'தீபாவளி வந்தால் குடும்பத்திற்காக நிறைய செலவு செய்வார்; ஆனால் எனக்கு வெறும் இனிப்பு மட்டுமே தருவார்' - சென்னை இரட்டைக்கொலை குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்!

பட்டயக் கணக்காளர் ஸ்ரீகாந்த், அனுராதா தம்பதியினர், தங்கள் வீட்டில் பணிபுரிந்துவந்த ஓட்டுநராலேயே கொலை செய்யப்பட்ட நிகழ்வில், அதற்கான காரணம் குறித்து அவர் கொடுத்துள்ள வாக்குமூலம் அதிரவைப்பதாக உள்ளது.

சென்னை மயிலாப்பூரில் வசித்துவரும் பட்டயக் கணக்காளர் ஸ்ரீகாந்த், அவரது மனைவி அனுராதா காணாமல் போனதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர்கள் இருவரும், தங்கள் வீட்டில் பெறாத பிள்ளைபோல் இருந்துவந்த கார் ஓட்டுநர் லால் கிருஷ்ணா மற்றும் அவரது கூட்டாளி ரவி உதவியுடன் கொலை செய்யப்பட்ட நிகழ்வு கடும் அதிர்வலைகளைக் கிளப்பியது. 

வெளிநாட்டில் வசிக்கும் தங்கள் மகளைக் காணச் சென்றுவந்த தம்பதியர் இருவரையும், பணத்திற்கு ஆசைப்பட்டு உருட்டுக் கட்டையால் தலையில் அடித்து கொலை செய்து, அவர்களது பண்ணை வீட்டில் திட்டமிட்டபடி ஏற்கனவே தோண்டிவைத்திருந்த குழியில் உடலைப் புதைத்துள்ளனர் கிருஷ்ணாவும், அவரது கூட்டாளி ரவியும்.

நில விற்பனை தொடர்பாக ஸ்ரீகாந்துக்கு ரூ.40 கோடி வரவிருப்பது தெரிந்து இத்திட்டத்தைத் தீட்டியுள்ள கிருஷ்ணா, கொலைக்குப்பின் வீட்டில் இருந்த 1000 சவரன் நகையை மட்டும் எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து நண்பருடன் நேபாளத்திற்கு தப்பியுள்ளார். இதனிடையே தான் சிசிடிவி காட்சிகள் உதவியுடன் தப்பிக்கவிருந்த கிருஷ்ணா மற்றும் ரவி ஆகியோர் காவலர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டனர். மேலும் அவர்கள் திருடிச் சென்ற நகைகளும் காவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில், கொலைக்கான காரணம் குறித்து கிருஷ்ணா காவலர்களிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், "ஸ்ரீகாந்திடம் நான் 7 வருடங்களாக வேலைபார்த்து வருகிறேன். என் மீது அவர் அளவுகடந்து நம்பிக்கை வைத்திருந்தார். கார் ட்ரைவராக இருந்தாலும் நான் வீட்டு வேலைகளையும் சேர்த்தே செய்வேன். எனக்கு விவாகரத்து ஆகிவிட்டது. என் மகன் டார்ஜிலிங்கில் படிக்கிறான். நான் ஸ்ரீகாந்த் வீட்டிலேயே தங்கி இருக்கிறேன். ஆனால் நான் வேலை பார்த்த அளவுக்கு ஸ்ரீகாந்த் எனக்கு சம்பளம் கொடுக்கவில்லை. மகன் படிப்புக்கு உதவும்படி ஸ்ரீகாந்திடம் உதவி கேட்டேன். அவர் முடியாது எனக் கூறிவிட்டார். அவரிடம் நிறைய பணம் இருந்தும் அவர் உதவவில்லை.

தீபாவளி என்றால் நகைகள் வாங்குவது, துணிகள் வாங்குவது என மிகவும் ஆடம்பரமாக குடும்பத்துடன் கொண்டாடுவார். ஆனால், அவர் வீட்டிலேயே இருக்கும் எனக்கு ஒரு கிலோ இனிப்பு பொட்டலம் மட்டுமே கொடுப்பார். அப்போதுதான் ஈசிஆரில் ஒரு நிலம் விற்கப்பட்டது எனக்கு தெரியவந்தது. அந்த பணம் ரூ.40 கோடி அவரது வீட்டில் இருக்குமென நினைத்தே திட்டமிட்டோம். ஆனால் பணம் இல்லை. அதற்கு பதிலாக நகைகள் நிறைய இருந்தன. உண்மை வெளி உலகுக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதால் இருவரையும் கொன்று பண்ணை வீட்டில் ஏற்கெனவே தோண்டி வைக்கப்பட்ட குழியில் புதைத்தோம்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பதிவு: May 09, 2022
சென்னையில் பறக்கும் படையினரால் ரூ.1.39 லட்சம் பறிமுதல் - ககன்தீப் சிங் பேடி தகவல்..

சென்னையில் நேற்று வரை உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.39 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககதீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

அனைத்து அரசியல் கட்சிகளும், அரசு மற்றும் தனியார் கட்டிடங்களில் உள்ள சுவர் விளம்பரங்கள், பேனர்களை அகற்ற வேண்டும். ஏற்கெனவே சென்னை மாநகராட்சியில் சுவரொட்டிகள் அனுமதிக்கப்படுவது இல்லை. சுவரொட்டிகள் ஒட்டியிருந்தால், அவற்றை அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது, மாநகராட்சி சார்பிலும் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று வரை அரசுக்குச் சொந்தமான இடங்களில் இருந்து 3,688, தனியாருக்குச் சொந்தமான இடங்களில் இருந்து 2,528 சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. இன்னும் முழுமையாக அகற்றப்படவில்லை. அதிகாரிகளுக்கு முழுமையாக அகற்ற அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் வேட்பாளர்கள், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது. இதுதொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை கூட்டம் நடத்துவது என்றால், காலை 8 மணி முதல் இரவு 8 மணிக்குள் தான் நடத்த வேண்டும்.

தமிழக அரசு கரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, வரும் ஜன.31-ம் தேதி வரை சைக்கிள் பேரணி, ஊர்வலம் நடத்த அனுமதி இல்லை. அதேபோல் அரசியல் கட்சிகளின் ஊர்வலங்களுக்கும் அனுமதியில்லை. அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் அதிகபட்சமாக நூறு பேர் அனுமதிக்கப்பட வேண்டும். சென்னையில் நேற்று பறக்கும் படையினரால், ரூ.1.39 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வரும் திங்கள்கிழமை 27,812 அதிகாரிகளுக்கு 24 மையங்களில் தேர்தல் குறித்துப் பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பதிவு: January 29, 2022
கே.பி. பார்க் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான வழக்கு- உயர் நீதிமன்றம் அதிரடி...

சென்னை - புளியந்தோப்பு கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பை பி.எஸ் டி. நிறுவனம் தரமற்ற முறையில் கட்டியது தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்கும் என்றும், சமரச மையம் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை - புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் 2016-ஆம் ஆண்டில் 112 கோடி ரூபாய் செலவில் 1,920 வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டன. இவை தரமற்றவையாக இருப்பதாக குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்ததால், ஐஐடி குழு ஆய்வு செய்து அறிக்கை அளித்தது. அதில், தரமற்ற வகையில் குடியிருப்பைக் கட்டிய பி.எஸ்.டி. கட்டுமான நிறுவனத்தை தடை பட்டியலில் சேர்க்கவும், அந்த நிறுவனத்திற்கு இனி அரசு ஒப்பந்தங்கள் வழங்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் அடிப்படையில், பி.எஸ்.டி. நிறுவனத்துக்கு எதிராக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியது. அதில், ஏன் தடை பட்டியலில் சேர்க்கக் கூடாது என விளக்கம் அளிக்க அந்த நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது. இந்த நோட்டீஸை எதிர்த்து பி.எஸ்.டி. நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றம் வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, பி.எஸ்.டி.நிறுவனத்தின் தரப்பில், சம்பந்தப்பட்ட கட்டடத்தில் 93 சதவீத சரிசெய்யும் பணிகள் முடிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. நிறுவன தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி, நிறுவனத்தை தடைப் பட்டியலில் சேர்த்து பணிகள் மேற்கொள்ள தடை விதித்தால், அது சீரமைப்புப் பணிகளை ஸ்தம்பிக்கச் செய்து விடும் எனக் கூறி, அந்த நிறுவனத்திற்கு எதிரான நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தாக்கல் செய்த மனுவில் ஏற்கெனவே அந்த நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில், பிரச்சினைகளை Aribitration center என்று அழைக்கப்படும சமரச மையத்தில் மூலம் தீர்த்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி, இந்த வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்கும், சமரச மையம் விசாரிக்கத் தேவையில்லை என்று கூறி, அந்தக் கோரிக்கையை நிராகரித்தார். இந்த வழக்கு மீதான விசாரணையை பிப்ரவரி 2-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

பதிவு: January 28, 2022
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்- வேட்புமனு தாக்கல் தொடங்கியது...

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. பல்வேறு பகுதிகளிலும் வேட்பாளர்கள் உற்சாகமாக மனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.

வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை முதல் தங்களது வேட்புமனுவை தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்யலாம் என்றும், வரும் ஜனவரி 29-ம் தேதி சனிக்கிழமை பணி நாள் என்பதால் அன்றைய தினமும் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 4-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 19 -ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் நிலையில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளின் கருத்துக்களை ஏற்று வாக்குப்பதிவு நேரத்தினை காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை நிர்ணயம் செய்து ஆணை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பதிவு: January 28, 2022
நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...

நீர்நிலைகளை ஆக்கிரமிக்கவில்லை என விண்ணப்பதாரரிடம் உத்தரவாதம் பெற்ற பிறகே, குறிப்பிட்ட நிலத்துக்கு கட்டிட ஒப்புதலோ, அனுமதியோ வழங்கப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பல்வேறு நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்குகள், பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கி அமர்வு விசாரித்தது.

உயர் நீதிமன்ற உத்தரவின்படி, தமிழக தலைமைச் செயலாளர் தாக்கல் செய்த அறிக்கையில், நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப்பட்டால், அந்த ஆக்கிரமிப்புகள் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் அகற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அனைத்து வழக்குகளிலும் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஆக்கிரமிப்புகளை தவிர்க்க பதிவுத்துறையினர், நீர்நிலை நிலங்களை பதிவு செய்யக் கூடாது.

நீர்நிலைகளை ஆக்கிரமிக்கவில்லை என விண்ணப்பதாரரிடம் உத்தரவாதம் (Declaration) பெற்ற பிறகே, குறிப்பிட்ட நிலத்துக்கு சொத்துவரி வசூலிக்க வேண்டும்.

அதேபோல, ஆக்கிரமிப்பு இல்லை என உத்தரவாதம் பெறாமல் மின் இணைப்போ, குடிநீர் இணைப்போ வழங்க கூடாது. அனுமதி கோரும் கட்டிடம் நீர்நிலைகளில் இல்லை என உறுதி செய்ய வேண்டும்.

மேலும், நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்த நிலங்களுக்கு கட்டிட ஒப்புதலோ, அனுமதியோ வழங்கியிருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கையுடன், குற்ற நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.

பதிவு: January 27, 2022
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத ரிச்ரவ் வங்கி அதிகாரிகள்- ராமதாஸ், தினகரன் கண்டனம்...

குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தாத ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் செயல் கண்டிக்கத்தக்கது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் தினகரன் கூறியுள்ளனர்.

இது குறித்து ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னையில் இந்திய ரிசர்வ் வங்கியில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நின்று மரியாதை செலுத்தத் தவறியுள்ளனர். அதுமட்டுமின்றி அவ்வாறு செய்யத் தேவையில்லை என்றும் கூறியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.

தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து மரியாதை செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திட்டமிட்டே இதை செய்ய மறுத்திருப்பது தமிழ்த்தாயை அவமதிக்கும் செயல்.

மத்திய அரசு அதிகாரிகளாக இருந்தாலும் தமிழகத்தில் மாநில விதிகளை மதிக்க வேண்டும். தமிழ்த்தாயை அவமதித்தவர்களை மன்னிக்கக்கூடாது. இதுகுறித்து புகார் வந்தால் தான் நடவடிக்கை எடுப்போம் என அரசும், காவல்துறையும் காத்திருக்காமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

இதேபோன்று அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது எழுந்து நிற்காததோடு, அதனை நியாயப்படுத்தியும் பேசியிருக்கிற ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய அதிகாரிகளே இப்படி மலிவாக நடந்துகொள்வதை ஏற்க முடியாது. இத்தகைய விதி மீறலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், எதிர்காலத்தில் இவ்வாறு நடைபெறாமல் தடுப்பதும் அவசியம்” என்று பதிவிட்டுள்ளார்.

பதிவு: January 27, 2022
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது...

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது.

தமிழகத்தில் 6,999 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்கியது. அரசு மருத்துவக்கல்லூரிகளில் 4,349 சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் 2,650 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

அரசு, சுயநிதி கல்லூரிகளில் 1,930 பி.டி.எஸ். இடங்களுக்கும் இன்று கலந்தாய்வு தொடங்கியது. சென்னையில் ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் கலந்தாய்வு நடைபெறுகிறது.

முதல் நாளில் சிறப்புப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்கள் பங்கேற்க உள்ளனர். 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்லி மாணவர்களுக்கு நாளை, நாளை மறுநால் கலந்தாய்வு நடைபெறுகிறது.

கொரோனா சூழலை கருத்தில் கொண்டு பொதுப்பிரிவினருக்கு 30-ம் தேதி முதல் ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

பதிவு: January 27, 2022
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்...

தமிழக கடலோர மாவட்டங்கள் ,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று மற்றும் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,'நாளை மறுநாள் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அவற்றை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். 

வருகிற 27ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், அரியலூர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். 28ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், அரியலூர் ,திருச்சி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29, குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். மீனவர்களுக்கான எந்தவித எச்சரிக்கையும் சென்னை வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்படவில்லை,' இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: January 24, 2022
குடியரசு தின விழா கொண்டாட்டம்- சென்னை மெரினா கடற்கரை சாலையில் முப்படை வீரர்கள், காவல்துறையினர் இறுதிக்கட்ட ஒத்திகை...

குடியரசு தின விழா கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரை சாலையில் முப்படை வீரர்கள், காவல்துறையினர் இறுதிகட்ட ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரை சாலையில் இறுதிக்கட்ட அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. 73வது குடியரசு தினவிழா வரும் 26-ம் தேதி விமர்சியாக நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் சென்னை மெரினா - காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே தமிழக ஆளுநர் தேசிய கோடியை ஏற்றவுள்ளார்.

இதையடுத்து முப்படை, மாநில காவல்துறை, கடலோர காவல்துறையின் அணிவகுப்பு உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதற்காக ஏற்கனவே கடந்த 20 மற்றும் 22ம் தேதிகளில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்ற நிலையில், இன்று முழு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் முழு அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

விழாவிற்கு ஆளுநரும், முதலமைச்சரும் வருவது போலவும், அவர்களுக்கு மரியாதை செய்வது போலவும் ஒத்திகை நடைபெற்றது. இதனை தொடர்ந்து முப்படையினர், துணை ராணுவம், கடலோர காவல்படை, தமிழக காவல்துறை, தீயணைப்புப்படை மற்றும் தேசிய மாணவர் படையினர் அணிவகுப்பு பயிற்சி மேற்கொண்டனர். இசை வாத்தியங்கள் முழங்க அலங்கார ஊர்திகளும் அணிவகுத்து சென்றன.

அப்போது வானத்தில் இருந்து ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் தூவப்பட்டது. குடியரசுதின ஒத்திகை பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு, மாநகர காவல்துறை ஆணையாளர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

பதிவு: January 24, 2022
கொளத்தூரில் குடிநீர், கழிவுநீர் திட்ட பணிகள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்...

கொளத்தூர் தொகுதியில் அசோக் அவென்யூ, ஜெகநாதன் சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

சென்னை கொளத்தூர் தொகுதியில் குடிநீர் மற்றும் கழிவுநீர் திட்டப் பணிகளை, அத்தொகுதி எம்எல்ஏவும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார்.

கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட கவுதமபுரத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இக்குடியிருப்புகளுக்கு சென்னை குடிநீர் வாரியத்தின் வியாசர்பாடி நீர்நிலை பகிர்மான நிலையத்திலிருந்து ஜவஹர் சாலை வரை 2.8 கிமீ தூரத்துக்கு ரூ.99 லட்சத்தில் பிரதான குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட உள்ளன.

இத்திட்டத்தின் தொடக்க விழா அக்குடியிருப்பு வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து, ஜிகேஎம் காலனி, ஜம்புலிங்கம் பிரதான சாலையில் ரூ.40 லட்சத்து 30 ஆயிரம் செலவில் கழிவுநீர் அகற்றும் நிலையம் அமைக்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். பின்னர் ரங்கதாஸ் காலனி மற்றும் நேதாஜி காலனி பிரதான சாலையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், அசோக் அவென்யூ, ரங்கதாஸ் காலனி ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்கள் பணிகள் மற்றும் தார் சாலை அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டார். தொடர்ந்து, அஞ்சுகம் நகர் 12-வது தெருவில் தார் சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அனைத்து பணிகளையும், விரைவாகவும், தரமாகவும், குறித்த நேரத்திலும் முடித்திட அலுவலர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

கொளத்தூர் தொகுதிக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். ஒருசில இடங்களில் காரிலிருந்து இறங்கி, பொதுக்களிடம் கலந்துரையாடி நலம் விசாரித்தார். பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கலாநிதி வீராசாமி எம்பி, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் சி.விஜயராஜ் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

குடியிருப்புகளுக்கு சென்னை குடிநீர் வாரியத்தின் வியாசர்பாடி நீர்நிலை பகிர்மான நிலையத்திலிருந்து ஜவஹர் சாலை வரை 2.8 கிமீ தூரத்துக்கு ரூ.99 லட்சத்தில் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட உள்ளன.

பதிவு: January 22, 2022
கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு...

கரோனா சூழலைக் கருத்தில் கொண்டு, பொறியியல்,தொழிற்நுட்பக் கல்லூரிகள் மற்றும் கலைக் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் வழியாக வரும் பிப்.1 முதல் பிப்.20ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தற்போது கரோனா தொற்று ஒமைக்ரான் என்ற பெயரில் அதிகரித்து வருகின்ற காரணத்தால், நாங்கள் முதலில் அறிவித்திருந்த அறிவிப்புகளில் சில மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதனைத் தொடர்ந்து முதல்வரின் உத்தரவின் பேரில், கல்வித்துறைச் செயலர், கல்வித்துறை இயக்குநர்கள், துணைவேந்தர்கள், மாணவர்கள் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள், கல்லூரி ஆசிரியர்கள் கலந்து பேசினோம். அதன் அடிப்படையில், முதலில் தேர்வுகள் ஆஃப் லைன் முறையில் நடைபெறும் என்று அறிவித்திருந்தோம்.

ஆனால், தற்போதைய சூழலில், அதற்கு சாத்தியக்கூறுகள் குறைவாக இருக்கின்ற காரணத்தாலும், இந்த முறையில் தேர்வு நடத்தினால் நாட்கள் தள்ளிப்போகும் என்ற காரணத்தாலும், செமஸ்டர் தேர்வுகளை மட்டும் பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கி ஆன்லைனில் நடத்துவது என்று முடிவு செய்துள்ளோம்.

அனைத்து அரசு பொறியல் கல்லூரிகள், தொழிற்நுட்பக் மற்றும் கலைக் கல்லூரிகளில் ஒன்று முதல் ஐந்தாவது செமஸ்டர் வரையிலான தேர்வுகளை ஆன்லைனில் தேர்வு நடத்துவது என்றும், அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியாக நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வுகளை பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 20ஆம் தேதிக்குள் முடித்துவிட்டது, அப்போதைய சூழலைப் பொறுத்து, ஆன்லைன் வழியாகவோ அல்லது கல்லூரிகளை நேரடியாக நடத்துவது என்பது குறித்து தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி முடிவு எடுக்கப்படும். ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இறுதி செமஸ்டர் தேர்வு, நேரடியாகத்தான் நடத்தப்படும். ஆன்லைன் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுத்து சரியான முறையில் நடத்த நடவடிக்கை எடுக்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு மாணவர்களும் ஒத்துழைக்க வேண்டும். ஆன்லைன் தேர்வுகளை மாணவர்கள் ஒன்றிரண்டு நாள்கள் காலதாமதமானாலும் ஏற்றுக்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

பதிவு: January 21, 2022
காவல்துறையால் உருவாக்கப்பட்டுள்ள “விடுப்பு செயலி”- முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்...

சென்னை பெருநகர காவல்துறையால் உருவாக்கப்பட்டுள்ள “விடுப்பு செயலி”யை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இது தொடர்பாகத் தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தமிழக முதல்வர மு.க. ஸ்டாலின் இன்று (21.01.2022) தலைமைச் செயலகத்தில், சென்னை பெருநகர காவல்துறையால் உருவாக்கப்பட்டுள்ள “விடுப்பு செயலி”யை (CLAPP) வெளியிட்டார்.

சுமார் 5800 காவல் ஆளிநர்களைக் கொண்ட மிகப்பெரிய எண்ணிக்கையிலான சென்னை பெருநகர காவல் ஆயுதப்படையில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள் முதல், சிறப்பு உதவி ஆய்வாளர் பதவி நிலையில் உள்ளவர்கள் வரை தங்களின் பணிச்சுமைக்கு இடையே தங்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு விடுப்பு பெற வேண்டி வழிவழியாக உதவி ஆய்வாளர் , ஆய்வாளர், உதவி ஆணையாளர்களை நேரடியாகச் சந்தித்து மனு சமர்ப்பித்து விடுப்பாணை பெற்று, பின்னர் ஆயுதப்படை அலுவலகத்தில் தினசரி நாட்குறிப்பில் முறையாகப் பதிந்து செல்லவேண்டும். இது கடினமான பணியாக இருப்பதால் காவல் ஆளிநர்களின் நலன் கருதி இந்த CLAPP செயலி முறை கொண்டுவரப்பட்டுள்ளது.

காவல் ஆளிநர்கள் தங்களிடம் உள்ள கைப்பேசியில் தமிழ்நாடு காவல் CLAPP என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்து தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே நேரடியாக தற்செயல் விடுப்பு, ஈட்டிய விடுப்பு, மருத்துவ விடுப்பு, வாராந்திர அனுமதி விடுப்பு ஆகியவற்றை வழங்க வேண்டி ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்கலாம். இது வழிவழியாக அவர்களுடைய மேல் அதிகாரிகளுக்குச் சென்றடையும். விடுப்பு ஆணை பெற்றுக்கொண்ட காவல் ஆளிநர்கள் நேரடியாக அலுவலகத்திற்குச் சென்று கடவுச்சீட்டு பெற்று விடுப்பில் செல்லலாம்.

ஈட்டிய விடுப்பு மற்றும் மருத்துவ விடுப்புகளைப் பொறுத்தவரை காவல் ஆணையாளர் அலுவலக விடுப்புப் பிரிவு மற்றும் நிர்வாக அலுவலர் சரிபார்ப்பிற்குப் பின், பணிப் பதிவேட்டில் பதிவு செய்து காவல் துணை ஆணையாளருக்கு (தலைமையிடம்) விடுப்பு ஆணை பெறுவதற்கு அனுப்பப்பட்டு விடுப்பு ஆணை வழங்கப்படும். இந்தச் செயலியில் ஒவ்வொரு காவல் அதிகாரிக்கும் மூன்று மணி நேரக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மூன்று மணி நேரக் காலத்திற்குள் நடவடிக்கை எடுத்து மேலனுப்பத் தவறினால் படிப்படியாக காவல் ஆளிநர்களது கோரிக்கை அடுத்தடுத்து மேலே சென்று இறுதியில் உயர் அதிகாரிகளைச் சென்றடையவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்தச் செயலி, காவல் ஆளிநர்களின் விடுப்பு எடுக்கும் நடைமுறை சிரமத்தை முழுமையாகக் குறைப்பதோடு, வெளிப்படையான தன்மையை உருவாக்குகிறது. இணையதள வசதி இல்லாதவர்கள் தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்டுள்ள CLAPP V2 செயலி மூலம் குறுஞ்செய்தி வாயிலாக விடுப்பு பெறும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பதிவு: January 21, 2022
முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் ரெய்டு...

அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை மற்றும் வேளாண்துறை அமைச்சராக இருந்த கே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்

சென்னை, தருமபுரி, சேலம், தெலங்கானா மாநிலம் கரீம் நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

வருமானத்தை விட கூடுதலாக 11 கோடியே 32 லட்சம் சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன், அவரது மனைவி, இரண்டு மகன்கள் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி ஆகியோரது வீடுகளில் கடந்த ஆண்டு சோதனை நடைபெற்ற நிலையில், தற்போது கே.பி.அன்பழகன் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

இதுவரை சோதனை நடைபெற்ற முன்னாள் அமச்சர்களின் விவரங்கள்...

* ஜூலை மாதத்தில் முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கருக்கு சொந்தமான 26 இடங்களில் ரெய்டு நடைப்பெற்றது. அந்த சோதனையில் ரூ.25.56 லட்சம் ரொக்கப்பணம், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

* ஆகஸ்ட் மாதத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு சோந்தமான இடங்களில் ரெய்டு நடைப்பெற்றது. அதில் ரூ. 811 கோடி மதிப்புள்ள அரசு ஒப்பந்தங்களில் முறைகேடு செய்திருப்பது அம்பலமானது.

* செப்டம்பர் மாதத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணிக்கு சொந்தமான 36 இடங்களில் ரெய்டு நடைப்பெற்றது. அதில் ரூ.34 லட்ச்ம் ரொக்கப் பணம், $1.84 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள், 5 கிலோ தங்க நகைகள், ரோல்ஸ் ராய்ஸ் உள்பட 9 சொகுசு கார்கள் சிக்கின.

* அக்டோபரில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு சொந்தமான 43 இடங்களில் ரெய்டு நடைப்பெற்றது. ரூ. 23.82 லட்சம் ரொக்க பணம், 4.87 கிலோ தங்கம் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

* டிசம்பர் மாத்ததில் முன்னாள் அமைச்சர் பி. தங்கமணிக்கு சொந்தமான 68 இடங்களில் ரெய்டு நடைப்பெற்றது. 100-கும் மேற்பட்ட லாரி கணக்கு உள்ளிட்டவை சிக்கியது குறிப்பிடத்தக்கது.

பதிவு: January 20, 2022
ஆவினின் புதிய வரவுகள்- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்...

ஆவின் நிறுவனத்தால் புதியதாக தயாரிக்கப்பட்ட பிரீமியம் மில்க் கேக், யோகர்ட் பானம், பாயாசம் மிக்ஸ், பால் புரத நூடுல்ஸ் மற்றும் டெய்ரி ஒய்ட்னர் ஆகிய ஐந்து புதிய பொருட்களை விற்பனைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.

ஆவின் நிறுவனம் தரம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்களிடம் நேரடியாக கொள்முதல் செய்து பால் மற்றும் பால் பொருட்களை நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் வழங்கி, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் பால் விற்பனையில் தமிழகத்தில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. சென்னைப் பெருநகர நுகர்வோர்களுக்கு தேவையான பாலை பதப்படுத்தவும், சிப்பங்கட்டாகவும், விநியோகிக்கவும், சென்னை பெருநகரத்தில் மாதவரம், அம்பத்தூர் மற்றும் சோழிங்கநல்லூர் பால் பண்ணைகள் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையத்தின் (ஆவின்) கட்டுப்பாட்டுக்குள் இயங்கி வருகின்றன.

இந்தப் பால் பண்ணைகள் தவிர அம்பத்தூரில் பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, திருவண்ணாமலையில் பால் மற்றும் பால் பவுடர் தொழிற்சாலை, உதகமண்டலத்தில் கருவூலக ஜெர்சி மற்றும் பொலிகாளைப் பண்ணை, ஈரோட்டில் எருமை உறை விந்து நிலையம் மற்றும் பால் கறவையின மேம்பாட்டு திட்ட அலுவலகம் ஆகியவையும் இணையத்தின் சொந்த அலகுகளாக செயல்பட்டு வருகின்றன.

முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன், ஆவின் உற்பத்தி பொருட்கள் லாபம் ஈட்ட வழிவகைகளை ஆராய வலியுறுத்தியதன் அடிப்படையில், அவின் நிறுவனம் பல்வேறு புதிய உப பொருட்களை ஆவின் நிறுவனத்தின் மேம்பாட்டுக்காக அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் ஆவின் நிறுவனத்தின் சார்பில், கீழ்க்காணும் ஐந்து புதிய பொருட்களை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று அறிமுகம் செய்து வைத்தார்.

ஆவின் நிறுவனம் தற்போது பால்கோவா, மைசூர்பா, ரசகுல்லா மற்றும் குலாப்ஜாமுன் போன்ற இனிப்பு பொருட்களை நுகர்வோர்களுக்கு ஏற்ற வகையில் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. தற்போது இனிப்பு பிரியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பிரீமியம் மில்க் கேக் தயாரித்து 250 கிராம் ரூ.100 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த இனிப்பு வகை தரம் மிகுந்த பால் பவுடர் மற்றும் ஆவின் அக்மார்க் நெய் உபயோகித்து தயாரிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களை கவரும் வகையில் யோகர்ட் பானம் மாம்பழம் மற்றும் ஸ்ட்ராபெரி சுவையில் தயாரிக்கப்பட்டு 200 மி.லி. அளவு கொண்ட பாட்டில் ரூ.25 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த பானம் உடலுக்கு புத்துணர்ச்சி மற்றும் ஜீரண சக்தி மேம்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆவின் நுகர்வோர் தேவையை அறிந்து பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் எளிமையாக பாயாசம் தயாரிக்கும் வகையில் பாயாசம் மிக்ஸ் 100 கிராம் ரூ.50 மற்றும் 200 கிராம் ரூ.100 என்ற அளவில் தயாரிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த புதிய பாயாசம் மிக்ஸ் குழந்தைகளை கவரும் வகையில் மிகுந்த சுவையுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பாயசம் மிக்ஸ் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பாதம், முந்திரி, திராட்சை மற்றும் பால்பவுடர் ஆகிய பொருட்களை கொண்டு சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர்களின் குறிப்பாக வேலைக்கு செல்லும் இல்லத்தரசிகளின் தேவையினை பூர்த்தி செய்யும் வகையிலும் குழந்தைகள் விரும்பி சுவைக்கக்கூடிய பால் புரத சத்து மிகுந்த நூடுல்ஸ் 70 கிராம் ரூ. 10 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

அவசர பால் தேவைக்கு உடனடியாக தயாரிக்கும் வகையிலும், உணவகங்கள், தேநீர் கடைகள், விடுதிகள் மற்றும் பெரிய நிறுவனங்களின் தேவையினை கருத்தில் கொண்டும் பயணங்களின் போது எளிதாக எடுத்து செல்லக்கூடிய டெய்ரி ஒய்ட்னர் புத்தம் புது வடிவில், 20 கிராம் ரூ.10, 200 கிராம் ரூ.80 மற்றும் 500 கிராம் ரூ.200 என்ற விலையில் ஆவின் டெய்ரி ஒய்ட்னர் அறிமுகப்படுத்தப்படுகிறது.

பதிவு: January 19, 2022
கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரும் வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்...

கரோனா நோய்த் தொற்றைக் கட்டுக்குள் வரும் வரை டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனே மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

"தமிழகத்தில் திமுக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் கரோனா நோய்த் தொற்றின் பரவல் அதிகரித்து வருகிறது.
இதை, அனைத்திந்திய அதிமுக சார்பில் சுட்டிக்காட்டிய போதெல்லாம், கரோனா தொற்று அதிகரிக்கவில்லை என்று மழுப்பலான அறிக்கைகளை தமிழக அரசு வெளியிட்டது.

ஆனால், இந்த சந்தர்ப்பவாத அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ராக்கெட் வேகத்தில் கரோனா தொற்று பரவுவதாக ஊடகப் பேட்டியில் தற்போது ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், பொங்கல் விடுமுறைக்குப் பிறகு நோய்த் தொற்று அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில், நாளொன்றுக்கு சுமார் 24 ஆயிரம் பேர் தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதாக இந்த அரசே செய்திக் குறிப்பினையும் வெளியிடுகிறது. ஆனால், உண்மையில் 50 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்படுவதாக சமூக வலைதளங்களும், மருத்துவர்களும் தகவல் தெரிவிக்கின்றனர். அதிமுகவின் அரசு எடுத்த இடையராத நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, தேர்தல் அறிவித்த 2021, பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் நாளொன்றுக்கு கரோனா நோய்த் தொற்றால் சுமார் 500 பேர்தான் பாதிக்கப்பட்டிருந்தனர்.

2020ம் ஆண்டு மே மாதம் முதல் வாரத்தில், தமிழகத்தில் நாளொன்றுக்கு கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 775. அந்த காலக்கட்டத்தில் எதிர்கட்சித் தலைவராக இருந்த, இன்றைய முதல்வராக இருக்கும் ஸ்டாலின், டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறந்திருப்பதால்தான் கரோனா தொற்று பரவுகிறது என்று ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்தார்.

மேலும், ஸ்டாலின் உட்பட அவரது கட்சியினர் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி, தங்கள் வீடுகள் முன்பு கருப்புக் கொடி மற்றும் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். ஆனால், இன்றைக்கு இந்த திமுக அரசின் வாக்குமூலப்படி, தினமும் சுமார் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு அல்லலுறும் வேளையில், டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருப்பது என்ன நியாயம்?

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு டாஸ்மாக் கடை மற்றும் அதனுடைய பார்களின் முன்பும் நூற்றுக்கணக்கானோர் எந்தவிதமான கரோனா பாதுகாப்பு விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் கூடி நிற்பதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. இதற்கு முன்னாள், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவிய கரோனா நோய்த் தொற்று, தற்போது காற்றின் மூலம் ஒருவரிடமிருந்து 9 நபர்களுக்கு பரவுகிறது என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுவதாக செய்திகள் வெளிவருகின்றன.

இதை அமைச்சர் மா. சுப்பிரமணியனும் இரண்டு நாட்களுக்கு முன்பு தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார். தமிழக மக்களின் உயிரைக் காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள திமுக அரசு, தங்களுடைய கஜானாவை நிரப்புவதிலேயே குறியாக இருந்து, டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறந்துவைப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த பின்பு மற்றொரு நிலைப்பாடு என்று திமுக செயல்படுகிறது. ஆகவே, இந்த திமுக அரசு மக்களின் இன்னுயிரோடு விளையாடாமல், தன்னுடைய இரட்டை வேட நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, கரோனா நோய்த் தொற்று கட்டுக்குள் வரும் வரை, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் பார்களை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்."

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பதிவு: January 19, 2022
தமிழக அமைச்சருக்கு 2-வது முறையாக கரோனா பாதிப்பு உறுதி...

தமிழக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு இரண்டாவது முறையாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் குறைந்து வந்த கரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, இந்தியாவில் முக்கிய நபர்கள், அரசியல்வாதிகள் மற்றும் திரைப்பிரபலங்களுக்கு கரோனா தொற்று தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக ஏற்கனவே கரோனா பாதித்தவர்கள் தற்போது மீண்டும் கரோனா தாக்குதலுக்கு உள்ளாகும் நிகழ்வுகளும் நடந்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இந்தத் தகவலை அவர் தன்னுடைய சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். அவருக்கு கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிந்த சில வாரங்களில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது 8 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தொற்று பாதிப்புக்கு அவர் ஆளாகியுள்ளார்.

பதிவு: January 19, 2022
முழு ஊரடங்கின்போது ஆட்டோ, டாக்சி பயணிகளிடம் அதிக கட்டணம் வசூல்- நடவடிக்கை எடுக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு…

முழு ஊரடங்கின்போது பயணிகளிடம் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

முழு ஊரடங்கின்போது வெளியூர்களுக்கு சென்று ரயில் நிலையம், பேருந்து நிலையம் திரும்பும் பயணிகள் வீடுகளுக்குச் செல்ல ஆட்டோ மற்றும் டாக்சிகள் கிடைக்காமல் அவதியுற்றதாகவும், சில ஆட்டோக்கள் அதிக கட்டணம் வசூலித்ததாகவும் புகார்கள் வந்துள்ளன.

எனவே, இனிவரும் முழு ஊரடங்கு நாட்களில் ஆட்டோ மற்றும் டாக்சிகளில் அனுமதிக்கப்பட்ட கட்டணத்தில் பயணிப்பதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ஊரடங்கின் போது எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். முழு ஊரடங்கின்போது பொதுமக்கள் சிலர் பொறுப்பற்ற முறையில் காவலர்களிடம் நடந்துகொண்டதாகவும், சிலர் காவலர்களை தாக்கியபோதும், துறைக்குரிய பொறுப்பு, பொறுமை, மற்றும் மனிதாபிமானத்துடனும் பணியாற்றியதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

முழு ஊரடங்கின்போது விதிமுறைகளை மீறியதாக, கடந்த ஜனவரி 9-ஆம் தேதி 19,962 வழக்குகளும், கடந்த ஜனவரி 16-ஆம் தேதி 14,956 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறியது தொடர்பாக 78.34 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

பதிவு: January 18, 2022
தமிழகம் முழுமைக்குமான சமச்சீரான ஒரு வேலைத் திட்டம் தேவை- மாநில திட்டக்குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு…

தமிழகம் முழுமைக்குமான சமச்சீரான ஒரு வேலைத் திட்டம் தேவை என்று மாநில திட்டக்குழு கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை, சேப்பாக்கம், எழிலகம், மாநிலத் திட்டக்குழு அலுவலகத்தில் துறை சார்ந்த நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆயவின்போது, மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன், குழுவின் செயல்பாடுகள், புதிய கொள்கைகள், தமிழ்நாடு புத்தாக்கத் திட்டங்கள், மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டங்கள், இது தொடர்பான உறுப்பினர்கள் மேற்கொள்ளப்பட்ட துறைவாரியான ஆய்வுகள், கள ஆய்வுகள் மற்றும் அரசு துறை செயலாக்க ஆலோசனைகளைப் பற்றி விளக்கினார்.

மாநிலத் திட்டக் குழு ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

இதே உற்சாகத்தோடு நீங்கள் அனைவரும் பணியாற்ற வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். உங்களது பணி என்பது மிகமிக முக்கியமானது. நீங்கள் வழிகாட்டும் இடத்தில் இருக்கிறீர்கள்.

கைகாட்டியாக , கலங்கரை விளக்கமாக இருக்கிறீர்கள். எனவே தான் உங்கள் பணியை மிக மிக முக்கியமானது என்று சொன்னேன்.

உங்களிடம் இருந்தும் இன்னும் கூடுதலாக பல்வேறு வழிகாட்டுதல்கள் எங்களுக்கு வேண்டும் என்பதைச் சொல்வதற்காகத்தான் நான் இங்கு வந்துள்ளேன். மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவைச் சார்ந்த நீங்கள் அரசுக்கு பல்வேறு ஆலோசனைகளைச் சொல்கிறீர்கள்.

இது போன்று செய்யலாம் - அது போல திட்டமிடலாம் - என்று உங்களிடம் இருந்து ஆலோசனைகள் எங்களுக்கு வருகின்றன.

உங்களிடம் இருந்து வரும் எண்ணங்கள் - ஆலோசனைகளாக மட்டுமில்லாமல் - அந்த எண்ணம் குறித்த முழுமையான செயல்வடிவமாக எங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

புதிய புதிய எண்ணங்கள் உங்களுக்குத் தோன்றலாம். அந்த எண்ணம் குறித்து அது பற்றிய வல்லுநர் குழுவுடன் நீங்களே ஆலோசனை நடத்தலாம். குறிப்பிட்ட தொழிற்சாலைகளுக்கு நீங்களே போய் பார்க்கலாம். அதன் நீள அகலங்கள் அனைத்தையும் நீங்களே தெரிந்து கொள்ளலாம்.

அதன் பிறகு அவற்றை மேம்படுத்த அதனை அரசுக்கு உங்களது திட்ட அறிக்கையாக நீங்கள் வழங்கலாம். அதாவது ஒரு ஆலோசனையை நீங்கள் சொல்லும் போது அதன் ஏ டூ இசட் அனைத்தையும் நீங்களே அலசி ஆராய்ந்து எங்களுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அதற்கு துறை வாரியான வல்லுநர்களை நீங்கள் சந்திக்கலாம். கலந்துரையாடல் நடத்தலாம். வெளிமாவட்டங்களுக்குச் சென்று நீங்களே விவசாயிகளை, தொழிலதிபர்களை, இளைஞர்களை சந்திக்கலாம். அவர்களது ஆலோசனையையும் பெறலாம்.

இவ்வாறான செயல்முறைத் திட்டங்களோடு நீங்கள் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மிக முக்கியமான ஆலோசனையாக இருந்தால் அது குறித்த முழுமையான பரிசீலனைக்குப் பிறகு நீங்கள் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகம் பல்வேறு வகைகளில் முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது. அது நமக்கு பெருமை தருவதாகும். வளர்ச்சித் திட்டங்களையும் சமூக சீர்திருத்தத்தையும் இணைத்ததால் நம் மாநிலம் அடைந்த மாபெரும் பலன் அது.

அதே நேரத்தில் முழுமையாக முன்னேற்றம் அடைந்துவிட்டோமா என்றால் இல்லை. அத்தகைய முழுமையான முன்னேற்றத்தை அடையத் தேவையானவை குறித்து நீங்கள் சிந்திக்க வேண்டும்.

* மனிதவள மேம்பாடு
* வாழ்க்கைத் தரம்
* மனித வாழ்க்கையின் ஆயுள்
* கல்வி கற்றல்
* குழந்தைகள் வளர்ப்பு
* வறுமை ஒழிப்பு
* மக்கள் நலவாழ்வு
* மனித உரிமைகள்
* சமூகநீதி
* விளிம்பு நிலை மக்கள்

- இப்படி அனைத்து தரப்புகளிலும் நாம் மேம்பட்டவர்களாக மாற வேண்டும்.

இத்தகைய குறியீடுகளை தமிழகத்தில் மேம்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு முனைப்போடு இருக்கிறது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து நீங்கள் அரசுக்கு வழங்க வேண்டும்.

சமச்சீரான வளர்ச்சியை - அனைத்து மாவட்டங்களும் ஒரே மாதிரியான வளர்ச்சியை - நான் அடிக்கடி சொல்லி வருகிறேன். அத்தகைய சமச்சீரான வளர்ச்சி நம்மிடம் இதுவரை இல்லை என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.

தொழில் வளர்ச்சியில் மாவட்டத்துக்கு மாவட்டம் வேற்றுமை உள்ளது. அதே போல் கல்வியிலும் மாறுபாடு இருக்கிறது. சில மாவட்டத்தில் வறுமை குறைவாகவும், சில மாவட்டங்களில் அதிகமாக இருப்பதை நாம் கண்கிறோம்.

இந்த வேறுபாட்டையும் மாறுபாட்டையும் களைய தமிழகம் முழுமைக்குமான சமச்சீரான ஒரு வேலைத் திட்டம் தேவை. இவை நாளையே நடந்து விடும் என்று நினைக்கும் கற்பனாவாதி அல்ல நான்.

ஆனால் சமசீரான வளர்ச்சிக்கான பயணத்தை நாம் உடனடியாக தொடங்கியாக வேண்டும் என்ற இலட்சியவாதியாக நான் என்னை உருவாக்கிக் கொள்ள நினைக்கிறேன்.

எத்தனையோ நல்ல பல திட்டங்களை வகுக்கிறோம். அதுதான் தமிழகத்துக்கு முதலாவது - பல மாநிலங்களுக்கு முதலாவது - இந்தியாவுக்கு முதலாவது - ஒன்றிய அரசே இதனை பின்பற்றுகிறது என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்கிறோம்.

அத்தகைய திட்டமானது - அடித்தட்டு மக்களைச் சென்றடைந்து விட்டதா? என்பதை நீங்கள் கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

உரிய பலனைக் கொடுத்துள்ளதா என்பதை கள ஆய்வு மூலமாக நீங்கள் கண்காணித்து எங்களுக்குச் சொல்ல வேண்டும். நல்ல திட்டமானது போய்ச் சேரவில்லை என்றால் அதனால் எந்த பயனும் இல்லை. அதனை கண்காணிப்பவர்களாக நீங்கள் இருக்க வேண்டும்.

* திட்டங்களை உருவாக்குவதற்கும் - அதனை நடைமுறைப்படுத்துவதற்குமான கால இடைவெளியைக் குறைக்க வேண்டும்.

* தமிழகத்தின் நிதி நெருக்கடியை நான் சொல்லத் தேவையில்லை. அநாவசியச் செலவுகளைக் குறைப்பது குறித்த ஆலோசனைகள் தேவை.

* நிதி திரட்டுதல் என்பது முக்கியமாக வரிவசூல் - பத்திரப்பதிவு - ஆயத்தீர்வை ஆகியவற்றின் மூலம் மட்டுமே வருகிறது.

அதனைத் தாண்டி சுற்றுலா - சிறுகுறு தொழில்கள் - கைவினைப் பொருள்கள் - கைத்தறி போன்ற துறைகளின் மூலமாகவும் வருமானம் ஈட்டுவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.

தொழில் உருவாக்கம் என்பது நிதி உருவாக்கமாகவும், வேலைவாய்ப்பு பெருக்கமாகவும் மாற வேண்டும்.

*கிராமப்புற மேம்பாடு குறித்து அக்கறையோடு நீங்கள் சிந்திக்க வேண்டும்.

- இப்படி எத்தனையோ வகைகளை நீங்கள் சிந்தித்து எங்களுக்கு வழிகாட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

முதல் கூட்டத்தில் நான் சொன்னது தான் .....

சமூகநீதி - சமத்துவம் - சுயமரியாதை - மொழிப்பற்று - இன உரிமை - மாநில சுயாட்சி ஆகிய தத்துவங்களின் அடிதளத்தில் நிற்கும் இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம்.

தமிழகத்தின் வளர்ச்சி என்பது - சமூகத்தின் வளர்ச்சியாக, வாழ்க்கை வளர்ச்சியாக, சிந்தனை வளர்ச்சியாக, பண்பாட்டு வளர்ச்சியாக இருக்க வேண்டும்.
அதுதான் உண்மையான வளர்ச்சி. அத்தகைய வளர்ச்சிக்கு பெயர் சூட்ட வேண்டுமானால் அதுதான் 'திராவிட மாடல்'.
பொருளாதாரம் - கல்வி - சமூகம் - சிந்தனை - செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒரு சேர வளர வேண்டும். அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி.
அதற்கு உங்களது வழிகாட்டுதல்கள் தேவை என்பதை மீண்டும் ஒருமுறை கூறி, நான் விடைபெறுகிறேன்.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

பதிவு: January 18, 2022
வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஜெயா என்ற பெண் சிறுத்தை உயிரிழப்பு…

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கரோனா பரிசோதனைக்காக கூண்டில் அடைக்கப்பட்டிருந்த ஜெயா என்ற 17 வயது பெண் சிறுத்தை உயிரிழந்தது.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தை அடுத்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பணியாற்று ஊழியர்கள் 76 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து உயிரியல் பூங்கா நிர்வாகம், மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு தொற்றுப் பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. மேலும் தேதி குறிப்பிடாமல் வண்டலூர் உயிரியல் பூங்காவும் மூடப்பட்டது.

இந்த நிலையில், பூங்காவில் இருந்த 17 வயதான ஜெயா என்ற பெண் சிறுத்தை கரோனா பரிசோதனைக்காக கூண்டில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தது. ஆனைமலையிலிருந்து கொண்டு வரப்பட்டு 13 ஆண்டாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த சிறுத்தை ஜெயா.

கடந்த வாரம் இதே பூங்காவில் இருந்த விஷ்ணு என்ற ஆண் சிங்கம் உயிரிழந்த நிலையில், தற்போது சிறுத்தை ஒன்று பலியாகியுள்ளது. மேலும், உயிரியல் பூங்காவில் உள்ள விலங்கினங்களுக்குத் தொற்றுப் பரவாமல் தடுக்கவும், உயிரிழப்புகளைத் தடுக்கவும் பூங்கா நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக, ஒவ்வொரு விலங்குகளையும் உரிய இடைவெளிகளில் வைத்து பராமரிப்பது, அவற்றுக்கென தனித்தனியாக பணியாளர்களை நியமித்து கண்காணிப்பது, பணியாளர்களுக்கு கவச உடைகளை வழங்குவது, விலங்குகளுக்கு அளிக்கப்படும் உணவுகளை பரிசோதித்து கொடுப்பது என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: January 18, 2022
18 வருட திருமண வாழ்க்கை பிரிவு ஏன்?- ஐஸ்வர்யா – தனுஷ் ஒரேநேரத்தில் விளக்கம்…

நடிகர் தனுஷ் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பிரிவதாக தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.

இருவரும் தமிழ் திரையுலகின் பிரபல குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். பிரபல டைரக்டரும் தயாரிப்பாளருமான கஸ்தூரி ராஜாவின் மகன் தனுஷ். ஐஸ்வர்யா தமிழ் முன்னணி நட்சத்திரம் ரஜினிகாந்தின் மகள்.

இந்த இருவருக்குமே நடந்த திருமணம், பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு நடந்தது. ஆனால், அதற்கு முன்பாக வெறும் ஆறு மாதங்கள் காதலித்த பிறகு அந்த திருமணம் நடந்தது.

தனுஷ் நடித்த காதல் கொண்டேன் படம் வெளியான தருணம். அப்போதுதான் இருவரும் முதலில் சந்தித்தனர். திரையரங்க உரிமையாளர் ஒருவர் ஐஸ்வர்யாவை தனுஷிடம் அறிமுகப்படுத்தியபோது, அவரது நடிப்புக்கு வாழ்த்து தெரிவித்தார் ஐஸ்வர்யா.

அடுத்த நாளே, ஐஸ்வர்யாவிடமிருந்து ஒரு வாழ்த்துக் குறிப்புடன் ஒரு பூங்கொத்தை பெற்றார் தனுஷ். ஐஸ்வர்யாவின் இயல்பான குணத்தை நடிகர் தனுஷ் பாராட்டினார்.

பிறகு தனுசும் ஐஸ்வர்யாவும் அடிக்கடி ஒருவரையொருவர் பார்த்து பேசிக்கொள்கிறார்கள் என கூறப்பட்டது. சினிமா கிசுகிசுக்களும் வெளிவந்தன. அந்த நேரத்தில், தனுஷ் தனது சகோதரியின் தோழி தான் என்றும், வேறு ஒன்றும் இல்லை என்றும் கூறியதை மறுத்து பேட்டியும் கொடுத்தார்.

ஒரு கட்டத்தில் இந்த ஜோடி சிறந்த வாழ்க்கைத் துணையாக இருப்பார்கள் என்று இருவரது குடும்பத்தினர் நினைத்தனர்.

இதைத்தொடர்ந்து இரு வீட்டாரும் கூடி திருமண நிச்சயதார்த்தம் மற்றும் ஏற்பாடுகளைச் செய்தனர். ஒரு சினிமா இதழுக்கு அளித்த நேர்காணலில், ஐஸ்வர்யாவின் உறவைப் பற்றிய சிறந்த விஷயத்தைப் பகிர்ந்து கொண்டார் தனுஷ்.

"எங்கள் உறவின் சிறந்த விஷயம் என்னவென்றால், நாங்கள் ஒருவருக்கொருவர் மற்றவருக்கான இடத்தை அதிகமாக கொடுப்பதுதான். நாங்கள் இருவரும் மற்றவருக்காக மாறுவதை நம்புவதில்லை. நாங்கள் ஒன்றாக இருக்க விரும்புகிறோம். நீங்கள் 20-களின் நடுப்பகுதியில் இருக்கும்போது, நீங்கள் எதை நம்புகிறீர்களோ, அதில் உங்கள் மனம் அமைகிறது, உங்களை மாற்றுவது மிகவும் கடினம்," என்று கூறியிருந்தார்.

இந்த ஜோடியின் திருமணம் 2004ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி நடந்தது. தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட், ஹாலிவுட் என நடிகர் தனுஷ் பயணப்பட, தமிழ் சினிமா தயாரிப்பு, திரீ டி பட இயக்கம், திரைக்கதை இயக்கம் என தனி பாதையில் பரிணமித்தார் ஐஸ்வர்யா. இந்த இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர்.2006-ல் தங்கள் முதல் மகன் யாத்ராவை பெற்றெடுத்தனர். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2010-ல் இரண்டாவது மகன் லிங்கா பிறந்தார்.

இந்த நிலையில் தான் தானும் ஜஸ்வர்யாவும் பிரிவதாக தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து ஐஸ்வர்யாவும் அவ்வாறே பதிவு செய்துள்ளார்.

"நண்பர்களாக, காதலர்களாக, பெற்றோர்களாக நாங்கள் இருந்த 18 வருட திருமண வாழ்க்கை முடிவிற்கு வருகிறது. ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்தும், புரிந்துகொண்டும் வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் கடந்து சென்றுள்ளோம். இனி நானும், ஐஸ்வர்யாவும் தனித்தனியே வாழ்க்கையை தொடரவுள்ளோம். எங்களை நாங்களே தனித்தனியாக புரிந்துகொள்ளும் நேரம் இது!

எங்களின் இந்த முடிவிற்கு மதிப்பளித்து அனைவரும் உறுதுணையாக நிற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டிருக்கிறார்.

அதேபோன்றதொரு பதிவை ஐஸ்வர்யாவும் தனது டுவிட்டர் கணக்கில் பதிவு செய்துள்ளார். இருவரின் இந்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குறிப்பாக ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராமில் தனுஷ் குறித்து பெருமையாக பதிவிட்ட மூன்று மாதங்களுக்குள் இந்த பிரிவு செய்தி வந்துள்ளது. அக்டோபரில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் தந்தை ரஜினிகாந்த் இருவரும் புதுடெல்லியில் நடந்த தேசிய விருது வழங்கும் விழாவில் ஒன்றாக கலந்துக் கொண்டனர். அந்த விழாவில் ரஜினிகாந்த் தாதாசாகேப் பால்கே விருது பெற்றார், அசுரன் படத்தில் நடித்ததற்காக தனுஷ் சிறந்த நடிகர் பிரிவில் தேசிய திரைப்பட விருதை வென்றார்.

அக்டோபர் 25 அன்று, ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராமில் ரஜினி மற்றும் தனுஷ் இருவரின் படத்தைப் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இதற்கிடையில், தனுஷ் இடம்பெற்ற அவரது கடைசி பதிவு ஏப்ரல் 2021-ல் கர்ணன் திரைப்பட ரிலீஸின் போது இருந்தது. மறுபுறம் தனுஷ், தனது சமூகவலைதளங்களில் தான் நடிக்கும் படங்கள் குறித்த பதிவுகளை மட்டுமே வெளியிட்டுள்ளார். அவரது பதிவுகளில் ஐஸ்வர்யாவை காண முடியவில்லை.

பதிவு: January 18, 2022
சென்னை, தாம்பரம், காஞ்சிபுரம், வேலூர் மாநகராட்சி உள்பட 11 மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு- அரசாணை வெளியீடு…

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நாளை ஆலோசனை நடத்துகிறது. இந்த ஆலோசனைக்கு பிறகு வரும் 21ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா பரவலால் ஒரே கட்டமாக தேர்தலை நடத்தவும் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், மேயர் பதவிக்கு பெண்கள் மற்றும் ஆதிதிராவிட பெண்களுக்கு போட்டியிடும் மாநகராட்சிகளின் பட்டியல் அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது, புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.

இந்தநிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டு கட்டங்களாக 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இதில், பெரும்பான்மையான இடங்களை திமுக கைப்பற்றியது. இந்தநிலையில், ஜனவரி 31-ம் தேதிக்குள் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பொதுத் தேர்தல்களை நடத்தும் பணியை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.

அதன்படி, தமிழ்நாட்டில் 6,36,25,813 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம். இந்தநிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களை சுமூகமாக நடத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் நாளை காலை 11.30 மணிக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறது.

அரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு கூட்டத்தில் கலந்துகொள்ள மாநில தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. நாளை நடைபெறும் கூட்டத்தில், பதட்டமான வாக்குசாவடிகளில் பாதுகாப்பை அதிகரிப்பது, வாக்குசாவடிகளில் செய்யப்பட வேண்டிய வசதிகள், கொரோனா பரவலை முன்னிட்டு எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசிக்கப்பட உள்ளது.

மேலும், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்தும் நாளை நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதிநிதிகளின் கருத்துக்கள் கேட்டறியப்பட உள்ளது. இதேபோல், வரும் 21ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்படவும் வாய்ப்புள்ளது. இதையடுத்து, பிப்ரவரி மாதத்தில் தேர்தலை நடத்தி முடிக்கவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், மாநகராட்சி தேர்தலில் பெண்கள் மற்றும் ஆதிதிராவிட பெண்கள் மேயர் பதவிக்கு போட்டியிடும் மாநகராட்சிகளின் பட்டியலை தமிழக அரசு நேற்று அரசாணையாக வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில், சென்னை மாநகராட்சி மற்றும் தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவிகள் ஆதிதிராவிட பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆவடி மாநகராட்சி மேயர் பதவி ஆதிதிராவிடர் (பொது)களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஆதிதிராவிடர் பொது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆண், பெண் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்.

அதேபோல, பொதுப் பிரிவு பெண்களுக்கு கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், சிவகாசி, காஞ்சிபுரம், மதுரை, கோவை, ஈரோடு ஆகிய மாநகராட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு பொதுப் பிரிவைச் சேர்ந்த பெண்கள் மட்டும் போட்டியிடலாம். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள் உள்ளன. அதில் தற்போது ஆதிதிராவிட பெண்கள் (2), ஆதிதிராவிடர்கள் பொது(1), பொதுப் பிரிவு பெண்கள்(9) என 12 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

மீதம் உள்ள மேயர் பதவி திருச்சி, சேலம், திருப்பூர், நெல்லை, ஓசூர், தூத்துக்குடி, நாகர்கோவில், தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய 9 மாநகராட்சிகள் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மாநகராட்சிகளில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. விரைவில் இந்த மாநகராட்சிகளில் எந்தெந்த வார்டுகள் ஆதிதிராவிட பெண்கள் மற்றும் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரியவரும்.

சென்னையை ஒட்டிய 3 மாநகராட்சியுமே ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கீடு

சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பதவி ஆதிதிராவிட பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல சென்னையை ஒட்டியுள்ள தாம்பரம் மாநகராட்சியும் ஆதிதிராவிட பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, சென்னையை ஒட்டியுள்ள மற்றொரு மாநகராட்சியான ஆவடி, ஆதிதிராவிட பொது பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு ஆதிதிராவிட ஆண் அல்லது பெண் போட்டியிடலாம். இதனால் சென்னை மற்றும் அதை ஒட்டியுள்ள 3 மாநகராட்சியுமே ஆதிதிராவிட பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பதிவு: January 18, 2022
மக்கள் மனதில் மகிழ்ச்சியை எந்நாளும் பொங்க வைப்பதே எனது பெரும்பணி – முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து…

மக்கள் மனதில் மகிழ்ச்சியை எந்நாளும் பொங்க வைப்பதே எனது பெரும்பணி என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்-அமைச்சர் வெளியிட்டு பொங்கல் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

''பொங்கலோ பொங்கல்" என்று சொல்லும்போதே மக்கள் மனங்களில் மகிழ்ச்சி பொங்குகிறது. புத்துணர்வு பொங்கி வழிகிறது. உள்ளமெல்லாம் பூரிப்பு பிறக்கிறது. அந்த வகையில் நம் ஊனோடு, உயிரோடு, உணர்வோடு கலந்த விழாவாக தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் அமைந்துள்ளது. தை முதல் நாள் தமிழர் திருநாள், தை இரண்டாம் நாள் வான்புகழ் கொண்ட திருவள்ளுவர் நாள் எனத் தைத்திங்களின் தொடக்கம் என்பது தமிழர் பெருவிழா நாட்களாக அமைந்துள்ளது.

புத்தாடை அணிந்து, புதுப்பானையில், புத்தரிசி படைத்து பொங்கல் இடும் நாள் என்பது தமிழர்கள் இல்லமே பொங்கி வழியும் நாளாக அமைந்து வருகிறது. வேளாண்மையைத் தொழிலாக இல்லாமல், பண்பாடாகக் கடைப்பிடிக்கும் இனம் தமிழினம். உழவே தலை என்றார் வள்ளுவர். அத்தகைய உழவர் பெருமக்களையும், அவர்களுக்கு என்றும் துணையாக இருக்கும் உயிர்ச் செல்வங்களாம் மாடுகளுக்கு மரியாதை செலுத்தும் நாளாகவும் அதனைக் கடைப்பிடித்து வருகிறோம். அந்தவகையில் எல்லாம் அடங்கிய இனிய திருநாள்தான் பொங்கல் திருநாள்.

அதிலும் இந்த ஆண்டு புத்தாட்சி மலர்ந்த ஆண்டாக அமைந்திருப்பதால் - மக்கள் மனதில் அரசியல் பூரிப்பும் இணைந்துள்ளது. உங்களில் ஒருவனான நான், உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியில் அமர வைக்கப்பட்டுள்ளேன். பொறுப்பேற்ற நொடியில் இருந்து உங்களுக்காகவே ஒவ்வொரு நொடியையும் அர்ப்பணித்து வருகிறேன். மக்கள் மனதில் மகிழ்ச்சியை எந்நாளும் பொங்க வைப்பதே எனது பெரும்பணி என உழைத்து வருகிறேன். எட்டே மாதத்தில் ஏற்றமிகு திட்டங்களைத் தீட்டி வருகிறேன். ஐந்தாண்டு செய்ய வேண்டிய சாதனைகளைச் சில மாதங்களில் செய்தவன் என்று நடுநிலையாளர்கள் பாராட்டைப் பெற்றும் வருகிறேன். இத்தகைய பொற்கால ஆட்சியின் முதல் தைத்திருநாளைத்தான் உங்களோடு சேர்ந்து நானும் கொண்டாட இருக்கிறேன்.

கொரோனா காலம் என்பதால் கட்டுப்பாட்டுடன் நாம் இந்த விழாவைக் கொண்டாட வேண்டும். இல்லத்தில் இருந்தபடியே கொண்டாடுங்கள். பொது இடங்களில் கூட வேண்டாம். இந்த அலைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைப்போம். அதுவரை உங்களையும் காத்து, நாட்டையும் காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அனைவருக்கும் தமிழர் திருநாள் - தமிழ் இனநாள் - பொங்கல் மகிழ்நாள் - உழவர் உயிர்நாள் - திருவள்ளுவர் வாழ்வியல் நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வணங்குவோம் சூரியனை!
வாழ்த்துவோம் உழவரை!
மண் செழிக்கட்டும்!
மக்கள் மகிழட்டும்!

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பதிவு: January 13, 2022
`நம்பர் ஒன் தேனாம்பேட்டை மண்டலம்!'- சென்னையில் 1,158 தெருக்களில் கொரோனா பாதிப்பு

சென்னை மாநகரில் இதுவரை 1,158 தெருக்களில் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதிகளவாக தேனாம்பேட்டை மண்டலத்தில் மட்டும் 228 தெருக்களில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்திலும் ஒமிக்ரான் தொற்று பரவல் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த மாத தொடக்கத்தில் பாதிப்பு 700-க்குள் இருந்த நிலையில் தற்போது ஒமிக்ரான் பாதிப்பு 1892-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 766 பேர் குணமடைந்துள்ளனர். 1,126 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதுவும் தலைநகர் சென்னையில் தினம்தோறும் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகி வருகிறது.

அதாவது தமிழ்நாட்டின் மொத்த பாதிப்பில் சென்னையில் மட்டும் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் உள்ளன. இதனை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை மாநகரில் இதுவரை 1,158 தெருக்களில் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் மொத்தமுள்ள 39,537 தெருக்களில் 1,158 தெருக்களில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 988 தெருக்களில் 3க்கும் குறைவான எண்ணிக்கையில் கொரோனா தொற்றுடையவர்கள் உள்ளனர். 170 தெருக்களில் 3க்கும் அதிகமான எண்ணிக்கையில் கொரோனா தொற்றுடையவர்கள் உள்ளனர். 86 தெருக்களில் 4க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கொரோனா பாதித்தவர்கள் உள்ளனர். இதில் அதிகளவாக தேனாம்பேட்டை மண்டலத்தில் மட்டும் 228 தெருக்களில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் மொத்தமாக 3,486 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 38,379 தெருக்களில் எவருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பதிவு: January 04, 2022
சென்னையில் அதி கனமழையை கணிக்க தவறியது ஏன்?- வானிலை ஆய்வு மையம் இயக்குநர் புவியரசன் விளக்கம்

சென்னையில் அதி கனமழையை கணிக்க தவறியது ஏன்? என்ற கேள்விக்கு வானிலை ஆய்வு மையம் இயக்குநர் புவியரசன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் நேற்று யாரும் எதிர்பார்க்க நிலையில் கொட்டித் தீர்த்தது கனமழை. சென்னையில் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்த நிலையில் இந்த திடீர் மழை பெய்தது வானிலையை நோக்கி விமர்சனம் எழுந்துள்ளது. இது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குநர் புவியரசன், "தரவுகளின் அடிப்படையில் தான் மழைப்பொழிவு கணக்கிடப்படுகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நேற்று வேகமாக நகர்ந்ததால் சென்னையில் கனமழை பெய்தது. கடலில் இருக்கும் என கணிக்கப்பட்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலப்பகுதிக்கு திடீரென நகர்ந்ததே அதி கனமழைக்கு காரணம். அதி கனமழையை கணிப்பதில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்தன.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று தான் கனமழை பெய்யும் என எதிர்பார்த்தோம். இன்று கணிக்கப்பட்ட நிலையில் மேலடுக்கு சுழற்சி வேகமாக நகர்ந்ததால் நேற்றே மிக கனமழை பெய்தது. மேகவெடிப்பினால் மழை பெய்தால் அதிக நேரம் மழை பெய்யாது. ஆனால் நேற்று தொடர்ச்சியாக மழை பெய்தது. கணிப்புகளை தாண்டி காற்றின் நகர்வு மற்றும் வேகத்தால் மழையின் அளவு மாறுபடக்கூடும்.

நிலப்பகுதியில் காற்றின் மேலடுக்கு சுழற்சி இருந்தது, திடீரென கடற்பகுதிக்கு நகர்ந்தது. செயற்கைகோளில் இருந்த தரவுகளின் அடிப்படையில் நேற்று கணிப்பு வெளியிடப்பட்டது. அந்தமான் மற்றும் தமிழக கடற்பகுதியில் இருந்து தரவுகள் எடுக்கப்படுகிறது. காற்றின் வேகத்தை செயற்கைக்கோள் துல்லியமாக கணிப்பதில்லை. சில நேரங்களில் மழைப்பொழிவை துல்லியமாக சொல்ல இயலாது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய செயற்கைக்கோள் தரவுகளையும் சில நேரங்களில் பயன்படுத்துகிறோம்.

காற்றின் வேகம் மற்றும் சுழற்சியை சில நேரங்களில் துல்லியமாக கணிக்க இயலாது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நேற்று வேகமாக நகர்ந்ததால் சென்னையில் கனமழை பெய்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒருசில நேரங்களில் வேகமாக நகர்ந்து விடும். 1977ஆம் ஆண்டிலேயே திடீரென அதிக மழை பெய்துள்ளது. மழை பெய்வதை துல்லியமாக கணிக்க ரேடார் உள்ளிட்ட அதிநவீன உபகரணங்கள் சென்னையில் தேவை" என்று கூறினார்.

பதிவு: December 31, 2021
`10 ஆண்டுகளாக சென்னையை குட்டிச்சுவராக்கி வைத்துள்ளார்கள்!- முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

"கடந்த 10 ஆண்டுகளாக சென்னையை குட்டிச்சுவராக்கி வைத்துள்ளார்கள். விமர்சனம் செய்வதற்கு தயாரா இல்லை" என்று சென்னையில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நேற்று பிற்பகல் முதல் பெய்த தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. திருச்சியில் இருந்து இரவில் சென்னை திரும்பி முதல்வர் மு.க.ஸ்டாலின், கனமழையால் சென்னை மாநகரில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து, சென்னை ரிப்பன் மாளிகை, பெருநகர சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்டார்.


இதன் பின்னர் பாரிமுனை அருகில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளநீரை மோட்டார் கொண்டு வெளியேற்றும் பணிகளை நள்ளிரவில் பார்வையிட்டார். மேலும், பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை அருகில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளநீரை மோட்டார் கொண்டு வெளியேற்றும் பணிகளை முதல்வர் பார்வையிட்டார். அப்போது, வெள்ள பாதிப்புகளை உடனடியாக சீர்செய்யுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இன்றும் சென்னையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். சீரமைப்புப் பணிகளை நேரடியாகவே ஆய்வுசெய்து கண்காணித்து வருகிறார். இதனிடையே, சென்னையின் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி வடியாமல் உள்ளது. பல இடங்களில் மாநகராட்சி சார்பில் மின் மோட்டார்கள் வைத்து தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆழ்வார்பேட்டையில் வெள்ளநீரை வெளியேற்றும் பணியை நேரில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நேற்று மட்டும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் 20 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வுத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எதிர்பாராத கனமழை ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளைச் சரிசெய்ய ஒவ்வொரு அதிகாரியும் நேரம் காலம் பார்க்காமல் உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.


வானிலை மையமே எதிர்பாராத வகையில் மழை கொட்டித் தீர்த்துள்ளது. வெள்ள நீரை மோட்டர்கள் மூலம் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. விரைவில் மழை நீர் முழுவதுமாக அகற்றப்படும் . சீரமைப்புப் பணிகளை நானும் நேரடியாகவே ஆய்வுசெய்து கண்காணித்து வருகிறேன். விரைவில் நிலைமை சீரடையும்.

கடந்த 10 ஆண்டுகளாக சென்னையை குட்டிச்சுவராக்கி வைத்துள்ளார்கள். விமர்சனம் செய்வதற்கு தயாரா இல்லை. அடுத்த பருவமழைக்குள் அனைத்தும் சீரமைக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கு. நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்" என தெரிவித்தார்.

பதிவு: December 31, 2021
சென்னையில் கொட்டித் தீர்த்த மழை!- நள்ளிரவில் களமிறங்கிய முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் வானிலை கணிப்புகளை மீறி திடீர் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நள்ளிரவில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சியில் அரசு விழாவில் பங்கேற்ற பின் விமானத்தில் சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின், நேரடியாக மழை பாதிப்புகளை கள ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டார். மாநகராட்சி பேரிடர் கட்டுப்பாட்டு மையத்திற்கு சென்ற அவர், மழை நீர் தேங்கிய இடங்களின் விவரம் மற்றும் மழைநீரை அகற்ற மேற்கொள்ளப்படும் நடவடிக்கை பற்றி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை- பாரிமுனை பகுதிகளில் மழை நீர் சூழ்ந்த இடங்களுக்கு சென்ற அவர், மோட்டார் பம்பு மூலமாக மழைநீரை அகற்றும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதல்வர் ஆய்வின் போது அவருடன் அமைச்சர் சேகர் பாபு, செந்தில் பாலாஜி, மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

இதனிடையே முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'வானிலைக் கணிப்புகளையும் மீறிக் கொட்டித் தீர்க்கிறது மழை. எதிர்பாராத மாமழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதோடு, கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து திரும்பியவுடன், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டளை மையத்திற்கு வந்து, எடுக்கப்பட்டுவரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளேன்.

நிலைமை விரைந்து சீர்செய்யப்படும்.பொதுமக்களும் கவனமுடன் தங்கள் பயணத்தை அமைத்துக் கொள்வதோடு, மழைக்கால வழிகாட்டுதல்களைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

பதிவு: December 31, 2021
ஒமிக்ரான் பாதிப்பு 34 ஆக உயர்ந்தது!- 3வது இடத்தில் தமிழ்நாடு

தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு பட்டியலில் தமிழ்நாடு 3வது இடத்தில் உள்ளது.

உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் கடந்த மாதம் 24ம் தேதி தென் ஆப்பிரிக்காவில்தான் முதலில் கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் பயணக்கட்டுப்பாடுகளை விதித்தன. ஆனாலும் ஒருமாத காலத்தில் இந்த வைரஸ் 106 நாடுகளில் கால்பதித்துவிட்டது என உலக சுகாதார அமைப்பு உறுதி செய்திருக்கிறது.

இந்தியாவிலும் கடந்த 2ம் தேதி நுழைந்த இந்த வைரஸ் 21 நாளில் 269 பேருக்கு பாதித்துள்ளது. டெல்டா வைரஸைவிட குறைந்தது 3 மடங்கு வேகமாக பரவக்கூடியது என கூறப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்களில் இதுவரை 104 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தெரிவித்தார்.

இந்தநிலையில், 41 பேரின் மரபணு பகுப்பாய்வு முடிவுகள் வெளியானதில் 33 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், 43 பேரில் 30 பேர் வெளிநாடு, ஒருவர் கேரளாவில் இருந்து தமிழகம் வந்தவர்கள். இன்னும் 24 பேருக்கான ஒமிக்ரான் முடிவு வர வேண்டி உள்ளது. கொரோனா உறுதியான 114 பேரில் 57 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி இருந்ததால் மாதிரி ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு எஸ் வகை மரபணு மாற்றம் கண்டறியப்பட்ட நிலையில் முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்.

சென்னையில் 26 பேரும், மதுரையில் 4 பேரும், திருவண்ணாமலையில் 2 பேருக்கும், சேலத்தில் ஒருவருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 24 பேருக்கான ஒமிக்ரான் முடிவு வர வேண்டி உள்ளது. ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட அனைவரும் நலமுடன் சிகிச்சையில் இருக்கின்றனர் என்று தெரிவித்தார்.

பதிவு: December 23, 2021
`கிராமப்புறங்களில் மருத்துவ சேவையாற்ற வேண்டும்!'- பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

"கிராமப்புற மருத்துவ சேவை சவாலாக மாறியுள்ளது. எனவே கிராமப்புறங்களில் மருத்துவ சேவையாற்ற கடமையாக கொள்ள வேண்டும்" என்று பட்டமளிப்பு விழாவில் மருத்துவ மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

சென்னை கிண்டியில் உள்ள எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் 34வது பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.

முன்னதாக பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "மருத்துவப் புரட்சியின் மகத்தான அடையாளமாக எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. மருத்துவம் என்பது வேலை அல்ல; சேவை என்பதை மாணவர்கள் உணர வேண்டும். மருத்துவ பட்டம் பெறும் மாணவர்களின் கனவு நாட்டின் கனவாகவே மாறுகிறது. கல்வியையும், ஆராய்ச்சியையும் இரு கண்களாக கொண்டு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியது. இந்த மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்டியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.

மருத்துவ மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரி என்பது கலைஞரின் கனவு. தமிழ்நாட்டில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகளின் தொடக்க விழா விரைவில் நடைபெற உள்ளது. நாட்டுக்கு சேவையாற்றும் மாபெரும் மனிதர்களாக மாறியுள்ள மருத்துவ மாணவர்களை நாடே வரவேற்கிறது. கிராமப்புற மருத்துவ சேவை சவாலாக மாறியுள்ளது. எனவே கிராமப்புறங்களில் மருத்துவ சேவையாற்ற கடமையாக கொள்ள வேண்டும். மக்கள் மருத்துவர் என்ற சிறப்பான பெயரை பெற வாழ்த்துகள்" என்று கூறினார்.

பதிவு: December 20, 2021
`ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பினார்!'- மாங்காடு மாணவி தற்கொலை வழக்கில் சிக்கிய கல்லூரி மாணவர்

சென்னை மாங்காடு பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். போக்ஸாே உள்பட 3 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு மாணவர் சிறையில் அடைக்ககப்பட்டுள்ளார்.

சென்னையை அடுத்த மாங்காடு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி, பூந்தமல்லியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்த சூழலில் தாயுடன் வீட்டில் இருந்த மாணவி, திடீரென தனது அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த மாங்காடு போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது வீட்டில் போலீசார் சோதனை செய்தனர்.

அதில் மாணவி எழுதிய உருக்கமான 3 கடிதங்கள் போலீசாரிடம் சிக்கின. அதில் 2 கடிதங்களில் அவர், “ஆசிரியர்கள், உறவினர்கள் யாரையும் நம்பக்கூடாது. இந்த உலகத்தில் பாதுகாப்பானது, கல்லறையும், தாயின் கருவறையும்தான். பள்ளியில் கூட பாதுகாப்பு இல்லை” என உருக்கமாக எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மற்றொரு கடிதத்தை மாணவி எழுதி விட்டு, பின்னர் அதை கிழித்து போட்டு உள்ளார். அதில், முன்னாள் ஆசிரியை ஒருவரின் மகன் பாலியல் தொல்லை கொடுத்ததால் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும், தனது சாவுக்கு அவரே காரணம் எனவும் அவரது பெயரை குறிப்பிடாமல் எழுதி இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து, மாணவியின் செல்போன் மற்றும் கடிதத்தை கைப்பற்றிய போலீசார் சந்தேகத்தின் பேரில் 17 வயது சிறுவன் உட்பட 20 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக கல்லூரி மாணவர் விக்னேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்மீது போக்ஸோ, பாலியல் வன்கொடுமை, தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவியின் செல்போனை ஆய்வு செய்ததில் அவர் ஆபாசமாக குருஞ்செய்தி அனுப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பதிவு: December 20, 2021
சென்னை கிரிமால்டஸ் மருத்துவமனையின் பொன் விழா கொண்டாட்டம்!- சிறந்த மருத்துவர்களுக்கு விருது வழங்கினர்

சென்னை கிரிமால்டஸ் மருத்துவமனை வளர்ச்சிக்காகவும், மக்களுக்கு சிறப்பாக மருத்துவ சேவை புரிந்தவர்களுக்கும், சேவை புரிந்து வருபவர்களுக்கும் என 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறப்பு விருதுகளை வழங்கி கெளரவித்தார்  நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி.


தொழுநோய் என்றாலே ஓடும் மக்கள் மத்தியில் அதனை ஒரு சவாலாக எடுத்து, மக்களுக்காக சேவை மனப்பான்மையோடு சிறப்பாக பணியாற்றி இன்று அந்த நோயை விரட்டி அடித்து, அதன் மீது மக்களுக்கு இந்த ஐயப்பாட்டை போக்கிய பங்கு சென்னை செனாய்நகரில் உள்ள கிரிமால்டஸ் மருத்துவமனைக்கு உண்டு. மேலும், காசநோய், சருமநோய்க்கு சிகிச்சை அளிப்பதில் முதன்மை மருத்துவமனையாக விளங்கி வருகிறது.

அப்படிப்பட்ட பாரம்பரிய மிக்க, சென்னையில் பிரபலமாக உள்ள கிரிமால்டஸ் மருத்துவமனையின் பொன் விழா ஆண்டு கொண்டாட்டம் சேத்துப்பட்டில் உள்ள யூனியன் கிறிஸ்டியன் அசோசியேஷன் பாராமெடிக்கல் கல்லூரியில் நடந்தது. விழாவிற்கு மருத்துவமனையின் தலைவர் குரியன் தாமஸ் தலைமை வகித்து . இந்த விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி கலந்து கொண்டார்.

மேலும் அவர் மருத்துவமனை வளர்ச்சிக்காகவும், மக்களுக்கு சிறப்பாக மருத்துவ சேவை புரிந்தவர்களுக்கும், சேவை புரிந்து வருபவர்களுக்கும் என 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறப்பு விருதுகளை வழங்கி கெளரவித்தார். இந்த மருத்துவமனையின் செயல்பாட்டை பொதுமக்கள் மட்டுமல்லாது, அரசு துறை அதிகாரிகள், மருத்துவர்கள் என பலரும் பாராட்டினர். அந்த பாராட்டின் வடிவம்தான் இந்த பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் நடக்கிறது என மருத்துவமனையின் இயக்குநர் மரியநாதன் தெரிவித்தார்.

பதிவு: December 20, 2021

முக்கிய செய்திகள்

'தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு கெடவில்லை; மாறாக சிலர் அதை கெடுக்க நினைத்து செயல்படுகின்றனர்' - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைக் கெடுக்க சிலர் நினைத்து செயல்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

அரியலூர் மாவட்டத்தில் 27,070 பயனாளிகளுக்கு ரூ.52 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,

"ஒரு முதலமைச்சர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் கடந்த 10 ஆண்டாக இருந்த அதிமுக ஆட்சி. கையில் அதிகாரம் இருந்தும் எதுவும் செய்யாமல் கைகட்டி வேடிக்கை பார்த்ததுதான் கடந்த கால அதிமுக ஆட்சி. கடந்த 10 ஆண்டுகள் கால ஆட்சியின் சீரழிவை மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து புகார்கள் கொடுக்கின்றனர். விமர்சனங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல; அவற்றை வரவேற்கிறோம், ஆனால் விஷமத்தனம் கூடாது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போகவில்லை. மாறாக சட்டம் ஒழுங்கைக் கெடுக்கலாமா என்று சிலர் நினைக்கின்றனர். சிலரின் வயது எரிகிறது. ஒரு ஆட்சி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக இந்த ஆட்சி நடைபெறுகிறது" இவ்வாறு பேசினார். 

பதிவு: December 06, 2022
'கோழிக்கு அரிசி போட்டு பிடிப்பதுபோல் நம்மை தமிழை வைத்து பிடிக்கப்பார்க்கின்றனர்' - காசி தமிழ் சங்கமம் நிகழ்வை சாடிய சீமான்!

கோழிகளுக்கு அரிசியைப் போட்டு பிடிப்பது போல் தமிழர்களை மொழியை வைத்து பாஜக பிடிக்கத் திட்டமிடுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் பேசியதாவது: 

"காசி தமிழ்ச்சங்கமம் எனக்காகத்தான் நடத்தப்பட்டது. நான் வேல் தூக்கினால் அவர்களும் வேலைத் தூக்குவார்கள்; நான் முருகா என்றால் அவர்களும் முருகா என்பார்கள்; நான் ஈழம் பற்றிப் பேசினால் அவர்களும் ஈழம் என்பார்கள். ஆனால், நான் கச்சத்தீவு மீட்பு பற்றி பேசினால் மட்டும் எதுவும் பேசமாட்டார்கள். காவிரி நதிநீர் குறித்துப் பேசினால் எதுவும் பேசாமாட்டார்கள்.

நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் உள்ளதா? நாடாளுமன்றத்தில் தமிழில் பேசமுடியுமா? கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய முடியுமா? இதை விடுத்து காசி தமிழ்ச் சங்கமம் நடத்துவதன் மூலம் எப்படி நீங்கள் தமிழை வளர்ப்பீர்கள்?

கோழியை 'பக் பக் பக்' என்று அரிசி போட்டு பிடிப்பதைப் போல் தமிழை வைத்து தமிழ்நாட்டு மக்களை பிடிக்கப் பார்க்கிறார்கள். கோழி 'நம் பாஷை பேசுகிறாரே' என்று நினைத்து அவரிடம் மாட்டிக்கொண்டு வறுபடுவதைப் போல நாம் மாட்டிவிடக் கூடாது. எச்சரிக்கையாக இருக்கவேண்டும். 

 

பதிவு: November 28, 2022
ஆன்லைன் ரம்மியால் 15 மாதங்களில் நிகழ்ந்துள்ள 33-வது தற்கொலை! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

ஆன்லைன் ரம்மியால் ஒரிசாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், ஆன்லைன் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என் ரவி விரைந்து ஒப்புத அளிக்கவேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

ட்விட்டரில் இதுபற்றி பதிவிட்டுள்ள அவர், 

"தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வந்து தென்காசி மாவட்டம் கரிவலம்வந்த நல்லூரில் கூலி வேலை செய்து வந்த ஒதிஷா பெண் பந்தனா மஜ்கி, ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.70 ஆயிரத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்வு மிகுந்த வேதனை அளிக்கிறது.

ஆன்லைன் சூதாட்டத் தடை செல்லாது என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பிறகு ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் நிகழும் 33-ஆவது தற்கொலை இதுவாகும். கடந்த இரு மாதங்களில் இது நான்காவது தற்கொலை ஆகும்.
 
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான ஒவ்வொரு நகர்வும் பெரும் போராட்டத்திற்கும் பிறகும், சில உயிரிழப்புகளுக்கு பிறகும் தான் சாத்தியமாகிறது. 15 மாதங்களில் விலைமதிப்பற்ற 33 உயிர்களை பறி கொடுத்தும் கூட, ஆன்லைன் சூதாட்டம் இன்னும் தடை செய்யப்படவில்லை
 
ஒரு புறம் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் காலாவதியாகி விட்டது; மறுபுறம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்திற்கு ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் தமிழ்நாடு இனி ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறப்போகிறது
 
ஆன்லைன் சூதாட்டங்களால் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் ஏற்படவிருக்கும் பேராபத்தை தமிழக ஆளுனர் உணரவேண்டும். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 
பதிவு: November 28, 2022
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா ஒப்புதல் ஆளுநரால் காலம் தாழ்த்தப்பட்ட நிலையில் அது காலாவதியாகியுள்ளது! அடுத்த நடவடிக்கை என்ன?

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கான ஒப்புதல் தாமதமாக்கப்பட்ட நிலையில், அது காலாவதியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் காரணமாக தற்கொலைகள் பெருகிவந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதியை மயக்கி உயிரைக் கொல்லும் இந்த விளையாட்டைத் தமிழ்நாடு அரசு தடை செய்யவேண்டும் என்று எதிர்ப்புகள் எழவே, அரசு ஆன்லை ரம்மியைத் தடைசெய்வதற்கான சட்ட மசோதாவை அவசரச்சட்டமாக சட்டபேரவையில் நிறைவேற்றியது. 

இந்நிலையில், ஒப்புதலுக்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா அனுப்பப்பட்ட நிலையில், அதுகுறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டது. தமிழக அரசும் அதற்கு பதில் கடிதத்தை அடுத்த நாளே அனுப்பியது. இதனிடையே, அக்.01 ல் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதா நேற்றுடன் காலாவதியானது.

இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. ஆங்காங்கே ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலைகள் அதிகரித்துவரும் நிலையில், ஆன்லைன் ரம்மி மீது இன்னும் தடைவிதிக்கப்படாதது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 
பதிவு: November 28, 2022
'எங்களுக்கு நீதி கிடைக்கவில்லையெனில் அரசின் அத்தனை உதவிகளையும் திருப்பித்தருவோம்' - உயிரிழந்த வீராங்கனை பிரியாவின் வீட்டார் வேதனை!

தங்களுக்கு நீதி கிடைக்கவில்லையெனில் அரசு தங்களுக்கு வழங்கிய நிவாரண உதவிகளைத் திருப்பித்தந்துவிடுவதாக உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் வீட்டார் வேதனை பொங்கத் தெரிவித்துள்ளனர்.

சென்னை வியாசார்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா கால் எலும்பு சவ்வு பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாக அவர் உயிரிழந்தார். இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து பிரியாவிற்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் இருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை சட்டரீதியாக எடுக்கப்படும் என்று மருத்துவத்துரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதனையடுத்து, உயிரிழந்த பிரியாவின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி, வீடு மற்றும் பிரியாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை ஆகியவை வழங்கப்பட்டன.

இந்நிலையில், பிரியா மரணத்திற்குக் காரணமான மருத்துவர்கள் மீது இன்னும் நடவடிக்கை அரசு தரப்பிலிருந்து எடுக்கப்படவில்லை என்று பிரியாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள், அரசு தரப்பிலிருந்து மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும், அதுபற்றி உறுதியளித்ததால் தான் அரசின் உதவிகளைப் பெற்றுக்கொண்டோம் என்றும், அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அரசின் உதவிகளைத் திருப்பிச்செலுத்துவிடுவோம் என்றும், தங்களுக்கு நீதியே தேவை என்றும் அவர்கள் வேதனை பொங்கத் தெரிவித்துள்ளனர். 

பதிவு: November 26, 2022
பாஜக பெண் நிர்வாகிகளை ஆபாசமாகப் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்! மன்னிப்பு கேட்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

பாஜக பெண் நிர்வாகிகளை தரக்குறைவாகப் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்கை மன்னிப்புக் கேட்கக்கூறி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் அக்கட்சி உறுப்பினர் சைதை சாதிக், பாஜக நிர்வாகிகளான குஷ்பூ, காயத்ரி, நமீதா, கௌதமி ஆகியோரை தரக்குறைவாக சாடி, ஆபாசமான முறையில் பேசினார். இது அக்கட்சி உறுப்பினர்களிடையே கோபத்தை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு கண்டனங்கள் வலுத்தன. மேலும் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், வழக்குக்கு எதிராக சைதை சாதிக் முன்ஜாமீன் கோரியிருந்தார். இதைத்தொடர்ந்து நீதிபதிகள் முன்பாக இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அவர், சம்பந்தப்பட்ட பெண்களிடம் மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என்று வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஸ் சந்திரா உத்தரவிட்டுள்ளார். 

பதிவு: November 26, 2022

மேலும் செய்திகள்

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்