`ஏழைகள் என்றால் கிள்ளுக்கீரையா?'‍- குறவர் இன மக்களை இறக்கிவிட்டதால் கமல்ஹாசன் ஆவேசம்

 

"குறவர் இனத்தைச்சேர்ந்த ஒரு ஏழைக்குடும்பம் பேருந்திலிருந்து வலுக்கட்டாயமாக இறக்கி விடப்பட்டு, உடமைகளும் சாலையில் வீசப்பட்டுள்ளன. ஏழைகள் என்றால் கிள்ளுக்கீரையா? கேட்க நாதி இல்லை எனும் எண்ணமா?" என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆவேசமாக கூறியுள்ளார்.

நாகர்கோவில் - திருநெல்வேலி பஸ்சில் குறவர் குடும்பம் ஒன்று நேற்று பயணம் செய்தது. கண்டக்டர் திடீரென விசில் அடித்து நிறுத்தி, பார்வை குறைபாடுடைய கணவர், மனைவி, குழந்தை ஆகிய குறவர் குடும்பத்தினரை கீழே இறக்கி விட்டதுடன், அவரது உடமையையும் தூக்கி எறிந்துள்ளார். உடனே ஆட்டோ டிரைவர் ஒருவர் அவர்களுக்கு உதவி இருக்கிறார்.

இதனை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரல் ஆன நிலையில் இது தொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரிகளும், போலீசாரும் இதுபற்றி விசாரணை நடத்தியதோடு, சம்பந்தப்பட்ட குறவர் குடும்பத்தினரை தேடிவருகின்றனர். மேலும் நரிக்குறவர்களை நடுவழியில் இறக்கிவிட்ட அரசு பேருந்து ஓட்டுநர் நெல்சன் மற்றும் நடத்துநர் ஜெயபாலன் ஆகியோரை பணி இடைநீக்கம் செய்து போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ணாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அரசுப் பேருந்திலிருந்து மீன் விற்கும் மூதாட்டி வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்ட சம்பவத்தால் தமிழகமே கொதித்துக்கிடக்கிறது. நேற்று குறவர் இனத்தைச்சேர்ந்த ஒரு ஏழைக்குடும்பம் பேருந்திலிருந்து வலுக்கட்டாயமாக இறக்கி விடப்பட்டு, உடமைகளும் சாலையில் வீசப்பட்டுள்ளன.

ஏழைகள் என்றால் கிள்ளுக்கீரையா? கேட்க நாதி இல்லை எனும் எண்ணமா? மக்களிடம் மரியாதை காட்டாத ஊழியர்கள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். இதுபோன்ற அவமதிப்புகள் இனியும் நிகழாமல் இருப்பதை போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உறுதி செய்யவேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார்.

பதிவு: December 10, 2021
அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


குமரி கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் போன்ற தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.


வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து நீடிப்பதால் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது. இதனிடையே தமிழகத்தில் டிசம்பர் 3-ந்தேதி வரையில் மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது என்றும், இது நாளை மறுதினம் (2ம் தேதி) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேலும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தென்கிழக்கு, மத்திய வங்ககடல், அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசக் கூடும். எனவே 30-ந்தேதி (இன்று) முதல் மீனவர்கள் இந்த கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

பதிவு: November 30, 2021
குமரியில் கனமழையால் தண்டவாளங்கள் பாதிப்பு!- இன்று 17 ரயில்களை ரத்து செய்தது தெற்கு ரயில்வே

கன்னியாகுமரியில் கனமழை காரணமாக ரயில் பாதைகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று 17 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவ மழை, சென்னை மட்டுமின்றி கன்னியாகுமரியை புரட்டிப் போட்டுவிட்டது. தண்டவாளங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதனை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், 17 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, நாகர்கோவில்- திருவனந்தபுரம் சிறப்பு ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. கொல்லம் - திருவனந்தபுரம், திருவனந்தபுரம்- கொல்லம், நெல்லை - ஜாம்கர் விரைவு ரயில், நெல்லை-திருவனந்தபுரம், புனலூர் - மதுரை ரயில், புனலூர் - நெல்லை சிறப்பு ரயில்கள் இயங்காது என ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. குமரி - பெங்களூரு கே.எஸ்.ஆர். விரைவு ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் - கோட்டயம் சிறப்பு ரயில், நாகர்கோவில் - கொல்லம் இடையே செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எழும்பூர் - குருவாயூர் விரைவு ரயில், நெல்லை - குருவாயூர் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. கொல்லம் - எழும்பூர் விரைவு ரயில் கொல்லம், நாகர்கோவில் இடையே இயங்காது என கூறப்பட்டுள்ளது. நாகர்கோவில்- மங்களூர் விரைவு, சிறப்பு ரயில், நாகர்கோவில் - திருவனந்தபுரம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. மங்களூர் - நாகர்கோவில் சிறப்பு ரயில் திருவனந்தபுரம் - நாகர்கோவில் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. திருச்சி-திருவனந்தபுரம் சிறப்பு ரயில், நெல்லை - திருவனந்தபுரம் இடையே செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: November 22, 2021
`உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழகத்தில் அதிக கனமழை பொழியும்!'- வானிலை ஆய்வு மையம்

வங்க கடலின் மத்தியப் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. தமிழகத்தில் கடற்கரையோர மாவட்டங்களில் அதிக கனமழை பொழியும்" என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், இதர தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை (அக்.28) ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அக்டோபர் 29, 30 தேதிகளில் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யகூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். இன்று தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பதிவு: October 27, 2021
கணவரின் சகோதரி வீட்டில் கொள்ளை... இன்ஜினீயருடன் உல்லாச வாழ்க்கை... கள்ளக்காதலனுடன் சிக்கிய குமரி பெண்

கணவர் வெளிநாட்டில் வேலை செய்யும் நிலையில், தம்பி வீட்டில் திருடி இந்த பணத்தில் இன்ஜினீயருடன் ஊட்டிக்கு சென்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்த கன்னியாகுமரி பெண் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார். கள்ளக்காதல் ஜோடியை கைது செய்துள்ள காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், சேரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பேபிசுதா (44). நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் பேபிசுதா தனது இரு மகள்களுடன் சேரமங்கலத்தில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார்.

கடந்த ஜனவரி மாதம் 26ம் தேதி பெத்தேல்புரம் பகுதியில் வசிக்கும் தனது தம்பி சுதர் என்பவரின் மனைவி ஷர்மிளாமோள் பேபிசுதாவை விருந்துக்கு அழைக்க, வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். அங்குள்ள தேவாலய திருவிழாவில் கலந்து கொண்டு விருந்து முடித்து ஜனவரி 28-ம் தேதி பேபிசுதா சேரமங்கலத்தில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிய போது வீட்டின் பின்பக்க கதவுகள் மற்றும் அறை கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டில் உள்ள அறையில் இருந்த பீரோவை சென்று பார்த்த போது அதில் இருந்த 50 சவரன் தங்க நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.

இதுகுறித்து மண்டைக்காடு காவல் நிலையத்தில் பேபிசுதா புகார் அளித்தார்.  இதையடுத்து, கொள்ளையர்களை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் ஜாண் போஸ்கோ தலைமையில் தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார். இதன்பின்னர் தனிப்படை போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். கடந்த 7 மாதங்களாக தனிப்படை போலீசாருக்கு கொள்ளை குறித்து எந்த தடயமும் கிடைக்காத நிலையில் கொள்ளை நடந்த அன்று அந்த பகுதியில் இயங்கிய செல்போன் எண்களை ஆய்வு செய்த போது அந்த பகுதியில் சந்தேகப்படும் படியாக பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரின் செல்போன் உபயோகத்தில் இருந்ததும், அந்த வாலிபர் செல்போனில் இருந்து பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரிடம் அடிக்கடி பேசி கொண்டிருந்ததையும் தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, அந்த வாலிபரையும் அவருடன் இருந்த இளம்பெண்ணையும்  பெத்தேல்புரத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.  அவர்களிடம் நடத்திய விசாரணையில், பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்த 27 வயதான பபின் என்று தெரியவந்தது. ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியரான பபின் ஆஸ்திரேலியாவில் வேலை பார்த்து வந்தார். கொரோனா நோய் தொற்றால் வேலையிழந்து கடந்த ஒன்றரை வருடத்திற்கு சொந்த ஊருக்கு வந்தது தெரியவந்தது.

பக்கத்து வீட்டை சேர்ந்த சுதர் என்பவரின் மனைவி ஷர்மிளா மோள் என்பவருடன்  பபினுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.  பின்னர் அவருடன் நெருங்கி பழகி கள்ளத்தொடர்பை ஏற்படுத்தி அடிக்கடி இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.  ஒரு கட்டத்தில் உல்லாச வாழ்க்கைக்கு பணம் இல்லாத நிலையில் ஷர்மிளாமோள் சேரமங்கலத்தில் வசிக்கும் தனது கணவரின் சகோதரி பேபி சுதா வீட்டில் கொள்ளையடிக்கும் திட்டத்தை பபினிடம் கூறியுள்ளார்.

அதன்படி,  பேபி சுதாவை கடந்த ஜனவரி மாதம் 26-ம் விருந்துக்காக வீட்டிற்கு அழைத்து ஷர்மிளாமோள் தங்க வைத்த நிலையில் 27-ம் தேதி இரவு திட்டமிட்டப்படி பபின் சேரமங்கலம் சென்று பேபி சுதா வீட்டில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்.   பின்னர் ஷர்மிளா தனது கணவரிடம் வேலைக்கு நேர்முக தேர்வுக்காக சென்னை செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இருவரும் நகைகளை விற்று ஊட்டியில் சொகுசு வீடு வாடகைக்கு எடுத்து உல்லாசமாக பல நாட்கள் இருந்துள்ளனர்.

பின்னர்,  சொந்த ஊர் திரும்பிய அவர்கள்,  யாருக்கும் சந்தேகம் வராத நிலையில் அடிக்கடி அதேப்போல் ஊட்டிக்கு சென்று உல்லாசமாக இருப்பதும் தற்போது நகைகளை விற்ற பணத்தில்  சொந்தமாக சொகுசு வீடு ஒன்றை கட்டி கிரக பிரவேசம் செய்ததோடு இருவரும் வெளியூர்களுக்கு செல்லாமல் அந்த வீட்டிலேயே அடிக்கடி தனிமையாக சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்த தங்க நகைகளை மீட்ட போலீசார், இருவரையும் இரணியல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பதிவு: September 30, 2021

முக்கிய செய்திகள்

'தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு கெடவில்லை; மாறாக சிலர் அதை கெடுக்க நினைத்து செயல்படுகின்றனர்' - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைக் கெடுக்க சிலர் நினைத்து செயல்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

அரியலூர் மாவட்டத்தில் 27,070 பயனாளிகளுக்கு ரூ.52 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,

"ஒரு முதலமைச்சர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் கடந்த 10 ஆண்டாக இருந்த அதிமுக ஆட்சி. கையில் அதிகாரம் இருந்தும் எதுவும் செய்யாமல் கைகட்டி வேடிக்கை பார்த்ததுதான் கடந்த கால அதிமுக ஆட்சி. கடந்த 10 ஆண்டுகள் கால ஆட்சியின் சீரழிவை மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து புகார்கள் கொடுக்கின்றனர். விமர்சனங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல; அவற்றை வரவேற்கிறோம், ஆனால் விஷமத்தனம் கூடாது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போகவில்லை. மாறாக சட்டம் ஒழுங்கைக் கெடுக்கலாமா என்று சிலர் நினைக்கின்றனர். சிலரின் வயது எரிகிறது. ஒரு ஆட்சி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக இந்த ஆட்சி நடைபெறுகிறது" இவ்வாறு பேசினார். 

பதிவு: December 06, 2022
'கோழிக்கு அரிசி போட்டு பிடிப்பதுபோல் நம்மை தமிழை வைத்து பிடிக்கப்பார்க்கின்றனர்' - காசி தமிழ் சங்கமம் நிகழ்வை சாடிய சீமான்!

கோழிகளுக்கு அரிசியைப் போட்டு பிடிப்பது போல் தமிழர்களை மொழியை வைத்து பாஜக பிடிக்கத் திட்டமிடுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் பேசியதாவது: 

"காசி தமிழ்ச்சங்கமம் எனக்காகத்தான் நடத்தப்பட்டது. நான் வேல் தூக்கினால் அவர்களும் வேலைத் தூக்குவார்கள்; நான் முருகா என்றால் அவர்களும் முருகா என்பார்கள்; நான் ஈழம் பற்றிப் பேசினால் அவர்களும் ஈழம் என்பார்கள். ஆனால், நான் கச்சத்தீவு மீட்பு பற்றி பேசினால் மட்டும் எதுவும் பேசமாட்டார்கள். காவிரி நதிநீர் குறித்துப் பேசினால் எதுவும் பேசாமாட்டார்கள்.

நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் உள்ளதா? நாடாளுமன்றத்தில் தமிழில் பேசமுடியுமா? கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய முடியுமா? இதை விடுத்து காசி தமிழ்ச் சங்கமம் நடத்துவதன் மூலம் எப்படி நீங்கள் தமிழை வளர்ப்பீர்கள்?

கோழியை 'பக் பக் பக்' என்று அரிசி போட்டு பிடிப்பதைப் போல் தமிழை வைத்து தமிழ்நாட்டு மக்களை பிடிக்கப் பார்க்கிறார்கள். கோழி 'நம் பாஷை பேசுகிறாரே' என்று நினைத்து அவரிடம் மாட்டிக்கொண்டு வறுபடுவதைப் போல நாம் மாட்டிவிடக் கூடாது. எச்சரிக்கையாக இருக்கவேண்டும். 

 

பதிவு: November 28, 2022
ஆன்லைன் ரம்மியால் 15 மாதங்களில் நிகழ்ந்துள்ள 33-வது தற்கொலை! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

ஆன்லைன் ரம்மியால் ஒரிசாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், ஆன்லைன் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என் ரவி விரைந்து ஒப்புத அளிக்கவேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

ட்விட்டரில் இதுபற்றி பதிவிட்டுள்ள அவர், 

"தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வந்து தென்காசி மாவட்டம் கரிவலம்வந்த நல்லூரில் கூலி வேலை செய்து வந்த ஒதிஷா பெண் பந்தனா மஜ்கி, ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.70 ஆயிரத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்வு மிகுந்த வேதனை அளிக்கிறது.

ஆன்லைன் சூதாட்டத் தடை செல்லாது என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பிறகு ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் நிகழும் 33-ஆவது தற்கொலை இதுவாகும். கடந்த இரு மாதங்களில் இது நான்காவது தற்கொலை ஆகும்.
 
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான ஒவ்வொரு நகர்வும் பெரும் போராட்டத்திற்கும் பிறகும், சில உயிரிழப்புகளுக்கு பிறகும் தான் சாத்தியமாகிறது. 15 மாதங்களில் விலைமதிப்பற்ற 33 உயிர்களை பறி கொடுத்தும் கூட, ஆன்லைன் சூதாட்டம் இன்னும் தடை செய்யப்படவில்லை
 
ஒரு புறம் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் காலாவதியாகி விட்டது; மறுபுறம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்திற்கு ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் தமிழ்நாடு இனி ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறப்போகிறது
 
ஆன்லைன் சூதாட்டங்களால் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் ஏற்படவிருக்கும் பேராபத்தை தமிழக ஆளுனர் உணரவேண்டும். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 
பதிவு: November 28, 2022
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா ஒப்புதல் ஆளுநரால் காலம் தாழ்த்தப்பட்ட நிலையில் அது காலாவதியாகியுள்ளது! அடுத்த நடவடிக்கை என்ன?

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கான ஒப்புதல் தாமதமாக்கப்பட்ட நிலையில், அது காலாவதியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் காரணமாக தற்கொலைகள் பெருகிவந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதியை மயக்கி உயிரைக் கொல்லும் இந்த விளையாட்டைத் தமிழ்நாடு அரசு தடை செய்யவேண்டும் என்று எதிர்ப்புகள் எழவே, அரசு ஆன்லை ரம்மியைத் தடைசெய்வதற்கான சட்ட மசோதாவை அவசரச்சட்டமாக சட்டபேரவையில் நிறைவேற்றியது. 

இந்நிலையில், ஒப்புதலுக்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா அனுப்பப்பட்ட நிலையில், அதுகுறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டது. தமிழக அரசும் அதற்கு பதில் கடிதத்தை அடுத்த நாளே அனுப்பியது. இதனிடையே, அக்.01 ல் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதா நேற்றுடன் காலாவதியானது.

இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. ஆங்காங்கே ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலைகள் அதிகரித்துவரும் நிலையில், ஆன்லைன் ரம்மி மீது இன்னும் தடைவிதிக்கப்படாதது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 
பதிவு: November 28, 2022
'எங்களுக்கு நீதி கிடைக்கவில்லையெனில் அரசின் அத்தனை உதவிகளையும் திருப்பித்தருவோம்' - உயிரிழந்த வீராங்கனை பிரியாவின் வீட்டார் வேதனை!

தங்களுக்கு நீதி கிடைக்கவில்லையெனில் அரசு தங்களுக்கு வழங்கிய நிவாரண உதவிகளைத் திருப்பித்தந்துவிடுவதாக உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் வீட்டார் வேதனை பொங்கத் தெரிவித்துள்ளனர்.

சென்னை வியாசார்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா கால் எலும்பு சவ்வு பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாக அவர் உயிரிழந்தார். இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து பிரியாவிற்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் இருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை சட்டரீதியாக எடுக்கப்படும் என்று மருத்துவத்துரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதனையடுத்து, உயிரிழந்த பிரியாவின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி, வீடு மற்றும் பிரியாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை ஆகியவை வழங்கப்பட்டன.

இந்நிலையில், பிரியா மரணத்திற்குக் காரணமான மருத்துவர்கள் மீது இன்னும் நடவடிக்கை அரசு தரப்பிலிருந்து எடுக்கப்படவில்லை என்று பிரியாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள், அரசு தரப்பிலிருந்து மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும், அதுபற்றி உறுதியளித்ததால் தான் அரசின் உதவிகளைப் பெற்றுக்கொண்டோம் என்றும், அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அரசின் உதவிகளைத் திருப்பிச்செலுத்துவிடுவோம் என்றும், தங்களுக்கு நீதியே தேவை என்றும் அவர்கள் வேதனை பொங்கத் தெரிவித்துள்ளனர். 

பதிவு: November 26, 2022
பாஜக பெண் நிர்வாகிகளை ஆபாசமாகப் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்! மன்னிப்பு கேட்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

பாஜக பெண் நிர்வாகிகளை தரக்குறைவாகப் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்கை மன்னிப்புக் கேட்கக்கூறி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் அக்கட்சி உறுப்பினர் சைதை சாதிக், பாஜக நிர்வாகிகளான குஷ்பூ, காயத்ரி, நமீதா, கௌதமி ஆகியோரை தரக்குறைவாக சாடி, ஆபாசமான முறையில் பேசினார். இது அக்கட்சி உறுப்பினர்களிடையே கோபத்தை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு கண்டனங்கள் வலுத்தன. மேலும் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், வழக்குக்கு எதிராக சைதை சாதிக் முன்ஜாமீன் கோரியிருந்தார். இதைத்தொடர்ந்து நீதிபதிகள் முன்பாக இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அவர், சம்பந்தப்பட்ட பெண்களிடம் மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என்று வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஸ் சந்திரா உத்தரவிட்டுள்ளார். 

பதிவு: November 26, 2022

மேலும் செய்திகள்

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்