சாலையில் நிர்வாணமாக வந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்!- நெகிழ வைத்த பெண்ணின் மனிதநேயம்

நிர்வாணமாக நெடுஞ்சாலையில் நடந்து சென்ற மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு, துணி உடுத்தி, உணவு வழங்கிய நெல்லை பெண்ணின் மனிதநேயம் அனைவரால் பாராட்டப்பட்டு வருகிறது.


திருநெல்வேலி மாவட்டம் மாநகர் பகுதியை ஒட்டிய சொக்கட்டான் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் நந்தினி. இவர், தனது உறவினர் வீட்டுக்குச் செல்வதற்காகக் கங்கைகொண்டானுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். திருநெல்வேலியிலிருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், மனநலம் பாதித்த ஒருவர், ஆடை ஏதும் இல்லாமல் சுற்றித் திரிவதைப் பார்த்துள்ளார். உடனடியாக தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திய நந்தினி, தன்னிடம் இருந்த துணியை எடுத்து மனநலம் பாதித்தவரின் அருகில் சென்று, அவருக்கு துணியைக் கொடுத்திருக்கிறார். ஆனால் அவர் ஆடை வேண்டாம் என தவிர்த்திருக்கிறார். ஒருகட்டத்தில் நந்தினியே துணியை அந்த நபருக்குக் கட்டி விட்டிருக்கிறார்.

இதனையடுத்து துணியை உடுத்திக்கொண்டவர் அருகிலிருந்த சிறிய பாறை மீது அமர்ந்துகொண்டார். உடனே அருகிலிருந்த உணவகத்திற்குச் சென்ற நந்தினி, உணவும், தண்ணீரும் வாங்கி வந்து அவருக்குச் சாப்பாடு ஊட்டி விட்டதை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும் நந்தினியின் இந்த மனிதநேய செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

பதிவு: December 22, 2021
நீட் தற்கொலை... ஒமிக்ரான் பரவல்... மாணவர்கள் பலி.!- ராமதாஸ் அடுத்தடுத்து ட்வீட்

மாணவர்களின் தற்கொலையை தடுப்பதற்கு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவது தான் ஒரே தீர்வு என்றும் விழிப்புடன் இருந்திருந்தால் ஒமிக்ரான் பாதிப்பை தவிர்த்திருக்கலாம் என்றும் பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து தவறு இழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தனது முதல் ட்வீட்டில், "சென்னையை அடுத்த புழல் காவாங்கரையை சேர்ந்த சுஜித் என்ற மாணவர் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மருத்துவப் படிப்பில் சேர முடியாது என்ற கவலையில் தற்கொலை செய்து கொண்டது வேதனையளிகிறது. அவரது குடும்பத்திற்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். நீட் தேர்வு அச்சம் மற்றும் தோல்வியால் நடப்பாண்டில் தற்கொலை செய்து கொண்ட ஏழாவது மாணவர் சுஜித் ஆவார். மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க மத்திய மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருத்தமளிக்கிறது.

மாணவர்களின் தற்கொலையை தடுப்பதற்கு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவது தான் ஒரே தீர்வு. ஆனால், அதற்கான தமிழக அரசின் சட்டத்திற்கு இன்னும் ஆளுனரின் ஒப்புதல் கூட பெறப்படவில்லை. இந்த நிச்சயமற்ற நிலை நீடிக்கக் கூடாது. இன்னும் சில மாதங்களில் அடுத்தக் கல்வியாண்டு தொடங்கப் போகிறது. அதற்குள்ளாக நீட் விலக்கு பெற்றாக வேண்டும். அதற்கான சட்டத்திற்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்க வேண்டும். பின்னர் குடியரசுத்தலைவர் ஒப்புதலை பெற தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

2வது ட்வீட்டில், "தமிழ்நாட்டில் ஒமிக்ரான் கொரோனா உறுதி செய்யப்பட்டவர் நைஜீரியாவிலிருந்து சென்னைக்கு வந்த போது விமான நிலையத்திலிருந்து எந்த சோதனைக்கும் உட்படுத்தப்படாமல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என்று ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் கவலையளிக்கின்றன. அவருக்கு பல நாட்களுக்கு பிறகு தான் ஒமிக்ரான் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதற்கு முன்பாக அவருடன் தொடர்பில் இருந்த 52 பேர் உட்பட 280 பேர் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். விழிப்புடன் இருந்திருந்தால் இதை தவிர்த்திருக்கலாம்! இனி வரும் நாட்களிலாவது சென்னைக்கு வரும் விமானப் பயணிகள் எந்த நாட்டிலிருந்து பயணத்தை தொடங்குகிறார்கள் என்பதை ஆராய்ந்து, அவர்கள் அனைவருக்கும் கொரோனா சோதனையை கட்டாயமாக்க வேண்டும்!" என்று கூறியுள்ளார்.

3வது ட்விட்டில், "நெல்லை டவுன் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர்; மூவர் காயமடைந்தனர் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன். உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து தவறு இழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கு தரமான மருத்துவமும், உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடும் அரசு வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

பதிவு: December 17, 2021
பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழப்பு!- நெல்லையில் நடந்த சோகம்

நெல்லையில் தனியார் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த 4 மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நெல்லை சந்திப்பில் உள்ள சாப்ட்டர் தனியார் பள்ளியில் காலை 11 மணியளவில் இடைவேளை விடப்பட்டுள்ளது. அப்போது கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 5க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ள 3 மாணவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். காவல்துறை, வருவாய் துறையினர் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் விவரங்கள் குறித்து விசாரணை நடைபெறுகிறது. பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்தில் இடிந்து விழுந்தவுடன் ஆங்காங்கே அனைவரும் சிதறி ஓடியுள்ளனர். அனைத்து மாணவர்களையும் வகுப்பறைக்கு வர சொல்லி யார் இல்லை என்பது குறித்து கணக்கெடுக்க கூடிய பணியை பள்ளி நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள், கல்வித்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் தற்போது சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். காவல்துறை விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கி இருந்த மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

8 மற்றும் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இடைவேளை விடப்பட்டதாக சொல்லப்படுகிறது. சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் சம்பவ இடத்தில் இருந்துள்ளனர். சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். தற்போது 8 மற்றும் 9ஆம் வகுப்பு தவிர அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அறிவித்து மாணவர்களை வீட்டிற்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் இருந்த மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, உயிரிழந்த மாணவர்களின் விவரம் தெரியவந்துள்ளது. 6ம் வகுப்பு சி பிரிவில் படித்த சுதீஷ், 8ம் வகுப்பு ஏ பிரிவில் படித்த விஸ்வரஞ்சன், 9ம் வகுப்பு பி பிரிவில் படித்த அன்பழகன் ஆகிய மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. காயமடைந்த மாணவர்கள் சஞ்சய், இசக்கி பிரகாஷ், சேக் அபுபக்கர், அப்துல்லாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, பள்ளியில் நடந்த விபத்து குறித்து அறிக்கை அளிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை தர பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பதிவு: December 17, 2021
தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 29 வரை ரெட் அலர்ட்!- இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் இன்று முதல் நவம்பர் 29 வரை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழக கடலோர பகுதிகளில் வடகிழக்கு திசையை நோக்கி வரும் புயல் சின்னமாக தமிழ்நாட்டில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இன்றைய தினம் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரத்தில் கனமழை பெய்யும். இதேபோல் நாமக்கல், கரூர், திருவள்ளூர், கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 31 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தூத்துக்குடி 27 செ.மீ., திருச்செந்தூர் 25 செ.மீ., நாகை 19, ஸ்ரீவைகுண்டம் 18, குலசேகரப்பட்டினம் 16, வைப்பாறில் 15 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. காரைக்கால், திருவையாறு, சாத்தான்குளம், ஓட்டப்பிடாரம், பெலந்துறையில் தலா 12 செ.மீ. மழை பெய்தது.

திருபுவனம், ஸ்ரீமுஷ்ணம், சாத்தூர், பேராவூரணி, லெப்பை குடிகாடு, பாளையங்கோட்டையில் தலா 11 செ.மீ. மழை பொழிந்தது. தொடர்ந்து திண்டுக்கல், திருவாரூர், பூதலூர், அகரம் சீகூர், வெப்பக்கோட்டை, சிவகங்கையில் 10 செ.மீ. மழை பெய்தது. தாம்பரம், மணிமுத்தாறு, நன்னிலம், காட்டுக்குப்பம், செப்பரம்பாக்கம், கடம்பூர், மணியாச்சியில் தலா 9 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டிருந்தது. இன்றைய தினம் அதிக கனமழை இருக்கும் மாவட்டங்களாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் இன்று முதல் நவம்பர் 29 வரை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வரும் 29ம் தேதி தெற்கு அந்தமான் கடலோரப் பகுதிகளில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மேற்கு - வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பதிவு: November 26, 2021
`உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழகத்தில் அதிக கனமழை பொழியும்!'- வானிலை ஆய்வு மையம்

வங்க கடலின் மத்தியப் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. தமிழகத்தில் கடற்கரையோர மாவட்டங்களில் அதிக கனமழை பொழியும்" என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், இதர தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை (அக்.28) ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அக்டோபர் 29, 30 தேதிகளில் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யகூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். இன்று தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பதிவு: October 27, 2021
90 வயதில் பஞ்சாயத்து தலைவர்!- உள்ளாட்சித் தேர்தலில் அசத்தினார் சிவந்திப்பட்டி மூதாட்டி

திருநெல்வேலி மாவட்டம், சிவந்திப்பட்டி ஊராட்சி மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 90 வயது மூதாட்டி பெருமாத்தாள் அசத்தல் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த அக்.6 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெற்றது.இந்த இருகட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 74 மையங்களில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தேர்தல் முடிவுகளின்படி, பெரும்பாலான இடங்களில் திமுக முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் 21 வயது பெண் சாருலதா என்பவர் வெற்றி பெற்றார். இவர், ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் அவர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்று கொண்டார்.

அதே போல, திருநெல்வேலி மாவட்டம் சிவந்திப்பட்டி ஊராட்சி மன்ற தேர்தலில் 90 வயது மூதாட்டி பெருமாத்தாள் வெற்றி பெற்றுள்ளார். எதிர்த்து போட்டியிட்டவர்களை டெபாசிட்டை இழக்கச் செய்து 1000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்றுக் கொண்டார்.

பதிவு: October 13, 2021

முக்கிய செய்திகள்

'தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு கெடவில்லை; மாறாக சிலர் அதை கெடுக்க நினைத்து செயல்படுகின்றனர்' - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைக் கெடுக்க சிலர் நினைத்து செயல்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

அரியலூர் மாவட்டத்தில் 27,070 பயனாளிகளுக்கு ரூ.52 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,

"ஒரு முதலமைச்சர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் கடந்த 10 ஆண்டாக இருந்த அதிமுக ஆட்சி. கையில் அதிகாரம் இருந்தும் எதுவும் செய்யாமல் கைகட்டி வேடிக்கை பார்த்ததுதான் கடந்த கால அதிமுக ஆட்சி. கடந்த 10 ஆண்டுகள் கால ஆட்சியின் சீரழிவை மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து புகார்கள் கொடுக்கின்றனர். விமர்சனங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல; அவற்றை வரவேற்கிறோம், ஆனால் விஷமத்தனம் கூடாது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போகவில்லை. மாறாக சட்டம் ஒழுங்கைக் கெடுக்கலாமா என்று சிலர் நினைக்கின்றனர். சிலரின் வயது எரிகிறது. ஒரு ஆட்சி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக இந்த ஆட்சி நடைபெறுகிறது" இவ்வாறு பேசினார். 

பதிவு: December 06, 2022
'கோழிக்கு அரிசி போட்டு பிடிப்பதுபோல் நம்மை தமிழை வைத்து பிடிக்கப்பார்க்கின்றனர்' - காசி தமிழ் சங்கமம் நிகழ்வை சாடிய சீமான்!

கோழிகளுக்கு அரிசியைப் போட்டு பிடிப்பது போல் தமிழர்களை மொழியை வைத்து பாஜக பிடிக்கத் திட்டமிடுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் பேசியதாவது: 

"காசி தமிழ்ச்சங்கமம் எனக்காகத்தான் நடத்தப்பட்டது. நான் வேல் தூக்கினால் அவர்களும் வேலைத் தூக்குவார்கள்; நான் முருகா என்றால் அவர்களும் முருகா என்பார்கள்; நான் ஈழம் பற்றிப் பேசினால் அவர்களும் ஈழம் என்பார்கள். ஆனால், நான் கச்சத்தீவு மீட்பு பற்றி பேசினால் மட்டும் எதுவும் பேசமாட்டார்கள். காவிரி நதிநீர் குறித்துப் பேசினால் எதுவும் பேசாமாட்டார்கள்.

நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் உள்ளதா? நாடாளுமன்றத்தில் தமிழில் பேசமுடியுமா? கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய முடியுமா? இதை விடுத்து காசி தமிழ்ச் சங்கமம் நடத்துவதன் மூலம் எப்படி நீங்கள் தமிழை வளர்ப்பீர்கள்?

கோழியை 'பக் பக் பக்' என்று அரிசி போட்டு பிடிப்பதைப் போல் தமிழை வைத்து தமிழ்நாட்டு மக்களை பிடிக்கப் பார்க்கிறார்கள். கோழி 'நம் பாஷை பேசுகிறாரே' என்று நினைத்து அவரிடம் மாட்டிக்கொண்டு வறுபடுவதைப் போல நாம் மாட்டிவிடக் கூடாது. எச்சரிக்கையாக இருக்கவேண்டும். 

 

பதிவு: November 28, 2022
ஆன்லைன் ரம்மியால் 15 மாதங்களில் நிகழ்ந்துள்ள 33-வது தற்கொலை! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

ஆன்லைன் ரம்மியால் ஒரிசாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், ஆன்லைன் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என் ரவி விரைந்து ஒப்புத அளிக்கவேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

ட்விட்டரில் இதுபற்றி பதிவிட்டுள்ள அவர், 

"தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வந்து தென்காசி மாவட்டம் கரிவலம்வந்த நல்லூரில் கூலி வேலை செய்து வந்த ஒதிஷா பெண் பந்தனா மஜ்கி, ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.70 ஆயிரத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்வு மிகுந்த வேதனை அளிக்கிறது.

ஆன்லைன் சூதாட்டத் தடை செல்லாது என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பிறகு ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் நிகழும் 33-ஆவது தற்கொலை இதுவாகும். கடந்த இரு மாதங்களில் இது நான்காவது தற்கொலை ஆகும்.
 
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான ஒவ்வொரு நகர்வும் பெரும் போராட்டத்திற்கும் பிறகும், சில உயிரிழப்புகளுக்கு பிறகும் தான் சாத்தியமாகிறது. 15 மாதங்களில் விலைமதிப்பற்ற 33 உயிர்களை பறி கொடுத்தும் கூட, ஆன்லைன் சூதாட்டம் இன்னும் தடை செய்யப்படவில்லை
 
ஒரு புறம் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் காலாவதியாகி விட்டது; மறுபுறம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்திற்கு ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் தமிழ்நாடு இனி ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறப்போகிறது
 
ஆன்லைன் சூதாட்டங்களால் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் ஏற்படவிருக்கும் பேராபத்தை தமிழக ஆளுனர் உணரவேண்டும். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 
பதிவு: November 28, 2022
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா ஒப்புதல் ஆளுநரால் காலம் தாழ்த்தப்பட்ட நிலையில் அது காலாவதியாகியுள்ளது! அடுத்த நடவடிக்கை என்ன?

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கான ஒப்புதல் தாமதமாக்கப்பட்ட நிலையில், அது காலாவதியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் காரணமாக தற்கொலைகள் பெருகிவந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதியை மயக்கி உயிரைக் கொல்லும் இந்த விளையாட்டைத் தமிழ்நாடு அரசு தடை செய்யவேண்டும் என்று எதிர்ப்புகள் எழவே, அரசு ஆன்லை ரம்மியைத் தடைசெய்வதற்கான சட்ட மசோதாவை அவசரச்சட்டமாக சட்டபேரவையில் நிறைவேற்றியது. 

இந்நிலையில், ஒப்புதலுக்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா அனுப்பப்பட்ட நிலையில், அதுகுறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டது. தமிழக அரசும் அதற்கு பதில் கடிதத்தை அடுத்த நாளே அனுப்பியது. இதனிடையே, அக்.01 ல் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதா நேற்றுடன் காலாவதியானது.

இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. ஆங்காங்கே ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலைகள் அதிகரித்துவரும் நிலையில், ஆன்லைன் ரம்மி மீது இன்னும் தடைவிதிக்கப்படாதது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 
பதிவு: November 28, 2022
'எங்களுக்கு நீதி கிடைக்கவில்லையெனில் அரசின் அத்தனை உதவிகளையும் திருப்பித்தருவோம்' - உயிரிழந்த வீராங்கனை பிரியாவின் வீட்டார் வேதனை!

தங்களுக்கு நீதி கிடைக்கவில்லையெனில் அரசு தங்களுக்கு வழங்கிய நிவாரண உதவிகளைத் திருப்பித்தந்துவிடுவதாக உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் வீட்டார் வேதனை பொங்கத் தெரிவித்துள்ளனர்.

சென்னை வியாசார்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா கால் எலும்பு சவ்வு பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாக அவர் உயிரிழந்தார். இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து பிரியாவிற்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் இருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை சட்டரீதியாக எடுக்கப்படும் என்று மருத்துவத்துரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதனையடுத்து, உயிரிழந்த பிரியாவின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி, வீடு மற்றும் பிரியாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை ஆகியவை வழங்கப்பட்டன.

இந்நிலையில், பிரியா மரணத்திற்குக் காரணமான மருத்துவர்கள் மீது இன்னும் நடவடிக்கை அரசு தரப்பிலிருந்து எடுக்கப்படவில்லை என்று பிரியாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள், அரசு தரப்பிலிருந்து மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும், அதுபற்றி உறுதியளித்ததால் தான் அரசின் உதவிகளைப் பெற்றுக்கொண்டோம் என்றும், அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அரசின் உதவிகளைத் திருப்பிச்செலுத்துவிடுவோம் என்றும், தங்களுக்கு நீதியே தேவை என்றும் அவர்கள் வேதனை பொங்கத் தெரிவித்துள்ளனர். 

பதிவு: November 26, 2022
பாஜக பெண் நிர்வாகிகளை ஆபாசமாகப் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்! மன்னிப்பு கேட்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

பாஜக பெண் நிர்வாகிகளை தரக்குறைவாகப் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்கை மன்னிப்புக் கேட்கக்கூறி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் அக்கட்சி உறுப்பினர் சைதை சாதிக், பாஜக நிர்வாகிகளான குஷ்பூ, காயத்ரி, நமீதா, கௌதமி ஆகியோரை தரக்குறைவாக சாடி, ஆபாசமான முறையில் பேசினார். இது அக்கட்சி உறுப்பினர்களிடையே கோபத்தை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு கண்டனங்கள் வலுத்தன. மேலும் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், வழக்குக்கு எதிராக சைதை சாதிக் முன்ஜாமீன் கோரியிருந்தார். இதைத்தொடர்ந்து நீதிபதிகள் முன்பாக இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அவர், சம்பந்தப்பட்ட பெண்களிடம் மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என்று வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஸ் சந்திரா உத்தரவிட்டுள்ளார். 

பதிவு: November 26, 2022

மேலும் செய்திகள்

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்