அமராவதி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 6 பேர் குடும்பத்துக்கும் ரூ.25 லட்சம் நிவாரண நிதி; தலா ஒருவருக்கு அரசு வேலை- ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தல்...

அமராவதி ஆற்றில் உயிரிழந்த 6 பேருக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண நிதி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிளைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திண்டுக்கல் மாவட்டம், மாம்பறை பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருக்கையில் தாராபுரம் அமராவதி ஆற்றின் புதுப்பாலம் பகுதியில் வரும்போது வாகனத்தை நிறுத்திவிட்டு அமராவதி ஆற்றில் இறங்கி குளித்ததில் ஆறு சிறுவர்கள் உயிரிழந்தனர்.

அதற்குக் காரணம் திமுக.,வினரால் திருட்டு மணல் அள்ளப்பட்டது தான் என்று அப்பகுதி மக்கள் தெரிவிப்பது என்னை மிகுந்த மன வேதனையில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்தவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துவதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மாதம் 17-ஆம் தேதி திருப்பூர் இடுவாய் கிராமம் அண்ணாமலை கார்டன் பகுதியைச் சேர்ந்த திருவாளர்கள் அமிர்தகிருஷ்ணன், ஸ்ரீதர், யுவன், மோகன், சக்கரவர்மன், ரஞ்சித், ஜீவா மற்றும் சரண் ஆகிய எட்டு பேர் கோவிலுக்குச் சென்றுவிட்டு திரும்பும் வழியில் அமராவதி ஆற்றில் இறங்கிக் குளித்தனர்.

இவர்களில் திருவாளர்கள் ஜீவா மற்றும் சரண் தவிர எஞ்சிய ஆறு பேரும் ஆற்றில் மூழ்கி பலியாகிவிட்டதாகவும், இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரில் மூழ்கிய ஆறு பேர்களின் உடல்களை மீட்டெடுத்து பிரேதப் பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவர்களை காப்பாற்ற முயன்று படுகாயமுற்ற திருவாளர்கள் ஜீவா மற்றும் சரண் ஆகியோர் தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டு அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்திற்குக் காரணம் சம்பவம் நடந்த பகுதியில் எச்சரிக்கை பலகை எதுவும் வைக்கப்படவில்லை என்றும் பத்திரிகைகளில் செய்திகள் வந்தன.

ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் மருத்துவமனைக்குச் சென்று ஆறுதல் கூறியதாகவும், முதல்வரின் நிவாரண உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு வருவாய்த் துறையினருக்கு அறிவுரை வழங்கியதாகவும் செய்திகள் வந்தன. ஆனால், இதுவரை எந்தவித நிவாரண உதவியும் வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை.

இந்தச் சூழ்நிலையில், விபத்திற்கு வேறுவிதமான காரணங்களை பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சார்ந்தவர்களும், அப்பகுதி மக்களும் தெரிவிக்கின்றனர்.

அதாவது, அண்மையில் அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்படுவதற்கு முன்பு மாணவர்கள் குளித்த பகுதியில் முழங்கால் அளவுக்குத்தான் தண்ணீர் இருந்ததாகவும், ஆழமான பகுதியாக அது இல்லை என்றும், தண்ணீர் குறைவாக இருந்த சமயத்தில் சுமார் இருபது அடி ஆழத்திற்கு திமுகவினரால் திருட்டு மணல் அள்ளப்பட்டு கடத்தப்பட்டதாகவும், பின்னர் ஆற்றிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டவுடன் அந்தப் பகுதி ஆழமான பகுதியாகிவிட்டதாகவும், இந்த மணல் திருட்டுதான் அப்பாவி மாணவர்களின் உயிரிழப்புக் காரணம் என்றும், இதனை மூடி மறைக்கும் பணியில் ஆளும் கட்சியினரும், அரசு நிர்வாகமும் ஈடுபடுவதாகவும் தகவல்கள் வருகின்றன.

மாணவர்களின் உயிரிழப்புக்கு திருட்டு மணல் அள்ளப்பட்டதும், அதனை அரசு நிர்வாகம் வேடிக்கைப் பார்த்ததும்தான் காரணம் என்பதாலும், உயிரிழந்தவர்களைச் சேர்ந்த அனைத்துக் குடும்பங்களும் மிக ஏழ்மை நிலையில் உள்ளதாலும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 25 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட வேண்டும் என்பதும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்பட வேண்டும் என்பதும் பாதிக்கப்பட்டோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அனைத்துக் குடும்பங்களும் இளம் பிள்ளைகளை பறிகொடுத்துவிட்டு தவித்துக் கொண்டிருக்கின்றன.

எனவே, தமிழக முதல்வர் இதில் தனிக் கவனம் செலுத்தி, இளம் பிள்ளைகள் உயிரிழப்புகளுக்கு காரணமான திருட்டு மணல் அள்ளப்பட்டது குறித்து தீர விசாரித்து தவறிழைத்தோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 இலட்சம் ரூபாய் நிவாரண உதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கவும் நடவடிக்கை எடுக்குமாறு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

பதிவு: January 24, 2022
`பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பில் அரசு அலட்சியம் காட்டக் கூடாது!'- அடுத்தடுத்து சிறுமிகள் மர்மக் கொலையால் அன்புமணி காட்டம்

"பாச்சலூர் பள்ளி மாணவி, கோவை குழந்தை ஆகியோர் மர்மமாக படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் உள்ள குற்றவாளிகள் விரைந்து கண்டறியப்பட்டு, அவர்களுக்கு சட்டப்படி அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தர காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் தமிழ்நாடு அரசும், காவல்துறையும் எந்தவித சமரசமும், அலட்சியமும் காட்டக் கூடாது" என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை அடுத்த பாச்சலூரிலும், கோவை மாவட்டம் சரவணம்பட்டி அருகிலும் அடுத்தடுத்து இரு பெண் பிஞ்சுகள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. பாச்சலூர் மாணவி கொலைக்கு காரணமான சதிகாரர்கள் இதுவரை கைது செய்யப்படாதது பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொடைக்கானலை அடுத்த பாச்சலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த மாணவி நேற்று முன்நாள் பிற்பகலில் பள்ளிக்கட்டிடத்திற்கு பின்புறத்தில் பாதி உடல் எரிந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாள். அக்குழந்தையை பெற்றோர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும், செல்லும் வழியிலேயே அந்த பெண் பிஞ்சு உயிரிழந்துவிட்டது. அதேபோல், கோவை மாவட்டம் சரவணம்பட்டி அருகே கடந்த 11-ம் தேதி காணாமல் போன 15 வயது சிறுமி, ஐந்து நாட்களுக்குப் பிறகு நேற்று யமுனா நகரில் கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் சாக்கு மூட்டையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டிருக்கிறாள். வாழ வேண்டிய இரு பிஞ்சுகளின் படுகொலைகள் நெஞ்சத்தை உருக்குகின்றன. இந்த இரு கொலைகளும் தடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

பாச்சலூர் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த ஒன்பது வயது குழந்தையின் சாவுக்கு பள்ளி நிர்வாகமும், காவல்துறையும் தான் பொறுப்பேற்க வேண்டும். பள்ளிக்கூடத்தில் காலை 11 மணிக்கு, மதிய உணவுக்கு முந்தைய இடைவேளையின் போது வகுப்பை விட்டுச் சென்ற அந்தக் குழந்தை, இடைவேளை முடிந்த பிறகும் வகுப்புக்குத் திரும்பவில்லை. ஆனால், அதை ஆசிரியர்கள் அறியவில்லை. மதிய உணவு இடைவேளையின் போது அந்தக் குழந்தையை அதே பள்ளியில் ஆறாம் வகுப்பு பயிலும் அதன் அக்கா பள்ளி முழுவதும் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. அது குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் தெரிவித்தும்கூட, காணாமல் போன குழந்தையை தேட அவர்கள் முயற்சிக்கவில்லை.

அதன்பின்னர், மூத்தக் குழந்தை வீட்டுக்குச் சென்று பெற்றோரை அழைத்து வந்திருக்கிறாள். அவர்கள் தான் பள்ளிக்கட்டிடத்திற்கு பின்னால் பாதி எரிந்த நிலையில் குழந்தையை கண்டெடுத்திருக்கிறார்கள். அக்குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குக் கூட பள்ளி நிர்வாகம் முன்வரவில்லை. தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் சுமார் 50 லட்சம் மாணவர்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுமார் 30 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். அண்மைக்காலங்களில் அரசு பள்ளிகளில் அதிக மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர். நம்பி வரும் குழந்தைகளுக்கு, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு தேவையான பாதுகாப்பை அரசு பள்ளிகளால் தர முடியவில்லை என்றால், அதைவிட மிகக்கொடிய கடமை தவறுதல் எதுவும் இருக்க முடியாது. இந்த அவலத்தை போக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாச்சலூர் பள்ளிக்குழந்தை கொலை செய்யப்பட்டு இரு நாட்களாகியும் விசாரணையில் முன்னேற்றம் இல்லை. கோவை மாணவி காணாமல் போய் ஐந்து நாட்களாகியும் காவல்துறை கண்டுபிடிக்கத் தவறியதால் தான் அக்குழந்தை படுகொலை செய்யப்பட்டிருக்கிறாள். கோவை மாணவியை அவரது குடும்ப நண்பரே பாலியல் வன்கொடுமை செய்து கொண்டிருக்கிறார். மாணவி காணாமல் போனதாக புகார் வந்த போதே காவல்துறை விசாரணையை தொடங்கியிருந்தால் குற்றவாளியை பிடித்து மாணவியை மீட்டிருக்கலாம்.

குற்றங்கள் நடந்த பின் குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிப்பது ஒரு வகையான கடமை என்றால், அத்தகைய குற்றங்கள் நடக்காமல் தடுப்பது அதைவிட முதன்மையாக கடமை ஆகும். சிறிய குற்றம் செய்தால் கூட காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க முடியாது என்ற உணர்வு சமூகத்தில் இருந்தாலே குற்றங்கள் குறைந்து விடும். ஆனால், அத்தகைய கடமைகளை நிறைவேற்றுவதில் காவல்துறை தவறுகிறதோ? என்ற ஐயத்தையும், கவலையையும் அண்மைக்காலத்தில் பெண் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் ஏற்படுத்துகின்றன.

பாச்சலூரில் குழந்தையை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்காத காவல்துறையினர், குற்றவாளிகளை கண்டுபிடிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்திய பெற்றோரையும், பொதுமக்களையும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இப்போக்கை ஏற்றுக்கொள்ள முடியாது. அண்மைக் காலங்களில் மாணவிகள் உள்ளிட்ட பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுதல், அதைத் தாங்கிக் கொள்ள முடியாத மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளுதல், பெண் குழந்தைகள் மர்மமாகக் கொல்லப்படுதல் போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பெண் குழந்தைகளை பாதுகாக்க முடியாத சமூகம் அதற்காக வெட்கித் தலைகுனிய வேண்டும். தமிழ்ச் சமூகத்திற்கு அத்தகைய நிலை ஏற்படக்கூடாது.

பாச்சலூர் பள்ளி மாணவி, கோவை குழந்தை ஆகியோர் மர்மமாக படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் உள்ள குற்றவாளிகள் விரைந்து கண்டறியப்பட்டு, அவர்களுக்கு சட்டப்படி அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தர காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் தமிழ்நாடு அரசும், காவல்துறையும் எந்தவித சமரசமும், அலட்சியமும் காட்டக் கூடாது" என்று வலியுறுத்தியுள்ளார்.

பதிவு: December 17, 2021

முக்கிய செய்திகள்

'தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு கெடவில்லை; மாறாக சிலர் அதை கெடுக்க நினைத்து செயல்படுகின்றனர்' - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைக் கெடுக்க சிலர் நினைத்து செயல்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

அரியலூர் மாவட்டத்தில் 27,070 பயனாளிகளுக்கு ரூ.52 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,

"ஒரு முதலமைச்சர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் கடந்த 10 ஆண்டாக இருந்த அதிமுக ஆட்சி. கையில் அதிகாரம் இருந்தும் எதுவும் செய்யாமல் கைகட்டி வேடிக்கை பார்த்ததுதான் கடந்த கால அதிமுக ஆட்சி. கடந்த 10 ஆண்டுகள் கால ஆட்சியின் சீரழிவை மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து புகார்கள் கொடுக்கின்றனர். விமர்சனங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல; அவற்றை வரவேற்கிறோம், ஆனால் விஷமத்தனம் கூடாது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போகவில்லை. மாறாக சட்டம் ஒழுங்கைக் கெடுக்கலாமா என்று சிலர் நினைக்கின்றனர். சிலரின் வயது எரிகிறது. ஒரு ஆட்சி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக இந்த ஆட்சி நடைபெறுகிறது" இவ்வாறு பேசினார். 

பதிவு: December 06, 2022
'கோழிக்கு அரிசி போட்டு பிடிப்பதுபோல் நம்மை தமிழை வைத்து பிடிக்கப்பார்க்கின்றனர்' - காசி தமிழ் சங்கமம் நிகழ்வை சாடிய சீமான்!

கோழிகளுக்கு அரிசியைப் போட்டு பிடிப்பது போல் தமிழர்களை மொழியை வைத்து பாஜக பிடிக்கத் திட்டமிடுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் பேசியதாவது: 

"காசி தமிழ்ச்சங்கமம் எனக்காகத்தான் நடத்தப்பட்டது. நான் வேல் தூக்கினால் அவர்களும் வேலைத் தூக்குவார்கள்; நான் முருகா என்றால் அவர்களும் முருகா என்பார்கள்; நான் ஈழம் பற்றிப் பேசினால் அவர்களும் ஈழம் என்பார்கள். ஆனால், நான் கச்சத்தீவு மீட்பு பற்றி பேசினால் மட்டும் எதுவும் பேசமாட்டார்கள். காவிரி நதிநீர் குறித்துப் பேசினால் எதுவும் பேசாமாட்டார்கள்.

நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் உள்ளதா? நாடாளுமன்றத்தில் தமிழில் பேசமுடியுமா? கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய முடியுமா? இதை விடுத்து காசி தமிழ்ச் சங்கமம் நடத்துவதன் மூலம் எப்படி நீங்கள் தமிழை வளர்ப்பீர்கள்?

கோழியை 'பக் பக் பக்' என்று அரிசி போட்டு பிடிப்பதைப் போல் தமிழை வைத்து தமிழ்நாட்டு மக்களை பிடிக்கப் பார்க்கிறார்கள். கோழி 'நம் பாஷை பேசுகிறாரே' என்று நினைத்து அவரிடம் மாட்டிக்கொண்டு வறுபடுவதைப் போல நாம் மாட்டிவிடக் கூடாது. எச்சரிக்கையாக இருக்கவேண்டும். 

 

பதிவு: November 28, 2022
ஆன்லைன் ரம்மியால் 15 மாதங்களில் நிகழ்ந்துள்ள 33-வது தற்கொலை! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

ஆன்லைன் ரம்மியால் ஒரிசாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், ஆன்லைன் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என் ரவி விரைந்து ஒப்புத அளிக்கவேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

ட்விட்டரில் இதுபற்றி பதிவிட்டுள்ள அவர், 

"தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வந்து தென்காசி மாவட்டம் கரிவலம்வந்த நல்லூரில் கூலி வேலை செய்து வந்த ஒதிஷா பெண் பந்தனா மஜ்கி, ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.70 ஆயிரத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்வு மிகுந்த வேதனை அளிக்கிறது.

ஆன்லைன் சூதாட்டத் தடை செல்லாது என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பிறகு ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் நிகழும் 33-ஆவது தற்கொலை இதுவாகும். கடந்த இரு மாதங்களில் இது நான்காவது தற்கொலை ஆகும்.
 
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான ஒவ்வொரு நகர்வும் பெரும் போராட்டத்திற்கும் பிறகும், சில உயிரிழப்புகளுக்கு பிறகும் தான் சாத்தியமாகிறது. 15 மாதங்களில் விலைமதிப்பற்ற 33 உயிர்களை பறி கொடுத்தும் கூட, ஆன்லைன் சூதாட்டம் இன்னும் தடை செய்யப்படவில்லை
 
ஒரு புறம் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் காலாவதியாகி விட்டது; மறுபுறம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்திற்கு ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் தமிழ்நாடு இனி ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறப்போகிறது
 
ஆன்லைன் சூதாட்டங்களால் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் ஏற்படவிருக்கும் பேராபத்தை தமிழக ஆளுனர் உணரவேண்டும். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 
பதிவு: November 28, 2022
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா ஒப்புதல் ஆளுநரால் காலம் தாழ்த்தப்பட்ட நிலையில் அது காலாவதியாகியுள்ளது! அடுத்த நடவடிக்கை என்ன?

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கான ஒப்புதல் தாமதமாக்கப்பட்ட நிலையில், அது காலாவதியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் காரணமாக தற்கொலைகள் பெருகிவந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதியை மயக்கி உயிரைக் கொல்லும் இந்த விளையாட்டைத் தமிழ்நாடு அரசு தடை செய்யவேண்டும் என்று எதிர்ப்புகள் எழவே, அரசு ஆன்லை ரம்மியைத் தடைசெய்வதற்கான சட்ட மசோதாவை அவசரச்சட்டமாக சட்டபேரவையில் நிறைவேற்றியது. 

இந்நிலையில், ஒப்புதலுக்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா அனுப்பப்பட்ட நிலையில், அதுகுறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டது. தமிழக அரசும் அதற்கு பதில் கடிதத்தை அடுத்த நாளே அனுப்பியது. இதனிடையே, அக்.01 ல் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதா நேற்றுடன் காலாவதியானது.

இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. ஆங்காங்கே ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலைகள் அதிகரித்துவரும் நிலையில், ஆன்லைன் ரம்மி மீது இன்னும் தடைவிதிக்கப்படாதது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 
பதிவு: November 28, 2022
'எங்களுக்கு நீதி கிடைக்கவில்லையெனில் அரசின் அத்தனை உதவிகளையும் திருப்பித்தருவோம்' - உயிரிழந்த வீராங்கனை பிரியாவின் வீட்டார் வேதனை!

தங்களுக்கு நீதி கிடைக்கவில்லையெனில் அரசு தங்களுக்கு வழங்கிய நிவாரண உதவிகளைத் திருப்பித்தந்துவிடுவதாக உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் வீட்டார் வேதனை பொங்கத் தெரிவித்துள்ளனர்.

சென்னை வியாசார்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா கால் எலும்பு சவ்வு பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாக அவர் உயிரிழந்தார். இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து பிரியாவிற்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் இருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை சட்டரீதியாக எடுக்கப்படும் என்று மருத்துவத்துரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதனையடுத்து, உயிரிழந்த பிரியாவின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி, வீடு மற்றும் பிரியாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை ஆகியவை வழங்கப்பட்டன.

இந்நிலையில், பிரியா மரணத்திற்குக் காரணமான மருத்துவர்கள் மீது இன்னும் நடவடிக்கை அரசு தரப்பிலிருந்து எடுக்கப்படவில்லை என்று பிரியாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள், அரசு தரப்பிலிருந்து மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும், அதுபற்றி உறுதியளித்ததால் தான் அரசின் உதவிகளைப் பெற்றுக்கொண்டோம் என்றும், அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அரசின் உதவிகளைத் திருப்பிச்செலுத்துவிடுவோம் என்றும், தங்களுக்கு நீதியே தேவை என்றும் அவர்கள் வேதனை பொங்கத் தெரிவித்துள்ளனர். 

பதிவு: November 26, 2022
பாஜக பெண் நிர்வாகிகளை ஆபாசமாகப் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்! மன்னிப்பு கேட்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

பாஜக பெண் நிர்வாகிகளை தரக்குறைவாகப் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்கை மன்னிப்புக் கேட்கக்கூறி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் அக்கட்சி உறுப்பினர் சைதை சாதிக், பாஜக நிர்வாகிகளான குஷ்பூ, காயத்ரி, நமீதா, கௌதமி ஆகியோரை தரக்குறைவாக சாடி, ஆபாசமான முறையில் பேசினார். இது அக்கட்சி உறுப்பினர்களிடையே கோபத்தை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு கண்டனங்கள் வலுத்தன. மேலும் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், வழக்குக்கு எதிராக சைதை சாதிக் முன்ஜாமீன் கோரியிருந்தார். இதைத்தொடர்ந்து நீதிபதிகள் முன்பாக இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அவர், சம்பந்தப்பட்ட பெண்களிடம் மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என்று வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஸ் சந்திரா உத்தரவிட்டுள்ளார். 

பதிவு: November 26, 2022

மேலும் செய்திகள்

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்