`தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு ஒமிக்ரானுக்கு முந்தைய அறிகுறி!'- மருத்துவதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சந்தேகம்

"ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 8 பேருக்கு மரபணு மாற்றமடைந்துள்ள தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது" என்று மருத்துவதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தை பொறுத்தவரை 15 நாடுகளில் இருந்து வந்த 14,450 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, நிதர்லாந்து, சுவீடன், ஸ்பெயின், தான்சன்யா, சிங்கப்பூர், அமெரிக்கா, அரபு நாடுகள், இலங்கை, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு சோதனை நடத்தப்பட்டது. ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி யாருக்கு நெகட்டிவ் வருகிறதோ அவர்கள் வீட்டில் 8 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு 8 நாள் தனிமைக்கு பிறகு பரிசோதனை மேற்கொண்டதில் 16 பேருக்கு பாசிட்டிவ் வந்தது. இதில் நைஜீரியாவில் இருந்து வந்தவருடன் தொடர்பில் இருந்தவர்கள் சோதனை செய்ததில் 6 பேருக்கு பாசிட்டிவ் வந்தது.

ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 8 பேருக்கு மரபணு மாற்றமடைந்துள்ள தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாதிரிகள் ஒமிக்ரான் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. காங்கோ நாட்டிலிருந்து ஆரணி வந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு ஒமிக்ரானுக்கு முந்தைய அறிகுறி தெரிகிறது. இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

ஒமிக்ரான் இதுவரை 73 நாடுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 11 மாநிலங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கைகளை கழுவுதல், காற்றோட்டமுள்ள அறைகளை பயன்படுத்துதல் போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இது பதற்றப்பட வேண்டிய நேரம் அல்ல. அனைவரும் ஒமிக்ரான் தொற்றுக்கு எதிராக போராட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. 80 லட்சம் பேர் இன்னும் 2வது டோஸ் தடுப்பூசி போடாத நிலைமை உள்ளது. இதனை பொதுமக்கள் உணர்ந்து 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டவர்களுக்கு தொற்று பரவினாலும் நோய் பாதிப்பு அதிகமாக இருக்காது என்று உலக சுகாதார மூத்த மருத்துவர்கள் பேட்டி அளித்துள்ளனர். முகக்கவசம் அணிவதன் அவசியத்தை அனைவரும் உணர வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

தற்போது தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 11 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. 40,024 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் உள்ளன. 25,075 சாதாரண படுக்கைகள் தயாராக உள்ளன. 8,679 ஐசியூ படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதில் அனைத்திலும் 5%க்கு கீழே தான் தற்போது நோயாளிகள் உள்ளனர். தேவையான அனைத்து மருந்துகளும் கையிருப்பில் உள்ளன. அதேநேரத்தில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பொதுமக்களுக்கு தங்களுக்கு ஏதேனும் அறிகுறி தெரிந்தால் பயம் கொள்ளாமல் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.

பதிவு: December 16, 2021
கடையின் பின்பக்க சுவரில் துளை... வைரம், தங்க நகைகள் அபேஸ்!- வேலூர் ஜோஸ் ஆலுக்காஸை பதறவைத்த கொள்ளையர்கள்

வேலூரில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையின் சுவரை துளையிட்டு 30 கிலோ தங்க நகைகள் கொள்ளை போனதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

வேலூர் காட்பாடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் இன்று காலை கடையை திறந்த போது தங்க நகைகள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசில் புகார் அளித்ததை அடுத்து சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இந்த நிலையில் டி.ஐ.ஜி தலைமையில் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது 30 கிலோ தங்கம் கொள்ளை போனதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் வைர நகைகள் எவ்வளவு கொள்ளை போயுள்ளது என்பது தொடர்பாகவும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.15 கோடிக்கு மேல் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக தினமும் விற்பனையை முடித்த பிறகு லாக்கரில் பூட்டிவிட்டு செல்வது தான் வழக்கம். ஆனால் நேற்று இரவு அவ்வாறு செய்யாமல் காட்சிப்படுத்தும் இடத்திலேயே வைத்திருந்ததும் சந்தேகத்தை எழுப்பி இருப்பதால் நகை கடை ஊழியர்களிடம் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: December 15, 2021
`இலங்கைத் தமிழர்களுக்கு தி.மு.க. அரசு உற்ற துணையாக நிற்கும்!'- முதல்வர் ஸ்டாலின் உறுதி

"இலங்கை தமிழர்களுக்கு இந்த அரசு உற்ற துணையாக இருக்கும்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.

தமிழகப் பொது மறுவாழ்வுத் துறை சார்பில் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கான புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று காலை நடைபெற்றது. வேலூர் அடுத்த மேல்மொணவூரில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய விளையாட்டு மைதானத்தில் விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ரூ.142.16 கோடியில் 3,510 குடியிருப்புகள் கட்டுமான திட்டத்துக்கு அடிக்கல், 78 முகாம்களுக்கு ரூ.12.41 கோடியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல், 18,890 குடும்பங்களுக்கு எரிவாயு உருளை இணைப்புடன் உபகரணங்கள் வழங்குதல், 58,747 பேருக்கு உயர்த்தப்பட்ட பணக்கொடை வழங்குதல் உள்ளிட்ட மொத்தம் ரூ.225.86 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வரவேற்றார்.

இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி விழா பேருரை நிகழ்த்தினார். விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "எந்த நாட்டில் இருந்தாலும் தமிழர்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள்தான். குறிப்பாக நாம் தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்கள். 1983-ல் இருந்து ஈழத்தில் இருந்து இங்கு வந்து கொண்டிருக்கிறீர்கள். முகாம்களிலும் சிலர் வெளியிலும் தங்கியுள்ளீர்கள்.

1997-ல் முதல்வராக கருணாநிதி இருந்தபோது இலங்கைத் தமிழர்களுக்காக ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தினார். கடந்த 10 ஆண்டுகளாக இலங்கைத் தமிழர்களுக்கு அதிமுக அரசு எந்த நலனையும் செய்யவில்லை. கவலைப்படவில்லை. தற்போது, திமுக அரசு பொறுப்பேற்றதும் இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. நீங்கள் அகதிகள் இல்லை என்பதுடன் அகதிகள் முகாம் என்பதை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இலங்கைத் தமிழர்களுக்காக 1997-ல் 3,594 புதிய வீடுகள் கட்டப்பட்டன. 1998-99ல் 3,816 வீடுகள் கட்டப்பட்டன. 2009-ல் 100 கோடி ரூபாய் மதிப்பில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள 106 முகாம்களில் 19,046 குடியிருப்புகளில் மிகவும் பழுதடைந்த 7,469 குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. முதல் கட்டமாக 290 சதுரடி பரப்பளவுள்ள 3,510 புதிய வீடுகள் கட்டப்பட உள்ளன. என்றைக்கும் திமுகவினர் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உடன்பிறப்பாக நினைத்துக் கொள்ளுங்கள். இலங்கைத் தமிழர்களுக்கு இந்த அரசு உற்ற துணையாக நிற்கும்" என்று பேசினார்.

நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்னிலை உரை நிகழ்த்தினார். இதில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்கன் (அரக்கோணம்), டி.எம்.கதிர் ஆனந்த் (வேலூர்), சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார், கார்த்திகேயன், அமலு விஜயன், வில்வநாதன், தேவராஜ், நல்லதம்பி, ஈஸ்வரப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழா முடிவில் பொது மற்றும் மறுவாழ்வுத் துறைச் செயலாளர் ஜெகநாதன் நன்றி தெரிவித்தார்.

பதிவு: November 02, 2021

முக்கிய செய்திகள்

'தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு கெடவில்லை; மாறாக சிலர் அதை கெடுக்க நினைத்து செயல்படுகின்றனர்' - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைக் கெடுக்க சிலர் நினைத்து செயல்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

அரியலூர் மாவட்டத்தில் 27,070 பயனாளிகளுக்கு ரூ.52 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,

"ஒரு முதலமைச்சர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் கடந்த 10 ஆண்டாக இருந்த அதிமுக ஆட்சி. கையில் அதிகாரம் இருந்தும் எதுவும் செய்யாமல் கைகட்டி வேடிக்கை பார்த்ததுதான் கடந்த கால அதிமுக ஆட்சி. கடந்த 10 ஆண்டுகள் கால ஆட்சியின் சீரழிவை மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து புகார்கள் கொடுக்கின்றனர். விமர்சனங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல; அவற்றை வரவேற்கிறோம், ஆனால் விஷமத்தனம் கூடாது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போகவில்லை. மாறாக சட்டம் ஒழுங்கைக் கெடுக்கலாமா என்று சிலர் நினைக்கின்றனர். சிலரின் வயது எரிகிறது. ஒரு ஆட்சி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக இந்த ஆட்சி நடைபெறுகிறது" இவ்வாறு பேசினார். 

பதிவு: December 06, 2022
'கோழிக்கு அரிசி போட்டு பிடிப்பதுபோல் நம்மை தமிழை வைத்து பிடிக்கப்பார்க்கின்றனர்' - காசி தமிழ் சங்கமம் நிகழ்வை சாடிய சீமான்!

கோழிகளுக்கு அரிசியைப் போட்டு பிடிப்பது போல் தமிழர்களை மொழியை வைத்து பாஜக பிடிக்கத் திட்டமிடுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் பேசியதாவது: 

"காசி தமிழ்ச்சங்கமம் எனக்காகத்தான் நடத்தப்பட்டது. நான் வேல் தூக்கினால் அவர்களும் வேலைத் தூக்குவார்கள்; நான் முருகா என்றால் அவர்களும் முருகா என்பார்கள்; நான் ஈழம் பற்றிப் பேசினால் அவர்களும் ஈழம் என்பார்கள். ஆனால், நான் கச்சத்தீவு மீட்பு பற்றி பேசினால் மட்டும் எதுவும் பேசமாட்டார்கள். காவிரி நதிநீர் குறித்துப் பேசினால் எதுவும் பேசாமாட்டார்கள்.

நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் உள்ளதா? நாடாளுமன்றத்தில் தமிழில் பேசமுடியுமா? கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய முடியுமா? இதை விடுத்து காசி தமிழ்ச் சங்கமம் நடத்துவதன் மூலம் எப்படி நீங்கள் தமிழை வளர்ப்பீர்கள்?

கோழியை 'பக் பக் பக்' என்று அரிசி போட்டு பிடிப்பதைப் போல் தமிழை வைத்து தமிழ்நாட்டு மக்களை பிடிக்கப் பார்க்கிறார்கள். கோழி 'நம் பாஷை பேசுகிறாரே' என்று நினைத்து அவரிடம் மாட்டிக்கொண்டு வறுபடுவதைப் போல நாம் மாட்டிவிடக் கூடாது. எச்சரிக்கையாக இருக்கவேண்டும். 

 

பதிவு: November 28, 2022
ஆன்லைன் ரம்மியால் 15 மாதங்களில் நிகழ்ந்துள்ள 33-வது தற்கொலை! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

ஆன்லைன் ரம்மியால் ஒரிசாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், ஆன்லைன் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என் ரவி விரைந்து ஒப்புத அளிக்கவேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

ட்விட்டரில் இதுபற்றி பதிவிட்டுள்ள அவர், 

"தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வந்து தென்காசி மாவட்டம் கரிவலம்வந்த நல்லூரில் கூலி வேலை செய்து வந்த ஒதிஷா பெண் பந்தனா மஜ்கி, ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.70 ஆயிரத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்வு மிகுந்த வேதனை அளிக்கிறது.

ஆன்லைன் சூதாட்டத் தடை செல்லாது என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பிறகு ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் நிகழும் 33-ஆவது தற்கொலை இதுவாகும். கடந்த இரு மாதங்களில் இது நான்காவது தற்கொலை ஆகும்.
 
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான ஒவ்வொரு நகர்வும் பெரும் போராட்டத்திற்கும் பிறகும், சில உயிரிழப்புகளுக்கு பிறகும் தான் சாத்தியமாகிறது. 15 மாதங்களில் விலைமதிப்பற்ற 33 உயிர்களை பறி கொடுத்தும் கூட, ஆன்லைன் சூதாட்டம் இன்னும் தடை செய்யப்படவில்லை
 
ஒரு புறம் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் காலாவதியாகி விட்டது; மறுபுறம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்திற்கு ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் தமிழ்நாடு இனி ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறப்போகிறது
 
ஆன்லைன் சூதாட்டங்களால் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் ஏற்படவிருக்கும் பேராபத்தை தமிழக ஆளுனர் உணரவேண்டும். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 
பதிவு: November 28, 2022
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா ஒப்புதல் ஆளுநரால் காலம் தாழ்த்தப்பட்ட நிலையில் அது காலாவதியாகியுள்ளது! அடுத்த நடவடிக்கை என்ன?

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கான ஒப்புதல் தாமதமாக்கப்பட்ட நிலையில், அது காலாவதியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் காரணமாக தற்கொலைகள் பெருகிவந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதியை மயக்கி உயிரைக் கொல்லும் இந்த விளையாட்டைத் தமிழ்நாடு அரசு தடை செய்யவேண்டும் என்று எதிர்ப்புகள் எழவே, அரசு ஆன்லை ரம்மியைத் தடைசெய்வதற்கான சட்ட மசோதாவை அவசரச்சட்டமாக சட்டபேரவையில் நிறைவேற்றியது. 

இந்நிலையில், ஒப்புதலுக்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா அனுப்பப்பட்ட நிலையில், அதுகுறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டது. தமிழக அரசும் அதற்கு பதில் கடிதத்தை அடுத்த நாளே அனுப்பியது. இதனிடையே, அக்.01 ல் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதா நேற்றுடன் காலாவதியானது.

இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. ஆங்காங்கே ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலைகள் அதிகரித்துவரும் நிலையில், ஆன்லைன் ரம்மி மீது இன்னும் தடைவிதிக்கப்படாதது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 
பதிவு: November 28, 2022
'எங்களுக்கு நீதி கிடைக்கவில்லையெனில் அரசின் அத்தனை உதவிகளையும் திருப்பித்தருவோம்' - உயிரிழந்த வீராங்கனை பிரியாவின் வீட்டார் வேதனை!

தங்களுக்கு நீதி கிடைக்கவில்லையெனில் அரசு தங்களுக்கு வழங்கிய நிவாரண உதவிகளைத் திருப்பித்தந்துவிடுவதாக உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் வீட்டார் வேதனை பொங்கத் தெரிவித்துள்ளனர்.

சென்னை வியாசார்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா கால் எலும்பு சவ்வு பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாக அவர் உயிரிழந்தார். இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து பிரியாவிற்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் இருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை சட்டரீதியாக எடுக்கப்படும் என்று மருத்துவத்துரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதனையடுத்து, உயிரிழந்த பிரியாவின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி, வீடு மற்றும் பிரியாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை ஆகியவை வழங்கப்பட்டன.

இந்நிலையில், பிரியா மரணத்திற்குக் காரணமான மருத்துவர்கள் மீது இன்னும் நடவடிக்கை அரசு தரப்பிலிருந்து எடுக்கப்படவில்லை என்று பிரியாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள், அரசு தரப்பிலிருந்து மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும், அதுபற்றி உறுதியளித்ததால் தான் அரசின் உதவிகளைப் பெற்றுக்கொண்டோம் என்றும், அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அரசின் உதவிகளைத் திருப்பிச்செலுத்துவிடுவோம் என்றும், தங்களுக்கு நீதியே தேவை என்றும் அவர்கள் வேதனை பொங்கத் தெரிவித்துள்ளனர். 

பதிவு: November 26, 2022
பாஜக பெண் நிர்வாகிகளை ஆபாசமாகப் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்! மன்னிப்பு கேட்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

பாஜக பெண் நிர்வாகிகளை தரக்குறைவாகப் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்கை மன்னிப்புக் கேட்கக்கூறி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் அக்கட்சி உறுப்பினர் சைதை சாதிக், பாஜக நிர்வாகிகளான குஷ்பூ, காயத்ரி, நமீதா, கௌதமி ஆகியோரை தரக்குறைவாக சாடி, ஆபாசமான முறையில் பேசினார். இது அக்கட்சி உறுப்பினர்களிடையே கோபத்தை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு கண்டனங்கள் வலுத்தன. மேலும் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், வழக்குக்கு எதிராக சைதை சாதிக் முன்ஜாமீன் கோரியிருந்தார். இதைத்தொடர்ந்து நீதிபதிகள் முன்பாக இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அவர், சம்பந்தப்பட்ட பெண்களிடம் மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என்று வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஸ் சந்திரா உத்தரவிட்டுள்ளார். 

பதிவு: November 26, 2022

மேலும் செய்திகள்

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்