் வேலையை விட வட மாநிலத்தவர்கள், 2 மணிநேரம் அதிகமாக வேலை செய்தும் ரூ.500-600 சம்பளத்தை வாங்கி கொள்கிறார்கள். அவர்களுக்கு தங்க இடம், சாப்பாடு கொடுத்துவிட்டால் போதுமானது. வருடத்திற்கு ஒருமுறை ஒருமாதம் லீவு கொடுத்தால் போதும். இதே நிலைதான் பெயிண்டர், ஆசாரி, பிளம்பர், எலக்ட்ரீசியன் வேலைகளுக்கும்.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் பெருமளவு மக்கள் மனநிலையில் ஆபத்தான மாற்றம் ஏற்பட்டுள்ளது. வேலையே செய்யக்கூடாது, சும்மாவே எல்லாம் கிடைக்க வேண்டும், சும்மாவே பணம் கிடைக்க வேண்டும், சும்மாவே சுகபோகமான வாழ்வு கிடைக்க வேண்டும், தினசரி குடிக்க வேண்டும் என்றெல்லாம் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

கற்றோர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் எல்லோரும் இது குறித்து சிந்தித்து இந்த சமூக மனநிலையை பிடித்துள்ள நோயை மாற்ற வழி தேடினால் மட்டுமே தமிழினம் தப்பிப்பிழைக்கும். ஆளக்கூடிய ஆட்சியாளர்களும் இதற்கு உடனடியாக நல்ல தீர்வு காணவேண்டும் என சமூக ஆர்வளர்களின் கருத்தாகவும் இருக்கிறது.

பதிவு: September 25, 2021
பாதை மாறும் இளம் தலைமுறை… கேள்விக்குறியாகும் பெண்களின் பாதுகாப்பு?

சில வருடங்களுக்கு முன்பு நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் பிளாட்பாரத்தில் பொறியியல் மாணவி சுவாதி என்கிற இளம் பெண்ணை ராம்குமார் என்கிற இளைஞன் பட்டப்பகலில் துடிதுடிக்க வெட்டி படுகொலை செய்த நிகழ்வின் ரணம் இன்னும் நம் மனதின் அடியாழத்தில் பதிந்திருக்கும் நிலையில் அதே போன்ற மற்றொரு நிகழ்வு தாம்பரம் ரயில் நிலையம் அருகில் 19வயதான சுவேதா எனும் மைக்ரோ பயாலஜி மாணவியை ராமச்சந்திரன் என்கிற பொறியியல் பட்டதாரி இளைஞர் கழுத்தை அறுத்து படுகொலை செய்திருப்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் பொது இடங்களிலும், கல்வி நிலையங்களிலும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக சர்வ சாதாரணமாக அரங்கேறி கொண்டிருக்கும் நிலையில் பெண்களின் பாதுகாப்பு என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகி நிற்கிறது.

குறிப்பாக ஆண்கள் குறிப்பாக இளைஞர்கள் இப்படி தடம் மாறிச் செல்ல காரணம் தான் பட்ட கஷ்டங்களை, வேதனைகளை பிள்ளைகள் படக்கூடாது என்று அதீத செல்லம் கொடுத்து வளர்ப்பதும், அவர்களை முறையாக கண்காணிக்க தவறியதும் பெற்றோர்களின் தவறாகும்.

ஒருபுறம் என்றால் நல்ல கல்வி கொடுத்து, நல்லெண்ணங்களை இளைய சமுதாயத்தினர் மத்தியில் விதைக்க வேண்டிய அரசுகளோ இளைஞர்கள் திசை மாறிச் செல்ல அவர்களுக்கு போதையூட்டும் சாராயக்கடைகளை நடத்தி அதன் மூலம் இலக்கு வைத்து வருவாய் ஈட்டிட துடிப்பதும், கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதை வஸ்துகளை சர்வ சாதாரணமாக புழங்கினாலும் அவற்றை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் ஒருபுறம்,

குடும்பத்தை சீரழித்து பிற மனையாளின் கணவனை கவர்வது, அடுத்தவர் மனைவியை அபகரிப்பது, நயவஞ்சகமாக குடும்பத்தை பிரிப்பது, நல்லவர்களாக இருக்கும் ஆண்கள், பெண்களை குடிக்க வைத்து கும்மாளம் போட வைப்பது, இளம் சிறார் தொடங்கி பருவ வயது இளம் தலைமுறை வரை காதல் என்கிற பெயரில் திசைமாறி செல்ல வழிகாட்டுவது போன்ற நிகழ்வுகள் சமுதாயத்தில் பரவி வருவதும் இதற்கெல்லாம் ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது. எதுவும் நம் வீட்டில் நடைபெறாதவரை அந்த தவறுகளை எல்லாம் வெறும் செய்திகளாக மட்டுமே பார்ப்பதும், இன்று செய்தியாகும் தவறுகளை நாமும் எளிதாக கடந்து போவதும், நீர்த்துப் போய் காலாவதியான சட்டங்களை வைத்து கொண்டு குற்றவாளிகள் எளிதில் தப்பிப்பதை கண்டும் காணாமல் ஆட்சியாளர்கள் இருப்பதும் மாற வேண்டும்.

"அண்ணே அடிக்காதீங்கண்ணே வலிக்குதுண்ணே" என கதறிய அழுததைக் கூட ரசித்து பெல்டால் அடித்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் அதிகார பலத்தால் தப்பிக்கும் நிகழ்வுகள் இச்சமுதாயத்தை பிடித்துள்ள புற்றுநோயை விட கொடுமையான விஷங்களாகும். ஜனநாயகம், ஜனநாயகம் என பேசிப் பேசி இங்கே பணநாயகமும், அதிகார திமிரும் தான் வளர்ந்துள்ளதே தவிர ஜனநாயகம் காக்கப்பட சட்டங்கள் கடுமையாக்கப்படவில்லை. குற்றவாளிகளுக்கான தண்டனையும் கடுமையாக இல்லை என்பதே இங்கே தவறு செய்பவர்களையும், தவறு செய்ய நினைப்பவர்களையும் மேலும், மேலும் தவறு செய்ய தூண்டுவதாக அமைந்து விடுகிறது.

அரபுநாடுகளைப் போல இந்தியாவிலும் தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை தாமதமின்றி வழங்கப்பட வேண்டும். அதிகார பலமும், ஆள்பலமும் சட்டங்களை வளைக்காத வகையிலும், ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு வளைந்து கொடுக்காத நிலையிலும் உள்ள பலமான சட்டங்கள் இயற்றப்பட்டால் மட்டுமே சுவாதி, ஸ்வேதாக்களும், ஹாசினி போன்ற பிஞ்சுகளும் இனி தமிழகத்தில் காப்பாற்றப்படுவார்கள். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை போன்ற கொடுமைகளும் தவிர்க்கப்படும்.

அதுமட்டுமின்றி இளம் தலைமுறையினர் பெருமளவில் சீரழிந்து போக காரணமாக இருக்கும் வகையிலான வன்முறைக் காட்சிகள், திசைமாறி போகும் போதை வஸ்துகள் பயன்படுத்தும் காட்சிகள் திரைப்படங்களில் இடம்பெறாவண்ணம் தணிக்கைத்துறையின் விதிகள் கடுமையாக்கப்பட வேண்டும். இந்த தலைமுறையும், அடுத்த தலைமுறையும் சீரழிந்து போகாமல் இருக்க வேண்டுமானால் தீய சக்திகளை அழிக்க அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதே நிரந்தர தீர்வாக இருக்க முடியும் என்று சமூக ஆர்வர்களின் கருத்தாக உள்ளது.

 

பதிவு: September 24, 2021
வையாபுரியை களமிறக்குங்கள்... மவுனம் காக்கும் வைகோ... அழுத்தம் கொடுக்கும் சீனியர்கள்

தீவிர அரசியலில் வைகோவின் மகன் வையாபுரி இறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக ம.தி.மு.க.விலும் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகி இருக்கின்றன.

தமிழக அரசியலில் ஏன் இந்திய அரசியலில் வைகோ என்றால் தெரியாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு முக்கிய பிரமுகர் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ. தீவிர திரவிட கொள்கை கொண்ட அவர், அண்ணா, கருணாநிதியை தலைவர்களாக கொண்டு திகழ்ந்தவர். தி.மு.க.வின் தனக்கென்று ஒரு தனி இடத்தை கொண்டு திகழ்ந்த வைகோ, நாடாளுமன்றத்தில் தி.மு.க.வின் ஒட்டுமொத்த குரலாகவே ஒலித்தார். ஆரம்ப கட்டத்தில் இருந்தே தேசிய அரசியலில்தான் வைகோவுக்கு அதிக நாட்டம். இந்தியாவில் உள்ள தேசிய தலைவர்களில் வைகோவை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்றே சொல்லலாம்.

ஒரு கட்டத்தில் கருணாநிதியுடன் கருத்துவேறுபாடு ஏற்படவே, தி.மு.கவில் இருந்து வெளியேறினார் வைகோ. அவருடன் எல்.கணேசன், செஞ்சி ராமசந்திரன், கண்ணப்பன் என தி.மு.க.வின் முன்னணித் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் என பலர் வெளியேறினார்கள். ஏன், இனி தி.மு.க. கரைசேருமா? என்று கேள்வி கேட்கும் அளவுக்கு வைகோவால் பிளவு ஏற்பட்டது. கட்சியை விட்டு வெளியேறிய பின்னர் தி.மு.க.வையும், கருணாநிதி, ஸ்டாலினையும் கடுமயைாக விமர்சனம் செய்தார். பின்னர் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தார். பின்னர் யாரை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ அவர்களுடன் அதாவது, தி.மு.க.வுடனும் கூட்டணி சேர்ந்தார்.

இப்படியே சென்று கொண்டிருந்த ம.தி.மு.க. ஒரு கட்டத்தில் சரிவை சந்தித்தது. வைகோவுக்கும் உடல் அளவில் பழைய மாதிரி தீவிர அரசியல் செய்ய முடியவில்லை. ஆகையால் கடந்த சட்டமன்ற தேர்தலில் இருந்து இனி தி.மு.க.வுடன் கூட்டணி என்பதை உறுதி செய்ததோடு, தி.மு.க. தயவால் தனக்கு ஒரு எம்.பி பதவியை வாங்கி கொண்டு டெல்லியும் சென்றுவிட்டார்.

இப்படியேபோனா கட்சி என்னாகும் என்பதே மதிமுகவில் உள்ள சீனியர்கள் மத்தியில் குமுறலாக உள்ளது. அதற்காக வைகோவின் மகன் வையாபுரியை தீவிர அரசியலில் களம் இறக்கினால்தான் ம.தி.மு.க.வை காப்பாற்ற முடியும் என்று நிலைக்கும் அவர்கள் வந்துவிட்டார்களாம். இது குறித்து வைகோவிடம் கட்சியின் சீனியர்கள் பேசினார்களாம். அதற்கு வைகோ பிடிகொடுத்து பேசவில்லையாம். அதேநேரத்தில் வேண்டாம் என்றும் சொல்லவில்லையாம். வைகோ தயங்குவதற்கு இன்னொரு காரணமும் சொல்கிறார்களாம். அதாவது, வாரிசு அரசியலை கடுமையாக எதிர்த்தவர் வைகோதான். அப்படி பேசிவிட்டு தன் மகனை அரசியலுக்கு இறக்கினால் சரியாக இருக்குமா? என்று யோசிக்கிறாராம்.

அதற்கு கட்சியில் உள்ள சீனியர்கள் சிலர், "எந்த கட்சியில் வாரிசு இல்லை. தேசம் முழுவதும் வாரிசு அரசியல்தான் நடக்கிறது. இதை எல்லாம் ஒரு காரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. விரைவில் வையாபுரிக்கு கட்சியில் பதவி கொடுத்து தீவிர அரசியிலில் இறக்க வேண்டும்" உறுதியாக கூறி வருகிறார்களாம்.

பதிவு: September 22, 2021
உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களை கேட்கும் பா.ஜ.க... அதிர்ச்சியில் ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ்... நடக்கப் போவது என்ன?

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. மக்களவைத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் போல் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக்கு அவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. அந்தந்தப் பகுதிகளில் உள்ள வேட்பாளர்களின் செல்வாக்கைப் பொறுத்துதான் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது. ஆனாலும் அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து பாமக விலகி தனித்து தேர்தலைச் சந்தித்திருப்பது அக்கூட்டணிக்குள் புகைச்சல் இருப்பதையே காட்டுகிறது என்கிறார்கள். பா.ம.க. மட்டுமே விலகியுள்ள மற்றபடி பிற கட்சிகள் கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கும் என அ.தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து பா.ம.க. வெளியேறிய நிலையில் தங்களுக்கு அதிக முக்கியத்துவமும் இடங்களும் வழங்கப்பட வேண்டும் என பாஜக சார்பில் வலியுறுத்தப்படுகிறதாம். அதேபோன்று தேர்தல் நடக்க உள்ள 9 மாவட்டங்களில் சரிக்கு பாதி இடங்களை பா.ஜ.க.வுக்கு வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க தலைமைக்கு அந்த கட்சி கோரிக்கை வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்த சூழலில்தான் தமிழ்நாடு பா.ஜ.க.வின் முன்னாள் தலைவரும், தற்போதைய மத்திய இணை அமைச்சருமான எல்.முருகனும், தற்போதைய தலைவர் அண்ணாமலையும் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசியுள்ளனர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. அப்போது, அதிக இடங்கள் தங்களுக்கு வேண்டும் என்றும், குறிப்பாக சரி பாதி இடங்கள் இடங்கள் வேண்டும் என்ற வகையில் அமைச்சர் எல்.முருகனும், தலைவர் அண்ணாமலையும் கேட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அப்போது எடப்பாடி பழனிச்சாமி, அவர்களிடம் எந்த உத்தரவாதமும் அளிக்காமல், அவர்கள் வைத்த கோரிக்கைகள் குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர், மற்ற நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்து தங்களை அழைத்து பேசுகிறோம் என்று சொல்லி அனுப்பி வைத்துவிட்டாராம். இந்த சந்திப்புக்கு பின்னர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், மற்ற கட்சியின் மூத்த தலைவர்களிடம் பேசினாராம். அப்போது பா.ஜ.க. வைத்த கோரிக்கை குறித்து ஆலோசித்தாராம். அதை கேட்ட நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துவிட்டார்களாம்.

இந்தநிலையில், அ.தி.மு.க.- பா.ஜ.க-வுக்கு இடையே, உள்ளாட்சித் தேர்தலுக்கான இடங்கள் எவ்வாறு பிரித்து கொள்ள போகிறார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதேவேலையில், பா.ஜ.க. கேட்பதுபோல அ.தி.மு.க. அதிக இடங்களை கொடுக்க விரும்பவில்லை என்ற தகவல்களும் வெளியாகி இருக்கின்றன. இவர்களிடையே எவ்வாறு உடன்பாடு ஏற்பட போகிறது என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

இதனிடையே, தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுடன் இடங்கள் பிரித்து கொள்வது குறித்து பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டன. தி.மு.க. ஆளும் கட்சியாக இருப்பதால் அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள கட்சிகளுக்களுக்கான இடங்களை பங்கீட்டு கொள்வதில் எந்தவித சிக்கலும் ஏற்படாது என்று அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.

பதிவு: September 18, 2021
அமைச்சர்கள்…அதிகாரிகளுக்கு செக்… முதல்வரின் நடவடிக்கைக்கு அமோக வரவேற்பு!

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110இன்கீழ் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள், அமைச்சர்களால் அவர்களது துறை சம்பந்தப்பட்ட மானியக் கோரிக்கைகளின்போது வெளியிடப்பட்ட அறிவிப்புகள் மற்றும் அரசு செயல்படுத்தி வரும் நலத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தலைமை செயலாளார் மற்றும் அனைத்து துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

அந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்தார். மேலும் அவர் பேசுகையில், “தேர்தல் வாக்குறுதிகள், சட்டமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளை அனைத்தையும் படிப்படியாக நாம் நிறைவேற்றியாக வேண்டும். ஒவ்வொரு அறிவிப்பினை நிறைவேற்றுவதிலும் பல கட்டங்கள் இருக்கும். அதில் எவ்வித சிக்கலும் இல்லாமல் நிறைவேற்றப்பட வேண்டும். வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், அதில் பிரச்னைகள் ஏதும் ஏற்பட்டுவிடாமல் நிறைவேற்றிட வேண்டும்” என்றார்.

“மேலும் நாம் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துவிட்டோம். அடுத்து நமக்கு இருப்பது 6 மாதங்கள்தான். ஏனென்றால், அடுத்த 6 மாதங்களுக்குப் பிறகு சட்டமன்றத்தில் அடுத்த நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். ஆக, இந்த ஆறு மாதத்திற்குள் நாம் செய்துள்ள அறிவிப்புகளைச் செயல்படுத்திட வேண்டும். எனவே, விவேகமாகவும் வேகமாகவும் நீங்கள் காரியங்களை ஆற்றிடவேண்டும்” என்றும் ஸ்டாலின் அப்போது கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “நான் இந்த அறிவிப்புகள் செயல்படுத்துவது குறித்து அமைச்சர்களைக் கண்காணிப்பேன் என்று சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்தவுடன் சொல்ல ஆரம்பித்துவிட்டேன். இரண்டு நாட்களாக, நான் செல்கிற நிகழ்ச்சிகளில், கட்சி நிகழ்ச்சிகளாக இருந்தாலும், எந்த நிகழ்ச்சிகளாக இருந்தாலும், நானே நேரடியாகக் கண்காணிக்கப் போகிறேன் என்று சொல்லியிருக்கிறேன். எனவே, அமைச்சர்களை மட்டுமல்ல, ஒவ்வொரு துறைச் செயலாளர்களும் இந்த அறிவிப்புகளை குறித்த காலத்திற்குள் முடிக்கக்கூடிய வகையில் என்னுடைய கண்காணிப்பு இருக்கும் என்பதை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்” என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வரின் இந்த பேச்சு, அரசுத்துறை செயலாளர்களுக்கு பீதியை ஏற்படுத்தி இருக்கிறதாம். அதோடு செயலாளர்களுக்கு கீழ் செயல்படும் அதிகாரிகளுக்கு கடும் கெடுபிடி ஏற்பட்டு இருக்கிறதாம். அதாவது நேரத்துக்கு வீட்டுக்கு செல்வது, அடிக்கடி விடுமுறை எடுப்பது போன்றவைகள் எல்லாம் இனி குறைவுதானாம். இந்த பேச்சுதான் தற்போது தலைமைச் செயலகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறதாம்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த நடவடிக்கைளை அனைத்து தரப்பு மக்களும் வரவேற்கிறார்கள். இப்படி முதல்வர் செயல்பட்டால் மட்டுமே அரசு அதிகாரிகள் வேலை செய்வார்கள் என்று அரசியல் பார்வையாளர்களை கருத்தாக இருக்கிறது. மேலும், இதுபோன்ற நடவடிக்கைகள் எல்லா மட்டத்திலும் இருக்க வேண்டும் என்று அவர்களது கருத்தாக இருக்கிறது.

பதிவு: September 17, 2021
கூட்டணி இல்லை… உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டி... பா.ம.கவின் திட்டம் பலிக்குமா?

உள்ளாட்சித் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்தே போட்டியிடும் என்று நேற்று இரவு திடீரென அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார். இதனால் அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்து பா.ம.க. வெளியேறி தனித்துப் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேர்தல் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 9 மாவட்டங்களில் பெரும்பாலானவை வட மாவட்டங்களில் உள்ளன.

வடமாவட்டங்களில் செல்வாக்கு உள்ள பா.ம.க.வின் நிலைப்பாடு என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. அதிமுக-பாஜக கூட்டணியில் பா.ம.க. இருந்ததால் அந்த அணிக்கு அதிக இடங்கள் கிடைக்கலாம் எனவும் கூறப்பட்டது. அதேநேரத்தில் ஆளும் கட்சியாக திமுக இருப்பதால் அதன் கூட்டணியும் முழு பலத்தை காட்டும்.

இந்நிலையில்தான் பா.ம.க. திடீரென, அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாகவும் அதற்கான விருப்ப மனுக்கள் இன்று முதல் பெறப்படும் என்றும் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.

பா.ம.க-வின் இந்த முடிவு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக தேர்தல் கள வரலாற்றில் பா.ம.க. தனித்துப் போட்டியிட தொடங்கி பின்னரும் திமுக, அதிமுக அணிகளுடன் மாறி மாறி கூட்டணி வைத்திருக்கிறது என்பதுதான் வரலாறு. அதாவது ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு கூட்டணி என்கிற வகையில்தான் பா.ம.க. தொடர்ந்து செயல்பட்டு வந்து இருக்கிறது.

குறிப்பாக பார்த்தால் உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ள மாவட்டங்கள் வட மாவட்டங்களாகவே உள்ளன. இந்த மாவட்டங்களில் பா.ம.க.வின் வாக்கு வங்கி என்பது அதிமாகவே உள்ளது. ஆகவே உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட்டால்தான் அதிக இடங்களை பா.ம.க பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. இதை வைத்து வருங்காலங்களில் கட்சியை வலுப்படுத்த முடிவும் என்று பா.ம.க கணக்கு போடுகிறது. பா.ம.க.வின் இந்த கணக்கு வெற்றிபெறுமா என்பது பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

பதிவு: September 15, 2021
தி.மு.க-வை எதிர்க்க தயக்கம் காட்டும் ஓ.பி.எஸ்… பின்னணி என்ன?

அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் கடந்த சில மாதங்களாகவே திமுகவுடன் முக்கியமான நேரங்களில் இணக்கமாக செல்கிறார். சட்டசபையில் முக்கியமான பிரச்னைகள், விவாதங்களின் போது திமுகவிற்கு ஆதரவான கருத்துக்களை ஓ.பன்னீர்செல்வம் ஆங்காங்கே தெரிவித்து வருகிறார். அப்படித்தான் நீட் தேர்வு தொடர்பாகவும் திமுகவின் முடிவுக்கு ஓ. பன்னீர்செல்வம் தற்போது ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் முழுக்கவே ஓ. பன்னீர்செல்வம் கொஞ்சம் திமுகவோடு இணக்கமாகவே சென்றார். திமுக கொண்டு வந்த சில அறிவிப்புகளை சட்டபையிலேயே வெளிப்படையாக பாராட்டினார். அதோடு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சட்டசபையில் 50 ஆண்டுகள் பணியாற்றுவதற்காக நடத்த பாராட்டு தீர்மானத்தில் கூட துரைமுருகன் குறித்து மிகவும் உருக்கமாக பேசி அவையை திரும்பி பார்க்க வைத்தார்.

நதியினில் வெள்ளம்... கரையினில் நெருப்பு... இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு... இதுதான் என் தற்போதைய நிலைமை என்று அவையில் பாடல் எல்லாம் பாடினார். இந்த பாட்டு அதிமுக எம்.எல்.ஏக்கள் மத்தியில் ஒரு வித குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தநிலையில் சட்டசபையிலும் சரி, பொது மேடையிலும் சரி திமுகவிற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி மிக தீவிரமாக கருத்து தெரிவித்து வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மட்டும் இணக்கமாக செயல்படுவது அதிமுகவினர் மத்தியில் பல கேள்விகளை எழுப்பி வருகிறது.

ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி மறைவின் போது முதல்வர் ஸ்டாலின் அவரை நேரில் சென்று சந்தித்தார். பன்னீர்செல்வத்தை அணைத்து அவரிடம் ஆறுதலாக ஸ்டாலின் பேசினார். இவர்கள் இருவருக்கும் இடையில் இது மேலும் இணக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த நிகழ்வு நடந்து சரியாக ஒரு வாரத்தில் பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்ததற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்தார். அதோடு நிறுத்தாமல் ‘‘தந்தை பெரியார் வகுத்துத் தந்த பாதையில் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களை பட்டிதொட்டியெங்கும் எடுத்துச் சென்ற பெருமை பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., கலைஞர் மு. கருணாநிதி, புரட்சித் தலைவி அம்மா ஆகியோரையே சாரும். தந்தை பெரியார் அவர்களை பெருமைப்படுத்தும் வகையில், அவர் பிறந்த தினமான செப்டம்பர் 17 -ம் நாள் "சமூக நீதி" நாளாக கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது. இந்த அறிவிப்பிற்கு காரணமான தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று ஓ.பி.எஸ் குறிப்பிட்டார்.

முதல்வரின் அறிவிப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி பெரிதாக கருத்து எதுவும் தெரிவிக்காத நிலையில் ஓ. பன்னீர்செல்வம் மட்டும் தனியாக அறிக்கை விட்டு திமுகவின் அறிவிப்பை பாராட்டினார். அதிமுகவினர் பலர் அமைதியாக இருந்த போது ஓ.பன்னீர்செல்வம் மட்டுமே தனியாக நீண்ட அறிக்கை வெளியிட்டது அதிமுகவினர் மத்தியில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில்தான் நீட் தேர்வுக்கு பயந்து மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்ட போது கூட ஓ. பன்னீர்செல்வம் அதில் அரசுக்கு எதிராக கண்டனம் எதையும் தெரிவிக்காமல் ஒதுங்கிக் கொண்டார். அதேநேரம் மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வில் தமிழ்நாடு அரசை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார். அதோடு திமுகவிற்கு எதிராகவும், அவர்களின் வாக்குறுதிகளுக்கு எதிராகவும் கடுமையாக விமர்சனங்களை வைத்து நீண்ட அறிக்கையும் வெளியிட்டார்.

அதில், நீட் தேர்வு நடைபெறுமா? நடைபெறாதா? நடைபெறும் எனில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக அறிவுறுத்தி முறையான பயிற்சி அளித்து குழப்பத்தில் உள்ள மாணவர்களை தெளிவுபடுத்த வேண்டும் என அறிக்கை மூலமாகவும், ஊடகங்கள் மூலமாகவும் தொடர்ந்து வலியுறுத்தினேன்’ எனவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

ஆனால் நேற்று ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட ட்வீட்டில் திமுகவிற்கு எதிராக எந்த வார்த்தையும் இல்லை. அரசை விமர்சனம் செய்யாமல், திமுகவின் வாக்குறுதிகளை பற்றி எதுவும் சொல்லாமல், அந்த மாணவரின் மரணம் குறித்து மட்டுமே பேசி இருந்தார். அதில், சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கூழையூரை சேர்ந்த விவசாயி மகன் தனுஷ் மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இரண்டு முறை நீட் தேர்வில் வெற்றி பெறாது, மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுத இருந்த சூழ்நிலையில், அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அறிந்து, தாங்கொண்ணாத் துயரமும் மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். உயிரை மாய்த்துக் கொண்ட அந்த மாணவனுக்கு அஞ்சலி செலுத்துவதோடு, அவரது தாய், தந்தையருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதில் எங்கும் திமுகவிற்கு எதிராக ஒரு வார்த்தையை கூட ஓ பன்னீர்செல்வம் தெரிவிக்கவில்லை. திமுகவிற்கு எதிராக சின்ன கருத்து கூட தெரிவிக்கவில்லை. பாஜக அண்ணாமலை தொடங்கி பலரும் திமுக ஏன் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று கேட்டு இருக்கிறார்கள். ஏன் திமுக உடன்பிறப்புகள் சிலரே கூட உடனடியாக நீட் தேர்வில் இருந்து விலக்கு கொண்டு வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

ஆனால் ஓ.பன்னீர்செல்வம் மட்டும் அப்படி எதுவும் பேசாமல் மாணவர் மரணத்தில் அரசியல் செய்யாமல் அமைதியாக ஒதுக்கிக்கொண்டார். ஆளும் கட்சியோடு இப்படி ஓ.பன்னீர்செல்வம் இணக்கமாக செல்ல என்ன காரணம் என்ற கேள்வியை இது எழுப்பி உள்ளது. திடீரென திமுகவோடு நட்பாக ஓ. பன்னீர்செல்வம் செல்வது ஏன் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. திமுக தலைவர்களும் அவ்வப்போது ஓ.பன்னீர்செல்வமுடன் இணக்கமாக செல்வது பல்வேறு அரசியல் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

அதேநேரத்தில், கோடநாடு விவகாரம், முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் என பல பிரச்னைகள் பூதாகரமாகி உள்ள நிலையில் அந்த விவகாரங்களில் தான் சிக்கி கொள்ளக்கூடாது என்பதற்காகவே திமுகவுடன் ஓ.பன்னீர்செல்வம் இணக்கமாக இருக்கிறார் என்று அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

பதிவு: September 13, 2021
ஜெயலலிதா பாணியில் சசிகலா..!- கைகொடுக்குமா விநாயகர் வழிபாடு?

விநாயகர் சதூர்த்தி தினத்தன்று போயஸ் கார்டனில் உள்ள ‘‘ஜெயந்தி கணபதி’’ ஆலயத்தில் உள்ள விநாயகருக்கு மலர் தூவி வழிப்பாடு நடத்தினார் சசிகலா. அவரின் இந்த வழிப்பாட்டிற்கு பின் பல உருக்கமான செண்டிமெண்ட் காரணங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தீவிர கடவுள் நம்பிக்கை உடையவர். அதிலும் விநாயகர் என்றால் அவரும் ரொம்பவும் பிடிக்குமாம். ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும், வெற்றி வரும் காலத்திலும், சோதனை வரும் காலத்திலும் ஜெயலலிதா முதலில் செல்வது ஏதாவது ஒரு விநாயகர் ஆலையத்துக்குதானாம்.

போயஸ் கார்டன் வீட்டில் இருந்து ஒவ்வொரு முறையும் வெளியில் வரும் போதெல்லாம் அதே சாலையில் உள்ள ‘‘ஜெய் கணபதி’’ கோயிலில் வழிபாடு நடத்திவிட்டுத்தான் செல்வாராம். அதேபோன்று கோட்டூர்புரத்தில் உள்ள ஜெய் கணபதி கோயிலில் வழிபாடு செய்வதையும் கடைபிடித்து வருவாராம்.

ஜெயலலிதாவை பொறுத்தவரை தனக்கு என்ன பிரச்னை இருந்தாலும் விநாயகரை வழிபட்டால் அது சரியாகிவிடும் என்ற நம்பிக்கையோடு செயல்படுவாராம். ஜெயலலிதாவோடு சேர்ந்து சசிகலாவும் இப்படி விநாயகர் வழிபாட்டை கடைபிடித்து வந்தாராம். சசிகலா சிறையில் இருந்து வந்த பின்னர் போயஸ் கார்டன் சென்று அங்கு உள்ள ‘‘ ஜெய் கணபதி’’ விநாயகர் ஆலையத்துக்கு சென்று வழிபாடு செய்தார். ஒவ்வொரு விநாயகர் சதூர்த்தியின்போதும் ஜெயலலிதாவுடன் சேர்ந்து சாமி தரிசனம் செய்வதை சசிகலா வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்தநிலையில் நேற்று நடந்த விநாயகர் சதுர்த்தியையொட்டி, "ஜெய் கணபதி’’ விநாயகர் ஆலையத்துக்கு தனி ஆளாக வந்த சசிகலா சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றார். இதை வைத்து பார்க்கும் போது கடவுள் வழிபாட்டை தாண்டி இதை ஒரு அரசியல் கணக்காகவும் பார்க்கப்படுகிறது. இன்றும் சொல்லபோனால் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றே, சசிகலாவும் விநாயகர் வழிபாட்டை கையில் எடுத்துள்ளார். சசிகலாவின் இந்த அரசியல் திட்டம் அவருக்கு கைகொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. எது எப்படியோ பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்!

பதிவு: September 11, 2021
திருமணத்தில் அலைமோதும் கூட்டம்... கொரோனா அதிகரிக்க வாய்ப்பு… அலட்சியத்தில் அதிகாரிகள்?

கொரோனா வைரஸ் நோய் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கு அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு அளிக்கிறார்களா? என்பதுதான் தற்போதைய பெரிய கேள்வியாக உள்ளது.

கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து திருமண மண்டபங்களில் 50 சதவீதம் அளவுக்கு ஆட்களை அழைத்து திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளலாம் என்று தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்றும் நாளையும் (வியாழன், வெள்ளி) முகூர்த்த நாட்கள் என்பதால் சென்னையில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களிலும் கூட்டம் அலைமோதியது. ஆட்டோக்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் அதிக அளவில் மக்கள் பயணித்ததை காண முடிந்தது. இதன் காரணமாக சென்னையில் திருமண மண்டபங்கள் இருக்கும் சாலைகளில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

கொரோனா அச்சமின்றி திருமண நிகழ்ச்சிகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பலர் ஒரே இடத்தில் திரண்டு நிற்கின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் முககவசம் அணியாமல் இருந்தனர். சென்னையில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வெளியூர்களில் இருந்து பலர் வந்துள்ளனர். இதனால் சென்னையில் உள்ள பெரும்பாலான தங்கும் விடுதிகள் மற்றும் லாட்ஜூகளில் அனைத்து அறைகளும் நிரம்பி உள்ளன.

சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் மாநகராட்சி காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும், அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக அவர்களுக்கு தனித்தனி வாகனங்களும் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களில் சென்று அதிகாரிகள் கொரோனா விழிப்புணர்வில் ஈடுபட்டதுடன் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதித்து வருகிறார்கள்.

ஆனால் இந்த நடைமுறை தற்போது முறையாக பின்பற்றப்படுகின்றனவா? என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது. அதிகாரிகள் முறையாக கண்காணித்து, மாஸ்க் அணியாதவர்களுக்கு உரிய அபராதம் விதித்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். அதேபோன்று திருமண கூடங்களை அதிகாரிகள் முறையாக கண்காணிக்க வேண்டும். அப்படி கண்காணித்தால் இப்படி கூட்டம் கூடாது. திருமண உரிமையாளர்களுக்கு உரிய எச்சரிக்கை செய்ய வேண்டும். மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அதிகரித்து இருக்கிறது.

அதிகாரிகள் சரியாக பணியாற்றினால் மட்டுமே கொரோனா நோயை ஒழிக்க முடியும். அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லை என்றால் அண்டை மாநிலமான கேரளா போன்றே தமிழகத்திலும் கொரோனா நோய் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.

பதிவு: September 09, 2021
அடுத்த அவைத்தலைவர் யார்? – அ.தி.மு.க-வில் கடும் போட்டி!

கடந்த 2007ம் ஆண்டு முதல் அ.தி.மு.க.வின் அவைத்தலைவராக இருந்து வந்த மதுசூதனன் உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில் அ.தி.மு.க.வின் அடுத்த அவைத்தலைவர் யார் என்கிற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அ.தி.மு.க.வில் 1972-ம் ஆண்டு முதல் தற்போது வரை ஆறு பேர் அவைத்தலைவராக பொறுப்பு வகித்துள்ளனர். பாவலர் மா முத்துசாமி, கோவில்பட்டி வள்ளிமுத்து, நாவலர் நெடுஞ்செழியன், சி.பொன்னையன், புலவர் புலமைப்பித்தன் ஆகியோருக்குப் பின் 2007-ம் ஆண்டு முதல் மதுசூதனன் இந்த பொறுப்பில் இருந்து வந்தார்.

அவைத் தலைவர் என்கிற பொறுப்புக்கு அ.தி.மு.க.வில் பெரிய அளவில் தனிப்பட்ட அதிகாரங்கள் இல்லை என்றாலும், அந்தப் பதவி கௌரவமான பதவியாக பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க.வில் எம்ஜிஆர் இருந்த காலத்திலிருந்து அக்கட்சியில் பயணம் செய்தவர்கள் மட்டுமே இதுவரை அவைத்தலைவராக இருந்துள்ளனர். எனவே அடுத்த அவைத்தலைவரும் கட்சியின் மூத்த நிர்வாகியாகவும், எம்ஜிஆர் காலத்தில் இருந்து அ.தி.மு.க.வில் நீடித்து வருபவராகவும் இருப்பார் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் தமிழ் மகன் உசேன், பா.மோகன் ஆகியோர் தற்போது கட்சியின் நிர்வாக ரீதியில் மூத்த உறுப்பினர்களாக உள்ளனர். அவைத்தலைவராக நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பு இருந்தாலும், அந்த பதவிக்கு பல்வேறு நிர்வாகிகள் மத்தியில் போட்டி நிலவுதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் என்று இல்லாமல் இருவருக்கும் சமமான ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற ஒரு நிலையும் கட்சியில் ஏற்பட்டு இருக்கிறதாம்.

அந்தவகையில் பார்த்தால் முன்னாள் சபாநாயகர் தனபால் மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகிய இருவரும் யாருடைய ஆதரவாளராகவும் இல்லை என்றே சொல்லலாம். அவர்கள் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ். இரண்டு பேரிடமும் சமமாக பழக்கூடியவர்கள். இருவர்களில் ஒருவருக்கு அவைத் தலைவர் பதவியை கொடுத்தால் சரியாக இருக்கும் என்று சில அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் கூறி வருகிறார்கள்.

அதிமுகவைப் பொறுத்தவரை பொதுச் செயலாளர் பதவி தான் அதிக அதிகாரங்கள் கொண்ட பதவி. ஆனால் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு பொதுச் செயலாளர் பதவிக்கு பதில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. பொதுச் செயலாளரின் அதிகாரங்கள் பிரிக்கப்பட்டு இந்த இரண்டு பதவிகளுக்கும் வழங்க பொதுக் குழு தீர்மானித்தது, கடந்த காலங்களில் பொதுச் செயலாளர், தற்போது ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் அனுமதியோடு கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தை கூட்டுவதற்கான அதிகாரம் அவைத்தலைவருக்கு உள்ளது. கட்சியில் பெரிதும் மதிக்கப்படும் அவைத்தலைவர் பதவியை அலங்கரிக்கப் போவது யார் என்கிற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.

பதிவு: September 08, 2021
பாஜக பாணியில் தலைவர் பதவியா?; கார்த்தி சிதம்பரம் – ஜோதிமணி இடையே கடும் போட்டி!- யாருக்கு சான்ஸ்?

தமிழகத்தில் பாஜக பாணியில் காங்கிரஸ் கட்சியிலும் இளைஞர் ஒருவருக்கு தலைவர் பதவி வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் தலைவர் பதவியை பிடிக்க இளம் தலைவர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறதாம்.

நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகவே, தமிழக காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றங்கள் நிகழ இருக்கிறதாம். குறிப்பாக தமிழக காங்கிரஸ் தலைவராக இருக்கும் கே.எஸ்.அழகிரியை மாற்றிவிட்டு புதிதாக இளைஞர் ஒருவரை தலைவராக நியமிக்க கட்சி மேலிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறதாம். தமிழ்நாட்டில் இளைஞருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடத்தை யோசிக்க வைத்ததே தமிழக பாஜகவில் நடக்கும் நிகழ்வுகள்தானாம்.

ஆண்டாண்டு காலமாக சீனியர்களே தலைவர்களாக இருந்த நிலையை மாற்றி சாதாரண ஒருவராக இருந்த எல்.முருகன், ஐபிஎஸ் பதவியை உதறிய அண்ணாமலை ஆகியோருக்கு தமிழக பாஜக தலைவர் பதவிகளை கொடுத்ததுதான் காங்கிரஸ் மேலிடத்தை யோசிக்க வைத்து இருக்கிறதாம்.

எது எப்படியோ வரும் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகவே தமிழக காங்கிஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டும், அதற்கு இளைஞர் ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் என்ற சிந்தனையில் காங்கிரஸ் மேலிடம் தீவிரம் காட்டி வருகிறதாம். அதற்காக ஒரு பட்டியலையும் காங்கிரஸ் மேலிடம் தயாரித்து உள்ளதாம். அதில் கார்த்தி சிதம்பரம், மாணிக்கம்தாகூர், ஜோதிமணி ஆகியோரது பெயர்கள் இடம்பெற்று இருக்கிறதாம்.

இதில், தலைவர் பதவியை பிடிக்க தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறதாம். முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருக்கும் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், அப்பாவின் செல்வாக்கை வைத்து தலைவர் பதவியை பிடித்துவிடலாம் என்று காய்நகர்த்தி வருகிறாராம். அவரை போன்றே கரூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஜோதிமணி தலைவர் பதவியை பிடிப்பதற்காக தீவிரம் காட்டி வருகிறாராம்.

இந்த தகவல் வெளிவர தொடங்கியதும், கட்சியில் உள்ள சீனியர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டு இருக்கிறதாம். குறிப்பாக தலைவர் பதவியை எதிர்நோக்கி இருக்கும் டாக்டர் செல்லக்குமார், விஷ்ணுபிரசாத், பீட்டர் அல்போன்ஸ் போன்றோர்களின் ஆதரவாளர்கள் கட்சியின் இந்த முடிவை எதிர்த்து வருகிறார்களாம். இளைஞர்களை தலைவராக கொண்டு வருவது பாஜகவுக்கு வேண்டும் என்றால் சரியாக இருக்கும். தமிழக காங்கிரஸ் கட்சிக்கு அது மேலும் புதிய சிக்கல்களை உருவாக்கும் என்றும், இது கட்சியின் எதிர்காலத்துக்கு சரியாக இருக்காது என்றும் அவர்களுடைய கருத்தாக இருக்கிறதாம்.

அதேநேரத்தில், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் காங்கிரஸ் நல்ல வெற்றியை பெறமுடிந்தது. இது கட்சியில் உள்ள மூத்த தலைவர்களுக்காக கிடைத்த வெற்றியாக பார்க்க முடியாது என்று காங்கிரஸ் கட்சி கருதுகிறதாம். ஆகையால் இளம் தலைவரை கட்சிக்கு தலைவராக்கினால், கட்சியின் செயல்பாடுகள் இன்றை காலகட்டத்துக்கு ஏற்றார்போல் இருக்கும் என்றும், கட்சியில் உள்ள கோஷ்டிகளை ஒழிக்க முடியும் என்றும் காங்கிரஸ் மேலிடம் நினைக்கிறதாம். மேலும் தலைவரை மாற்றுவது ஒருபுறம் இருக்க, தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசலை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் காங்கிஸ் கட்சியின் தலைமை உறுதியாக இருக்கிறதாம்.

பதிவு: September 03, 2021
உள்ளாட்சித் தேர்தலும்… அரசியல் கட்சிகளின் கணக்குகளும்… யாருக்கு சாதகம்?

தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆளும் கட்சியான தி.மு.க, எதிர்க்கட்சியான அ.தி.மு.க, நாம் தமிழர் கட்சி, அ.ம.மு.க, மக்கள் நீதி மய்யம் உள்பட அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

இதையொட்டி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் தேர்தலை நடத்தும் அலுவலர்கள், உதவி அலுவலர்களை நியமிப்பதற்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தலுக்கான கால அவகாசம் குறைவாக இருப்பதால், வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் வியூகம் ஆகிய பணிகளில் அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வகையில் கட்சித் தலைமைகள் தங்கள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றன.

ஆளும் கட்சியான திமுகவை பொறுத்தவரை , `கூட்டணிக் கட்சிகளையும் அனுசரித்து அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் இடங்களை ஒதுக்க வேண்டும். ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய திட்டங்களை விளக்கிக் கூறி மக்களிடம் வாக்கு கேட்க வேண்டும். மேலும், இந்தத் தேர்தலில் நூறு சதவிகித வெற்றியைப் பெற வேண்டும்' என திட்டமிட்டுள்ளதாம். அதற்கு ஏற்றார்போலவே ஆளும் கட்சியான திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளும் ஒத்துழைப்பு தரும் என்றே அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அ.தி.மு.க தரப்பிலும், உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் வேகம் எடுத்துள்ளன. இதையொட்டி அக்கட்சியின் மாவட்டசெயலாளர்களுடன் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் ஆலோசனை மேற்கொண்டனர். குறிப்பாக, தேர்தல் நடக்கவுள்ள ஒன்பது மாவட்டங்களில் 7 இடங்கள் வடக்கு மாவட்டங்களில் வருவதால் பாட்டாளி மக்கள் கட்சியின் தயவு உள்பட பல்வேறு விஷயங்களை அ.தி.மு.க ஆலோசித்து வருகிறது.

அதேவேலையில், வடமாவட்டங்களில் நடக்கும் தேர்தல்களில் பாமக கனிசமான இடங்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றாக வேண்டும் என்று கருதுகிறதாம். அதேபோன்று பாஜகவும் தங்கள் கட்சியை வளர்க்க உள்ளாட்சித் தேர்தல் சரியான நேரம் என்று கருத்துகிறதாம். இதற்தெல்லாம் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுக என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கவனத்தை ஈர்த்த மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, சட்டப்பேரவைத் தேர்தல் பெரும் சோதனையை அளித்தது. கோவை தெற்குத் தொகுதியில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வானதி சீனிவாசனிடம் கமல் தோற்றுப் போனார். இதனையடுத்து, கட்சியை சீரமைக்கும் நடவடிக்கைகளில் கமல்ஹாசன் இறங்கினார். இதன் தொடர்ச்சியாக, கமீலா நாசர், மகேந்திரன், சந்தோஷ் பாபு, சி.கே.குமரவேல் உள்பட முக்கிய நிர்வாகிகள் பலரும் கட்சியை விட்டு விலகினர். இதனால் பெரிதாக கமல் அதிர்ச்சியடையவில்லை. தொடர்ந்து, ` மக்கள் நீதி மய்யம் 2.0' என்ற பெயரில் நிர்வாக அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தினார். இதற்காக, மாநிலம் முழுவதும் இருந்து வந்திருந்த நிர்வாகிகளிடம் மனம் திறந்து பேசச் சொன்னார். அவர்களில், `யாருக்கு என்ன திறமையுள்ளது?' என்பதை அறிந்து அவர்களுக்கான பொறுப்புகளையும் வழங்கினார்.

"உள்ளாட்சித் தேர்தலை மிக முக்கியமான ஒன்றாக கமல் பார்க்கிறார். சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சி வலுவாக இருப்பதைக் காட்டிக் கொள்வதற்கு இதைவிட வேறு தருணம் அமையப் போவதில்லை என்ற மனநிலையில் இருக்கிறார். அதையொட்டி, தன்னை சந்திக்க வருகிறவர்களிடம் கமல் மனம் திறந்து பேசி வருகிறார்" என்கிறார்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியினர்.

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தலில் கனிசமான இடங்களை பிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம். அதற்கான ஆயத்த பணிகளில் இறங்கிவிட்டாராம். உள்ளாட்சித் தேர்தலை மையமாக வைத்து அரசியல் கட்சிகள் போடும் கணக்குகள் யாருக்கு சாதகமாக இருக்கும் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

பதிவு: September 02, 2021
தமிழக பட்ஜெட் சிறப்பு அம்சங்கள் A முதல் Z வரை

தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

* தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கியை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் உருவாக்கப்படும்.
* தேனி, நாகையில் சிப்காட் அமைக்கப்படும்.
* கோவையில் ரூ.225 கோடியில் பாதுகாப்பு கருவி உற்பத்தில் பூங்கா அமைக்கப்படும்.
* புதிய கனிமவள கொள்கை மூலம் அரசின் வருவாய் அதிகரிக்கப்படும்.
* விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின்படி பொங்கலுக்கு 1.81 கோடி சேலை, வேட்டிகள் வழங்கப்படும்.
* இலவச பள்ளி சீருடைகளுக்காக ரூ.409 கோடி ஒதுக்கீடு.
* 100 கோயில்களில் ரூ.100 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடைபெறும்.
* அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் புதுப்பிக்கப்படும்.


* மகளிர், மாற்றுத் திறனாளிகள் இலவச பயணத்திற்காக ரூ.750 கோடி டீசல் மானியம்.
* தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்ற கூற்று தவறானது; 2,500 மெகாவாட் மின்சாரம் மின் சந்தையிலிருந்து வாங்கப்படுகிறது.
* தனித்துவமான மாநில கல்விக்கொள்கையை வகுக்க, கல்வியாளர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்படும்.
* பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.32,599 கோடி நிதி ஒதுக்கீடு.
* உயர்கல்வித் துறைக்கு ரூ.5,369 கோடி நிதி ஒதுக்கீடு.
* மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்க அறிக்கை தயார் செய்யப்படும்.
* தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிதிநிலைமை சீரமைக்கப்படும்.
* மின்சாரத்துறைக்கு ரூ.19,872 கோடி ஒதுக்கீடு.
* 413 கல்வி நிறுவனங்களுக்கு தலா 40 கையடக்க கணினிகள்; இதற்காக ரூ.13.22 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* இந்த ஆண்டு 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.
* வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் கல்லூரி பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும்.
* முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.509 கோடி வந்துள்ளது; அதில் ரூ.241 கோடி செலவிடப்பட்டுள்ளது.
* தமிழ்நாட்டுக்கு நாள் ஒன்றுக்கு 8 லட்சம் தடுப்பூசிகள் தேவையுள்ள நிலையில் 2.4 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.
* செம்மொழி தமிழ் விருது ரூ.10 லட்சம் பரிசுத்தொகையுடன் ஆண்டு தோறும் ஜூன் 3ம் தேதி (கருணாநிதி பிறந்த நாள்) வழங்கப்படும்.
* உலக அளவில் போற்றப்படும் தமிழ் படைப்புகள் வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப் படும்.
* தொழில் நுட்ப புத்தகங்கள் தமிழில் வெளியிடப்படும். சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கு ரூ.4,807 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* நில விவகாரங்கள், கொள்முதல் பிரச்னைகள் தொடர்பான அனைத்து முக்கிய வழக்குகளும் முனைப்புடன் கண்காணிக்கப்படும்.
* 1921ம் ஆண்டிலிருந்து நடைபெற்ற பேரவை நிகழ்வுகள் குறித்த அனைத்து ஆவணங்களும் கணினி மயமாக்கப்படும்.
* அரசின் உள்தணிக்கை அமைப்பு முறையில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும்.
* 2.05 லட்சம் ஹெக்டேர் அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது; பொது நிலங்கள் குறித்த சிறப்பான மேலாண்மைக்கு மேம்படுத்தப்பட்ட அரசு நில மேலாண்மை அமைப்பு உருவாக்கப்படும்.

* 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும். தினசரி ஊதியம் 273 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக உயர்வு.
* சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.3 கோடி மீண்டும் வழங்கப்படும்.
* குக்கிராமங்களை மேம்படுத்த ரூ.1,200 கோடி செலவில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம்
* சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.20,000 கோடி கடன் வழங்கப்படும்.
* 27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்.
* அனைத்து நகரங்களிலும் திடக்கழிவு மேலாண்மை ஏற்படுத்தப்படும்.
* திருச்சியில் புதிய பேருந்து நிலையம், வணிக வளாகம் ஏற்படுத்தப்படும்.
* மண் சாலைகள் அனைத்தும் தரம் உயர்த்தப்படும்.
* நகரங்களில் 30 மீட்டர் இடைவெளியிட்டு தெருவிளக்குகள் அமைக்கப்படும்.
* நீர்நிலைகளை மீட்டெடுக்க ரூ.300 கோடி ஒதுக்கீடு.
* நமக்கு நாமே திட்டத்தில் சிறப்பான பங்களிப்பவர்களுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும்.

* சிங்கார சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்படும்
* ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.
* சிவகளை, கொடுமணல், கீழடி பகுதிகள் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும்.
* அகழாய்வு பணிகளுக்காக எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* கீழடியில் திறந்தவெளி தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
* நிலம் கையகப்படுத்தும் முறைகள் எளிமையாக்கப்படும்.
* தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.80 கோடி ஒதுக்கீடு.
* தொல்லியல் துறைக்கு ரூ.29 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
* காசிமேடு மீன்பிடி துறைமுகம் ரூ.150 கோடியில் மேம்படுத்தப்படும்
* மீனவர் நலனுக்காக ரூ.1,149 கோடி ஒதுக்கீடு.
* பாசன திட்டங்களுக்காக ரூ.6,607 கோடி நிதி ஒதுக்கீடு.
* மீன்வளத் துறைக்கு ரூ.303 கோடி ஒதுக்கீடு

* காடுகளை மேம்படுத்த தமிழ்நாடு பசுமை இயக்கத்தை அரசு உருவாக்கும்.
* ரூ.500 கோடி செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் அமைக்கப்படும்.
* கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இணைய வழியில் கண்காணிக்கப்படும்.
* ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் நிறுவப்படும்.
* ரூ.2,000 கோடியில் ஜல் ஜீவன் இயக்கம் செயல்படுத்தப்படும்.
* குக்கிராமங்களில் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு குறைந்தபட்சம் 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க வழிவகை செய்யப்படும்.
* கிராமப்புறங்களில் அமைந்துள்ள 1.27 கோடி குடும்பங்களுக்கும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்.
* அடுத்த 5 ஆண்டுகளில் 8 லட்சம் குடும்பங்களுக்கு வீடு வழங்குவதை உறுதி செய்வோம்.
* 1,622 கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை சேவை வழங்கப்படும்; ரூ.400 கோடியில் தூய்மை பாரத இயக்கம் செயல்படுத்தப்படும்.
* கிருஷ்ணா நதிநீரை சென்னை நீர் தேக்கங்களுக்கு குழாய் மூலம் கொண்டு வர சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்.
* சீர்மிகு நகர திட்டத்திற்கு ரூ.2,350 கோடி ஒதுக்கீடு; அம்ருத் திட்டத்திற்கு ரூ.1,450 கோடி ஒதுக்கீடு
* சென்னை பொது இடங்களில் சுவரொட்டிகள் இல்லாத நகரமாக மாற்றப்படும்.

* கொசஸ்தலை ஆற்றில் வெள்ளநீர் வடிகால் அமைக்க ரூ.80 கோடி ஒதுக்கீடு
* நகர்ப்புற ஏழைகளுக்காக நகர்ப்புற ஊதிய வேலைவாய்ப்பு திட்டம் தொடங்கப்படும்.
* பொது சொத்து பராமரிப்பு பணிக்காக வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு
* குடிசை மாற்று வாரியத்திற்கு ரூ.3,954 கோடி நிதி ஒதுக்கீடு; குடிசைகள் இல்லாத தமிழ்நாட்டை அமைப்பதில் அரசு உறுதி.
* CMDA போன்று மதுரை, கோவை, திருப்பூர், ஓசூரிலும் நிறுவப்படும்; தமிழ்நாடு வீட்டு வசதித்துறை, உலக வங்கியின் நிதியுதவியுடன் மேம்படுத்தப்படும்.
* நகர்ப்புற ஏழைகளுக்காக நகர்ப்புற ஊதிய வேலைவாய்ப்பு திட்டம் தொடங்கப்படும்
* நெடுஞ்சாலை துறைக்கு ரூ.17,899 கோடி ஒதுக்கீடு; புறவழிச்சாலைகள் இல்லாத 59 நகராட்சிகளுக்கு புறவழிச்சாலைகள் ஏற்படுத்தப்படும்.
* 623 கோடியில் 1,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும்.
* மகளிர், மாற்றுத் திறனாளிகள் இலவச பயணத்திற்காக ரூ.750 கோடி டீசல் மானியம்

பதிவு: January 01, 1970

முக்கிய செய்திகள்

'தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு கெடவில்லை; மாறாக சிலர் அதை கெடுக்க நினைத்து செயல்படுகின்றனர்' - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைக் கெடுக்க சிலர் நினைத்து செயல்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

அரியலூர் மாவட்டத்தில் 27,070 பயனாளிகளுக்கு ரூ.52 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,

"ஒரு முதலமைச்சர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் கடந்த 10 ஆண்டாக இருந்த அதிமுக ஆட்சி. கையில் அதிகாரம் இருந்தும் எதுவும் செய்யாமல் கைகட்டி வேடிக்கை பார்த்ததுதான் கடந்த கால அதிமுக ஆட்சி. கடந்த 10 ஆண்டுகள் கால ஆட்சியின் சீரழிவை மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து புகார்கள் கொடுக்கின்றனர். விமர்சனங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல; அவற்றை வரவேற்கிறோம், ஆனால் விஷமத்தனம் கூடாது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போகவில்லை. மாறாக சட்டம் ஒழுங்கைக் கெடுக்கலாமா என்று சிலர் நினைக்கின்றனர். சிலரின் வயது எரிகிறது. ஒரு ஆட்சி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக இந்த ஆட்சி நடைபெறுகிறது" இவ்வாறு பேசினார். 

பதிவு: December 06, 2022
'கோழிக்கு அரிசி போட்டு பிடிப்பதுபோல் நம்மை தமிழை வைத்து பிடிக்கப்பார்க்கின்றனர்' - காசி தமிழ் சங்கமம் நிகழ்வை சாடிய சீமான்!

கோழிகளுக்கு அரிசியைப் போட்டு பிடிப்பது போல் தமிழர்களை மொழியை வைத்து பாஜக பிடிக்கத் திட்டமிடுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் பேசியதாவது: 

"காசி தமிழ்ச்சங்கமம் எனக்காகத்தான் நடத்தப்பட்டது. நான் வேல் தூக்கினால் அவர்களும் வேலைத் தூக்குவார்கள்; நான் முருகா என்றால் அவர்களும் முருகா என்பார்கள்; நான் ஈழம் பற்றிப் பேசினால் அவர்களும் ஈழம் என்பார்கள். ஆனால், நான் கச்சத்தீவு மீட்பு பற்றி பேசினால் மட்டும் எதுவும் பேசமாட்டார்கள். காவிரி நதிநீர் குறித்துப் பேசினால் எதுவும் பேசாமாட்டார்கள்.

நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் உள்ளதா? நாடாளுமன்றத்தில் தமிழில் பேசமுடியுமா? கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய முடியுமா? இதை விடுத்து காசி தமிழ்ச் சங்கமம் நடத்துவதன் மூலம் எப்படி நீங்கள் தமிழை வளர்ப்பீர்கள்?

கோழியை 'பக் பக் பக்' என்று அரிசி போட்டு பிடிப்பதைப் போல் தமிழை வைத்து தமிழ்நாட்டு மக்களை பிடிக்கப் பார்க்கிறார்கள். கோழி 'நம் பாஷை பேசுகிறாரே' என்று நினைத்து அவரிடம் மாட்டிக்கொண்டு வறுபடுவதைப் போல நாம் மாட்டிவிடக் கூடாது. எச்சரிக்கையாக இருக்கவேண்டும். 

 

பதிவு: November 28, 2022
ஆன்லைன் ரம்மியால் 15 மாதங்களில் நிகழ்ந்துள்ள 33-வது தற்கொலை! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

ஆன்லைன் ரம்மியால் ஒரிசாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், ஆன்லைன் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என் ரவி விரைந்து ஒப்புத அளிக்கவேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

ட்விட்டரில் இதுபற்றி பதிவிட்டுள்ள அவர், 

"தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வந்து தென்காசி மாவட்டம் கரிவலம்வந்த நல்லூரில் கூலி வேலை செய்து வந்த ஒதிஷா பெண் பந்தனா மஜ்கி, ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.70 ஆயிரத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்வு மிகுந்த வேதனை அளிக்கிறது.

ஆன்லைன் சூதாட்டத் தடை செல்லாது என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பிறகு ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் நிகழும் 33-ஆவது தற்கொலை இதுவாகும். கடந்த இரு மாதங்களில் இது நான்காவது தற்கொலை ஆகும்.
 
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான ஒவ்வொரு நகர்வும் பெரும் போராட்டத்திற்கும் பிறகும், சில உயிரிழப்புகளுக்கு பிறகும் தான் சாத்தியமாகிறது. 15 மாதங்களில் விலைமதிப்பற்ற 33 உயிர்களை பறி கொடுத்தும் கூட, ஆன்லைன் சூதாட்டம் இன்னும் தடை செய்யப்படவில்லை
 
ஒரு புறம் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் காலாவதியாகி விட்டது; மறுபுறம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்திற்கு ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் தமிழ்நாடு இனி ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறப்போகிறது
 
ஆன்லைன் சூதாட்டங்களால் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் ஏற்படவிருக்கும் பேராபத்தை தமிழக ஆளுனர் உணரவேண்டும். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 
பதிவு: November 28, 2022
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா ஒப்புதல் ஆளுநரால் காலம் தாழ்த்தப்பட்ட நிலையில் அது காலாவதியாகியுள்ளது! அடுத்த நடவடிக்கை என்ன?

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கான ஒப்புதல் தாமதமாக்கப்பட்ட நிலையில், அது காலாவதியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் காரணமாக தற்கொலைகள் பெருகிவந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதியை மயக்கி உயிரைக் கொல்லும் இந்த விளையாட்டைத் தமிழ்நாடு அரசு தடை செய்யவேண்டும் என்று எதிர்ப்புகள் எழவே, அரசு ஆன்லை ரம்மியைத் தடைசெய்வதற்கான சட்ட மசோதாவை அவசரச்சட்டமாக சட்டபேரவையில் நிறைவேற்றியது. 

இந்நிலையில், ஒப்புதலுக்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா அனுப்பப்பட்ட நிலையில், அதுகுறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டது. தமிழக அரசும் அதற்கு பதில் கடிதத்தை அடுத்த நாளே அனுப்பியது. இதனிடையே, அக்.01 ல் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதா நேற்றுடன் காலாவதியானது.

இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. ஆங்காங்கே ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலைகள் அதிகரித்துவரும் நிலையில், ஆன்லைன் ரம்மி மீது இன்னும் தடைவிதிக்கப்படாதது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 
பதிவு: November 28, 2022
'எங்களுக்கு நீதி கிடைக்கவில்லையெனில் அரசின் அத்தனை உதவிகளையும் திருப்பித்தருவோம்' - உயிரிழந்த வீராங்கனை பிரியாவின் வீட்டார் வேதனை!

தங்களுக்கு நீதி கிடைக்கவில்லையெனில் அரசு தங்களுக்கு வழங்கிய நிவாரண உதவிகளைத் திருப்பித்தந்துவிடுவதாக உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் வீட்டார் வேதனை பொங்கத் தெரிவித்துள்ளனர்.

சென்னை வியாசார்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா கால் எலும்பு சவ்வு பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாக அவர் உயிரிழந்தார். இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து பிரியாவிற்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் இருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை சட்டரீதியாக எடுக்கப்படும் என்று மருத்துவத்துரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதனையடுத்து, உயிரிழந்த பிரியாவின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி, வீடு மற்றும் பிரியாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை ஆகியவை வழங்கப்பட்டன.

இந்நிலையில், பிரியா மரணத்திற்குக் காரணமான மருத்துவர்கள் மீது இன்னும் நடவடிக்கை அரசு தரப்பிலிருந்து எடுக்கப்படவில்லை என்று பிரியாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள், அரசு தரப்பிலிருந்து மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும், அதுபற்றி உறுதியளித்ததால் தான் அரசின் உதவிகளைப் பெற்றுக்கொண்டோம் என்றும், அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அரசின் உதவிகளைத் திருப்பிச்செலுத்துவிடுவோம் என்றும், தங்களுக்கு நீதியே தேவை என்றும் அவர்கள் வேதனை பொங்கத் தெரிவித்துள்ளனர். 

பதிவு: November 26, 2022
பாஜக பெண் நிர்வாகிகளை ஆபாசமாகப் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்! மன்னிப்பு கேட்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

பாஜக பெண் நிர்வாகிகளை தரக்குறைவாகப் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்கை மன்னிப்புக் கேட்கக்கூறி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் அக்கட்சி உறுப்பினர் சைதை சாதிக், பாஜக நிர்வாகிகளான குஷ்பூ, காயத்ரி, நமீதா, கௌதமி ஆகியோரை தரக்குறைவாக சாடி, ஆபாசமான முறையில் பேசினார். இது அக்கட்சி உறுப்பினர்களிடையே கோபத்தை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு கண்டனங்கள் வலுத்தன. மேலும் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், வழக்குக்கு எதிராக சைதை சாதிக் முன்ஜாமீன் கோரியிருந்தார். இதைத்தொடர்ந்து நீதிபதிகள் முன்பாக இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அவர், சம்பந்தப்பட்ட பெண்களிடம் மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என்று வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஸ் சந்திரா உத்தரவிட்டுள்ளார். 

பதிவு: November 26, 2022

மேலும் செய்திகள்

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்