வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு அதிகாலையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
பூலோக வைகுண்டம் என்று போற்றி வணங்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாத ஆலயத்தில் பிரசித்தி பெற்ற வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 3-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. 21 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் பகல் பத்து தினம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் நம்பெருமாள் நாச்சியர் எனப்படும் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று அதிகாலை 3.30 மணிக்கு நடந்தது.
அதனை முன்னிட்டு அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உட்பட பல்வேறு திருஆபரணங்கள் அணிந்து புறப்பட்டு ராஜமகேந்திரன் சுற்று வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியே குலசேகரன் திருச்சுற்றில் உள்ள தங்கக் கொடி மரத்தை சுற்றி துரைப்பிரகாரம் வழியாக சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் கடந்து சென்றார். சொர்க்கவாசல் திறப்புக்கு பின்னர் நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருள்வார்.
ரங்கா ரங்கா கோபுரம் வழியாக காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். செர்க்கவாசல் திறப்பின் போது அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குடும்பத்துடன் கலந்துகொண்டு நம்பெருமாள் தரிசனம் செய்தார். மேலும் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவை காண்பதற்காக பக்தர்கள் உலகெங்கும் இருந்து ஸ்ரீரங்கம் வந்துள்ளனர். கோயிலை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு 2000க்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஸ்ரீரங்கம் கோயிலை சுற்றி உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும், கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, ரங்கா ரங்கா கோபுரம் வழியாக காலை 7 மணி முதல் 9 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.