11 உயிர்களைப் பறித்துள்ள தஞ்சை தேர் விபத்து! விபத்துக்குக் காரணம் என்ன?

தஞ்சை களிமேடு பகுதியில் ஏற்பட்ட தேர் விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில், விபத்திற்கு காரணம் என்ன என்பது குறித்த செய்திகள் வெளியாகிவருகின்றன.

தஞ்சை மாவட்டம், களிமேடு கிராமத்தில் அப்பர் மடம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் அப்பர் சதய விழா கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 93 ஆண்டுகளாக கொண்டாடப்பட்டுவரும் இத்திருவிழா, 94-ஆம் ஆண்டாக இவ்வாண்டும் கடந்த செவ்வாய் அன்று தொடங்கி கொண்டாடப்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்றைய தினம் அதிகாலை தேரோட்டம் தொடங்கி நடைபெற்றுவந்த நிலையில், சுமார் 3 மணியளவில் தேர் சாலையின் வளைவில் திரும்புகையில், சாலையின் பக்கவாட்டில் சென்ற உயர்மின் அழுத்தப் பாதையில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து தேர் தீப்பற்றி எரியத்துவங்கியுள்ளது. மேலும் தேரில் மற்றும் தேரைச் சுற்றியிருந்த 11 பேர் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கவலைகளைத் தெரிவித்து வருகின்றனர். தேர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விபத்திற்கு மின் கம்பிகளின் பாதை சாலையின் ஓரத்தில் அமைக்கப்படாததே காரணம் என குற்றம் சாட்டுகின்றனர் களிமேடு பகுதி மக்கள்.

இதுகுறித்து களிமேடு கிராம மக்கள் கூறுகையில், ‘தேர், சாலையின் வளைவில் திரும்புகையில், சாலையில் இருந்த மேடு காரணமாக நிலைதடுமாறி சற்றே சாய்ந்து, சாலையின் பக்கவாட்டில் இருந்த மின்னழுத்தப் பாதையில் உரசி விபத்து ஏற்பட்டது. அரசு அதிகாரிகள் சாலை விரிவாக்கத்தின்போது மின்பாதைகளை தள்ளி அமைக்காமல் கவனக்குறைவாக அப்படியே வழியில் விட்டுவிட்டதால் தான் தேர் அதில் உரசி இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. மின்சாரம் பாய்ந்ததில் அதில் இருந்தவர்கள், தேரை இயக்கியவர்கள், தேரைச் சுற்றி நின்றுகொண்டிருந்தவர்கள் என அனைவரும் சற்றுநேரத்தில் சுருண்டு விழுந்தனர். இத்தனை ஆண்டுகளில் இவ்வாறு விபத்து நிகழ்ந்ததே இல்லை. இவ்விபத்திற்கு மின்சாரத்துறையும் போக்குவரத்துத் துறையும்தான் காரணம்’ என்று வேதனை தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து விபத்தில் உயிரிழந்த 11 பேரின் உடல் பிரேதப் பரிசோதனை முடிந்து களிமேடு கிராமத்திற்கு கொண்டுவரப்பட தயாராக உள்ளதாகவும், காயமடைந்தவர்களில் ஒருவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பதிவு: April 27, 2022
தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தரப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி...

தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தரப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதிப்பட கூறினார்.

திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதை கண்டறியும் வகையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

தஞ்சை மாணவி தற்கொலைக்கு காரணமாக 68 வயதுடைய பள்ளி விடுதி வார்டன் மனஉளைச்சலை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளனர். உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகமும் விளக்கமளித்த உத்தரவிடப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ பள்ளியாக இருந்தாலும் அங்கு இந்துக்கள் தான் அதிகமாக படித்து வருகின்றனர். அங்கு தற்போது பயின்று வரும் மாணவர்கள், முன்னாள் மாணவர்களிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டது. இந்த கருத்துக்கள் எல்லாம் போலீஸ் அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பாக உரிய தண்டனை பெற்று தரப்படும்.

இதற்கு முன்பாக நடந்த விபத்துகள் வேறு விதமாக இருந்தாலும் இவ்வாறு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளது குறித்து பள்ளிக்கல்வித்துறை மூலமாக விசாரிக்கப்பட்டுள்ளது. வழக்கு நிலுவையில் உள்ளதால் அந்த கருத்துக்கள் போலீஸ் தரப்பிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

இழந்த உயிரை மீண்டும் கொண்டுவர முடியாது என்றாலும், இதுபோன்று மீண்டும் எங்கும் நடக்க கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. தனியார் அமைப்புகள் பாதிக்கப்பட்ட குழந்தையிடம் சென்று இதனால் நடந்திருக்கோ அல்லது அதனால் நடந்திருக்குமோ என்று வினவி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

அந்த இடத்திலும் பாதிக்கப்பட்ட குழந்தை உறுதியாக ஆமா.. இதனால் தான் என்று சொல்லாமல் இருந்திருக்கலாம், போயிருக்கலாம் என்று சொல்லியுள்ளனர். இதில் சோகமான விசயமாக பார்க்கப்படுவது, பெற்றோர்களால் பள்ளி கட்டணம் செலுத்த முடியாத சூழ்நிலையிலும் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள பள்ளி விடுதி வார்டன் தான் பள்ளி கட்டணம் செலுத்தி படிக்க வைத்துள்ளார். இருப்பினும் மனஉளைச்சல் ஏற்பட காரணமாக அவர்களே இருந்துள்ளதால் அவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தனியார் அமைப்புகள் இதனை அரசியல் ஆக்காதீர்கள் என்று அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் தீர விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கூறியனார்.

பதிவு: January 24, 2022
டெல்டா மாவட்டங்களில் ஆய்வை தொடங்கினார் முதல்வர் ஸ்டாலின்!

வடகிழக்கு பருவமழை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கடலூர், விழுப்புரம், டெல்டா மாவடங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டார். நேற்றும் 6-வது நாளாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார். தண்ணீர் தேங்கி உள்ள பகுதிகளை பார்வையிட்ட முதல்வர், அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தவும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்ய உள்ளார். இதற்காக நேற்று இரவே புதுச்சேரி சென்றார். இரவு அங்கு தங்கி இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று காலை புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு டெல்டா மாவட்டங்களான கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் கனமழையினால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை பார்வையிடுகிறார்.

காலை 7.30 மணி முதல் கடலூர் மாவட்டம் அரங்கமங்கலம், அடூர் அகரம் பகுதியில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், காலை 9.30 மணி முதல் மயிலாடுதுறை மாவட்டம் இருக்கூர், தரங்கம்பாடி பகுதிகளில் பார்வையிட்டார். அப்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். அதன்பிறகு, காலை 11.30 மணி முதல் நாகப்பட்டினம் மாவட்டம் கருங்கனி, அருந்தவபுலம் பகுதிகளிலும், திருவாரூர் மாவட்டம் ராயநல்லூர், புழுதிக்குடி பகுதிகளிலும், மாலை 3.30 மணி முதல் தஞ்சாவூர் மாவட்டம் பெரியக்கோட்டை பகுதியிலும் முதல்வர் ஆய்வு மேற்கொள்கிறார்.

இந்த ஆய்வின்போது பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை நேரில் கேட்டறியும் முதல்வர் ஸ்டாலின், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அதிகாரிகளுக்கும் உத்தவிட உள்ளார். மேலும், டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழைபாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவும் இன்று முதல்வரை சந்தித்து பாதிப்புகள் குறித்து விளக்குவார்கள் என்றும் கூறப்படுகிறது.

பதிவு: November 13, 2021

முக்கிய செய்திகள்

'தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு கெடவில்லை; மாறாக சிலர் அதை கெடுக்க நினைத்து செயல்படுகின்றனர்' - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைக் கெடுக்க சிலர் நினைத்து செயல்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

அரியலூர் மாவட்டத்தில் 27,070 பயனாளிகளுக்கு ரூ.52 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,

"ஒரு முதலமைச்சர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் கடந்த 10 ஆண்டாக இருந்த அதிமுக ஆட்சி. கையில் அதிகாரம் இருந்தும் எதுவும் செய்யாமல் கைகட்டி வேடிக்கை பார்த்ததுதான் கடந்த கால அதிமுக ஆட்சி. கடந்த 10 ஆண்டுகள் கால ஆட்சியின் சீரழிவை மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து புகார்கள் கொடுக்கின்றனர். விமர்சனங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல; அவற்றை வரவேற்கிறோம், ஆனால் விஷமத்தனம் கூடாது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போகவில்லை. மாறாக சட்டம் ஒழுங்கைக் கெடுக்கலாமா என்று சிலர் நினைக்கின்றனர். சிலரின் வயது எரிகிறது. ஒரு ஆட்சி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக இந்த ஆட்சி நடைபெறுகிறது" இவ்வாறு பேசினார். 

பதிவு: December 06, 2022
'கோழிக்கு அரிசி போட்டு பிடிப்பதுபோல் நம்மை தமிழை வைத்து பிடிக்கப்பார்க்கின்றனர்' - காசி தமிழ் சங்கமம் நிகழ்வை சாடிய சீமான்!

கோழிகளுக்கு அரிசியைப் போட்டு பிடிப்பது போல் தமிழர்களை மொழியை வைத்து பாஜக பிடிக்கத் திட்டமிடுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் பேசியதாவது: 

"காசி தமிழ்ச்சங்கமம் எனக்காகத்தான் நடத்தப்பட்டது. நான் வேல் தூக்கினால் அவர்களும் வேலைத் தூக்குவார்கள்; நான் முருகா என்றால் அவர்களும் முருகா என்பார்கள்; நான் ஈழம் பற்றிப் பேசினால் அவர்களும் ஈழம் என்பார்கள். ஆனால், நான் கச்சத்தீவு மீட்பு பற்றி பேசினால் மட்டும் எதுவும் பேசமாட்டார்கள். காவிரி நதிநீர் குறித்துப் பேசினால் எதுவும் பேசாமாட்டார்கள்.

நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் உள்ளதா? நாடாளுமன்றத்தில் தமிழில் பேசமுடியுமா? கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய முடியுமா? இதை விடுத்து காசி தமிழ்ச் சங்கமம் நடத்துவதன் மூலம் எப்படி நீங்கள் தமிழை வளர்ப்பீர்கள்?

கோழியை 'பக் பக் பக்' என்று அரிசி போட்டு பிடிப்பதைப் போல் தமிழை வைத்து தமிழ்நாட்டு மக்களை பிடிக்கப் பார்க்கிறார்கள். கோழி 'நம் பாஷை பேசுகிறாரே' என்று நினைத்து அவரிடம் மாட்டிக்கொண்டு வறுபடுவதைப் போல நாம் மாட்டிவிடக் கூடாது. எச்சரிக்கையாக இருக்கவேண்டும். 

 

பதிவு: November 28, 2022
ஆன்லைன் ரம்மியால் 15 மாதங்களில் நிகழ்ந்துள்ள 33-வது தற்கொலை! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

ஆன்லைன் ரம்மியால் ஒரிசாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், ஆன்லைன் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என் ரவி விரைந்து ஒப்புத அளிக்கவேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

ட்விட்டரில் இதுபற்றி பதிவிட்டுள்ள அவர், 

"தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வந்து தென்காசி மாவட்டம் கரிவலம்வந்த நல்லூரில் கூலி வேலை செய்து வந்த ஒதிஷா பெண் பந்தனா மஜ்கி, ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.70 ஆயிரத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்வு மிகுந்த வேதனை அளிக்கிறது.

ஆன்லைன் சூதாட்டத் தடை செல்லாது என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பிறகு ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் நிகழும் 33-ஆவது தற்கொலை இதுவாகும். கடந்த இரு மாதங்களில் இது நான்காவது தற்கொலை ஆகும்.
 
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான ஒவ்வொரு நகர்வும் பெரும் போராட்டத்திற்கும் பிறகும், சில உயிரிழப்புகளுக்கு பிறகும் தான் சாத்தியமாகிறது. 15 மாதங்களில் விலைமதிப்பற்ற 33 உயிர்களை பறி கொடுத்தும் கூட, ஆன்லைன் சூதாட்டம் இன்னும் தடை செய்யப்படவில்லை
 
ஒரு புறம் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் காலாவதியாகி விட்டது; மறுபுறம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்திற்கு ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் தமிழ்நாடு இனி ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறப்போகிறது
 
ஆன்லைன் சூதாட்டங்களால் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் ஏற்படவிருக்கும் பேராபத்தை தமிழக ஆளுனர் உணரவேண்டும். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 
பதிவு: November 28, 2022
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா ஒப்புதல் ஆளுநரால் காலம் தாழ்த்தப்பட்ட நிலையில் அது காலாவதியாகியுள்ளது! அடுத்த நடவடிக்கை என்ன?

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கான ஒப்புதல் தாமதமாக்கப்பட்ட நிலையில், அது காலாவதியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் காரணமாக தற்கொலைகள் பெருகிவந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதியை மயக்கி உயிரைக் கொல்லும் இந்த விளையாட்டைத் தமிழ்நாடு அரசு தடை செய்யவேண்டும் என்று எதிர்ப்புகள் எழவே, அரசு ஆன்லை ரம்மியைத் தடைசெய்வதற்கான சட்ட மசோதாவை அவசரச்சட்டமாக சட்டபேரவையில் நிறைவேற்றியது. 

இந்நிலையில், ஒப்புதலுக்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா அனுப்பப்பட்ட நிலையில், அதுகுறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டது. தமிழக அரசும் அதற்கு பதில் கடிதத்தை அடுத்த நாளே அனுப்பியது. இதனிடையே, அக்.01 ல் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதா நேற்றுடன் காலாவதியானது.

இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. ஆங்காங்கே ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலைகள் அதிகரித்துவரும் நிலையில், ஆன்லைன் ரம்மி மீது இன்னும் தடைவிதிக்கப்படாதது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 
பதிவு: November 28, 2022
'எங்களுக்கு நீதி கிடைக்கவில்லையெனில் அரசின் அத்தனை உதவிகளையும் திருப்பித்தருவோம்' - உயிரிழந்த வீராங்கனை பிரியாவின் வீட்டார் வேதனை!

தங்களுக்கு நீதி கிடைக்கவில்லையெனில் அரசு தங்களுக்கு வழங்கிய நிவாரண உதவிகளைத் திருப்பித்தந்துவிடுவதாக உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் வீட்டார் வேதனை பொங்கத் தெரிவித்துள்ளனர்.

சென்னை வியாசார்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா கால் எலும்பு சவ்வு பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாக அவர் உயிரிழந்தார். இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து பிரியாவிற்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் இருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை சட்டரீதியாக எடுக்கப்படும் என்று மருத்துவத்துரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதனையடுத்து, உயிரிழந்த பிரியாவின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி, வீடு மற்றும் பிரியாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை ஆகியவை வழங்கப்பட்டன.

இந்நிலையில், பிரியா மரணத்திற்குக் காரணமான மருத்துவர்கள் மீது இன்னும் நடவடிக்கை அரசு தரப்பிலிருந்து எடுக்கப்படவில்லை என்று பிரியாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள், அரசு தரப்பிலிருந்து மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும், அதுபற்றி உறுதியளித்ததால் தான் அரசின் உதவிகளைப் பெற்றுக்கொண்டோம் என்றும், அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அரசின் உதவிகளைத் திருப்பிச்செலுத்துவிடுவோம் என்றும், தங்களுக்கு நீதியே தேவை என்றும் அவர்கள் வேதனை பொங்கத் தெரிவித்துள்ளனர். 

பதிவு: November 26, 2022
பாஜக பெண் நிர்வாகிகளை ஆபாசமாகப் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்! மன்னிப்பு கேட்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

பாஜக பெண் நிர்வாகிகளை தரக்குறைவாகப் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்கை மன்னிப்புக் கேட்கக்கூறி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் அக்கட்சி உறுப்பினர் சைதை சாதிக், பாஜக நிர்வாகிகளான குஷ்பூ, காயத்ரி, நமீதா, கௌதமி ஆகியோரை தரக்குறைவாக சாடி, ஆபாசமான முறையில் பேசினார். இது அக்கட்சி உறுப்பினர்களிடையே கோபத்தை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு கண்டனங்கள் வலுத்தன. மேலும் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், வழக்குக்கு எதிராக சைதை சாதிக் முன்ஜாமீன் கோரியிருந்தார். இதைத்தொடர்ந்து நீதிபதிகள் முன்பாக இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அவர், சம்பந்தப்பட்ட பெண்களிடம் மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என்று வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஸ் சந்திரா உத்தரவிட்டுள்ளார். 

பதிவு: November 26, 2022

மேலும் செய்திகள்

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்