'மீனவப்பெண்ணை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த வடமாநில கயவர்கள் மீது மிகக்கடுமையான தண்டனை வேண்டும்' - சீமான்!

இராமேசுவரத்தில் மீனவப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்ட நிலையில், குற்றம்சாட்டப்படும் வடமாநில கயவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது அறிக்கையில்,

"இராமேசுவரம் அருகே உள்ள வடகாடு மீனவ கிராமத்தில் கடற்பாசி எடுக்கச் சென்ற மீனவப்பெண் தங்கை சந்திராவை, அங்கு இறால் பண்ணையில் வேலை பார்த்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த கயவர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக எரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கும் செய்தி கடும் அதிர்ச்சியையும், பெரும் ஆத்திரத்தையும் அளிக்கிறது.

ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த ஓராண்டு காலத்தில் தமிழ்நாட்டில் வட மாநிலத்தவரால் தொடர்ந்து அதிகரித்து வரும் கொடுங்குற்றங்களையும், சட்டம் ஒழுங்கு சீரழிவினையும் தடுக்கத் தவறிய திமுக அரசின் செயலற்றத்தன்மை வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழ்நாட்டின் மாநகரங்கள் மட்டுமின்றி, இரண்டாம்நிலை நகரங்கள், குக்கிராமங்கள் வரை அனைத்து பகுதிகளிலும் நாளுக்குநாள் வடமாநிலத்தவர் ஆதிக்கம் இலட்சக்கணக்கில் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழர்களின் வேலைவாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவை பறிபோவதோடு கொலை, கொள்ளை உள்ளிட்ட கொடுங்குற்றங்கள் அதிகமாகி மக்கள் பொதுவெளியில் நடமுடியாத அளவிற்குச் சட்டம் ஒழுங்கும் சீர்கெட்டு வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் வடமாநிலத்தவர்கள் தமிழகக் காவல்துறையினரைத் தாக்கியதில் காவலர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெரும் அளவுக்கு தமிழ்நாட்டின் நிலைமை மிகமோசமாகியுள்ளது.

அந்நிகழ்வினை வன்மையாகக் கண்டித்த நாம் தமிழர் கட்சி, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்களை முன்னெடுத்ததோடு, தமிழ்நாட்டில் வேலை பார்க்கும் அனைத்து வடமாநிலத்தவருக்கும் உள்நுழைவுச் சீட்டினை உடனடியாக நடைமுறைப்படுத்தவும் கோரியது.

ஆனால், காவல்துறையினர் மீதான தாக்குதலுக்குப் பிறகும் விழித்துக்கொள்ளாத தமிழ்நாடு அரசு, நாம் தமிழர் கட்சியின் கண்டனத்தையும், கோரிக்கையையும் அலட்சியம் செய்ததன் விளைவே, தற்போது வடமாநிலத்தவர் அப்பாவி மீனவப்பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக எரித்துக் கொள்ளும் அளவிற்குச் சட்டம் ஒழுங்கு சீரழிய முக்கியக் காரணமாகும்.

எனவே, காவல்துறையை தன்வசம் வைத்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர், முற்றுமுழுதாகச் சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கினை சீரமைக்க இதன் பிறகாவது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், வடமாநிலத்தவருக்கு உள்நுழைவுச் சீட்டு முறையினை உடனடியாக நடைமுறைப்படுத்தி, இதுபோன்ற கொடூரங்கள் இனியும் தொடராதவாறு தடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், மீனவப்பெண் சந்திராவை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்த கொடூரர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி, விரைந்து மிகக்கடுமையான தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட மீனவப் பெண்ணின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் துயர்துடைப்பு உதவி வழங்குவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்"

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பதிவு: May 25, 2022
நேற்று முன்தினம் 55 பேர்... இன்று 12 பேர் கைது..!- இலங்கை கடற்படையினரின் செயலால் தமிழக மீனவர்கள் கொந்தளிப்பு

ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் 55 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று ஜெகதாபட்டினத்தை சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாக் ஜலசந்தி கடலில் கடந்த 18ம் தேதி இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேர், மன்னார் வளைகுடா கடலில் நேற்று முன்தினம் மீன் பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் மீனவர்கள் 12 பேர் என 55 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரும், ஊர்காவல்துறை நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். மண்டபம் மீனவர்கள் 12 பேரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, விசாரணைக்கு பின்னர் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கை தமிழக மீனவர்களின் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 55 மீனவர்களையும், 8 விசைப்படகுகளையும் விடுவிக்கவும், பாக் ஜலசந்தி கடல் பகுதியில் இரு நாட்டு மீனவர்களும் சுமுகமான முறையில் மீன்பிடிக்க தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு உடனடியாக எடுக்கவும் வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இந்த நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மேலும் 14 தமிழக மீனவர்கள் மீண்டும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை யாழ்ப்பாண மாவட்டம் எழுவைதீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த 14 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் 2 மீன்பிடி விசைப் படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து நிலையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வழக்குப்பதிவு செய்து அவர்களை மயிலடி மீன்பிடி துறைமுகத்திற்கு விசாரணைக்காக அழைத்து வந்துள்ளனர்.

இவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். ஜெகதாபட்டினத்தில் 1,200 மீனவர்களின் போராட்டத்தால் 200 விசைப்படகுகள் கரையில் நிறுத்திவைக்கப்பட்டன.

பதிவு: December 21, 2021
`மாணவர் மர்ம மரணத்தில் வெளிப்படையான விசாரணை வேண்டும்!'- கமல்ஹாசன்
பதிவு: December 08, 2021
அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கப்பட்டது ஏன்?- பரபர பின்னணி

எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே அதிமுகவில் பயணித்த சிறுபான்மையினர் நலப்பரிவு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அன்வர் ராஜா அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள சம்பவம் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அன்வர் ராஜா நீக்கப்பட்டதற்கான பரபரப்பு காரணம் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேச முயன்ற அன்வர் ராஜாவை பேச விடாமல் தடுத்ததோடு, அவரை கூட்டத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று குரல் எழும்பியது. இதனை தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், சசிகலா இருந்திருந்தால் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக 20 இடங்களில் கூடுதலாக வெற்றி பெற்றிருக்கும் என்றும், அதிமுகவில் இரட்டை தலைமையை தொண்டர்கள் விரும்ப வில்லை என்றும் ஒன்றைத் தலைமைதான் வேண்டும் என்று குரல் எழுப்பினார். இவரது இந்த ஓப்பன் டாக் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மத்தியில் சலசலப்பையும் கட்சிக்குள் பூகம்பத்தையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நேற்று இரவு அன்வர் ராஜாவை கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும். இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "கட்சியின் கொள்கைக்கும், குறிக்கோள்களுக்கும் முரணாக செயல்பட்டதாக கூறி அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அன்வர் ராஜாவை கட்சியிலிருந்து நீக்கப்படுகிறார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார்" என்று கூறியுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அன்வர் ராஜா, எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய காலத்திலிருந்து அக்கட்சியில் பயணித்து வரும் மூத்த தலைவர்களில் ஒருவராக வலம் வந்தார். அதிமுக சிறுபான்மை பிரிவு மாநிலச் செயலாளராகவும் பதவி வகித்துவந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின் சசிகலா ஆதரவாளராக இருக்கும் அன்வர் ராஜா, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியதை விமர்சித்தவர். சசிகலா சிறை சென்ற பிறகு, அதிமுகவில் நீடித்த மூத்த தலைவரான அன்வர் ராஜா, கூட்டணிக் கட்சியான பாஜகவை பல்வேறு சமயங்களில் கடுமையாக விமர்சித்தவர். நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்று கூறியவர்களில் முக்கியமானவர் இவர்.


ஓபிஎஸ் – ஈபிஎஸ் இரட்டை தலைமையிலான அதிமுகவில் இருந்தாலும், குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு, சசிகலா – டிடிவி தினகரைனை மீண்டும் கட்சியில் சேர்க்க வலியுறுத்தியது, மீண்டும் மாநிலங்களவை பதவி கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தற்போதைய இரட்டை தலைமை மீது அன்வர் ராஜா அதிருப்தியில் இருந்தார். அண்மையில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பல மாவட்டச் செயலாளர்கள் முன்னாள் எம்.பி. அன்வர்ராஜாவை நோக்கி ஆவேசமாக பேசத்தொடங்கினர். சமீபத்தில் அதிமுகவின் தலைமை குறித்து அன்வர் ராஜா தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் கூறிவந்ததே அதற்கான காரணம்.


கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்ட அன்வர் ராஜா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பல மாவட்டச் செயலாளர்கள் தலைமையிடம் வலியுறுத்திய நிலையில் அவர் மன்னிப்பு கோரியதையடுத்து பிரச்னை முடிவுக்கு வந்தது. ஆனால் அதனை தொடர்ந்து தொலைக்காட்சி விவாதங்களிலும் நாளிதழ்களுக்கும் அன்வர் ராஜா அளித்த பேட்டியில் ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ்க்கு இடையே மனக்கசப்பு இருப்பது உண்மைதான் எனவும், அதிமுக ஒற்றைத் தலைமையை நோக்கி நகர்கிறது என மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்துக்களையே தொடர்ந்து தெரிவித்து வந்தார்.

தொடர்ந்து கட்சியையும், தலைமையும் விமர்சனம் செய்து வந்த அன்வர் ராஜா, அதிமுக செயற்குழுவில் பங்கேற்க கூடாது என முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களின் அழுத்தமே நள்ளிரவு நேரத்தில் அவரது நீக்கம் குறித்த அறிவிப்புக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

பதிவு: December 01, 2021
முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதல்வர், அமைச்சர்கள் மரியாதை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது பிறந்த நாளையொட்டி மதுரை, கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 114-வது தேவர் ஜெயந்தி மற்றும் 59-வது குருபூஜை விழா அக்டோபர் 28ம் தேதி தொடங்கி 30ம்தேதி வரை நடைபெறுகிறது. இந்தநிலையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அவரது முழு வெண்கல திருவுருவ சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


இதன் தொடர்ச்சியாக, தெப்பக்குளத்தில் உள்ள மருதுபாண்டியர் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடனிருந்து மரியாதை செலுத்தினர்.

பதிவு: October 30, 2021
பசும்பொன் செல்ல ஓ.பி.எஸ், சசிகலாவுக்கு அனுமதி... எடப்பாடிக்கு திடீர் தடை… உச்சகட்ட பரபரப்பில் அ.தி.மு.க

சசிகலா விவகாரம் தொடர்பாக, முத்துராமலிங்கம் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதை, அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியும் தவிர்க்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ராமநாதபுரம் பசும்பொன்னில் நாளை முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்க, இன்று மதுரை செல்கிறார் சசிகலா. கோரிப்பாளையத்தில் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். பின், மருதுபாண்டியர் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார். அதை தொடர்ந்து பசும்பொன் சென்று, தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.

ஆண்டுதோறும், பசும்பொன் தேவர் நினைவிடத்திலும் அ.தி.மு.க., சார்பில் மரியாதை செலுத்துவது வழக்கம். 'சூரியனை பார்த்து குரைக்கிறது' என, சசிகலாவை பழனிசாமி விமர்சித்த விவகாரம், தென் மாவட்ட முக்குலத்தோர் சமுதாயத்தினரிடம் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. அதுமட்டுமல்லாது முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, சசிகலா குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். இவைகள் முக்குலத்தோர் சமூகத்தினரிடையே கடும் அதிருப்பதியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சூழலில், பசும்பொன் நினைவு இடத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வந்தால், அவர் மீது தங்கள் கோபத்தை வெளிப்படுத்தக்கூடும் என்றும் இதனால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் வாய்ப்பு உள்ளது எனவும் உளவுத் துறை எச்சரிக்கை செய்துள்ளது. இதனால் பழனிசாமி வருகைக்கு, போலீஸ் தரப்பில் அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது.
அதேநேரத்தில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. சார்பில் முத்துராமலிங்கர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். அவருடன் அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு மத்தியில் நடக்கும் நிகழ்ச்சியாக இருப்பதால் இதில் அ.தி.மு.க.வில் உள்ள சீனியார்கள் யார்? யார்? இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. இதில் கட்சி நிர்வாகிகள் பங்கேற்பதை வைத்துதான் அ.தி.மு.க.வில் செல்வாக்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிகமா? அல்லது எடப்பாடி பழனிசாமிக்கு அதிகமா? என்பது தெரிய வரும் என்று அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

சசிகலாவும் நாளை பசும்பொன் செல்கிறார். அங்கு முத்துராமலிங்க தேர்வல் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். அவருடன் ஆதரவாளர்கள் அதிகமானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் ஒரே நாளில் பசும்பொன் செல்வதால் இருவரும் சந்திப்பார்களா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலினும் பசும்பொன் செல்கிறார். அவருடன் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கிறார்கள். இதேபோன்று பல்வேறு கட்சித் தலைவர்களும் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்கள். இதனால் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பதிவு: October 29, 2021
9 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்!- அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

வெப்ப சலனம் காரணமாக இன்று கோயமுத்தூர், ஈரோடு, திருப்பூர் ,சேலம், தர்மபுரி ,வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாளை தென் மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் , வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.

இலங்கை மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 20-ம் தேதி டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, சேலம், மதுரை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

21ம் தேதி டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், கரூர், திருச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழையும், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, நீலகிரி,கோவை, திருப்பூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

வரும் 22ம் தேதி சேலம், நாமக்கல், தர்மபுரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மிக கனமழையும்,  அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், கடலூர், விழுப்புரம், கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும்  பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.  இன்று கேரள கடலோர பகுதி,  லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால்,  மீனவர்கள் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பதிவு: October 18, 2021

முக்கிய செய்திகள்

'தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு கெடவில்லை; மாறாக சிலர் அதை கெடுக்க நினைத்து செயல்படுகின்றனர்' - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைக் கெடுக்க சிலர் நினைத்து செயல்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

அரியலூர் மாவட்டத்தில் 27,070 பயனாளிகளுக்கு ரூ.52 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,

"ஒரு முதலமைச்சர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் கடந்த 10 ஆண்டாக இருந்த அதிமுக ஆட்சி. கையில் அதிகாரம் இருந்தும் எதுவும் செய்யாமல் கைகட்டி வேடிக்கை பார்த்ததுதான் கடந்த கால அதிமுக ஆட்சி. கடந்த 10 ஆண்டுகள் கால ஆட்சியின் சீரழிவை மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து புகார்கள் கொடுக்கின்றனர். விமர்சனங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல; அவற்றை வரவேற்கிறோம், ஆனால் விஷமத்தனம் கூடாது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போகவில்லை. மாறாக சட்டம் ஒழுங்கைக் கெடுக்கலாமா என்று சிலர் நினைக்கின்றனர். சிலரின் வயது எரிகிறது. ஒரு ஆட்சி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக இந்த ஆட்சி நடைபெறுகிறது" இவ்வாறு பேசினார். 

பதிவு: December 06, 2022
'கோழிக்கு அரிசி போட்டு பிடிப்பதுபோல் நம்மை தமிழை வைத்து பிடிக்கப்பார்க்கின்றனர்' - காசி தமிழ் சங்கமம் நிகழ்வை சாடிய சீமான்!

கோழிகளுக்கு அரிசியைப் போட்டு பிடிப்பது போல் தமிழர்களை மொழியை வைத்து பாஜக பிடிக்கத் திட்டமிடுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் பேசியதாவது: 

"காசி தமிழ்ச்சங்கமம் எனக்காகத்தான் நடத்தப்பட்டது. நான் வேல் தூக்கினால் அவர்களும் வேலைத் தூக்குவார்கள்; நான் முருகா என்றால் அவர்களும் முருகா என்பார்கள்; நான் ஈழம் பற்றிப் பேசினால் அவர்களும் ஈழம் என்பார்கள். ஆனால், நான் கச்சத்தீவு மீட்பு பற்றி பேசினால் மட்டும் எதுவும் பேசமாட்டார்கள். காவிரி நதிநீர் குறித்துப் பேசினால் எதுவும் பேசாமாட்டார்கள்.

நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் உள்ளதா? நாடாளுமன்றத்தில் தமிழில் பேசமுடியுமா? கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய முடியுமா? இதை விடுத்து காசி தமிழ்ச் சங்கமம் நடத்துவதன் மூலம் எப்படி நீங்கள் தமிழை வளர்ப்பீர்கள்?

கோழியை 'பக் பக் பக்' என்று அரிசி போட்டு பிடிப்பதைப் போல் தமிழை வைத்து தமிழ்நாட்டு மக்களை பிடிக்கப் பார்க்கிறார்கள். கோழி 'நம் பாஷை பேசுகிறாரே' என்று நினைத்து அவரிடம் மாட்டிக்கொண்டு வறுபடுவதைப் போல நாம் மாட்டிவிடக் கூடாது. எச்சரிக்கையாக இருக்கவேண்டும். 

 

பதிவு: November 28, 2022
ஆன்லைன் ரம்மியால் 15 மாதங்களில் நிகழ்ந்துள்ள 33-வது தற்கொலை! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

ஆன்லைன் ரம்மியால் ஒரிசாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், ஆன்லைன் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என் ரவி விரைந்து ஒப்புத அளிக்கவேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

ட்விட்டரில் இதுபற்றி பதிவிட்டுள்ள அவர், 

"தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வந்து தென்காசி மாவட்டம் கரிவலம்வந்த நல்லூரில் கூலி வேலை செய்து வந்த ஒதிஷா பெண் பந்தனா மஜ்கி, ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.70 ஆயிரத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்வு மிகுந்த வேதனை அளிக்கிறது.

ஆன்லைன் சூதாட்டத் தடை செல்லாது என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பிறகு ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் நிகழும் 33-ஆவது தற்கொலை இதுவாகும். கடந்த இரு மாதங்களில் இது நான்காவது தற்கொலை ஆகும்.
 
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான ஒவ்வொரு நகர்வும் பெரும் போராட்டத்திற்கும் பிறகும், சில உயிரிழப்புகளுக்கு பிறகும் தான் சாத்தியமாகிறது. 15 மாதங்களில் விலைமதிப்பற்ற 33 உயிர்களை பறி கொடுத்தும் கூட, ஆன்லைன் சூதாட்டம் இன்னும் தடை செய்யப்படவில்லை
 
ஒரு புறம் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் காலாவதியாகி விட்டது; மறுபுறம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்திற்கு ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் தமிழ்நாடு இனி ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறப்போகிறது
 
ஆன்லைன் சூதாட்டங்களால் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் ஏற்படவிருக்கும் பேராபத்தை தமிழக ஆளுனர் உணரவேண்டும். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 
பதிவு: November 28, 2022
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா ஒப்புதல் ஆளுநரால் காலம் தாழ்த்தப்பட்ட நிலையில் அது காலாவதியாகியுள்ளது! அடுத்த நடவடிக்கை என்ன?

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கான ஒப்புதல் தாமதமாக்கப்பட்ட நிலையில், அது காலாவதியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் காரணமாக தற்கொலைகள் பெருகிவந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதியை மயக்கி உயிரைக் கொல்லும் இந்த விளையாட்டைத் தமிழ்நாடு அரசு தடை செய்யவேண்டும் என்று எதிர்ப்புகள் எழவே, அரசு ஆன்லை ரம்மியைத் தடைசெய்வதற்கான சட்ட மசோதாவை அவசரச்சட்டமாக சட்டபேரவையில் நிறைவேற்றியது. 

இந்நிலையில், ஒப்புதலுக்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா அனுப்பப்பட்ட நிலையில், அதுகுறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டது. தமிழக அரசும் அதற்கு பதில் கடிதத்தை அடுத்த நாளே அனுப்பியது. இதனிடையே, அக்.01 ல் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதா நேற்றுடன் காலாவதியானது.

இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. ஆங்காங்கே ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலைகள் அதிகரித்துவரும் நிலையில், ஆன்லைன் ரம்மி மீது இன்னும் தடைவிதிக்கப்படாதது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 
பதிவு: November 28, 2022
'எங்களுக்கு நீதி கிடைக்கவில்லையெனில் அரசின் அத்தனை உதவிகளையும் திருப்பித்தருவோம்' - உயிரிழந்த வீராங்கனை பிரியாவின் வீட்டார் வேதனை!

தங்களுக்கு நீதி கிடைக்கவில்லையெனில் அரசு தங்களுக்கு வழங்கிய நிவாரண உதவிகளைத் திருப்பித்தந்துவிடுவதாக உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் வீட்டார் வேதனை பொங்கத் தெரிவித்துள்ளனர்.

சென்னை வியாசார்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா கால் எலும்பு சவ்வு பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாக அவர் உயிரிழந்தார். இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து பிரியாவிற்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் இருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை சட்டரீதியாக எடுக்கப்படும் என்று மருத்துவத்துரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதனையடுத்து, உயிரிழந்த பிரியாவின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி, வீடு மற்றும் பிரியாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை ஆகியவை வழங்கப்பட்டன.

இந்நிலையில், பிரியா மரணத்திற்குக் காரணமான மருத்துவர்கள் மீது இன்னும் நடவடிக்கை அரசு தரப்பிலிருந்து எடுக்கப்படவில்லை என்று பிரியாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள், அரசு தரப்பிலிருந்து மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும், அதுபற்றி உறுதியளித்ததால் தான் அரசின் உதவிகளைப் பெற்றுக்கொண்டோம் என்றும், அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அரசின் உதவிகளைத் திருப்பிச்செலுத்துவிடுவோம் என்றும், தங்களுக்கு நீதியே தேவை என்றும் அவர்கள் வேதனை பொங்கத் தெரிவித்துள்ளனர். 

பதிவு: November 26, 2022
பாஜக பெண் நிர்வாகிகளை ஆபாசமாகப் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்! மன்னிப்பு கேட்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

பாஜக பெண் நிர்வாகிகளை தரக்குறைவாகப் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்கை மன்னிப்புக் கேட்கக்கூறி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் அக்கட்சி உறுப்பினர் சைதை சாதிக், பாஜக நிர்வாகிகளான குஷ்பூ, காயத்ரி, நமீதா, கௌதமி ஆகியோரை தரக்குறைவாக சாடி, ஆபாசமான முறையில் பேசினார். இது அக்கட்சி உறுப்பினர்களிடையே கோபத்தை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு கண்டனங்கள் வலுத்தன. மேலும் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், வழக்குக்கு எதிராக சைதை சாதிக் முன்ஜாமீன் கோரியிருந்தார். இதைத்தொடர்ந்து நீதிபதிகள் முன்பாக இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அவர், சம்பந்தப்பட்ட பெண்களிடம் மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என்று வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஸ் சந்திரா உத்தரவிட்டுள்ளார். 

பதிவு: November 26, 2022

மேலும் செய்திகள்

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்