வடகிழக்கு பருவமழை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கடலூர், விழுப்புரம், டெல்டா மாவடங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டார். நேற்றும் 6-வது நாளாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார். தண்ணீர் தேங்கி உள்ள பகுதிகளை பார்வையிட்ட முதல்வர், அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தவும் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்ய உள்ளார். இதற்காக நேற்று இரவே புதுச்சேரி சென்றார். இரவு அங்கு தங்கி இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று காலை புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு டெல்டா மாவட்டங்களான கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் கனமழையினால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை பார்வையிடுகிறார்.
காலை 7.30 மணி முதல் கடலூர் மாவட்டம் அரங்கமங்கலம், அடூர் அகரம் பகுதியில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், காலை 9.30 மணி முதல் மயிலாடுதுறை மாவட்டம் இருக்கூர், தரங்கம்பாடி பகுதிகளில் பார்வையிட்டார். அப்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். அதன்பிறகு, காலை 11.30 மணி முதல் நாகப்பட்டினம் மாவட்டம் கருங்கனி, அருந்தவபுலம் பகுதிகளிலும், திருவாரூர் மாவட்டம் ராயநல்லூர், புழுதிக்குடி பகுதிகளிலும், மாலை 3.30 மணி முதல் தஞ்சாவூர் மாவட்டம் பெரியக்கோட்டை பகுதியிலும் முதல்வர் ஆய்வு மேற்கொள்கிறார்.
இந்த ஆய்வின்போது பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை நேரில் கேட்டறியும் முதல்வர் ஸ்டாலின், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அதிகாரிகளுக்கும் உத்தவிட உள்ளார். மேலும், டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழைபாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவும் இன்று முதல்வரை சந்தித்து பாதிப்புகள் குறித்து விளக்குவார்கள் என்றும் கூறப்படுகிறது.