அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு உள்பட 14 இடங்களில் மீண்டும் ரெய்டு!

ஊழல் புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று மீண்டும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக இருந்தவர் தங்கமணி. கடந்த 15ம் தங்கமணி மற்றும் அவர்களது உறவினர்கள் சொந்தமான 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, ரூ.2.16 கோடி பணம் , 1.13 கிலோ தங்கம், சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

மேலும் ஐந்தாண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக ரூபாய் 4.85 கோடி சொத்து குவித்ததாக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தங்கமணி மட்டுமல்லாது அவரது மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகியோர் மீதும் நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சூழலில் விசாரணையின் தொடர்ச்சியாக மீண்டும் இன்று காலை 6.30 மணியளவில் 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் 10 இடங்கள், ஈரோட்டில் 3 இடங்கள், சேலத்தில் ஓரிடத்தில் என சோதனை நடைபெற்று வருகிறது. நாமக்கல்லில் பிஎஸ்கே கட்டுமான நிறுவனம், அதன் உரிமையாளர் அசோக் வீடு, எருமப்பட்டியில் உள்ள சரண்யா ஸ்பின்னிங் மில், அழகு நகரில் உள்ள கோழிப்பண்ணை அதிபர் மோகன் வீடு, ஈரோட்டில் சாந்தான்காடு பகுதியில் தங்கமணியின் நண்பரான குமார் என்பவர் வீடு, ஒண்டிக்காரன்பாளையத்தில் செந்தில் நாதன், செங்கோடம்பள்ளம் அடுக்குமாடி குடியிருப்பு, பள்ளிபாளையத்தில் உள்ள தங்கமணியின் ஆடிட்டர் செந்தில் குமார் ஆகிய வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

பதிவு: December 20, 2021
கிரிப்டோ கரன்சியில் முதலீடு... ரூ.4.85 கோடி சொத்து குவிப்பு... அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு, ஆபீஸில் ரெய்டு!

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 69 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை நாமக்கல் ஈரோடு உட்பட 69 இடங்களில் லஞ்சஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் மின்வாரியத்துறை அமைச்சராக இருந்த தங்கமணி பதவி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், பல முறைகேடான முறையில் சொத்து சேர்த்ததாகவும் இவர் மீது புகார்கள் எழுந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக லஞ்சஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில், அவரது வீடு, அலுவலகம், மற்றும் அவருடன் தொடர்புடைய நபர்களுக்கு சொந்தமான இடங்கள் என 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காலை 6.30 மணி முதல் சோதனை மேற்கொண்டுள்ளார்.

குறிப்பாக சென்னை, நாமக்கல், ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மொத்தம் 69 இடங்களில் இந்த சோதனை நடைபெறுவதாக லஞ்ச ஒலிப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 150 மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர், அவரது உறவினர்கள், அவரது பினாமி கள் வீடு என மொத்தம் 69 இடங்களில் இந்த சோதனையானது நடைபெறுகிறது.

இந்த சோதனையின் முடிவிலேயே எவ்வளவு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளனர், என்னென்ன ஆவணங்கள் அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் கைப்பற்றப்பட்டுள்ளன என்பது தெளிவாக தெரியவரும். இந்த சோதனையானது நாளை வரை நீடிக்க வாய்ப்பிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் தங்கமணின் அவரது மனைவி சாந்தி, மற்றும் மகன் தரணீதரன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 2016 முதல் 2020 மார்ச் வரை வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.85 கோடி அளவிற்கு சொத்து சேர்த்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். கர்நாடகத்தில் ஒரு இடத்திலும், ஆந்திராவில் 2 இடத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

மேலும், சட்ட விரோதமாக சேர்க்கப்பட்ட ஏராளாமான சொத்துகளை தங்கமணி கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016-2020 மார்ச் வரை வருமானத்திற்கு அதிகமாக தங்கமணி ரூ.4.85 கோடி சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

லஞ்சஒழிப்புத்துறை சோதனைக்கு உள்ளாகும் 5- வது முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆவார். ஏற்கெனவே வேலுமணி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியுள்ளது என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

பதிவு: December 15, 2021
அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.70 லட்சம் மோசடி!- அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா தலைமறைவு

அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.70 லட்சம் மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் சரோஜா குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை சேர்ந்தவர் அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா. இவர், அமைச்சராக இருந்தபோது சத்துணவு திட்டத்துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்று கொண்டு மோசடி செய்து விட்டதாக அவரது உறவினர் குணசீலன் பரபரப்பு புகார் அளித்தார். இதன்பேரில் அமைச்சர் சரோஜா, அவரது கணவர் லோகரஞ்சன் ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த புகாரின் பேரில் ரூ.70 லட்சம் வரை பலரிடம் சரோஜா பணம் வாங்கி கொண்டு மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தவுடன், சரோஜா மற்றும் அவரது கணவரும் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தனர். இந்த மனு 2 முறை விசாரணைக்கு வந்தபோது, சரோஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனு மீதான விசாரணைக்கு வாய்தா கேட்டார்.

இதனால் 2 முறை விசாரணை ஒத்திவைக்கப்பட்டு வரும் 15ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கிடையில், போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கும் வகையில் சரோஜா அவரது கணவர் லோகரஞ்சன் இருவரும் தலைமறைவாகி விட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து உறவினர் குணசீலன் கூறுகையில், "கடந்த அதிமுக ஆட்சியில் சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சராக இருந்த சரோஜா சத்துணவு துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறினார். இதனால் நானும் எனது மனைவியும் சுமார் ரூ.1 கோடி வரை அவருக்கு பணம் பெற்று கொடுத்தோம். ஆனால் அவர் சொன்னபடி வேலை வாங்கி தரவில்லை.

இதுபற்றி ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அங்கு வழக்கு பதிவு செய்யாத நிலையில், நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் செய்தேன். இந்த புகாரையடுத்து எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு அழைத்த போது முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது தரப்பிலிருந்து யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாக உள்ளனர்" என்றார்.

இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கூறுகையில், ‘‘சரோஜா மற்றும் அவரது கணவர் மீதும் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் வீட்டுக்கு விசாரணைக்கு சென்றபோது, வீட்டில் முன்னாள் அமைச்சர் இல்லை. இந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. முன்ஜாமீன் மனு மீது நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பிற்கு பிறகு போலீசாரின் நடவடிக்கை தொடரும்’’ என்றனர்.

கைது நடவடிக்கைக்கு பயந்தே முன்னாள் அமைச்சர் சரோஜா குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

பதிவு: November 13, 2021
நள்ளிரவு முதல் அதிகாலை வரை அடமழை!- மிதக்கும் திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம்

நாமக்கல் மாவட்டத்தில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை பெய்த கனமழையால் திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம் உள்ளிட்ட பல இடங்களில் வீடு, சாலைகள் தண்ணீரில் மிதக்கின்றன. தண்ணீரை வெளியேற்றும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று இரவு பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம் பகுதியில் நள்ளிரவுக்கு மேல் அதிகாலை வரை கனமழை பெய்தது. ஒரே இரவில் கிட்டத்தட்ட 10 செ.மீ-க்கு மேல் மழை பெய்ததால் தண்ணீர் பல இடங்களில் தேங்கியுள்ளது. இதனால் மழைநீர் செல்ல வழியில்லாத சூழ்நிலையில் வீடுகளுக்குள் புகுந்தது.

பள்ளிப்பாளையம் பேருந்து நிலையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதிகளில், திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட கூட்டப்பள்ளி, சூரியன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் அதிக அளவு மழைநீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்தது. மழைநீரை அகற்றும் பணியில் அந்தந்த பகுதியை சேர்ந்த நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் குடியிருப்புவாசிகள் வீட்டை விட்டு வெளியேறி அருகில் உள்ள மேடான பகுதிகளில் தங்கியுள்ளனர்.

பள்ளிப்பாளையத்தில் பேருந்து நிறுத்தம், சங்கீத சாலை உள்ளிட்ட இடங்களில் இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாத அளவிற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழைநீர் வடிகால் ஆக்கிரமிக்கப்பட்டதால் மழைநீர் வெளியேற முடியாமல் சாலைகளில், தெருக்களில் அதிகளவு தேங்கியுள்ளது. தண்ணீரை அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

பதிவு: October 01, 2021

முக்கிய செய்திகள்

'தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு கெடவில்லை; மாறாக சிலர் அதை கெடுக்க நினைத்து செயல்படுகின்றனர்' - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைக் கெடுக்க சிலர் நினைத்து செயல்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

அரியலூர் மாவட்டத்தில் 27,070 பயனாளிகளுக்கு ரூ.52 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,

"ஒரு முதலமைச்சர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் கடந்த 10 ஆண்டாக இருந்த அதிமுக ஆட்சி. கையில் அதிகாரம் இருந்தும் எதுவும் செய்யாமல் கைகட்டி வேடிக்கை பார்த்ததுதான் கடந்த கால அதிமுக ஆட்சி. கடந்த 10 ஆண்டுகள் கால ஆட்சியின் சீரழிவை மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து புகார்கள் கொடுக்கின்றனர். விமர்சனங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல; அவற்றை வரவேற்கிறோம், ஆனால் விஷமத்தனம் கூடாது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போகவில்லை. மாறாக சட்டம் ஒழுங்கைக் கெடுக்கலாமா என்று சிலர் நினைக்கின்றனர். சிலரின் வயது எரிகிறது. ஒரு ஆட்சி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக இந்த ஆட்சி நடைபெறுகிறது" இவ்வாறு பேசினார். 

பதிவு: December 06, 2022
'கோழிக்கு அரிசி போட்டு பிடிப்பதுபோல் நம்மை தமிழை வைத்து பிடிக்கப்பார்க்கின்றனர்' - காசி தமிழ் சங்கமம் நிகழ்வை சாடிய சீமான்!

கோழிகளுக்கு அரிசியைப் போட்டு பிடிப்பது போல் தமிழர்களை மொழியை வைத்து பாஜக பிடிக்கத் திட்டமிடுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் பேசியதாவது: 

"காசி தமிழ்ச்சங்கமம் எனக்காகத்தான் நடத்தப்பட்டது. நான் வேல் தூக்கினால் அவர்களும் வேலைத் தூக்குவார்கள்; நான் முருகா என்றால் அவர்களும் முருகா என்பார்கள்; நான் ஈழம் பற்றிப் பேசினால் அவர்களும் ஈழம் என்பார்கள். ஆனால், நான் கச்சத்தீவு மீட்பு பற்றி பேசினால் மட்டும் எதுவும் பேசமாட்டார்கள். காவிரி நதிநீர் குறித்துப் பேசினால் எதுவும் பேசாமாட்டார்கள்.

நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் உள்ளதா? நாடாளுமன்றத்தில் தமிழில் பேசமுடியுமா? கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய முடியுமா? இதை விடுத்து காசி தமிழ்ச் சங்கமம் நடத்துவதன் மூலம் எப்படி நீங்கள் தமிழை வளர்ப்பீர்கள்?

கோழியை 'பக் பக் பக்' என்று அரிசி போட்டு பிடிப்பதைப் போல் தமிழை வைத்து தமிழ்நாட்டு மக்களை பிடிக்கப் பார்க்கிறார்கள். கோழி 'நம் பாஷை பேசுகிறாரே' என்று நினைத்து அவரிடம் மாட்டிக்கொண்டு வறுபடுவதைப் போல நாம் மாட்டிவிடக் கூடாது. எச்சரிக்கையாக இருக்கவேண்டும். 

 

பதிவு: November 28, 2022
ஆன்லைன் ரம்மியால் 15 மாதங்களில் நிகழ்ந்துள்ள 33-வது தற்கொலை! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

ஆன்லைன் ரம்மியால் ஒரிசாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், ஆன்லைன் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என் ரவி விரைந்து ஒப்புத அளிக்கவேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

ட்விட்டரில் இதுபற்றி பதிவிட்டுள்ள அவர், 

"தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வந்து தென்காசி மாவட்டம் கரிவலம்வந்த நல்லூரில் கூலி வேலை செய்து வந்த ஒதிஷா பெண் பந்தனா மஜ்கி, ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.70 ஆயிரத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்வு மிகுந்த வேதனை அளிக்கிறது.

ஆன்லைன் சூதாட்டத் தடை செல்லாது என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பிறகு ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் நிகழும் 33-ஆவது தற்கொலை இதுவாகும். கடந்த இரு மாதங்களில் இது நான்காவது தற்கொலை ஆகும்.
 
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான ஒவ்வொரு நகர்வும் பெரும் போராட்டத்திற்கும் பிறகும், சில உயிரிழப்புகளுக்கு பிறகும் தான் சாத்தியமாகிறது. 15 மாதங்களில் விலைமதிப்பற்ற 33 உயிர்களை பறி கொடுத்தும் கூட, ஆன்லைன் சூதாட்டம் இன்னும் தடை செய்யப்படவில்லை
 
ஒரு புறம் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் காலாவதியாகி விட்டது; மறுபுறம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்திற்கு ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் தமிழ்நாடு இனி ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறப்போகிறது
 
ஆன்லைன் சூதாட்டங்களால் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் ஏற்படவிருக்கும் பேராபத்தை தமிழக ஆளுனர் உணரவேண்டும். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 
பதிவு: November 28, 2022
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா ஒப்புதல் ஆளுநரால் காலம் தாழ்த்தப்பட்ட நிலையில் அது காலாவதியாகியுள்ளது! அடுத்த நடவடிக்கை என்ன?

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கான ஒப்புதல் தாமதமாக்கப்பட்ட நிலையில், அது காலாவதியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் காரணமாக தற்கொலைகள் பெருகிவந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதியை மயக்கி உயிரைக் கொல்லும் இந்த விளையாட்டைத் தமிழ்நாடு அரசு தடை செய்யவேண்டும் என்று எதிர்ப்புகள் எழவே, அரசு ஆன்லை ரம்மியைத் தடைசெய்வதற்கான சட்ட மசோதாவை அவசரச்சட்டமாக சட்டபேரவையில் நிறைவேற்றியது. 

இந்நிலையில், ஒப்புதலுக்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா அனுப்பப்பட்ட நிலையில், அதுகுறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டது. தமிழக அரசும் அதற்கு பதில் கடிதத்தை அடுத்த நாளே அனுப்பியது. இதனிடையே, அக்.01 ல் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதா நேற்றுடன் காலாவதியானது.

இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. ஆங்காங்கே ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலைகள் அதிகரித்துவரும் நிலையில், ஆன்லைன் ரம்மி மீது இன்னும் தடைவிதிக்கப்படாதது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 
பதிவு: November 28, 2022
'எங்களுக்கு நீதி கிடைக்கவில்லையெனில் அரசின் அத்தனை உதவிகளையும் திருப்பித்தருவோம்' - உயிரிழந்த வீராங்கனை பிரியாவின் வீட்டார் வேதனை!

தங்களுக்கு நீதி கிடைக்கவில்லையெனில் அரசு தங்களுக்கு வழங்கிய நிவாரண உதவிகளைத் திருப்பித்தந்துவிடுவதாக உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் வீட்டார் வேதனை பொங்கத் தெரிவித்துள்ளனர்.

சென்னை வியாசார்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா கால் எலும்பு சவ்வு பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாக அவர் உயிரிழந்தார். இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து பிரியாவிற்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் இருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை சட்டரீதியாக எடுக்கப்படும் என்று மருத்துவத்துரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதனையடுத்து, உயிரிழந்த பிரியாவின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி, வீடு மற்றும் பிரியாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை ஆகியவை வழங்கப்பட்டன.

இந்நிலையில், பிரியா மரணத்திற்குக் காரணமான மருத்துவர்கள் மீது இன்னும் நடவடிக்கை அரசு தரப்பிலிருந்து எடுக்கப்படவில்லை என்று பிரியாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள், அரசு தரப்பிலிருந்து மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும், அதுபற்றி உறுதியளித்ததால் தான் அரசின் உதவிகளைப் பெற்றுக்கொண்டோம் என்றும், அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அரசின் உதவிகளைத் திருப்பிச்செலுத்துவிடுவோம் என்றும், தங்களுக்கு நீதியே தேவை என்றும் அவர்கள் வேதனை பொங்கத் தெரிவித்துள்ளனர். 

பதிவு: November 26, 2022
பாஜக பெண் நிர்வாகிகளை ஆபாசமாகப் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்! மன்னிப்பு கேட்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

பாஜக பெண் நிர்வாகிகளை தரக்குறைவாகப் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்கை மன்னிப்புக் கேட்கக்கூறி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் அக்கட்சி உறுப்பினர் சைதை சாதிக், பாஜக நிர்வாகிகளான குஷ்பூ, காயத்ரி, நமீதா, கௌதமி ஆகியோரை தரக்குறைவாக சாடி, ஆபாசமான முறையில் பேசினார். இது அக்கட்சி உறுப்பினர்களிடையே கோபத்தை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு கண்டனங்கள் வலுத்தன. மேலும் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், வழக்குக்கு எதிராக சைதை சாதிக் முன்ஜாமீன் கோரியிருந்தார். இதைத்தொடர்ந்து நீதிபதிகள் முன்பாக இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அவர், சம்பந்தப்பட்ட பெண்களிடம் மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என்று வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஸ் சந்திரா உத்தரவிட்டுள்ளார். 

பதிவு: November 26, 2022

மேலும் செய்திகள்

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்