`இந்தியாவில் 600க்கு அதிகமான சட்டவிரோத கடன் செயலிகள்!'‍- பொதுமக்களை எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி

இந்தியாவில் 600க்கும் அதிகமான சட்டவிரோத கடன் செயலிகள் செயல்பட்டு வருவதாக ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

2017ம் ஆண்டில் 11,671 கோடி ரூபாயாக இருந்த டிஜிட்டல் கடன் விநியோக சந்தையின் மதிப்பு 2020ல் ரூ.1.41 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதனை பயன்படுத்தி கொண்டு சுமார் 1,100 கடன் செயலி நிறுவனங்கள் இந்தியாவில் டிஜிட்டல் கடன் சேவையில் ஈடுபட்டுள்ளன. இவற்றில் 600க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சட்டவிரோதமாக செயல்படுவது ரிசர்வ் வங்கியின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இத்தகைய நிறுவனங்கள் கடனை வசூலிப்பதில் ஆட்சேபகரமாக முறையில் நடந்து கொள்வதும் கடனாளிகள் மொபைல் விவரங்களை திருடுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. டிஜிட்டல் கடன் நிறுவனங்கள் மீது கடந்த ஆண்டு ஜனவரி முதல் நடப்பாண்டு 2,562 புகார்கள் குவிந்துள்ளன. மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி, ஹரியானா, ஆந்திரா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தே அதிக புகார்கள் வந்துள்ளன.

எந்த ஒரு நிறுவனத்திடமும் தனிப்பட்ட விவரங்களை கொடுக்கும் முன்பு ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்ட நிறுவனமா என்பதை உறுதிப்படுத்தி கொள்ள வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடன் வழங்கும் நிறுவனங்களை முழுமையாக ஆராய்ந்து அலுவலகத்திற்கே நேரடியாக சென்று மட்டுமே கடன் பெற வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

பதிவு: November 24, 2021
ஏர்டெல்லை தொடர்ந்து வோடபோனும் செல்போன் சேவை கட்டணத்தை உயர்த்தியது!

ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து வோடபோன்- ஐடியா நிறுவனமும் செல்போன் சேவை கட்டணத்தை உயர்த்தியுள்ளது. உயர்த்தப்பட்ட பிரீபெய்டு கட்டணங்கள் வரும் 26ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 28 நாட்கள் வேலிடிட்டிக்கான ரீசார்ஜ் கட்டணம் ரூ.79-லிருந்து ரூ.99-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 28 நாட்களுக்கு 2GB மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.149-லிருந்து ரூ.179 அதிகரிக்கப்பட்டுள்ளது. 28 நாட்களுக்கு தினமும் 1GB மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.219-லிருந்து ரூ.269 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

28 நாட்களுக்கு தினமும் 1.5GB மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.249-லிருந்து ரூ.299 ஆகவும், 28 நாட்களுக்கு தினமும் 2GB மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.299-லிருந்து ரூ.359 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

56 நாட்களுக்கு தினமும் 1.5GB மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.399-லிருந்து ரூ.479 ஆகவும், 56 நாட்களுக்கு தினமும் 2GB மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.449-லிருந்து ரூ.539 ஆகவும், 84 நாட்களுக்கு தினமும் 6GB மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.379-லிருந்து ரூ.459 ஆகவும் 84 நாட்களுக்கு தினமும் 1.5GB மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.599-லிருந்து ரூ.719 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

84 நாட்களுக்கு தினமும் 2GB மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.699-லிருந்து ரூ.839 ஆகவும், 365 நாட்களுக்கு 24GB மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.1499-லிருந்து ரூ.1799 ஆகவும் 365 நாட்களுக்கு தினமும் 2GB மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.2399-லிருந்து ரூ.2899 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பதிவு: November 23, 2021
ராக்கெட் வேகத்தில் உயரும் பெட்ரோல், டீசல் விலை!- அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்

சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டர் ஒன்றுக்கு 30 பைசா அதிகரித்து ரூ.105.13க்கும் மற்றும் டீசல் விலை 33 பைசா உயர்ந்து ரூ.101.25க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைப்பிடித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை சந்தித்துள்ளதால், இந்தியாவில் வரலாறு காணாத அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் பெட்ரோல் விலை நேற்று லிட்டருக்கு 31 பைசா அதிகரித்து ரூ.104.83 ஆகவும் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 33 பைசா உயர்ந்து ரூ.100.92 ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டர் ஒன்றுக்கு 30 பைசா அதிகரித்து ரூ.105.13க்கும் மற்றும் டீசல் விலை 33 பைசா உயர்ந்து ரூ.101.25க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

பெட்ரோல், டீசலின் தொடர் விலையேற்றத்தால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை பொருட்கள் விலை உயர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசை பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த பெட்ரோல், டீசல் மீதான வரியை ஒன்றிய அரசு குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக சவூதி அரேபியா, வளைகுடா நாடுகள் மற்றும் ரஷ்யாவுடன் ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பதாக ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப சிங் பூரி கூறியுள்ளார்.

பதிவு: October 28, 2021
ஜெட் வேகத்தில் உயரும் எரிபொருள் விலை!- சென்னையில் சதம் அடிக்கப் போகிறது டீசல் விலை

ஜெட் வேகத்தில் எரிபொருள் விலை உயர்ந்து வருவதால் பெட்ரோல், டீசல் விலை கடந்த 21 நாட்களில் 18வது முறையாக அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினமும் எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு மாற்றி அமைத்து வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்து வருகின்றனர். இதனால், நாட்டின் பெரும்பாலான நகரங்களில் பெட்ரோல் ரூ.106க்கு அதிகமாகவும், டீசல் ரூ.100க்கு அதிகமாகவும் விற்பனையாகிறது.

இம்மாதத்தில் 4, 18, 19 தேதிகளில் தவிர 18வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இன்று பெட்ரோல் லிட்டருக்கு 30 காசும், டீசல் 33 காசும் அதிகரிக்கப்பட்டது. இதனால், சென்னையில் பெட்ரோல் ரூ.103.61க்கும், டீசல் ரூ.99.59க்கும் விற்பனையாகிறது. சேலத்தில் டீசல் விலை வரலாற்றில் முதன் முறையாக ரூ.100யை தாண்டியது. பெட்ரோல், டீசலின் தொடர் விலையேற்றத்தால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை பொருட்கள் விலை உயர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசை பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பதிவு: October 21, 2021
`வீட்டு கடன், தனி நபர் கடன் வட்டியில் மாற்றமில்லை; ரெப்போ வட்டி விகிதம் 4 சதவிகிதமாக தொடரும்'- ரிசர்வ் வங்கி அறிவிப்பு

குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் எந்த மாற்றமும் இன்றி 4 சதவிகிதமாக தொடரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் கூடும். இதன்படி, 2 நாட்கள் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் முடிவடைந்து அதன் முடிவுகளை இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த் தாஸ் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள முடிவுகளின் படி, அனைவரும் கணித்தபடியே ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை. தொடர்ந்து 4 சதவீதமாக இருக்கும். இதேபோல் ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை 3.35 சதவீதம் தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதன் மூலம் வட்டி விகிதங்களில் எட்டாவது முறையாக மாற்றங்கள் செய்யாமல் பழைய நிலையிலேயே நீடிக்க ரிசா்வ் வங்கி முடிவெடுத்துள்ளது. இந்த அறிவிப்பால் வங்கிகளில் கடனுக்கான வட்டி விகிதம் குறையக் கட்டாயம் வாய்ப்பு இல்லை. இதன் மூலம் கனவு வீட்டை வாங்கத் திட்டமிடுவோர் தற்போது வங்கிகளில் இருக்கும் மிகவும் குறைவான வட்டி விகிதத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதேபோல் வாகன கடன், தனிநபர் கடனுக்கான வட்டி விகிதமும் குறையாது.

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், '2021 - 22 நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது 2021-22 இரண்டாம் காலாண்டில் 7.9 சதவீதமாகவும், 3ம் காலாண்டில் 6.8 சதவீதமாகவும், 4வது காலாண்டில் 6.1 சதவீதமாகவும் இருக்கும். 2022- 23ம் முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 17.2 சதவீதமாக இருக்கும்.2022 நிதியாண்டில் நுகர்வோர் பணவீக்கம் 5.3% ஆக இருக்கும். 2022-23 நிதியாண்டின் முதல் காலாண்டில் நுகர்வோர் பணவீக்கம் 5.2% ஆக இருக்கும்' என்று தெரிவித்தார்.

பதிவு: October 08, 2021
ஒரே நாளில் எகிறியது தங்கம் விலை!- ஒரு சவரன் ரூ.35,136க்கு விற்பனை

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.448 உயர்ந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் சர்வதேச சந்தையை பொறுத்து தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. சென்ற வாரம் முழுவதும் சரிந்து வந்த தங்கம் இந்த வாரத் தொடக்கத்தில் இருந்தே ஏறியும் இறங்கியும் வருகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக திடீரென தங்கம் விலை உயர்ந்து அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் அதிரடியாக உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.448 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,392க்கும், சவரன் ரூ.35,136க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.63.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை திடீரென உயர்ந்துள்ளால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பதிவு: October 01, 2021
தங்கம் விலை அதிரடியாக சரிவு!- ஒரு பவுன் ரூ.34,920க்கு விற்பனை

தங்கம் விலை அதிரடி குறைவால் வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். ஒரு பவுன் இன்று ரூ.34,920க்கு விற்பனையாகிறது.

தங்கம் இந்த செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் விலையேற்றம் இருந்தது. ஆனால், வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக கடந்த ஒரு வாரத்தில் தொடர்ச்சியாக தங்கம் விலை குறைக்கப்பட்டது. நேற்று ஆபரண தங்கத்தின் விலை 176 ரூபாய் குறைந்து 35,440 ரூபாய்க்கு விற்பனையானது. இன்றும் தங்கம் விலை கடுமையாக வீழ்ச்சியை கண்டுள்ளது.

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,365 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 4,485 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 35,472 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 400 ரூபாய் குறைந்து 34,920 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை இன்று உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1.50 குறைந்து ரூ.65.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 65,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பதிவு: September 17, 2021
இந்தியாவில் ஆலையை மூடுகிறது ஃபோர்டு நிறுவனம்! - 4000 தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம்!

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி வாகன நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவில் உள்ள உற்பத்தி ஆலைகளை மூட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 20 வருடங்களாக இந்தியாவில் பல்வேறு வகை கார்களை தொடர்ந்து உற்பத்தி செய்துவரும் ஃபோர்டு நிறுவனம் லாபமின்றி தொடர்ந்து நஷ்டத்தையே சந்தித்து வருவதாகவும், பல்வேறு புதிய மாடல்களை இந்தியாவில் உற்பத்தி செய்தும் நஷ்டமே ஏற்பட்டு வருவதால் உற்பத்தி மிகவும் குறைந்திருப்பதாகக் கூறியிருக்கிறது. இதனால் ஃபோர்டு இந்தியா நிறுவனத்துக்கு 2 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறது.

இதனால் தமிழ்நாட்டிலுள்ள மறைமலைநகர், குஜராத்திலுள்ள சனண்ட் ஆகிய இரண்டு இடங்களில் உள்ள உற்பத்தி ஆலைகளை மூட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இனிமேல் இந்தியாவில் கார்களை உற்பத்தி செய்யாமல் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விற்பனையை மட்டும் இந்தியாவில் தொடர திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஃபோர்டு வாகன உற்பத்தி ஆலை மூடப்பட்டால் சுமார் 4000 தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் உள்ளதாகத் தெரிகிறது.

ஜெர்மனி, ஸ்பெயின், பிரிட்டன் ஆகிய நாடுகளில் ஃபோர்டு நிறுவன ஆலைகள் ஏற்கெனவே மூடப்பட்ட நிலையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

பதிவு: September 09, 2021
வரிக் கணக்குகளை தாக்கல் செய்வதற்கான தேதியை நீட்டித்தது வருமான வரித்துறை!

பல்வேறு வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை, வருமான வரித்துறை நீட்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

நேரடி வரி தொடா்பாக நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு சுமுகத் தீா்வு காணும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள ‘விவாத் ஸே விஸ்வாஸ்’ திட்டத்தின் கீழ் கட்டணம் செலுத்துவதற் கான தேதி, செப்டம்பா் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வட்டித் தொகையுடன் சோ்த்து அக்டோபா் 31-க்குள் கட்டணம் செலுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஓய்வூதிய நிதியில் முதலீடு செய்வதற்கான கெடு, ஜூலை 31-ல் இருந்து நவம்பா் 30-ஆம் தேதி வரையிலும், தங்க முதலீட்டுப் பத்திரத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான கெடு அக்டோபா் 31-ல் இருந்து டிசம்பா் 31ம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை முதல் 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் வரையிலான காலகட்டத் தில் ஜிஎஸ்டி வரிக் கணக்கு தாக்கல் செய்யாதவா்களுக்கு சலுகை அளிக்க ஜிஎஸ்டி கவுன் சில், கடந்த மே மாதம் முடிவு செய்தது. அதன்படி, குறைக்கப்பட்ட தாமதக் கட்டணத் தை மத்திய நிதியமைச்சகம் ஜூன் 1-ஆம் தேதி அறிவித்தது.

இந்தக் கட்டணத்தை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. தற்போது, தாமதக் கட்டணம் செலுத்த கடைசி தேதி நவம்பா் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான புதிய வலைதளத்தில் கோளாறு ஏற்பட்ட தால், வரிக் கணக்குகளை தாக்கல் செய்வதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, வரிக் கணக்குகளை தாக்கல் செய்வதற்கான தேதியை வருமான வரித் துறை நீட்டித்துள்ளது.

பதிவு: August 30, 2021
புதுச்சேரியில் வாட் வரி குறைப்பு!- பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.43 சரிவு!

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் விற்கபடும் பெட்ரோல் மீதான 3 சதவீதம் வாட் வரியை குறைப்பதற்கான அமைச்சரவையின் முடிவிக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி, பெட்ரோல் விலை ரூ.2.43 குறைந்து புதுச்சேரியில் ரூ.99.52 ஆகவும் காரைக்காலில் ரூ.99.30 ஆகவும் விற்பனை செய்யப்படும் என ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள சிபிஎஸ்இ / ஐசிஎஸ்இ உள்ளிட்ட அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் செப்டம்பர் 1ம் தேதி முதல் நேரடி வகுப்புகளைத் தொடங்கும் வகையில் அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள இன்று முதல் பள்ளிகளைத் திறக்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.

9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தாமாக முன்வந்து பள்ளிகளுக்கு வர விரும்புவதால், 2021-22 கல்வியாண்டில் மாற்று நாட்களில் பள்ளிகள் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை (அரை நாள்) வாரத்தில் 6 நாட்கள், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: August 26, 2021
டெபிட், கிரெடிட் கார்டு பண பரிவர்த்தனை!- ஆன்லைன் வணிக நிறுவனங்களுக்கு ஆர்பிஐ `செக்'

டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலமாக ஆன்லைனில் செய்யும் பரிவர்த்தனைகளுக்கு புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. இந்தப் புதிய விதிமுறைகளின்படி ஆன்லைன் வணிக நிறுவனங்கள் டெபிட், கிரெடிட் கார்டு தகவல்களை சேமிக்க கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

அமேசான், பிளிப்கார்ட், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட அனைத்து இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் பிற ஆன்லைன் கட்டண தளங்களும் இதுவரை வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு தகவல்களை தங்களுடைய சர்வரில் சேமித்து வந்தன. இதனால் வாடிக்கையாளர்கள் சிவிவி எண்ணை மட்டும் உள்ளிட்டு, ஓடிபி எனப்படும் ரகசிய எண்ணை உள்ளிட்டால் பரிவர்த்தனை நிறைவு பெறும். தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு ஆன்லைன் பரிவர்த்தனைகளின் போதும் 16 இலக்க அட்டை எண், சிவிவி, காலாவதி தேதி ஆகிய அனைத்தையும் உள்ளிட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்த இத்தகைய புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதனால் ஆன்லைன் பரிவர்த்தனை நடைமுறைகள் சற்றுதாமதமாகும் நிலை உண்டாகும். ஆனால் இது வாடிக்கையாளர்களின் வங்கிச் சேவை தகவல்களை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

பதிவு: August 24, 2021
காலையில் சரிவு, மாலையில் ஏற்றம்!- கண்ணாமூச்சி ஆடி வரும் தங்கத்தின் விலை

தங்கம் விலை இன்று சவரனுக்கு 32 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 35,688 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலையானது கடந்த சில நாட்களாகவே கண்ணாமூச்சி ஆடி வருகிறது. காலையில் சரிவு காண்பதும், மாலையில் ஏற்றம் காண்பதும் தங்கத்தின் வாடிக்கையாகவே இருந்து வருகிறது. எப்படியிருப்பினும் இன்று விலையானது சற்று தடுமாற்றத்தில் காணப்படுகிறது. இது முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட பீதியாலும் தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தன. தங்கம் வாங்கும் எண்ணத்தில் இருப்பவர்கள் அதை வாங்கவே வேண்டாம் என்று நினைக்கும் அளவுக்கு சென்னையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது.

கொரோனாவின் தாக்கத்தினை தொடர்ந்து கடந்த ஆண்டில் தங்கம் விலையானது வரலாற்று உச்சத்தினை தொட்டது. கொரோனா பிரச்னை, நிதி நெருக்கடி, ஊரடங்கு போன்ற பிரச்னைகள் இருந்தாலும் மக்களிடையே தங்கத்துக்கான தேவை மட்டும் குறையவில்லை. விலை உயர்வு இருந்தாலும் தங்கம் வாங்குவதில் இல்லத்தரசிகள் தீவிரமாகவே இருக்கின்றனர். தற்போது பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ள நிலையில், இது கடந்த ஆண்டு வரலாற்று உச்சத்தோடு ஒப்பிடும்போது 9,000 ரூபாய் சரிவில் காணப்படுகிறது.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்திருப்பது நகை பிரியர்களை சற்று ஆறுதல் படுத்தியுள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து, சவரனுக்கு 32 ரூபாய் சரிந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒருகிராம் 4,461 ரூபாயாகவும், ஒரு சவரன் 35,688 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் 8 கிராம் 38,600 ரூபாயாக உள்ளது. வெள்ளி ஒருகிராம் 66 ரூபாய் 70 காசுகளாகவும், ஒருகிலோ 66,700 ரூபாயாகவும் உள்ளது.

பதிவு: August 23, 2021
நீங்கள் ஐசிஐசிஐ வாடிக்கையாளரா?- இதை முதலில் படியுங்கள்

ஐசிஐசிஐ வாடிக்கையாளர்களிடம் இருந்து பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. இதை முதலில் பார்ப்போம்.

பண பரிவர்த்தனை கட்டணங்களைப் பொருந்தவரையில் மாதத்திற்கு முதல் 4 பரிவர்த்தனைகள் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 150 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

டெல்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட ஆறு நகரங்களில் முதல் 3 பரிவர்த்தனைகளை வாடிக்கையாளர்கள் இலவசமாக செய்யலாம். இவை தவிர மற்ற பகுதிகளில் மாதத்திற்கு முதல் 5 பரிவர்த்தனைகள் இலவசம். அதை மீறும் போது அதிகபட்ச பரிவர்த்தனைகளுக்கு 20 ரூபாய் கட்டணமாகும். காசோலை கட்டணத்தைப் பொருத்தவரையில் ஒரு வருடத்திற்கு 25 காசோலைகளுக்கு கட்டணம் இல்லை. வாடிக்கையாளர்களுக்கு இலவசம் தான். அதற்கு மேற்பட 10 காசோலைகள் கொண்ட ஒவ்வொரு புத்தகத்திற்கும் 20 ரூபாய் வாடிக்கையாளர்களிடம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

சில்வர் சேமிப்பு சம்பள கணக்கில் மாதத்திற்கு 4 இலவச பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம். அதற்கு மேற்பட்ட ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும், 150 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.

பதிவு: August 20, 2021
எகிறும் தங்கம் விலை!- சாமானிய மக்கள் வேதனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.35,664க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சாமானிய மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

சென்னையில் கடந்த வாரத்துக்கு முன்னர் தங்கம் விலை அதிரடியாக சரிந்தது. கடந்த 6ம் தேதியில் இருந்து அடுத்தடுத்த நாட்களில் தொடர் சரிவைக் கண்டு ரூ.36 ஆயிரத்துக்கு மேல் விற்கப்பட்டு வந்த தங்கம், ரூ.35 ஆயிரத்துக்குக் கீழ் சென்றது. அதாவது, 4 நாட்களிலேயே தங்கம் விலை ஆயிரம் ரூபாய்க்கு மேல் குறைந்துவிட்டது.

இப்படியே தங்கம் விலை குறைந்து விடும் என சாமானிய மக்கள் எண்ணிக் கொண்டிருந்த வேளையில் மீண்டும் அதிகரித்து அதிர்ச்சியளித்தது. தொடர்ந்து ஒரு வாரமாக தங்கம் விலை அதிகரித்து வருவதால் தங்கம் விலை மீண்டும் உச்சத்தை அடையுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.4,458க்கு விற்பனையாகிறது. அதன்படி, சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.35,664க்கு விற்பனையாகிறது. மேலும் வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.68.60க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.68,600க்கும் விற்பனையாகிறது.

பதிவு: August 17, 2021
59 நிமிடத்தில் லோன் - எந்த வங்கிகளில் தெரியுமா?

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிக்கும் பொருட்டுப் பொதுத்துறை வங்கிகளின் வாயிலாக வெறும் 59 நிமிடத்தில் கடன் வழங்கி வருகிறது.

மத்திய அரசின் சிறப்புத் திட்டத்தின் கீழ், இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) PSB லோன்ஸ் என்ற சிறப்புப் பின்டெக் தளத்தை உருவாக்கிச் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 59 நிமிடத்தில் கடன் கொடுக்கும் வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்தது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பாங்க ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி, விஜயா வங்கி, இந்தியன் வங்கி ஆகிய வங்கிகளில் இந்த திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் 1 லட்சம் ரூபாய் முதல் 10 கோடி ரூபாய் வரையிலான கடனுக்கு விண்ணப்பித்து, முதற்கட்ட ஒப்புதலைப் பெறலாம். வர்த்தகக் கடன், தனிநபர் கடன், வீட்டுக்கடன், வாகன கடன் மற்றும் முத்ரா கடன் ஆகியவை இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்றன. வர்த்தகக் கடன் - 5 கோடி ரூபாய், தனிநபர் கடன் - 20 லட்சம் ரூபாய், வீட்டுக் கடன் - 10 கோடி ரூபாய், வாகன கடன் - 1 கோடி ரூபாய் , முத்ரா கடன் - 10 லட்சம் ரூபாய்

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொண்டு உங்கள் தொழிலை மேம்படுத்துங்கள். ஆன்லைனில் விண்ணப்பிப்பதும் மிகவும் எளிது. அதற்கு முதலில் நீங்கள் செல்ல வேண்டியது SIDBI உருவாக்கிய பின்டெக் தளமான PSB லோன்ஸ் தளத்திற்குச் செல்வது. https://www.psbloansin59minutes.com/home அங்கு தோன்றும் அடுத்தடுத்தப்படிகளை நிரப்பினால் உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். பின்பு உங்கள் தகுதிக்கு ஏற்றவாறு லோன் வழங்கப்படும். இதை சற்று நினைவில் கொள்ளுங்கள். வங்கியில் கடைசிக்கட்ட பணிகள் முதற்கட்ட ஒப்புதல் கடிதம் கிடைத்த பின்பு குறிப்பிட்ட வங்கிக்கு நீங்கள் நேரில் செல்ல வேண்டும். அங்கு, நிறுவனத்தின் நிதிநிலை மற்றும் இதர ஆவணங்களை ஆய்வு செய்து பின்பே வங்கிகள் கடனுக்கு ஒப்புதல் அளிக்கும்.

பதிவு: August 16, 2021
தங்கத்திற்கு இன்று முதல் ஹால்மார்க் காட்டாயம்!

தங்க நகைகள் மற்றும் கலைப்பொருட்களில் கட்டாய ஹால்மார்க்கிங் நடைமுறை முதல் கட்டமாக இந்தியா முழுவதும் 256 மாவட்டங்களில் ஜூன் 16-ம் தேதியான இன்று நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருவதன் மூலம் இனி தங்க நகைகள் மற்றும் கலைபொருட்களுக்கு ஹால்மார்க் முத்திரையிடுவது கட்டாயம் ஆகும். நகை கடைகளில் விற்கப்படும் தங்க நகைகளுக்கான தரத்தை உறுதிப்படுத்த இந்திய தர நிர்ணயக் கழகத்தின் (பி.ஐ.எஸ்.) ஹால்மார்க் முத்திரை உதவுகிறது. இந்த முத்திரையை கொண்டு வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் தங்கத்தின் தரத்தை உறுதி செய்யலாம்.


இதன்படி ஹால்மார்க்கிங் சென்டர்கள் (hallmarking centers) ஏற்கெனவே இருக்கும் நாட்டின் 256 மாவட்டங்களில் கட்டாய தங்க ஹால்மார்க்கிங் முதற்கட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படுகிறது. தங்கம் உருக்கி நகைகளாக உருவாக்கப்படும் போது எளிதில் உடையாமல் இருக்க அதனுடன் சேர்த்து ஏதேனும் உலோகம் கலக்கப்பட்டு தான் தயாரிக்கப்படுகின்றன. எனவே நாம் வாங்கும் நகைகளில் எவ்வளவு சதவீதம் ஒரிஜினல் தங்கம் இருக்கிறது, எவ்வளவு உலோகம் கலக்கப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள தங்கத்தின் தூய்மை மற்றும் நேர்த்திக்கு சான்றளிக்கும் செயல்முறையே ஹால்மார்க்கிங் ஆகும்.

உலகளவில் தங்கத்தை அதிகம் வாங்குபவர்களில் இந்தியர்கள் மிக அதிகம். எனவே தங்க நகைகளின் தரத்தை கண்காணிக்க கடந்த 2000-ம் ஆண்டு முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் தர முத்திரையிடும் நடைமுறை செயலில் உள்ளது. நாம் வாங்கும் தங்கத்தினுடைய தூய்மை குறித்து ஒரு உறுதியான உத்தரவாதத்தை நமக்கு அளிக்கிறது ஹால்மார்க்கிங். நகை விற்பனையாளர்களிடம் இருந்து நாம் வாங்கும் தங்க நகைகள் அல்லது தங்க நாணயத்தில் BIS அடையாளம் இருந்தால், அது இந்திய தரநிலை பணியகத்தால் (BIS) நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்கு ஒத்து போகிறது என்று அர்த்தமாகும்.

இதனிடையே நுகர்வோர் விவகார அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான தொழில் பங்குதாரர்களின் கூட்டத்தில் தங்க நகைகளில் BIS ஹால்மார்க் முத்திரை இனி கட்டாயம் இடம்பெற வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சிஐஐடி) மற்றும் அகில இந்திய நகைக்கடை மற்றும் கோல்ட்ஸ்மித் கூட்டமைப்பு (AIJGF) பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இதன்படி இன்று முதல் முதற்கட்டமாக நாட்டின் 256 மாவட்டங்களில் கட்டாய தங்க ஹால்மார்க்கிங் நடைமுறைக்கு வந்துள்ளது. இன்று முதல் ஏற்கனவே ஹால்மார்க்கிங் சென்டர்கள் இருக்கும் 256 மாவட்டங்களில் உள்ள நகைக்கடை விற்பனையாளர்கள் 14, 18 மற்றும் 22 காரட் தங்க நகைகளை மட்டுமே விற்க அனுமதிக்கப்படுவார்கள். மேலும் ஹால்மார்க்கிங் செய்ய கூடுதல் 20, 23 மற்றும் 24 காரட் தங்கமும் அனுமதிக்கப்படும். நகை வியாபாரிகள் தங்களிடம் உள்ள பழைய ஸ்டாக்குகளில் ஹால்மார்க்கிங் பெற செப்டம்பர் 1ம் தேதி காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாத கால இடைவெளியில் எந்தவொரு வணிகருக்கும் எதிராக எந்த அபராதமும் விதிக்கப்பட மாட்டாது.

இது தொடர்பாக ட்விட்டரில் போஸ்ட் ஒன்றை ஷேர் செய்துள்ள அமைச்சர் பியூஷ் கோயல், "வாடிக்கையாளர்களின் சிறந்த பாதுகாப்பு மற்றும் திருப்திக்கான மத்திய அரசின் முயற்சியைத் தொடர்ந்து, 2021 ஜூன் 16 முதல் (இன்று முதல்) 256 மாவட்டங்களில் கட்டாய ஹால்மார்க்கிங் செயல்படுத்தப்படும். நகை விற்பனையாளர்களுக்கு ஆகஸ்ட் 2021 வரை அபராதம் விதிக்கப்படாது. இந்த முயற்சி இந்தியாவை ஒரு முன்னணி உலகளாவிய தங்க சந்தை மையமாக வளர்க்க உதவும்" என்று கூறி உள்ளார்.


ஹால்மார்க் தங்க நகைகளை மட்டுமே விற்க வேண்டும் என்ற இந்த நடைமுறை நாடு முழுவதும் படிப்படியாக அமல்படுத்தப்பட உள்ளது. இந்த கட்டாய ஹால்மார்க் நடைமுறை மூலம் தரம் குறைந்த தங்க நகைகளை விற்பது முற்றிலும் நிறுத்தப்படும், தங்க நகைகளை வாங்கும் மக்கள் ஏமாறாமல் பாதுகாக்கப்படுவார்கள் என்று அரசு தரப்பு கூறி உள்ளது. 2021 ஜனவரி 15 முதல் நாடு முழுவதும் தங்க நகைகள் மற்றும் கலைப்பொருட்களுக்கு ஹால்மார்க்கிங் கட்டாயமாக்கப்படும் என்று 2019 நவம்பரில் மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால் கோவிட் நெருக்கடியை கருத்தில் கொண்டு பல முறை இதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டது நினைவில் கொள்ளத்தக்கது.

பதிவு: June 16, 2021

முக்கிய செய்திகள்

'தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு கெடவில்லை; மாறாக சிலர் அதை கெடுக்க நினைத்து செயல்படுகின்றனர்' - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைக் கெடுக்க சிலர் நினைத்து செயல்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

அரியலூர் மாவட்டத்தில் 27,070 பயனாளிகளுக்கு ரூ.52 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,

"ஒரு முதலமைச்சர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் கடந்த 10 ஆண்டாக இருந்த அதிமுக ஆட்சி. கையில் அதிகாரம் இருந்தும் எதுவும் செய்யாமல் கைகட்டி வேடிக்கை பார்த்ததுதான் கடந்த கால அதிமுக ஆட்சி. கடந்த 10 ஆண்டுகள் கால ஆட்சியின் சீரழிவை மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து புகார்கள் கொடுக்கின்றனர். விமர்சனங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல; அவற்றை வரவேற்கிறோம், ஆனால் விஷமத்தனம் கூடாது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போகவில்லை. மாறாக சட்டம் ஒழுங்கைக் கெடுக்கலாமா என்று சிலர் நினைக்கின்றனர். சிலரின் வயது எரிகிறது. ஒரு ஆட்சி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக இந்த ஆட்சி நடைபெறுகிறது" இவ்வாறு பேசினார். 

பதிவு: December 06, 2022
'கோழிக்கு அரிசி போட்டு பிடிப்பதுபோல் நம்மை தமிழை வைத்து பிடிக்கப்பார்க்கின்றனர்' - காசி தமிழ் சங்கமம் நிகழ்வை சாடிய சீமான்!

கோழிகளுக்கு அரிசியைப் போட்டு பிடிப்பது போல் தமிழர்களை மொழியை வைத்து பாஜக பிடிக்கத் திட்டமிடுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் பேசியதாவது: 

"காசி தமிழ்ச்சங்கமம் எனக்காகத்தான் நடத்தப்பட்டது. நான் வேல் தூக்கினால் அவர்களும் வேலைத் தூக்குவார்கள்; நான் முருகா என்றால் அவர்களும் முருகா என்பார்கள்; நான் ஈழம் பற்றிப் பேசினால் அவர்களும் ஈழம் என்பார்கள். ஆனால், நான் கச்சத்தீவு மீட்பு பற்றி பேசினால் மட்டும் எதுவும் பேசமாட்டார்கள். காவிரி நதிநீர் குறித்துப் பேசினால் எதுவும் பேசாமாட்டார்கள்.

நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் உள்ளதா? நாடாளுமன்றத்தில் தமிழில் பேசமுடியுமா? கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய முடியுமா? இதை விடுத்து காசி தமிழ்ச் சங்கமம் நடத்துவதன் மூலம் எப்படி நீங்கள் தமிழை வளர்ப்பீர்கள்?

கோழியை 'பக் பக் பக்' என்று அரிசி போட்டு பிடிப்பதைப் போல் தமிழை வைத்து தமிழ்நாட்டு மக்களை பிடிக்கப் பார்க்கிறார்கள். கோழி 'நம் பாஷை பேசுகிறாரே' என்று நினைத்து அவரிடம் மாட்டிக்கொண்டு வறுபடுவதைப் போல நாம் மாட்டிவிடக் கூடாது. எச்சரிக்கையாக இருக்கவேண்டும். 

 

பதிவு: November 28, 2022
ஆன்லைன் ரம்மியால் 15 மாதங்களில் நிகழ்ந்துள்ள 33-வது தற்கொலை! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

ஆன்லைன் ரம்மியால் ஒரிசாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், ஆன்லைன் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என் ரவி விரைந்து ஒப்புத அளிக்கவேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

ட்விட்டரில் இதுபற்றி பதிவிட்டுள்ள அவர், 

"தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வந்து தென்காசி மாவட்டம் கரிவலம்வந்த நல்லூரில் கூலி வேலை செய்து வந்த ஒதிஷா பெண் பந்தனா மஜ்கி, ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.70 ஆயிரத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்வு மிகுந்த வேதனை அளிக்கிறது.

ஆன்லைன் சூதாட்டத் தடை செல்லாது என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பிறகு ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் நிகழும் 33-ஆவது தற்கொலை இதுவாகும். கடந்த இரு மாதங்களில் இது நான்காவது தற்கொலை ஆகும்.
 
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான ஒவ்வொரு நகர்வும் பெரும் போராட்டத்திற்கும் பிறகும், சில உயிரிழப்புகளுக்கு பிறகும் தான் சாத்தியமாகிறது. 15 மாதங்களில் விலைமதிப்பற்ற 33 உயிர்களை பறி கொடுத்தும் கூட, ஆன்லைன் சூதாட்டம் இன்னும் தடை செய்யப்படவில்லை
 
ஒரு புறம் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் காலாவதியாகி விட்டது; மறுபுறம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்திற்கு ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் தமிழ்நாடு இனி ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறப்போகிறது
 
ஆன்லைன் சூதாட்டங்களால் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் ஏற்படவிருக்கும் பேராபத்தை தமிழக ஆளுனர் உணரவேண்டும். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 
பதிவு: November 28, 2022
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா ஒப்புதல் ஆளுநரால் காலம் தாழ்த்தப்பட்ட நிலையில் அது காலாவதியாகியுள்ளது! அடுத்த நடவடிக்கை என்ன?

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கான ஒப்புதல் தாமதமாக்கப்பட்ட நிலையில், அது காலாவதியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் காரணமாக தற்கொலைகள் பெருகிவந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதியை மயக்கி உயிரைக் கொல்லும் இந்த விளையாட்டைத் தமிழ்நாடு அரசு தடை செய்யவேண்டும் என்று எதிர்ப்புகள் எழவே, அரசு ஆன்லை ரம்மியைத் தடைசெய்வதற்கான சட்ட மசோதாவை அவசரச்சட்டமாக சட்டபேரவையில் நிறைவேற்றியது. 

இந்நிலையில், ஒப்புதலுக்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா அனுப்பப்பட்ட நிலையில், அதுகுறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டது. தமிழக அரசும் அதற்கு பதில் கடிதத்தை அடுத்த நாளே அனுப்பியது. இதனிடையே, அக்.01 ல் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதா நேற்றுடன் காலாவதியானது.

இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. ஆங்காங்கே ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலைகள் அதிகரித்துவரும் நிலையில், ஆன்லைன் ரம்மி மீது இன்னும் தடைவிதிக்கப்படாதது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 
பதிவு: November 28, 2022
'எங்களுக்கு நீதி கிடைக்கவில்லையெனில் அரசின் அத்தனை உதவிகளையும் திருப்பித்தருவோம்' - உயிரிழந்த வீராங்கனை பிரியாவின் வீட்டார் வேதனை!

தங்களுக்கு நீதி கிடைக்கவில்லையெனில் அரசு தங்களுக்கு வழங்கிய நிவாரண உதவிகளைத் திருப்பித்தந்துவிடுவதாக உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் வீட்டார் வேதனை பொங்கத் தெரிவித்துள்ளனர்.

சென்னை வியாசார்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா கால் எலும்பு சவ்வு பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாக அவர் உயிரிழந்தார். இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து பிரியாவிற்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் இருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை சட்டரீதியாக எடுக்கப்படும் என்று மருத்துவத்துரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதனையடுத்து, உயிரிழந்த பிரியாவின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி, வீடு மற்றும் பிரியாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை ஆகியவை வழங்கப்பட்டன.

இந்நிலையில், பிரியா மரணத்திற்குக் காரணமான மருத்துவர்கள் மீது இன்னும் நடவடிக்கை அரசு தரப்பிலிருந்து எடுக்கப்படவில்லை என்று பிரியாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள், அரசு தரப்பிலிருந்து மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும், அதுபற்றி உறுதியளித்ததால் தான் அரசின் உதவிகளைப் பெற்றுக்கொண்டோம் என்றும், அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அரசின் உதவிகளைத் திருப்பிச்செலுத்துவிடுவோம் என்றும், தங்களுக்கு நீதியே தேவை என்றும் அவர்கள் வேதனை பொங்கத் தெரிவித்துள்ளனர். 

பதிவு: November 26, 2022
பாஜக பெண் நிர்வாகிகளை ஆபாசமாகப் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்! மன்னிப்பு கேட்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

பாஜக பெண் நிர்வாகிகளை தரக்குறைவாகப் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்கை மன்னிப்புக் கேட்கக்கூறி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் அக்கட்சி உறுப்பினர் சைதை சாதிக், பாஜக நிர்வாகிகளான குஷ்பூ, காயத்ரி, நமீதா, கௌதமி ஆகியோரை தரக்குறைவாக சாடி, ஆபாசமான முறையில் பேசினார். இது அக்கட்சி உறுப்பினர்களிடையே கோபத்தை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு கண்டனங்கள் வலுத்தன. மேலும் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், வழக்குக்கு எதிராக சைதை சாதிக் முன்ஜாமீன் கோரியிருந்தார். இதைத்தொடர்ந்து நீதிபதிகள் முன்பாக இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அவர், சம்பந்தப்பட்ட பெண்களிடம் மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என்று வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஸ் சந்திரா உத்தரவிட்டுள்ளார். 

பதிவு: November 26, 2022

மேலும் செய்திகள்

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்